ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/அரசியல் கட்டுரைகள்: சொல்லாடல் கலை

8

அரசியல் கட்டுரைகள்: சொல்லாடல் கலை


தமிழன் என்னும் வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்திதாசர் எழுதிய அரசியல் கட்டுரைகளின் நிறைகுறைகளை அவர் காலத்திலேயே சுதேசமித்திரன், இந்தியா போன்ற தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளோடும் ஸ்டாண்டர்ட் (Standard), மாடர்ன் ரிவ்யு (Modern Review) போன்ற ஆங்கில ஏடுகளில் வந்த கட்டுரைகளோடும் நீதிக் கட்சியினரின் ஜஸ்டிஸ் (Justice) எனும் ஆங்கில இதழில் வந்த கட்டுரைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து அறியலாம். பெரும் புகழுக்குரிய தமிழ்க் கவிஞராகிய பாரதியார் 1906,1907, 1908,1909 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இதழிலும் 1904 முதல் 1906 வரை சக்ரவர்த்தினி இதழிலும் அரசியல், சமுதாயம், சமயம், இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் புதுவையிலிருந்து எழுதி வந்தார். ஜஸ்டிஸ் இதழின் தலையங்கங்கள் 1927-இல் சர். ஏ. இராமசாமி முதலியாரால் இலக்கிய நயத்தோடு செறிவான ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவை.


பாரதியின் அரசியல் கட்டுரைகள் “இந்திய காங்கிரஸ் மகாசபை”, “ஸ்ரீதாதாபாய் நெளரோஜியின் உபந்நியாசம்”, “தாதாபாய் நெளரோஜியின் அட்ரஸின் கருத்து”, “அமைதிக் குணமுள்ள சென்னைவாசிகள்”, “வர்த்தமான கர்த்தவ்யம்”, “சென்னையில் ராஜபக்திக் கொண்டாட்டம்”,“தேசப்பிரஷ்டம்”,“இந்தியாவின் லாபம்”, “அதர்மப் பத்திரிகைகள்”, “பாபு அசுவினி குமாரதத்தர்”, “ஸ்ரீ ஹரி ஸர்வோத்மராவ்”, “கீழ்த்திசையில் ஸ்வதந்திரக்கிளர்ச்சி-அதற்குநேரும்

பீடைகள்”, “ராஜபக்தி உபதேசம் செய்யும்

சுதேசிகள்”, “நமது ஆங்கிலேய மித்திரர்கள்”, “ஸ்ரீ பாரத தேச தாஸர்களின் பக்தி” போன்ற தலைப்புகளில் அமைந்திருப்பது பாரதி தேர்ந்தெடுத்துக் கொண்ட பாடுபொருள்கள் அவர் கையாளும் நடை பற்றி நாம் அறியத் துணை செய்யும். அவர் காலத்தவர் எழுதி வந்த வடமொழி மிகக் கலந்த தமிழில் இருக்கும் அவர் கட்டுரைகள், அவருடைய கவிதை தரும் இன்பத்தில் ஊறித் திளைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும்.

இராமசாமி முதலியார் “சென்னை ஸ்வராஜிஷ்டுகள்”, “சட்ட ஆலாசனை உறுப்பினர்”, “சமுதாயச் சிக்கல்கள்”, “பணி அமர்த்தும் நிறுவனங்கள்”, “அரசியல் சட்டப் பிரச்சனைகள்”,“வைஸ்ராய்” ஆகிய தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் யாவும் கல்வி கற்ற பிராமணர், பிராமணர் அல்லாதார் ஆகிய இரு சாரார் அரசு அலுவலகங்களில் பதவிக்காக நிகழ்த்தி வந்த போராட்டங்களையே மையமாகக் கொண்டவை. உயர் பதவிகள் யாவும் பிராமணர்களால் கைப்பற்றப்படுதலையும் பிராமணர் அல்லாதவர் தகுதி பெற்றிருந்தும் ஆங்கில அரசால் புறக்கணிக்கப்படுவதையும் சில குறிப்பிட்ட பிராமணத் தலைவர்கள் வஞ்சகமான முறையில் எல்லா நலன்களையும் பெற்று வருவதையும் சுட்டிக் காட்டுபவை. அரசுத் துறைகளில் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகாசபை போன்ற நிறுவனங்களிலும் அவர்கள் செலுத்திய ஆதிக்கத்தைக் கடுமையாகக் கண்டிப்பவை. குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்ச்சிகள், தலைவர்கள் பற்றியும் சட்டநுணுக்கங்கள் பற்றியும் நல்ல ஆங்கிலத்தில் சேக்ஸ்பியர், டென்னிசன் போன்ற கவிஞர்களின் கூற்றுகளை மேற்கோள்களாகக் கொண்டு வரையப்பட்டவை.

