ஒரு கோட்டுக்கு வெளியே/ஊர்ச்சபை முன்னால்…

13. ஊர்ச்சபை முன்னால்…

ரு மாத காலம், ஊரார்க்கு வேகமாகவும், உலகம்மைக்கு மெதுவாகவும் ஓடித் தீர்ந்தது.

மாரிமுத்து நாடார் காட்டில் 'சீஸன் மழை' தூறத் துவங்கியதுபோல் தோன்றியது, இவரால் வந்ததோ அல்லது தானாக வந்ததோ தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டு விட்டார். ஹெட்கான்ஸ்டபிள் சொன்னபடி சப்-இன்ஸ்பெக்டர், பெண் மோகம் கொண்டவர் என்றும், பல பெண்களைப் பலவந்தமாகக் கெடுத்தவர் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு உதவுபவர் என்றும், தட்டிக் கேட்கப்போன தன்னை அடிக்க வந்தார் என்றும், ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்துறை மந்திரி, கவர்னர், முதல் மந்திரி, கலெக்டர், ஐ.ஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., சர்க்கிள் ஆக ஐ.நா. சபை தவிர. அத்தனை பேருக்கும் கையெழுத்துப் போட்டு. மாரிமுத்து நாடார் மனு அனுப்பியிருந்தார். இது போதாதென்று, பலவேச நாடார், சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களைக் கொண்டு, காசு கொடுத்து மொட்டை மனுக்களைத் தட்டிவிட வைத்தார். விஷயம் பழமானதும், 'என்னாலதான் ஆச்சி, என்னாலதான் ஆச்சி' என்று எப்பப்பாத்தாலும்' அவர் பேசியதை மாரிமுத்து நாடார் அவ்வளவாக ரசிக்கவில்லை.

எப்படியோ, மாரிமுத்து பலவேசக்கூட்டு, சப்-இன்ஸ்பெக்டரை ஒழித்துக் கட்டிவிட்டது என்று ஊரே பேசியது. அதோடு 'சப்-இன்ஸ்பெக்டர சஸ்பென்ட் பண்ணியாச்சி' என்று பலவேசம் இன்னொரு புரளியைப் புழங்கவிட்டார்.

ஊரே பயந்துவிட்டது. மாரிமுத்து நாடாரை 'ஹீரோ' மாதிரியும். 'நறுக்குமீசைப் பலவேசத்தை 'ஹீரோயின்' மாதிரியும் பார்த்துக்கொண்டார்கள். இப்போது யாருமே மதில்போல் இருக்கவில்லை . மாரிமுத்துப் பக்கமே இருந்தார்கள். அவரிடம், வலிய வலியப் பேசினார்கள். டீக்கடையில் 'புரட்சி' செய்த கருவாட்டு வியாபாரி நாராயணசாமிகூட நிலைமையைக் கண்டு பயந்து, மாரிமுத்து நாடாரிடம் "மச்சான் ஒம்மப்பத்தி நான் ஒண்ணும் பேசல. பலவேச அண்ணாச்சிதான் பழைய தகராற மனசில வச்சி வாயில வந்தபடி பேசிட்டார்" என்று சொல்லி, நேச ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹெட்கான்ஸ்டபிள் வேறு மாரிமுத்து நாடார் வீட்டில், அடிக்கடி தன் 'ஹெட்டை' காட்டிக் கொண்டிருந்தார்.

