உமார் கயாம்/31. பாய்ந்தோடும் குதிரையும் பறந்தோடும் செய்தியும்

31. பாய்ந்தோடும் குதிரையும் பறந்தோடும் செய்தியும்

கடிதங்கள் பல எழுதவேண்டியிருப்பதைப்பற்றி உமார் மறந்து பல வாரங்களாகிவிட்டன. உண்மையில் அவன் அயீஷாவைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை. அவள் இப்பொழுது முக்காடு இல்லாமலே தோட்டம் முழுவதும் சுற்றித்திரியலாம். ஒவ்வொருநாள் மாலையும் அவள் எந்த விதமாகவோ புதுமையாகத் தென்படுவாள்.

உமாருடைய சிந்தனைகளைப்பற்றி அவள் ஒன்றுந் தெரியாதவளாக இருந்தாள். அதுவே அவர்கள் இரண்டு பேரையும் பிணைக்கும் வாய்ப்பாயிருந்தது. உமார், தன் சிந்தனைகளிலிருந்து விடுபடுவதையே பெரிதும் விரும்பினான். இதை ஆயிஷா புரிந்துகொண்டாள். சில விஷயங்களில் அவள் அவனைக் காட்டிலும் புத்திசாலியாக இருந்தாள். அவள் அமைதியாக இருக்கும்போது எல்லோருக்கும் பெரிய புத்திசாலியாக இருந்தாள்.

அவளுடைய அன்பு கட்டுப்பாடில்லாத கடும்வேகம் உடையதாக இருந்தது. அந்த அன்பிலே, தாய்மையுணர்ச்சியும் கலந்திருந்தது. அயீஷா, உமாருக்கு வேண்டிய உணவுகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினாள். முதன் முறையாக அடுக்களையில் நுழைந்த அவளை சுலெய்க்கா தடுத்து, அங்கே தனக்குத்தான் உரிமை உண்டென்பது போல் பேசினாள்.

“உன் மாமன் - மைத்துனர்கள் வந்து சட்டைப் பைக்குள்ளே கசாப்பை மறைத்துக் கொண்டு போவதும், பிள்ளை குட்டிகளுக்கு அள்ளிக் கொடுப்பதும் எனக்குத் தெரியும்.

எல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தலைவருக்கு, உணவு சமைத்தாவது, உன்னுடைய இந்த அற்பச் செயலை மறந்துவிடலாமென்றுதான் பார்க்கிறேன்” என்று சொல்லி அவளை அடக்கிவிட்டாள்.

அதன் பிறகு, கலெய்க்கா, மணல் காட்டிலே பிறந்த இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஏற்றமா என்று முணுமுணுத்துக் கொண்டே அடங்கிப்போனாள். அரண்மனையில் உள்ள அனைவருக்கும் இல்லத்தலைவருடைய இதயத்தரசி யாகிவிட்டாள் அயீஷா என்ற விஷயம் உணர்த்தப்பட்டது. எல்லோரும் அவளிடம் மரியாதையாக நடக்கத் தொடங்கினார்கள்.

மற்றவர்களுடைய விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாமல் ஒதுங்கிப்போகும் அவளுடைய தன்மை உமாருக்கு மிகப் பிடித்திருந்தது. அவன் அங்கே இருந்தால் தான், அவளுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் அடைகிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட உமார், அவள் தன்னிடம் கொண்டிருக்கும் அளவற்ற அன்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். அவளுடைய மெல்லிய கழுத்தின் ஒவ்வொரு வளைவையும், அவளுடைய உடலின் ஒவ்வொரு நெளிவு சுளிவுகளையும் தெரிந்து வைத்திருந்த உமாருக்கு, அவள் உள்ளத்தின் உள்ளே என்ன இருக்கிறதென்றுமட்டும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய பக்கத்திலே படுத்துக்கொண்டு கண்களை அரைப்பார்வையாக முடிக்கொண்டு, அவன் மூச்சுடன் தன் மூச்சைக் கலந்து விட்டுக் கொண்டு இருக்கும் அவள், எங்கோ தூரத்திலே, அவன் காதுகளுக்கு எட்டாத எதையோ கவனித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கும்.