பொருளடக்கங்களைப் பார்த்த அளவிலேயே அயோத்திதாசரின் வீச்சு மற்ற இருவரின் வீச்சினையும் விட மிக அதிகமானது என்பது தெரிய வரும். சட்ட நுணுக்கங்கள் பற்றி மட்டுமல்லாமல் சமயங்கள் பேசும் தத்துவ நுட்பங்கள் பற்றி மட்டுமல்லாமல் இலக்கியங்கள் பற்றி மட்டுமல்லாமல் முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் பற்றி மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பற்றியும் தாசரால் எழுத முடிந்தது. பாரதி ஏழை வாழ்வு வாழ்ந்தவராயினும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை நன்கு உணர்ந்து தக்க முறையில் எதிர்வினை செய்கிறார் என்று கூறத்தக்க கட்டுரை ஒன்றையும் தந்திருப்பதாகச் சொல்ல முடியாது. இராமசாமி முதலியார் இந்திய நாட்டு மக்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி அறிந்திருக்க வழியில்லை. பிராமணர்கள் உயர் பதவிகளைப் பிடித்துக் கொள்வதில் கையாளும் தந்திரங்களை அம்பலப்படுத்துவதில் தம் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அவர்களுடைய சமயக் கொள்கைகளில் அவரும் நம்பிக்கை கொண்டிருந்தவராதலால் அவற்றின் குறைகளைப் பேச அவர் முனையவில்லை.

விடுதலைப் போராட்ட வீரர்களைப் பெரிதும் பாராட்டிக் கட்டுரைகள் எழுதிய பாரதியார் சுதேசிய இயக்கத்திலும் இந்து சமயத்தின் பெருமைகளிலும் ஈடுபாடு கொண்டு அவை பற்றி விளக்குவதையே தமது கடமையாகக் கொண்டிருந்ததை நாம் எளிதில் உணர முடியும். அவருடைய சமயம், இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும்கூட அயோத்திதாசர் பெற்றிருந்த அளவு வடமொழி, பாலி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிவு வெளிப்படவில்லை. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் அறிந்தவராயினும் தமிழில் பண்டிதராயினும் சிறு வயதிலேயே பல நூல் பயின்றிருந்தாராயினும் பாரதியின் கல்வியறிவு அயோத்திதாசரின் கல்வியறிவினும் மிகக் குறைந்ததென்பது அவர்களுடைய கட்டுரைகளை ஊன்றிப் படிப்பார்க்குத் தெளிவாகும். தமிழில் அவர் காலத்துக் கிடைத்த எல்லா இலக்கியங்களையும் தாசர் ஆழமாகப் படித்திருந்தார் என்பதில் ஐயமில்லை. பாரதியைப் பற்றியும் அவர் கோட்பாடுகள், நம்பிக்கை பற்றியும் மிகவுயர்வான எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் சிலவுண்மைகள் அவர் கட்டுரைகளில் புதைந்து கிடைக்கின்றன. சான்றாக, இரண்டு மூன்று இடங்களில் சில குற்றம் புரிவாரைச் சாதியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்வார். “பஞ்சம்! பஞ்சம்!” எனும் கட்டுரையில்,