காத்தமுத்துவின் கடையில் "ஊர்க்கூட்டம் போடணும்" என்று உரக்கப் பேசிய சமரச லேரின் யோசனையில், ஊர்க்கூட்டமும் கூடியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்வரை. ஊர்க்கூட்டம் நடைபெற்றுதான் வந்தது. பலவேச நாடார், ஒரு பனையேறியை அடித்து விட்டதற்காகக் கூடிய சபை, மாரிமுத்து நாடாரின் தூண்டுதல் பேரில், பலவேசத்துக்கு 'நாலு தேங்காய்' அபராதம் போட்டது. ஆனால் பலவேச நாடாரோ, "அபராதம் கட்ட முடியாது, செய்யுறத செய்யுங்க" என்று சொல்லிவிட்டு வாக்கவுட்' செய்தார். அவரை ஒன்றும் செய்ய முடியாத ஊர்ச்சபை, அவரிடம் இருந்து தேங்காய்களை வாங்கிப் பிள்ளையார் கோவிலில் உடைக்க முடியாத அந்தச் சபை, தன்னைத்தானே உடைத்துக் கொண்டது சர்வதேச சங்கம் மாதிரி, அது உடைந்து போன பிறகு, உலகம்மையை, ஹிட்லராக நினைத்துக் கொண்ட ஊராரால், ஐ.நா. சபை மாதிரி, புதிய சபை உருவாகியது. 'நாவிதர் மூலம்' வீட்டுக்கு வீடு, சபை கூடுவது பற்றித் தெரிவிக்கப்பட்டது. ரே - பள்ளிக்கூட மைதானத்தில் கூடியது. உலகம்மையோ, மாயாண்டியோ அங்கு போகவில்லை. கூடிய கூட்டத்தில், பலவேச நாடாரும், மாரிமுத்து நாடாரும் ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கருகே இன்னும் இரண்டு மூன்று பெரியவர்கள். மாரிமுத்து, பலவேசம் அருகில் இருக்கக் கிடைத்ததை மிகப்பெரிய புண்ணியமாக நினைத்தவர்போல், அந்த இரண்டு பேருடைய 'மூஞ்சியையே' பார்த்துக் கொண்டும், அவர்கள் சிரித்தால் சிரித்துக்கொண்டும், புருவத்தைச் சுழித்தால், இவர்கள் வாயைச் சுழித்துக்கொண்டும் இருந்தார்கள். கூட்டம், முதலில் பல விவகாரங்களைப் பொதுப்படையாகப் பேசியது. பலவேச நாடார் "எஸ்.பியக்கூட மாத்துறதா இருந்தோம். அவன் கடைசியில எங்க கையில காலுல விழுந்தான். போனாப் போறதுன்னு விட்டுட்டோம்" என்றார். மாரிமுத்து நாடாருக்கும் கொஞ்சம் திருப்திதான். "எங்க அத்தான் கால்ல விழுந்தான்னு சொல்லியிருக்கலாம்! சொல்ற பொய்ய, உருப்படியாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்ல. என் கால்ல விழுந்தான்னு சொல்லாம எங்க காலுன்னு சொன்னாரே, அதுவே பெரிய விஷயம்." கூட்டத்தில் கொலுகொண்ட இதர பெரியவர்கள், "பாரே குட்டிச் சுவராய்ப் போச்சி. ஒரு பைசல் காணணும். மாயாண்டி இருக்காரா?" என்று தற்செயலாகச் சொல்வது போல் சொன்னார்கள். பிறகு நாவிதர்மூலம், மாயாண்டியும், உலகம்மையும் வரவழைக்கப் பட்டார்கள்.

ஊர்ப்பெரியவர்கள் 'பழமும் போட்டு கொட்டையும் தின்னவர்கள்', உலகம்மை சட்டாம்பட்டிக்குப் போய், சரோஜா கல்யாணத்தை நிறுத்தியதை எடுத்துக்கொண்டால், அவள் தன்னை சரோஜாவாகக் காட்டியதை எடுத்துக்கொள்வாள். மாரிமுத்து நாடாருக்கு 'அடிவாங்கிக் கொடுத்ததை எடுத்தால், அவள் கோட்டுக்குள் பாய்வாள். ஆகையால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.

உலகம்மை தைரியமாக, அந்தக் கூட்டத்தைப் பார்த்தாள். 'நாமினேட்டட் எம்.பி.' மாதிரி, 'வாய்ஸ்' இல்லாத பெரியவர் அய்யாவு நாடார். தன்னுடைய 'வாய்ஸைக் காட்டினார்.

