எனது நண்பர்கள்/சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம்


சர். ஏ. டி. பன்னீர்ச்செல்வம்

சர். ஏ. டி. பன்னிர்ச்செல்வம் அவர்கள் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவர். மற்றவர்கள் சர். பி. தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், ஏ. பி. பாத்ரோ, சர் வெங்கடரெட்டி, சர். உஸ்மான் சாஹிப், பொப்பிலி அரசர், நெடும்பலம் சாமியப்ப முதலியார், சர். பி. டி. ராஜன், W. P. A. செளந்திர பாண்டிய நாடார் முதலானோர்.

நீதிக்கட்சி என்பதை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி என்றே கூறுவர். அது இன்றைய தி. மு. கழகத்திற்குப் பாட்டன் முறை. பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தந்தை முறை யாகும்.

அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்குபெற்று உழைத்த தலைவர்களில் பலர், தேசீயத்தின் பெயரால் பிராமணர்கள் தங்கள் நலத்திற்கு மட்டுமே காங்கிரஸைப் பயன்படுத்துகிறார்கள் என வெறுப்படைந்து வெளியேறிப் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்கென்றே தோன்றிய கட்சி அக்கட்சி

ஏறத்தாழ 16 ஆண்டுகள் அக்கட்சி சென்னையில் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி புரிந்திருக்கிறது. அதில் பெரும் பங்கு பெற்றுத் தொண்டு புரிந்தவர், சர். ஏ. டி. பன்னிர்ச் செல்வம்.

அக்கட்சி செய்த நன்மைகளில், இந்துமத அற நிலையம் தோற்றுவித்தது; டாக்டர் பட்டத்திற்கு விண்ணப்பம் போடுகிறவர்கள், சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது; எல்லா வகுப்பினருக்கும் ஆட்சியில் உரிமை கிடைக்க வேண்டும் என்ற வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை சட்டமாக்கியது; தீண்டாமை ஒழியவேண்டுமென்ற கொள்கையை முதல் முதல் தமிழகத்தில் புகுத்தியது; நகராட்சி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, சட்டசபை முதலிய இடங்களில் பல சமூகத்தினருக்கும் பதவி கொடுத்து மகிழ்ந்தது முதலியன குறிப்பிடத்தக்கவை.

சர்.ஏ.டி.பி. 1888–ல் பிறந்தவர்கள். எனக்கு 10 ஆண்டுகட்கு மூப்பு. 1912–ல் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்து தமிழகத்தில் வழக்கறிஞர் தொழிலை நடத்தியவர். இருமுறை நகராட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் பணிபுரிந்தவர். இப்போது தஞ்சையில் காணப்படுகின்ற மிகப் பெரிய கட்டிடமாகிய ‘பனகால் பில்டிங்’ என்பது அவர் 1925–ல் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது கட்டப் பெற்றது. அவரது தொண்டினைப் பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டத்தையும், கட்சி ஹோம் மெம்பர் பதவியையும் அளித்துப் பாராட்டியது.

நீதிக்கட்சி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போது, சர்.ஏ.டி.பியும் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அது குறித்து அவர் சிறிதும் கவலைப் படாமல் திருவாரூரை அடுத்துள்ள பெரும்பண்ணையூர் சென்று விவசாயப்பணி புரிந்து வந்தார். இப்போது அந்த ஊருக்கு செல்வம் நகர் என்று பெயர்.