பருத்தி, மணிலாக் கொட்டை முதலிய பிற நாட்டுக்கேற்றுமதியாகும் பொருள்களை அதிகமாக யாருடைய தாட்சணியத்ததிற்காகவேனும் விதைக்காதேயுங்கள். லாபம் காரணமாக விதைத்து அனுப்புகிறவர்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்கள் வேலையை நடக்க வொட்டாதபடி செய்துவிடுங்கள். (பாரதியின் கட்டுரைச் செல்வம் 467)

ஒரு சில கருத்துகளை வலியுறுத்த அயோத்திதாசர் அழகிய குட்டிக் கதைகளைச் சொல்கிறார். தன்னலம் மட்டும் கருதுவோன் தான் வயிறு பிழைக்க அரசையும் குடிகளையும் கெடுத்துப் பாழாக்குவது உண்டாதலால் அவ்வகை மிலேச்சர்களை எவ்வரசாட்சியில் கண்டாலும் அவர்களை அங்குத் தங்கவிடாமல் துரத்துவதோடு அவ்வகையார் வித்துக்களுக்கும் பதவிகள் கொடாமலிருப்பதே அரசிற்கு நல்லதாகும் என்பதற்கு நகைச்சுவை மிக்க ஒரு கதை சொல்லப்படுகிறது.

பெளத்தர் காலத்திற்குப் பின்னும் முகமதியர் ஆட்சிக்கு முன்னும் இருந்த ஒரு தமிழரசன் தன் அவையில் தமிழ் வித்துவான்களே சூழ்ந்திருக்க வேண்டுமென்றும் அமைச்சன் முதல் காவற்காரன் வரை யாவரும் அவர்கள் சொல்லும் செய்திகளை வெண்பா, விருத்தம் போன்ற பாடல்களாலேயே சொல்ல வேண்டுமென்றும் அப்பையர் என்பாருடைய அறிவுரையைக் கேட்டு ஆணையிட்டுச் செயல்படுத்தி வந்தான்.

இவ்வாறு நிகழ்ந்து வரும் ஓர் நாள் இராணிக்குக் கருப்பை வேதனைத் தோன்றியுள்ளதை அரசனுக்குத் தெரிவிக்குமாறு தோழிப் பெண் சென்று முன்னின்று சங்கதியை வெண்பாவில் சொல்லலாமா கலித்துறையில் சொல்லலாமாவென்று எண்ணிக் கொண்டு அரசன் முகத்தைத் தோழி பார்த்துக் கொண்டும் தோழியின் முகத்தை அரசன் பார்த்துக் கொண்டும் காலம் போக்கிக் “கண்ணுக்கினிய கடையாட்டி, கருப்பை நோய் மண்ணிற் கிடந்து மடிகின்றாள்” என்றவுடன் அரசன் கோபித்து நீ சொல்வது வெண்பாவா கலிப்பாவா என்றான். அரசே வெண்பா என்றாள். வெண்பா (சீர் சிதைந்த காரணம் என்ன என்றான். அரசே அவசரம் என்றான். அவசர வெண்பா உனக்குக் கற்பித்தவன் யார் என்றான். அப்பையரென்றாள். அரசன் வேவுகனை அழைத்து,

வேவுகனே வெகு விரைவில் சென்று கூடம்
வித்து வான் அப்பையன் தனை அழைத்து
மேவும் என்முன்னிலையால் கொண்டு வந்தால்
வேண விசாரணையுண்டு விவரமாக

என்று சொல்லிப் பேசாமலிருந்தான். அதை உணர்ந்த சேவுகன் அரசனை நோக்கி விருத்தத்திற்கு இன்னும் இரண்டு சீர் குறைகிறதே என்றான். அரசன் இஃது அவசர விருத்தம் நீர் உடனே செல்லுமென்றான். தங்கள் சபையிலுள்ள வித்துவான்கள் ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், மட்டு விருத்தம் கற்பித்தார்களேயன்றி எனக்கு அவசர விருத்தம் கற்பிக்கவில்லையே என்றான். இவ்வகைக் காலப் போக்கில் இரண்டு நாழிகை கழிந்து இராணிக்கு அதிக நோய் கண்டு இன்னொரு தோழி ஒடி வநதாள்.