"ஒலகம்மா, நீ எதுக்காக ஊர்ல இருக்கவங்கள பொட்டைப் பயலுவன்னு சொல்லணும்? சொல்லு. ஊர்னா மட்டுமரியாதி இல்லாமப் போயிட்டு."

ஊலகம்மை, திடுக்கிட்டுப் போனாள். அவள், அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். இருந்தாலும் பதிலளித்தாள் :

"வயசான மனுஷன் கோட்டுக்குள்ள அடப்பட்டுக் கிடந்ததப் பாத்தும் சாட்சி சொல்லாத ஜனங்கள எப்டிச் சொல்றது?"

"ஒலகம்மா, ஒன்ன மறந்துடாத. ஒரு குத்தத்தச் சரிப்படுத்த இன்னொரு குத்தம் செய்யாத. ஊர்க்காரங்க பொட்டப்பயலுவ இல்லன்னு காட்டுறதுக்கு நினைச்சா நீ தாங்குவியா?"

இதற்குள் மாயாண்டி. நெடுஞ்சாண் கிடையாகக் கூட்டத்தின் முன்னால் குப்புற விழுந்தார். பிறகு, தலையை மட்டும் தூக்கிக்கொண்டு பேசினார்; "என் மவா முட்டாப்பய மவா. தெரிஞ்சி, தெரியாமப் பேசிட்டா, தப்புதான். கையில அடிச்சி காலால உதறிடுங்க. இனிம இப்டிப் பேச மாட்டா. நான் பொறுப்பு."

கூட்டத்தில் கொஞ்சம் உருக்கம் ஏற்பட்டது. அது நெருக்கமாகாமல் இருப்பதற்காக, மாரிமுத்து நாடார் தன் மோதிரக்கைகளை ஆட்டிக்கொண்டு, அய்யாவு நாடாரிடம் காதில் ஏதோ பேசினார். அது ஒப்பித்தது:

"நீ சொன்னா போதுமா? ஒன் மவா சொல்லட்டும்." "நான் ஆம்புள சொல்லுறேன். போதாதா? ஒம்ம மவா குத்தம் செய்தாலும், நீருதான ஜவாப் சொல்லணும். பொம்புள பொம்புளதான், மச்சான்."

"அதுக்காவ பொட்டப்பயலுவன்னு சொல்றதாவே?"

கூட்டத்தில் உருக்கம் கலைந்து, கோபம் கொந்தளித்தது. கசாமுசான்னு பேச்சுக் கேட்டது. சில இடங்களில் 'செறுக்கி மவா' என்ற வார்த்தையும் கேட்டது. மாயாண்டி 'புஜங்காசனம் செய்பவர்போல் நிமிர்த்தி வைத்த தலையை, மீண்டும் தரையில் போட்டுக் கொண்டு கும்பிட்டார். அய்யாவு நாடாருக்கு அதுவே போதுமானதாயிருந்தது. எவன் எப்படிப் போனாலும், தான் பெரிய மனுஷனாய் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் அவர். இதுக்காக, 'ஊர்ல சண்டகூட இல்லியேன்னு' வருத்தப்படுபவர், தீர்ப்பு வழங்கினார்.

"யாருடா கூட்டத்துல பேசுறது சப்ளா சளபுளான்னு பேசாதிங்க! மாயாண்டி, ஒன் பொண்ணு கேக்கக்கூடாத கேள்வியைக் கேட்டுட்டா, நீ குத்தத்த ஒப்புக்கொண்டதுனால அம்பது ரூபாய் அபராதம் போடுறேன். என்ன. எல்லாத்துக்கும் சம்மதந்தானா?"

கூட்டம் நிசப்தத்தின் மூலம், அங்கேரித்தது. மாயாண்டி கெஞ்சினார்:

"குருவித்தலையில் பனங்காய வச்சா எப்டி? குறையுங்க சாமி."