அவன் அவளைப்பார்த்து அதிசயப் படும்படியாகவே எப்பொழுதும் அவள் நடந்துகொள்வாள், அவனை ஒருநாள், அமைதியாக, “என்னுடைய அந்தப்புரத்துக்குக் காவலாள் வைக்க வேண்டுமென்று தாங்கள் எண்ணுகிறீர்களா?” என்று கேட்டாள்.

“இல்லை” என்று மறுத்தான்.

“இதோ அங்கே நடைபாதையில் ஒருவன் உட்கார்ந்திருக்கிறானே!” என்றாள். இஸ்லாமியக் கனவான்கள் வீடுகளிலே, அந்தப்புரத்திற்குக் காவலாள் வைப்பது வழக்கமென்றும் அது ஒருவகையில் நல்லதுதானென்றும் அவள் அறிவாள். இருந்தாலும் நாள் முழுவதும் தன்னை ஒரு பிராணி கவனித்துக்கொண்டே இருப்பதென்பது அவளுக்குப் பிடிக்காத செயலாகவும், அருவருப்பான செயலாகவும் இருந்தது. வெளியில், நடைபாதையில் வந்து பார்த்த உமார் யாரோ ஒரு புதிய ஆசாமி, கதவின் ஓரத்தில் சுவர் அருகிலே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவன் கரிய உருவமும் சிவப்பு ஆடையும் அணிந்திருந்தான். உமாரைக் கண்டதும் எழுந்து மரியாதையுடன் சலாம் செய்தான்.

“நீ யார்?”

“ஏழைகளின் பாதுகாவலரே! என் பெயர் சாம்பல் ஆகா. இங்கு பணி செய்வதற்காக இஷாக் என்னை அனுப்பினார்.”

தடித்த குரலும் அருவருக்கத்தக்க பார்வையும் உடைய அவனைக் கண்டதும், அயீஷாவின் வெறுப்புக்குக் காரணத்தைப் புரிந்துகொண்டான் உமார்.

“என்னோடு வா” என்று அவனை அழைத்துக் கொண்டு, வெளிவாசலுக்கு வந்தான். அங்கே நின்ற இஷாக்கை அருகில் அழைத்தான். அவன் அன்று வாங்கிய அடிகாயத்துக்குப் போட்ட கட்ட கட்டு அப்படியே இருந்தது.

“அந்தப்புரத்திற்குக் காவலாள் வைக்க வேண்டுமென்று நான் உனக்கு எப்பொழுது கட்டளையிட்டேன்?”

“தலைவர் அவர்களுடைய கவனம் வேறு எங்கோ இருப்பதை அறிந்து கொண்ட நான், அவசரத் தேவையை முன்னிட்டு, இவனைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்தேன்!”

“சரி, இவனைத் திருப்பியனுப்பிவிடு”.

“தலைவரே! மன்னிக்க வேண்டும். தோட்டம் பெரியது. தோட்டம் முழுவதையும் அரண்மனையில் இருந்த படியே பார்த்துக் கொள்ள முடியாது.”

“நீ அவனை வெளியேற்று!”

சாம்பல் ஆகா என்ற அந்த மனிதன் தன் தோட்டத்தில் காவல் இருப்பது என்பதை நினைக்கவே உமாருக்கு அருவருப்பாக இருந்தது. மேலும் ஆயீஷா காவல் வைத்துக் கொள்ளக்கூடிய உயர்ந்த வகுப்பிலே பிறந்து வளர்ந்த்வ்ஸ் அல்ல. சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டிய அவளை உளவு பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர் ஆள் வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.