அரசன் கொட்டாரத்தருகில் போய் குதிரை வெந்து மடிந்திருப்பதைக் கண்டு அப்பையனை அழைத்து வாருங்கோள் என்றான். இராணியின் சுகவீனமும் மகவை மடிவும் குதிரை மாய்வுங்கண்ட அப்பையன் அரசனைக் கண்டால் அவதி நேரிடும் என்று அப்புறமே ஒடிவிட்டான். அதையறிந்து அரசன் மந்திரிகளை வரவழைத்து இனிப்பாடல்களால் சொல்லும் சங்கதியை நிறுத்தி வழக்கம் போல் அவரவர்கள் அலுவல்களை நடத்தி வரும்படி உத்திரவளித்தான் (அலாய்சியஸ் I 6-7).

இக்கட்டுரையை அயோத்திதாசர் எழுதிய ஆண்டு 1907 என்பது நினைவில் கொள்ளத்தக்கது. தமிழகத்தைத் தமிழரசர்கள் ஆண்ட காலத்தில் ஆரியர்கள் அவர்களுக்கு அமைச்சர்களாகி எவ்வாறெல்லாம் எடுத்துக் கெடுத்தார்கள் என்று கூறும் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் பின்னால் ஏராளமாக எழுதப்பட்டன. அவைகளுக்கெல்லாம் முன்மாதிரியான இக்கதை மூலம் அயோத்திதாசர் தமிழ் மன்னர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என்பதைத் தெரிவிப்பதோடு அவர் காலத்திலிருந்த ஆங்கிலப் பேரரசு எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதையும் யார் யாரை நம்பக் கூடாதென்பதையும் மறைமுகமாகச் சுட்டுகிறார்.

தாம் சொல்லும் கருத்துக்கள் படிப்போரின் உள்ளத்திலும் அறிவிலும் ஆழப் பதிய வேண்டுமென்பதற்காக அயோத்திதாசர் கையாளும் உவமைகள் மிகப்பல; அவை வாழ்க்கையின் புல துறைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

நாடு கெட்டதற்குக் காரணம் சாதி சமய வேறுபாடுகளே என்பதை இவ்வாறு விளக்குவார்:

இத்தேசத்துள் கொசுக்கள் அதிகரித்து மக்களை வாதிப்பதற்கு மூலம் யாதெனில் நீரோடைகளிலும் கால்வாய்களிலும் கிணறுகளிலும் நீரோட்டம் இன்றித் தங்கி நாற்றமுறில் அதனின்று சிறிய புழுக்கள் தோன்றி அந்நாற்ற பாசியைப் புசித்து வளர்ந்து இறக்கைகள் உண்டாய, புழுக்கள் என்னும் பெயர் மாறி கொசுக்கள் என்னும் உருக்கொண்டு பரந்து வெளி வந்து சீவர்களை வாதிக்கிறது. இவ்வகை வாதிக்கும் கொசுக்களின் உற்பத்திக்கு மூலம் அங்கங்குக் கட்டுப்பட்ட கெட்ட நீர்களேயாம்.

அது போல் உலகிலுள்ள சகல விவேகிகளும் கொண்டாடும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த இந்து தேசமானது நாளுக்கு நாள் வித்தை கெட்டு, புத்தி கெட்டு, ஈகை கெட்டு, சன்மார்க்கங்கள் கெட்டு வருதற்கு மூலம் யாதெனில், தங்களை உயர்த்திக் கொள்ளத் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளும் வித்தை புத்திகளால் பிழைக்க விதியற்று சாமி.பயங்காட்டிப் பிழைக்கும் சமயங்களுமாம் (அலாய்சியஸ் I 39).