"சரி முப்பது ரூவா. இனிமே பேசப்படாது. பத்து நாளையில கட்டிடணும்."

மாயாண்டி பேசவில்லை. ஏதோ பேசப்போன உலகம்மை, கூட்டத்தில் ஒருவர்கூட, தனக்காக ஒரு வார்த்தையும் பேசாததால், பேசிப் பிரயோஜனமில்லை என்று நினைத்து நின்று கொண்டிருந்தவள், கொஞ்சம் தள்ளிப்போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டாள்.

ஊர்க்காரர்கள் பேசாமல் இருந்ததற்கு ஒரே காரணம், பயம்! பயம்! நொண்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கை மண்டிப் போகாமல் இருக்கவேண்டும் என்கிற சுயநலப் பயம் ஊர்க்கொடுமைகளை, 'கான்ஷியஸாக' உணராத அறியாமைப் பயம்! அவற்றை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த இயலாமைப் பயம்! பூன எலியப் பிடிக்கதப்பத்தி வருத்தப்படுறோமா? அப்டி வருத்தப்பட்டா பயித்தியந்தான் பிடிக்கும்!' அந்த வகையில் அமைந்த 'எவனும் எப்டியும் போறான்' என்னும் பயம்!

இந்தியாவில், பொருளாதார சக்தி, ஒரு சில தொழிலதிபர்களுடன் முடங்கிக் கிடப்பதாக, பொருளியல் நிபுணர்கள் முதல் பொடிக்கடை முனுசாமி வரை பேசுகிறார்கள். இதேபோல் அரசியல் அதிகாரமும் ஒரு சிலரிடம் முடங்கியதாக 'இன்டலெச்சுவல்ஸ்' அறிக்கை விடுகிறார்கள். நாட்டில் முடங்கியிருக்கும் 'கான்ஸென்டிரேஷன் ஆப் பவரைப்' பற்றிப்பேசும் இவர்களுக்கு, பாரத முதுகெலும்பான பெரும்பாலான கிராமங்களில், எல்லா 'பவர்களும்' ஒருசில உறவுக்காரர்களிடமே முடங்கியிருப்பது தெரியாது. இதனால் ஜனங்கள் வாயிருந்தும் ஊமையைப்போல இருப்பதும் புரியாது.

'குட்டாம்பட்டியை எடுத்துக்கொண்டால், கிராம முன்சீப், மாரி முத்து நாடாரின் பெரியய்யா மகன். பலவேச நாடாருக்கு 'அய்யாகூடப் பொறந்த' அத்தை மவன். 'ஒலகம்மைக்காகப் பேசிட்டு அவருகிட்ட போனா எந்த சர்டிபிக்கட்டாவது குடுப்பாரா? நிலவரிய நிறுத்துனா பானசட்டிய வெளில நிறுத்த மாட்டாரா? பஞ்சாயத்துத் தலைவர், மாரிமுத்து நாடாரோட சின்னையா மவன். அவருகிட்ட 'யூனியன்' லோனுக்குப் போவாண்டாமா? அப்புறம் பள்ளிக்கூடத்து மானேஜர் பலவேச நாடாரோட அண்ணன் மவன், உலகம்மகிட்ட போனா பையங்க அவரு பள்ளிக்கூடத்துல போவ முடியுமா? தென்காசில கம்பெனியில வேல இருக்குன்னு வச்சுக்குவோம். ரெண்டாப்பா' 'எட்டாப்பா' காட்டணும். மானேஜர் அட்டி நிறையப் பேருக்குக் குடுத்திருக்கார். நம்ம பையனுக்கும் குடுக்காண்டாமா? போவட்டும், போஸ்ட் மாஸ்டர் இருக்காரே, அவுரு மாரிமுத்துக்குக் கொளுந்தியா மவன், வேண்டாதவங்களுக்கு வாற லட்டர கிழிச்சிப்போடுறதுல மன்னன்! கிழிச்சான்னு' அவர நெசமாவே சொல்லலாம். சண்ட இல்லாதபோதே லெட்டர கிழிக்கவன் உலகம்மைக்கு ஒரு தடவ ஒத்துப்பேசினா பத்து லட்டரக் கிழிப்பான். கணக்குப்பிள்ள, மாரிமுத்து நாடாரும் பலவேச நாடாரும் எடுக்கும் கைப்பிள்ள. இவங்க நம்ம கிட்ட பேசாம இருக்காங்கன்னு தெரிஞ்சா அவன் பேசாம இருக்க மாட்டான் திட்டுவான்!. சொத்துல வில்லங்கத்தக் கிளப்புவான். கணக்கன பகைச்சுட்டா காணி போயிடுமே. இன்னும் ஒண்ணே ஒண்ணு. இந்தக் கூட்டுறவு சங்கம் இருக்கே அதுக்குத் தலைவரு மாரிமுத்து நாடாரு. ஒலகம்மா எதுல இருக்கா? எப்டி இருக்கா?'

