ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன்

24. பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன்

பாண்டவர் தூதளாகப் பரந்தாமன் அத்தினபுரம் சென்றான். பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர்.

கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். வீதியின் இருமருங்கிலும் வானம் அளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின.

முதல் மாளிகையைக் கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான். "என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன்.

இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்னன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள் என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்.

துரோணர், வீடுமர். கிருபர். துச்சாதனன், கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்.

கண்ணன். அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல், சென்றுகொண்டேயிருந்தான். வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகி விட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது. வழக்கம் போல் "இது யாருடையது?" என்றான் கண்ணன்.

"இது தேவரீரது திருமாளிகை" என்று பதில்வந்தது. பதில் வந்த திசையை நோக்கினான் எம்பெருமான். அங்கே மகாத்மா விதுரர். பணிவுடன் கண்ணனை வணங்கியவண்ணம் காட்சியளித்தார். அவரது தோற்றம் அடக்கமே உருவம் கொண்டு எதிரே நிற்பது போன்றிருந்தது.

பக்தவத்சலனான பாண்டவர் தூதன், "அப்படியா? இப்பெருநகரில் எனக்கும் ஒரு மாளிகையுள்ளதே! நான் அதில் தங்குவதே முறை" என்று கூறிக் கொண்டு, அந்தக் குடிலுக்குள் நுழைந்துவிட்டான்.

தனது சிறு குச்சிலில் தற்பரன் எழுந்தருளிவிட்டான் என அறிந்த விதுரன், பூரித்துப் போனான்.

எதிர்பாராமல் வந்த விருந்தினன் கண்ணனை எவ்வாறு உபசரிப்பது? ஏதாகிலும் பால், பழம் வாங்கி வரலாம் என்று விதுரன் வெளியே சென்று விட்டான்.

விதுரன் வீட்டில் அவன் துணைவி மட்டும் தனியாக இருந்தார். கண்ணனை எதிர்பாராமல் சந்தித்த அந்த அம்மையாரும் விம்மிதமுற்றுச் செய்வதறியாது திகைத்து நின்றார்.

கண்ணன் அமர்வதற்கு ஓர் ஆசனங்கூடத் தரவேண்டும் என்று தோன்றவில்லை.

கண்ணன் ஒன்றையும் எதிர்பாராமல், தரையில் அமர்ந்து கொண்டான்.

"அம்மா எனக்குப் பசிக்கின்றது. ஏதாவது கொண்டு வாருங்கள்!" என்றான் கண்ணன்.

வீட்டில் இன்னும் சமையல் ஆகவில்லை. விதுரன் ஏதாவது வாங்கி வந்த பிறகுதான் சமையல் ஆக வேண்டும்.

அதற்குள் பரம்பொருள் பசிக்கின்றது என்கின்றாரே அந்த அம்மையார் செய்வதறியாமல் இயந்திரம் போல் இயங்கத் தொடங்கினாள்.

சமையலறையில், எப்போதோ சமைத்த கீரை மட்டும் இருந்தது. காய்ந்து போயிருந்த அந்தக் கீரையைக் கொண்டுவந்து கண்ணன் முன் வைத்தாள்.

கண்ணன் கைநிறைய வெண்ணெய் எடுத்துண்டு பழகியவன் அல்லவா? அந்தப் பழக்கத்தால் போலும்! கீரையைக் கைநிறைய எடுத்து உண்டான். “ஆகா இவ்வளவு சுவையான கீரையை இதற்கு முன்பு நான் உண்டதே இல்லை” என்று கூறியவாறே அந்தக் காய்ந்துலர்ந்த கீரை முழுவதும் உண்டுவிட்டான்.

“கீரை தீர்ந்துவிட்டதே! வேறு என்ன தரலாம்!” என்று சிந்தித்த அந்த தெய்வத்தாய்க்கு, வீட்டுக்குள் வாழைப்பழம் இருப்பது நினைவுக்கு வந்தது.

விரைந்து சென்று வாழைப்பழம் கொண்டுவந்தாள். பழத்தை உரித்து உரித்துப் பகவானுக்குத் தர்த்தொடங்கினாள். பக்திப்பரவசத்தில் மூழ்கிய அம்மையார், அவசரத்தினால் உரித்த சுளைகளை அப்பால் எறிந்துவிட்டுப் பழத்தோலை இறைவன் திருக்கரத்தில் கொடுத்தாள். கண்ணன் பழத்தோலை சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். பழச்சுளைகள் குப்பையில் விழுந்துகொண்மே இருந்தன.

அப்போது விதுரன் வந்துவிட்டார். கண்ணனுக்குத் தன் மனைவி வெறுந்தோலைத் தருவதும், அவன் உண்பதும் கண்ட விதுரர், வியப்பில் மூழ்கினார். “ஐயோ! பகவானுக்குத் தோலை உண்ணத் தந்து அபசாரப்பட்டுவிட்டோமே!” என்று கழிவிரக்கம் கொண்டார்.

“இறைவனே விருந்தினனாக வந்துள்ள போது, வாழைப் பழத்தோலைத் தரலாமா? இது பகவானுக்குச் செய்யும் அவமானமல்லவா? இங்கே கொண்டுவா நான் தருகின்றேன். நீ சென்று சமையல் செய்!” என்று மனைவியை அனுப்பிவிட்டுத் தாமே வாழைப்பழத்தை உரித்துத் தரலானார். தோலை எறிந்து விட்டுச் சுளையைத் தந்தார் விதுரர்.

பழச்சுளையைச் சற்றே சுவைத்த மாயபிரான், விதுரனை நோக்கி, “நான் இவ்வளவு நேரமும் உண்ட தோலின் சுவை இந்தச் சுளையில் சிறிது கூட இல்லையே!” ஆதலால், தங்கள் மனைவியார் தந்ததுபோல் தோலையே தாருங்கள்!" என்று கேட்டு அருந்தலானான். வாழைப்பழத்தை விடத் சுவையாக இருக்குமா? கண்ணன், விதுரரிடம் விளையாட்டுக்காக அப்படிப் பேசினாரா? என்று ஐயம் நமக்கு எழலாம்.

அது சாதாரணத் தோலாக இருந்தால், கலை இராதுதான். ஆனால், அதில் அந்த அன்னையாரின் பாசமும் பரிவும் பக்தியும் அல்லவா கலந்திருந்தன! இவை கலந்திருந்தால் சுவையில்லாமல் போகுமா?