உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம்
33. நா அடக்கம்
பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய்.
வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.
இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.
அறிவு பெற விரும்பினால் நாவை அடக்கும் அறிவைப் பெறுவாய்.
நாவைப் பரிசோதித்து வைத்தியர் உடல் நோயை அறிவர். அறிஞர் ஆன்ம நோயை அறிவர்.
பிறர் நாவை தாம் அடக்கமுடியாது; ஆனால் பிறர் மொழிகளை நாம் அலட்சியம் செய்யமுடியும்.
மூடனுக்கு 'மேளனமாயிரு' என்பதைவிட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான்.
சகல குணங்களிலும் மெளனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும்.
ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்தால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மெளனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன்.
இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும்.
அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.
அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.
மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.
காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால், வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.
மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.
அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.
விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.
எறும்போ பேசுவதே இல்லை.
பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.
நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம் கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.
பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.
★ ★ ★