மாயாண்டி, தலைதப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று நினைத்தவர் போல், கூட்டத்தைவிட்டு நடந்தார். மகள் எங்கே இருக்கிறாள் என்று பார்க்கவில்லை. அவ்வளவு கோபம். உலகம்மையும் எழுந்து, அவர் பின்னால் போனாள். அய்யா, குப்புறப்படுத்துக் கும்பிட்டது அப்பளுக்கு அடியோடு பிடிக்கவில்லை. கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள்; அதைத் தவிர வேற வழியில்லை. அவள் கவனமெல்லாம் அபராதத்தை எப்படி அடைப்பது என்பதுதான். அன்றாடக்கூலி வயிற்றுக்கே சரியாய் இருந்தது. அபராதம் கட்ட வேண்டிய ஊரார்க்கு அவள் எப்டி அபராதம் கட்டுறது? நிமிர்ந்த பனையில் நேராக ஏறிய அய்யா இப்போ குறுகிய மனுஷங்க முன்னால அடியற்ற பனைபோல் விழ வேண்டியது வந்துட்டு. நடக்கட்டும், நடக்கட்டும். என்றாலும், உலகம்மைக்கு ஒரு வகையில் நிம்மதி! எப்படியோ பிரச்சினை. ஒருவழியில் முடிந்துவிட்டது. பலவேச நாடார், நிலத்தைக் காலி பண்ணச் சொன்னால் ஊரிலும் முறையிடலாம். மாரிமுத்து நாடாரும் ஒண்ணும் பண்ண முடியாது.

வீட்டுக்குப் போன உலகம்மை, வழக்கம்போல் லோகு கொடுத்த காகிதத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டாள். அவன் தொட்டுக் கொடுத்த காகித 'ஸ்பரிசத்தில்' சிறிது நேரம் வசமிழந்து போனாள். அவரு எந்த நேரத்துல குடுத்தாரோ என்னோட கஷ்டம் கொஞ்சங்கொஞ்சமா தீருது என்று சொல்லிக்கொண்டாள். பிறகு காகிதத்தை எடுத்து. காசு போட்டு, இப்போது காலியாக்கப் பட்டிருந்த உலம்மடிக்குள் வைத்துவிட்டு காகிதம் பறந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒரு சின்னக் கல்லை எடுத்து, அதன் மேல் வைத்தாள்.

மாரிமுத்து நாடார் பல்லைக்கடித்தாரென்றால், பலவேச நாடார் வேகமாக மூச்சு விட்டார். 'கடைசில இந்த அய்யாவு நாடாருக்கு மரியாத குடுத்து வெங்கப் பயல ஊரு முறைக்காக அம்பலத்துல வச்சா அவன் எப்பவும் யோசன கேக்கது மாதிரி கேக்காம உலகம்மய லேசா விட்டுட்டான். இருக்கட்டும், இருக்கட்டும்.

இந்த உலகம்ம எங்க போயிடப் போறா?