சாதிகளும் சமயங்களும் நோய் தரும் கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடைகள் என்பது அவர் கூறும் உவமை.

வேறோரிடத்தில் சாதியால் பிழைப்பாரை,

நமது தேயத்தார் நூதனமாக சாதிகளை ஏற்படுத்திக் கொண்டு உப்பு அதிகரித்தால் நீரும் நீர் அதிகரித்தால் உப்பும் இட்டுக் கொள்ளுவது போல் தங்களுக்கு லாபமும் சுகமும் கிடைக்கக் இடங்களில் சாதியில்லை என்பது போல் நடித்து அன்னியர் தங்களுக்கு லாபமும் சுகமும்கோறும் இடங்களுக்கு சாதி உண்டு என்று நடிப்பது வழக்கம். ஆதலின் சாதி பேதம் இல்லா திராவிடர்கள் யாவரும் அஞ்சவேண்டியவர்களேயாம் (அலாய்சியஸ் 165).

அயோத்திதாசரின் நகையுணர்வு வியப்புக்குரியது. கசப்பான உண்மைகளையும் அவலநிகழ்வுகளையுங்கூட அவரால் நகைச்சுவையோடு சொல்ல முடிகிறது. நம்மவர்களுக்குப் பெருங்கூட்டம் சேர்ப்பதில் உள்ள விருப்பையும் செயல்திறனில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்த,

நம்முடைய தேசத்தார் மசான வைராக்கியம், பிரசவ வேதாள வைராக்கியங்களைக் போல் கூட்ட வைராக்கியம் கொண்டவர்கள். அதாவது ஒர் கூட்டம் கூட வேண்டும் என்று ஒருவர் அல்லது இருவர் முயன்று ஒவ்வோர் காரியங்களை உத்தேசித்து ஆயிரம் பெயரைக் கூட்டி நடத்தும் முடிவை நாடுகின்றது. அவ்வகை நாட்டமுருங்கால் முயற்சியினின்ற ஒருவரோ இருவரோ அயர்ந்து விடுவார்களாயின் அவர்களுடன் சேர்ந்த ஆயிரம் பெயர்களும் அயர்ந்து விடுவது வழக்கம் (அலாய்சியஸ் 143)

என்றுரைப்பார்.

பெரிய சாதி சின்ன சாதி என்னும் வேடங்களைப் பெருக்கிக் கொண்டே போவார் சாதிப் பெயர்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை எடுத்துக்காட்ட,

மதுரை முதலிய இடங்களிலுள்ள பட்டு நூல் வியாபாரிகளும் கைக்கோளர் என்று அழைக்கும்படியானவருமான ஒர் கூட்டத்தார் முப்பது வருடங்களுக்கு முன்பு குப்புசாமி, பரசுராமன் என்று அழைத்து வந்தார்கள். அவர்களே சில வருடங்களுக்கு முன் நூல் வியாபாரத்தைக் கொண்டு தங்களைக் குப்புசாமி செட்டி, பரசுராம செட்டி என்று வழங்கி வந்து தற்காலம் தங்கள் பெயர்களைக் குப்புசாமி ஐயர், பரசுராம ஐயர் என்று வழங்கி வருகிறார்கள்.

இவ்வோர் அனுபவத்தைக் கொண்டே அரைச் செட்டையை நீக்கிவிட்டு முழுச் செட்டையைப் போர்த்துக் கொள்வதும் முழுச்செட்டையை நீக்கிவிட்டு அரைச் செட்டையைப் போர்த்திக் கொள்வதும் போல் சாதிப் பெயர்கள் யாவும் ஒவ்வோர் கூட்டத்தார் சேர்ந்து சாதி தொடர் மொழிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய காலத்தில் சேர்த்துக் கொள்வதும் அவற்ற்ை நீக்கிவிட வேண்டிய காலங்களில் நீக்கிவிட வேண்டிய பெயர்களாய் இருக்கின்றபடியால் இச்சாதிப் பெயர்களைப் பெரிதென்று எண்ணி தேச சிறப்பையும் ஒற்றுமையையும் கெடுத்துக் கொள்வது வீண் செயலேயாம் (அலாய்சியஸ் 142).