ஒரு சமயம் பெரியார்மீது காங்கிரஸ் ஆட்சியில் வகுப்புத் துவேஷத் குற்றம் சாட்டிக் கைது செய்து கோவை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். அப்போது நான் பெரும் பண்ணையூர் சென்று சர்.ஏ.டி. பன்னிர்ச்செல்வம் அவர்களிடம் இதை எடுத்துச் சொல்ல, அவர் தானே பெரியார் சார்பில் எதிர்வழக்காட கோவை வந்திருந்தார். நாங்கள் எல்லோருமே திரு.ஜி.டி. நாயுடு வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது கோவை செக்ஷன்ஸ் நீதிபதியாக வேலை பார்த்தவர் ஐஸ்டிஸ் “லோபோ” என்பவர். நீதி விசாரணையன்று காலையில் நாங்களனைவரும் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, நீதிபதி லோபாவின் காரியதரிசி ஒருவர் வந்து சர்.ஏ.டி.பி. இன்று கோர்ட்டுக்கு வரவேண்டாம் என்று ஐஸ்டிஸ் லோபோ கேட்டுக் கொண்டதாகக் கூறினார். எனக்கு இது வியப்பை அளித்தது. ஏ. டி.பி.யிடம் காரணம் கேட்டேன். “நான் ஹோம் மெம்பராயிருந்தபோதுதான், லோபோவிற்கு இந்த வேலையைக் கொடுத்தேன்; அதனால் நான் இன்று கோர்ட்டிற்குச் சென்று ‘யுவர் ஆனர்’ என்று அவரைக் குறிப்பிடுவதைக் கேட்க வெட்கப்படுகிறார் போலும்” என்று என்னிடம் கூறிவிட்டு, வந்த ஆளிடம் நான் இதற்காகவே வந்திருக்கிறேன். நான் கோர்ட்டுக்கு வராமலிருக்க முடியாது நீதிபதியிடம் சொல்லுங்கள்; என் கடமையை நான் செய்கிறேன். அவர் கடமையை அவர் தாராளமாகச் செய்யலாம்” என்று சொல்லி அனுப்பினார்.

இறுதியாக என்ன நடந்தது? நாங்கள் அனைவரும் கோர்ட்டுக்குச் சென்றிருந்தோம். பெரியாரையும் அங்கு கைதியாகக் கொண்டு வந்திருந்தார்கள். மணி அடித்ததும் ஜட்ஜ் லோபோ விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட்டார், கோர்ட்டுக்கு வரமாட்டாரென்று செய்திதான் கிடைத்தது.

மற்றொரு முறை, அதாவது 1938–ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் போது பெரியாரைக் கைது செய்து அவர்மீது குற்றத்தைச் சாட்டித் தண்டித்து, பல்லாரிச் சிறையில் அடைக்க சென்னை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது அவருக்காக எதிர் வழக்காடிய பாரிஸ்டர் பன்னிர்செல்வம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெரியாரைக்கட்டிப்பிடித்துக் கண்ணிர் உகுத்து அழஆரம்பித்து விட்டார். அவர்கள் இருவரையும் போலிசார் பெரும்பாடுபட்டேபிரித்தார்கள். பின் பல்லாரி சிறையில் நானும்அவரும் மட்டுமேபோய்ப் பெரியாரைப் பார்த்து வந்தோம். எங்களுக்குப் பல அரசியல் கருத்துக்களையும், நாட்டில் நாங்கள் செய்யவேண்டிய பணிகளையும் மிகத் தெளிவாகவும், பொறுமையாகவும் கடறி. எங்களைப் பெரியார்வழியனுப்பி வைத்தது எங்களைக் கலக்கமடையச் செய்தது.

அவர் பல்லாரி சிறையில் இருக்கும் போதுதான் சென்னை ஐலண்டு கிரவுண்டில் ஐஸ்டிஸ் கட்சி மகாநாடு நடந்தது. அவர் பல்லாரி சிறையில் இருந்ததால் அவர் படத்தையே தலைமையாக வைத்து மகாநாட்டை நடத்தினோம். அப்போது ஆந்திர, கேரள, கர்நாடக, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பொதுச் செயலாளராகப் பணி புரிந்தேன். தலைவர் பெரியார் பல்லாரி சிறையில் இருந்ததால் அவரது தலைமை உரையின் முற்பகுதியை சர்.ஏ.டி. பன்னீர்ச்செல்வமும், பிற்பகுதியை நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். பெரியாருடைய கட்டளைப்படி அவரது பணிகளை சட்டசபைக்கு உள்ளே சர்.ஏ.டி. பன்னீர் செல்வமும், சட்டசபைக்கு வெளியே நானும் செய்து வந்தோம்.

இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை எட்டயபுரத்தில் நானும் டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சென்று நடத்தினோம். அப்போது அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கருங்கற்களைச் சரமாரியாக அள்ளி வீசி அடித்து எங்களைக் கூட்டத்தை நடத்த விடாதபடி செய்தார்கள். ஆறு கல்லடிகள் பட்டு இரத்தம் சொட்டியதும் நாவலர் பாரதியார் எழுந்து பக்கத்தில் உள்ள ஒரு விட்டிற்குள் புகுந்து கொண்டார்கள். நான் பேசிக் கொண்டேயிருந்தேன். கற்கள் என் மீதும் பாதுகாப்பிற்காக வந்திருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்மீதும் சரமாரியாக வந்து விழுந்தன. “இனிப்பேச வேண்டாம், தயவு செய்து நிறுத்திவிடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். அப்போது மேடைமீது இரண்டு வண்டி கருங்கற்கள் வந்து விழுந்தன. என் உதடு கிழிந்து இரத்தம் சொட்டியது. இச் செய்தி கோவில்பட்டியில் உள்ள டிப்டி கலெக்டருக்குத் தெரிந்து, அவர் ஒரு படையோடு வந்து எங்கள் இருவரையும் காப்பாற்றி, கல் எறிந்தவர்களில் முப்பது பேர் மீது குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்திருந்தார். காலப்போக்கில் அவ்வழக்கை அப்போது முதலமைச்சராயிருந்த, C. ராஜகோபாலாச்சாரியார் நடத்தவேண்டாமென்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியும் அங்குள்ள அரசாங்க வழக்கறிஞர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்த அநீதியைக் கண்டித்து சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சட்டசபையில் முதலமைச்சர் சி. ஆரைத் தாக்கிப் பேசி, “இதுதான் காங்கிரஸ்காரருடைய தேசீயச் செயலா?” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூறினார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா?” என்று ஆவேசத்தோடு ஒரு அறை கூவல் விடுத்தார். இது அன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம் சர்.ஏ.டி, பன்னிர்ச்செல்வம் அவர்கள் என் உள்ளத்தில் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலுமே குடி கொண்டுவிட்ட செய்தி நாட்டில் விரைவாகப் பரவியது.

பின்பு அவர் மத்திய அரசில், இந்திய அரசாங்க. ஆலோசகராகவும் பணிபுரிந்தார். இங்கிலாந்திலுள்ள இந்தியா மந்திரி சர். ஏ. டி. பன்னீர் செல்வத்தை தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும்படி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இது இந்தியாவிலுள்ள பலருக்குப் பொறாமையையும், மனக்கசப்பையும் உண்டாக்கி விட்டது. 1940–ல் அவருக்குப் பெருமளவில் வழியனுப்பு விழா நடத்தினோம். விமானத்தில் பறந்து சென்றார்கள். போய்ச் சேர்ந்த செய்தி மட்டும் வரவில்லை. புறப்பட்ட விமானமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒமாங் கடலின் மேல் பெட்ரோல் எண்ணெய்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது உடலையும் விமானத்தையும் ஒமாங் கடல் கொள்ளை கொண்டுவிட்டது என்ற செய்தி தெரியவந்தது. தமிழகமே கண்கலங்கியது. என் செய்வது?

தமிழ் நலனுக்கு, தமிழர் நலனுக்கு, தமிழகத்தின் நலனுக்குத் தொண்டு செய்து வந்த தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இழந்து கொண்டே வருகிறோம். அவர்களில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய நண்பர் சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூற முடியும்.