சாம்பல் ஆகாவுக்கு முன்னால் அவமானப் படுத்தப் பட்டோமே என்று நினைத்த இஷாக், தன்னுடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக “நிசாம் அல்முல்க் அவர்களுடைய கடிதம் வந்து இருபது நாட்கள் ஆகின்றன. அது மிகவும் அவசரமானதென்று நான் தங்களுக்குப் பல முறை நினைவுபடுத்தியும் இன்னும் தாங்கள் பதில் எழுதவில்லை. நிசாம் அல்முக் அவர்கள், அரசாங்கம் சம்பந்தமான முக்கிய விஷயம் இருந்தால்தான் எழுதுவார். ஒரு தபால் குதிரை வீரன் அதைக் கொண்டு வந்தான், நான் அதைக் கொண்டு வரவா?” என்று பேச்சை மாற்றினான்.

உமார் கடிதம் வந்த விஷயத்தையே மறந்து விட்டான். உறையைக் கிழித்துப் படித்துப் பார்த்து விட்டு, அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

“பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம். அளவற்ற அருளாளனும், நிகரற்ற கருணையும் உடைய அல்லாவின் பெயரால் சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு, தற்பொழுது கிரகநிலை சரியில்லாத காரணத்தால் நிசாப்பூருக்குத் திரும்பி வருவது நல்லதல்ல என்று ஒரு மணிநேரம் கூடச் சுணங்காமல் உடனே எழுதியனுப்பு. சாமர்க்ண்டுக்கும் வடக்கே தொடர்ந்து போர் நடத்திப் பெற வேண்டுவது இன்றியமையாததென்று நான் கருதுகிறேன். அவர் கொராசனுக்குத் திரும்பி வரவும், குளிர்காலத்தைக் கருதித் தம் படையில் பாதியைக் கலைத்து விடவும் எண்ணியிருப்பதாக அவருடைய முகாமிலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. உடனே எழுதவும்.”

மறுபடியும் உமார் கடிதம் முழுவதையும் படித்துப் பார்த்தான். படித்துவிட்டு உடனே அதைச் சுக்கு சுக்காகக் கிழித்தான். இது போன்ற ஒரு செய்தியை, எழுத்து மூலமாக அனுப்புவது எத்தனை தீமை விளைவிப்பது என்ப்து நிசாமுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிசாமின் ஆணைப்படி பொய்யான ஒரு குறி சொல்லுவதை அவன் விரும்பவில்லை. நிசாம் அரசாங்கத்துக்காக உண்மையாக உழைக்கிறார் என்றாலும் கூட, மாலிக்ஷா அவசரமாக இருக்கும் போது, அவரை ஏமாற்றுவது ராஜத் துரோகம், சுல்தான் அவர்கள் கடந்த பல ஆண்டுகளைப் படையெடுப்பிலேயே செலவழித்திருக்கிறார். குளிர்காலத்தில் சற்று அமைதியாகவும் ஓய்வாகவும் இருக்க அவர் விரும்பினால், அதை ஏன் தடுக்க வேண்டும்?

நிசாப்பூரில் இருந்தால் உமார், இந்தப் பிரச்சினையில் வேறுவிதமான முடிவு கட்டும்படி நேர்ந்திருக்கும். ஆனால் அவன் காசாலியுடன், வேதாந்த விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறான். அயீஷாவுடன் இன்பம் அனுபவித்திருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் அவன் நிசாம் அவர்களின் திட்டத்தை ஒப்புக் கொள்ளுவதாக இல்லை. தாளும், அரக்கும் கொண்டு வரச் சொல்லி, உமார் அதில் ஒரே சொல்லில் “முடியாது” என்று பதில் எழுதி அதன் கீழே “கயாம்” என்று கையெழுத்திட்டு, மடித்து, அரக்கு முத்திரையிட்டு, அதை இஷாக்கிடம் கொடுத்து “ஒரு குதிரையில் உடனே நிசாப்பூரில் இருக்கும் நிசாமுக்கு இதையனுப்பு” என்றான்.