என்று எழுதுவார். நாடெங்கிலும் அன்றாடம் நடந்த நிகழ்ச்சிகளில் தமக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை அங்கதமும் நகையுணர்வும் கலந்து எடுத்துக் கூறுவதோடு தமது கருத்துக்களுக்கு அவை அரண் செய்வதையும் அயோத்திதாசர் தொட்டுக் காட்டுவதைப் பலவிடங்களில் காணலாம். பூரீரங்கம் கோயிலில் ஒரு சாரார் செய்த கொடுமையைக் கீழ்க்கண்டவாறு தமது"தமிழன்” பத்திரிகையில் தருவார்:

திரிசிரபுரம் ஸ்ரீரங்கர் கோவில் உற்சவம் நடந்து ஆழ்வார் சுவாமிகளை ஊர்வலம் கொண்டு வருங்கால் வடகலை தென்கலை நாமம் போட்டுத் திரியும் பார்ப்பார்கள் பொறாமையினால் சண்டையிட்டு சுவாமியென்றும் கவனிக்காது ஆழ்வார் கழுத்திலிட்டிருந்த மாலையைப் பிடுங்கியும் அவரைக் கீழே தள்ளவும் ஆரம்பித்து போலீசாரால் பிடிபட்டு விசாரணையிலிருக்கின்றார்கள். பார்ப்பார்கள் ஆழ்வார் மீது வைத்திருப்பது அதிபக்தியா, பொருளின் பேரில் வைத்திருப்பது நித யுக்தியா. ஆராய்ச்சி செய்யுங்கால் இத்துடன் சுய அரசாட்சிக்குத் தலைவராக இருக்கும்படி தென்கலையாருக்குக் கொடுக்கலாமா, வடகலையாருக்குக் கொடுக்கலாமா, குருக்குப் பூச்சுக்குக் கொடுக்கலாமா, நெடுக்குப் பூச்சுக்குக் கொடுக்கலாமா என்பதையும் ஆராய்ச்சி செய்து வைத்துக் கொள்வோமானால் ஆழ்வாரைக் கீழே தள்ள ஆரம்பித்ததைப் போல் சுய அதிகாரம் பெற்றவர்களைத் தள்ளாமல் சுகம் பெற்று வாழ்வரோ இல்லை இல்லை (அலாய்சியஸ் 117).

‘இந்தியா’ எனும் பத்திரிகையில் ஆர்.என். சுவாமி என்பார் தங்களுக்காகக் கல்விச்சாலைகள் வேண்டுமென்றும் பஞ்சமர்களுக்கென்று வேறு பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் எழுதியிருந்ததைக் குறிப்பிடும்தாசர்,

ஏழைகள் மீது இவர் எதார்த்த இரக்கம் உடையவராயின் ஆ எமது சுதேசிகளே, மலமெடுக்கும் தோட்டிகளுக்கும் சாதிவுண்டு குறவருக்கும் சாதி வுண்டு வில்லியருக்கும் சாதி உண்டு பார்ப்பாருக்கும் சாதிவுண்டு என்று எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து கொண்டு இத்தேசப் பூர்வ சுதேசிகளைப் பஞ்சமர்கள் என்று தாழ்த்திப் பிரித்து வைப்பது அழகன்று என்றும் சகலரும் ஒத்து வாழ்வதே புகழ் என்றும் கூறி அவைகளுக்கொப்ப சீர்திருத்தங்களையும் ஒற்றுமையையும் ஒழுக்கங்களையும் போதிப்பர். அங்ஙனமின்றிப் பஞ்சமர்களுக்கென்று பிரத்தியேகப் பள்ளிக்கூடம் போட வேண்டும் என்பது பார்ப்பார்கள் கூடிப் பணம் தானம் செய்வது போலாம் (அலாய்சியஸ் 173).