“முதல் அமைச்சர், ஒரு மதக் கலகத்தை அடக்குவதற்காக ரே நகருக்குப் போயிருக்கிறார்” என்று சாம்பல் ஆகா கூறினான்.

“அவர் எங்கேயிருக்கிறாரென்று கண்டு பிடித்து அங்கே அனுப்பு” என்று சொல்லிவிட்டுத் திரும்பியவன், மறுபடியும் நினைவு வந்து, “அகமதை அனுப்பாதே, வேறு யாரையும் அனுப்பு” என்று கூறிவிட்டுச் சென்றான். வீட்டை நோக்கி நடந்தவன், அங்கே வாசல் புறத்திலே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் பக்கமாகப்போனான். ஹசேன், அலி, அகமது ஆகிய மூவரும் அதைச்சுற்றியுட்கார்ந்திருந்தார்கள். உமார் வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்று சலாம் செய்தார்கள். உமார் தன் கையில் இருந்த கடிதத் துண்டுகளை நெருப்பில் போட்டு விட்டு, அவை யாவும் எரிந்து முடியும்வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்குள்ளே சென்றான். மூன்று தோட்டக்காரர்களும் இதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்துவிட்டுக் கீழே உட்கார்ந்து அந்தப் புதிய விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.

“சந்தேகமில்லாமல் இது மிக மிக முக்கியமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். என்ன அழகான கையெழுத்து!” என்று ஹசேன் கூறினான்.

“அந்த முத்திரை என்ன சிவப்பாக இருந்தது! நிசாம் அல்முக் அவர்கள் இது போன்ற முத்திரையைத்தான் உபயோகிப்பது வழக்கம். அது இரத்தத் துளிபோல் உருகியோடிக்கொண்டிருப்பதைப் பார்” என்றான் அலி.

சாம்பல்களுக்கிடையே அந்தச் சிவந்த அரக்குத் துளிகள் உருகிமறைவதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சிறிதுநேரத்திற்குப் பிறகு அகமது அங்கிருந்து, முட்டை கட்டிக் கொண்டிருந்த சாம்பல் ஆகாவிடம் போய்ச் சேர்ந்தான்.

ஆயீஷாவுக்கு எந்த விதமான குறையும் இல்லை. அவளுக்கு ஏதாவது வேண்டுமா என்று உமார் கேட்டபொழுது. சிறிது நேரம் சிந்தித்து விட்டு, உடை தைப்பதற்காகப் புதியபட்டுத் துணி கொஞ்சமும், அதிலே பின்னுவதற்காக வெள்ளிச் சரிகை கொஞ்சமும் புனுகும், அம்பரும் கூந்தல் எண்ணையும். வேண்டுமென்றாள். அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. மெருகு தீட்டிய தங்கத் தலைச் சரம் ஒன்றை அவன் அவளுக்குக் கொடுத்ததும், ஆனந்தத்தால் குதித்தாள். பிறகு அதைத் தலையிலே அணிந்து கொண்டும், கூந்தலை அதற்குத் தகுந்தபடி முடிந்து கொண்டை போட்டுக் கொண்டும். நெடுநேரம் வெள்ளிக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் அவனுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அப்படியே அவனருகில் சமுக்காளத்தில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு தூங்கத் தொடங்கி விடுவாள். வீட்டிலேயிருந்த வேலைக்காரர்களான பாரசீகர்களைப் பற்றி அவள் சிறிது தாழ்ந்த கருத்தே கொண்டிருந்தாள்.

“எதைச் சொன்னாலும் நாளைக்கு நாளைக்கு என்றுதான் சொல்லுகிறார்கள். நேற்று நடந்ததைப் பற்றிப் பேசுவார்கள். வேலைகளை நாளைக்கு ஒத்திப் போடுவார்கள்” என்று உமாரிடம் கூறினாள்.

“இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா?”

அயீஷா அதை நினைத்துப் பார்க்கவில்லை. அது உண்மைதான்! அவர்கள் எளிதில் அழுது விடுகிறார்கள். அதுபோலவே விரைவில் சிரித்தும் விடுகிறார்கள். அது ஒரு நல்ல தன்மைதான்.

“அயீஷா! நீ நேற்றைப் பற்றியும் எண்ணுவதில்லை; இன்றையப் பொழுதிலேயே எப்பொழுதும் வாழுகிறாய்!”

“நீங்கள் இருக்கும்போது நான் வேறு எதையும் நினைப்பதில்லை” என்று கூறி அவனுடைய கண்களைக் கூர்ந்து நோக்கினான்.

இந்த மாதிரி, அவள் கூர்ந்து பார்க்கும் போதெல்லாம், யாஸ்மியைப் பற்றிய எண்ணம் உமார் மனத்தைக் கலங்கச் செய்துவிடும், அயீஷாவின் கண்களும், அவள் தலையை வேகமாகத் திருப்புகின்ற பாவமும் யாஸ்மியினுடையதைப் போலவேயிருந்தன. இத்தனையாண்டுகளும் தான் காரண மில்லாமல் யாஸ்மியைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உமார் புரிந்து கொண்டான். அவள் திடீரென்று இறந்து விட்டாள். அவளுடைய மரண வேதனை. அதைப் பற்றி அவன் ஜபாரக்குடன் கூடப் பேசவில்லை. இந்த வேதனைக் காட்சிதான் அவனை நெருப்புப் போல் எரித்துக் கொண்டிருந்தது. அதெல்லாம் விழித்துக் கொண்டிருக்கும் உண்மையான நிலையான இந்தச் சூழ்நிலையில் ஒரு பழங்கனவு போல விலகிப் போய் விட்டது.

யாஸ்மியின் கரங்களிலே அவன் அனுபவித்த இன்பம் வேதனை கலந்ததாக இருந்தது. ஆனால், அயீஷாவுடன் இருப்பது அமைதியைக் கொடுத்தது. சுற்றிலும் சுவர் எடுக்கப்பட்ட தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ரோஜாப்பூக்களின் இதழ்கள், எங்கும் பரந்து கிடப்பது போன்ற இன்பம் நிறைந்தது அயீஷாவின் அன்பு. இந்த இன்பத்திற்கு மணிக்கணக்கும் இல்லை, மனிதர்களின் குறுக்கீடும் இல்லை. இருப்பினும், இந்த இன்பத் தோட்டத்துக்குள்ளே இடையிடையே யாஸ்மியின் எண்ணமும் படர்ந்து வந்தது. சில சமயங்களில், அவள் களைத்துப் போய்க் கிடக்கும் போது, தலையைச் சிறிது தூக்கினால், விண்மீன் வீட்டை நோக்கி முக்காட்டுத் துணி காற்றில் பறக்க யாஸ்மி நடந்து வருவதைப் பார்க்கலாம் போல் தோன்றும்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, களைத்துப் போன ஒரு குதிரையிலே வந்த அவசரச் செய்தியாள் ஒருவன், நிசாம் அவர்களிடமிருந்து அழைப்புக் கொண்டு வந்தான். உடனே புறப்பட்டு எவ்வளவு சீக்கிரமாக வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாகவே நகருக்கு வரும்படி நிசாம் அறிவித்திருந்தார்.

மறுநாள் காலை உமார் அயீஷாவிடம் விடை பெற்றுக் கொண்டபோது அவள் கண்களில் நீர் நிறைந்து காணப்பட்டாள். தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படி மணிக்கணக்காக மன்றாடினாள். “தங்களை அல்லா பாதுகாப்பாராக” என்று கூறி அவன் காதுக்குள்ளே, “அயலாருடன் செல்ல நேரும் போது ஆயுதம் இல்லாமல் போகாதீர்கள்” என்று எச்சரித்தாள்.