என்று அறிவு புகட்டுவார்.

அவர் காலத்து ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் கருத்துகளையும் உடனுக்குடன் ஆராய்ந்து அவை பற்றிய தமது எண்ணங்களை வெளியிடும்போது தாசர் காட்டும் வாதத்திறமை பாராட்டுக்குரியது. சுதேசிகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் இரட்டை வேடத்தைப் புலப்படுத்த ஒரு பத்திரிகையில் வந்த கடிதச் செய்தியைப் பயன்படுத்திக் கொண்டு,

இந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி சனி வாரம் வெளிவந்த மெயில் பத்திரிகையில் (வில்லேஜ் போலீஸ்) அல்லது வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டென்று குறிப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதியான் தப்பிதம் செய்வானாயின் அவனைச் சத்திரத்திலேனும் சாவடியிலேனும் சில மணிநேரம் இருக்கச் செய்வதும் தாழ்ந்த சாதியான் தப்பிதம் செய்வானாயின் அவனைத் தொழுக்கட்டையில் மாட்டி வைக்க வேண்டுமென்றும் உத்தேசம் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவர்களும் சுதேசிகளாம்.

நாஷனல் காங்கிரஸ் நாடோடிகளே, சுதேசிய சூரர்களே, சற்று நோக்குங்கள். பெரிய சாதி என்போன் பூசணிக்காய் திருடினால் சிறிய திருட்டு, சின்னசாதி என்போன் பூசணிக்காயைத் திருடுவானாயின் பெரிய திருட்டாமோ. பெரிய சாதி என்போன் நெல்லைத் திருடினால் சொல்லாலடிப்பதும் சின்ன சாதி என்போன் நெல்லைத் திருடினால் கல்லாலடிப்பது போலும். அந்தோ! கறுப்பர்களுக்கு ஒர் சட்டமும் வெள்ளையர்களுக்கு ஒர் சட்டமும் மாறுபட வேண்டுமோவெனக் கண்டு கேட்டவர்கள் உயர்ந்த சாதியானுக்கு ஒர் சட்டமும் தாழ்ந்த சாதியானுக்கு ஒர் சட்டமும் உண்டாவென உத்தேசிக்க இடமில்லாமல் போயது போலும் (அலாய்சியஸ் I 48).

என்று வாதிடுவார்.

ஏழை எளியவர்களுக்கும் அதிகம் கல்வியறிவு இல்லாதவர்களுக்கும் தம் கருத்துகள் தெளிவாகவேண்டும் என்னும் நோக்குடன் எழுதும்தாசர், நாட்டார் கையாளும் பழமொழிகளை முடிந்த இடங்களிலெல்லாம் பொருத்தமாகச் சேர்ப்பார். ஆங்கிலேயர் தம் நலம் கருதியே நாட்டிற்குச் சில நன்மைகளைச் செய்ய முன் வந்துள்ளார்கள் என்பதை மறுத்து எழுதும் தாசர்,

“பிள்ளையார் முதுகைக் கிள்ளிவிட்டு நெய்வேத்தியம் கொடுப்பது போல் ஆங்கிலேயர் ஆயிரம், இரண்டாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு பஞ்சத்திற்குப் பரிந்து பாடுபடுகின்றார்கள் என்றும், இத்தேசத்தில் இரயில் வண்டிகள் ஒடுவது ஆங்கிலேயர்களுக்கே சுகமென்றும் இரண்டு பத்திரிகைகளில் வரைந்துள்ளதைக் கண்டு மிக்க விசனிக்கிறோம். . . “குதிக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்; பாட மாட்டாதவன் பாட்டைப் பழித்தான்” என்னும் பழமொழிக்கிணங்க சாமிக்கதைச் சொல்லும் போதே சூத்திரன் கேட்கப்படாதென விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது யாருக்கிட்டு யாரை விலக்குவார்கள் என்பது தெரியாதோ. “ஆடு நனையுதென்று ஒநாய் குந்தியழுவது போல்” ஏழைகள் யாவரும் பஞ்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள் என்று கூச்சலிடும் கனவான்கள் தங்கள் திரவியங்களைச் சிலவிட்டுப் பஞ்சத்தை நிவர்த்திப்பதுண்டோ இல்லையே (அலாய்சியஸ் 151).