வாசலில், இஷாக், உமாருக்குச் சலாம் செய்வதற்காக வந்தான். நெடு நாளைக்கு முன் விலக்கப்பட்ட சாம்பல் ஆகா என்பவன் மூலையிலே ஒளிவது போல உமாருக்குத் தோன்றியது. குதிரையை நிறுத்திக் கொண்டு, “என்ன இஷாக், அந்தக் கடை கட்ட கருப்பன் இன்னும் இங்கேயா சுற்றிக் கொண்டு திரிகிறான்?” என்று கேட்டான்.

இஷாக் பணிவுடன் வணங்கி, “தலைவரே! நேற்று இரவு தொழுகைக்குப் பிறகு தாங்கள் ரே நகருக்குப் பயணப்படப் போவதாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் எப்பொழுது திரும்புவீர்கள் என்பது இறைவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? இந்த அரண்மனை என்னுடைய பொறுப்பில் விடப்பட்டிருக்கிற காரணத்தால்...”

“அதற்காக...?”

“எல்லாப் பெண்களையுமே கண்காணிக்க வேண்டியது இன்றியமையாதது. இத்தனை பெரிய தோட்டத்தில் ஓர் இளம் பெண் தனியாகத் திரிவது அவ்வளவு நல்லதல்ல. சாம்பல் ஆகாவும் அருகில் உள்ள ஊரிலேயே இருந்தான். ஆகவே, நான்தான்...”

உமார், தன் பின்னால் இருந்த படைவீரர்களின் பக்கம் திரும்பி, “உங்களிலே ஒருவன், அந்தக் கருப்பனைப் பிடித்துக் குதிரையிலே ஏற்றி வைத்துக் கொண்டு, நிசாப்பூரிலே கொண்டு போய் அங்குள்ள சந்தையிலே அவிழ்த்து விடுங்கள். அவன் மறுபடியும் இந்த வாசல்படி ஏறக்கூடாது. இது என் கட்டளை” என்றான்.

தன் அன்புக்குரிய அயீஷாவைத் தன் தோட்டத்திலே, இன்னொருவன் கண்காணிக்கும்படி சிறைவைத்து விட்டுப் போக உமார் விரும்பவில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து உமார் ரே நகரம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான். இடையிடையே தூங்குவதற்காக விடுதிகளிலே தங்கிச் சென்றான். நிசாப்பூர் ஊருக்குள்ளே சென்றால் மக்கள் குழுமி வரவேற்பதும் வாழ்த்துரைப்பதுமாக நேரம் வீணாகி விடுமென்று அவன் ஊரைவிட்டு விலகியே சென்றான். இருப்பினும் கொரசான் மக்கள், கூட்டங்கூட்டமாக அவனைப் பார்க்க வந்து கூடினார்கள்.

மூன்றாவது நாள் இரவு தங்குவதற்காக வழியில் ஒரு விடுதியில் பயணத்தை நிறுத்தியபோது, கையில் பருந்துடன் வந்த ஒரு குதிரைவீரன் உமாரையணுகி சலாம் செய்தான்.

“குவாஜா அவர்களே, தங்கள் பயணம் வெற்றியடைவதாக! இதோ ஒரு முன்னறிவிப்புக் குறிப்பு இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய இடுப்பில் சொசுகியிருந்த ஒரு வெள்ளிக் குழாயை எடுத்தான். அந்தக் குழாய் ஒரு பேனா அளவே இருந்தது. ஒரு மணிநேரத்திற்கு முன்னால் நான் என்னுடைய பருந்தைப் பறக்கவிட்டேன். ஆற்றை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு நாரையைப் பிடிப்பதற்காக நான் அதைப் பறக்கவிட்டேன். ஆனால் அது மேற்றிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு புறாவைப் பிடித்துக்கொண்டு வந்தது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் தங்களுக்குத் துன்பந் தர வேண்டுமென்று செய்தி கொண்டுபோன அந்தப் புறாவைப் பிடிக்கவில்லை. இந்தப் பருந்தைக் கொண்டு வேட்டையாடுவது என் தொழில். தங்கள் செய்தி தடைப்படுத்தப் பெற்றதற்கு என்னை மன்னிக்கவேண்டும். அதன் காலிலே கட்டியிருந்த குழாயும், அந்தக் குழாயில் வைத்திருந்த செய்தியும் இதோ இருக்கின்றன” என்று சொல்லி அந்தக் குழாய்க்குள் இருந்த இரண்டு விரற்கிடையளவுள்ள சிறுதாள் ஒன்றை எடுத்து உமாரிடம் கொடுத்தான். அதில் ஒரே ஒருவரி எழுதியிருந்தது. அது இதுதான்.

“கூடார மடிப்பவன் உமார் ரே நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.”

அதன் கீழே கையெழுத்துப் பதிலாக ஓர் எண் குறிப்பிடப் பட்டிருந்தது.

“இதனால் ஒன்றும் கெடுதலில்லை. நீ போகலாம்” என்று, என்ன சொல்வானோ என்று நின்றுகொண்டிருந்த பருந்துக்காரனிடம் கூறினான். “ஆம்! அந்தப் புறா மேற்குத் திசை நோக்கியா சென்று கொண்டிருந்தது?” என்று கேட்டான்.

“மறைந்து கொண்டிருக்கும் கதிரவனை நோக்கி அம்புபோல் பறந்து கொண்டிருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்தவுடன், தாங்களும் இங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அல்லாவின் திருவுள்ளப் படியே எல்லாம் நடக்குமென்று எண்ணிக்கொண்டு தங்களிடம் வந்தேன்” என்று அவன் பதில் கூறினான்.

அந்தச் சிறிய வெள்ளிக் குழாயைத் தன் விரல்களினால் திருப்பிப் பார்த்துக்கொண்டே யார் இந்தச் செய்தியை அனுப்பி ருக்கலாம் என்று உமார் யோசித்தான். யாருக்காக அனுப்பப்பட்ட செய்தியாக இருக்கும் என்றும் தெரியவில்லை. அந்தப் புறாவிற்குத் தான் புறப்பட்ட இடமும், போய்ச் சேரவேண்டிய இடமும் நன்றாகத் தெரியும். ஆனால், அது பேசமுடியாது! அந்தக் குழாயிலிருந்து மிக மெல்லிய புனுகு நெடி வீசியது. அவன் ரே நகருக்குப் போவது, காசர்குச்சிக் அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே தெரியும். நிசாப்பூரில் அவன் நுழையாத படியால், அங்கு யாருக்கும் தெரியாது. நிசாம் அவர்களுடைய உளவாளிகள் முன் கூட்டியே அவருக்கு அறிவிக்கப் புறாவின்மூலம் செய்தியனுப்பியிருக்கலாம். எழுதியவன் முக்கிய எழுத்தைக் கொண்டே யார் எழுதியது என்றோ அதன் அடியில் உள்ள எண்ணைக்கொண்டோ, பெறுபவன் அவனை இன்னார் என்ற அடையாளங் கண்டு கொள்வான். எந்த வழியில் யோசித்தாலும், அதன் உண்மையை, அந்தச் செய்தியின் பொருளை உமார் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஏதோ ஒரு உணர்ச்சியில், அந்தக் குழாயையும் தாளையும், தன்னுடைய தோற்பைக்குள்ளே வைத்துக் கொண்டான் உமார். எங்கோபோய்க் கொண்டிருந்த தன்னைப்பற்றிய செய்தியைத் தன்னிடமே அந்தப் பருந்து கொண்டுவந்து சேர்த்தது நூற்றில் ஒரு நிகழ்ச்சியாகவே பட்டது. அதை எண்ணி அவன் யப்படையவில்லை. ஆனால் அதன் கருத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தான்!