என்றெல்லாம் பழமொழிகளை அடுக்குவார்.

தாங்கள் நாட்டுப்பற்றுக் காரணமாகவே கூட்டம் கூடுவதும் பத்திரிகைகளில் எழுதுவதுமாகிய செயல்களைச் செய்து வருவதாயும் தங்களிடத்தில் இராஜ விரோதம் கிடையாது என்று சொல்லும் வேடதாரிகளைப் பற்றி,

“எட்டினால் குடுமி எட்டாவிடில் பாதம்” எனும் பழமொழிக்கிணங்க சுதேசிகளாகும் விவேக மிகுந்தோர் எத்தகைய மிதவாதம் கூறினும் அவற்றைச் செவிகளில் ஏற்காது அமிதவாதத்தையே ஆனந்தமாகக் கொண்டாடியதால் அரசாங்கத்தார் முநிந்தளித்த அடியோடு தேசாந்திர சிட்சையும், ஐந்து வருடத்தேசாந்திர சிட்சையும், ஆறு வருட தேசாந்திர சிட்சையும் விளங்கியப் பின்னர் அமிதவாதத்தையும்விட்டு அரசாங்க விசுவாசமே ஆனந்தம் என்று கூறி வெளிவருகின்றார்கள் (அலாய்சியஸ் 1 67–68).

அவர் காலத்து மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றி யெழுதும் போதும் அயோத்திதாசர் இந்துத் தொன்மங்களையும் புராணங்களையும் வேண்டிய இடங்களிலெல்லாம் எடுத்துக்காட்டி அவற்றில் மலிந்து கிடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் வெளிப்படுத்துவது வழக்கம்.

பிரிட்டிஷ் அரசு கொடுங்கோலுடையதன்று என்று வாதிடும்போது,

பிரகலாதனென்னும் பிள்ளையைத் தன் வசப்படுத்திக் கொண்டு நாராயணா நமாவென்று சொல்லும் (?) தகப்பனாகிய இரணியனை வஞ்சித்துக் கொல்லு என்னும் கொடுங்கோல் செலுத்த மாட்டார்கள் (அலாய்சியஸ் 158).

என்று எழுதுவார். இது போன்று அவர் சுட்டும் புராணக் கதைகள் பல பாரதிதாசன் போன்ற தமிழ்க் கவிஞர்களாலும் அவர் காட்டிய வழியிலேயே தாக்கப்பட்டனவென்பது இங்கு நினைவு கூரற்குரியது.

காங்கிரஸ் கட்சி இரண்டாய்ப் பிரிந்து 1908-இல் இரண்டு. கூட்டங்கள் நடத்தப் போவதாய் வந்த செய்தி பற்றி அவர் எழுதும் சிறிய கட்டுரை அங்கத இலக்கியத்தின் உச்சத்தை எட்டுகிறது. அதற்கு அவர் “சாதிகளில் 1008 சாதி அடுக்கடுக்காய்ப் பிரிவது போல் காங்கிரசும் காலத்திற்குக் காலம் பிரிய வேண்டும்போலும்” என்று தலைப்பிடுகிறார்.

இவ்வருஷத்திய காங்கிரஸ் நாகப்பூரில் ஒன்றும் சென்னையில் ஒன்றும் கூடப் போவதாய் வதந்தி.

அவ்வதந்தி வாஸ்தவமாயின் நாஷனல் காங்கிரசென்னும் பெயரை மாற்றிவிட்டு. நாகப்பூரில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை வங்காளியர் காங்கிரசென்றும் சென்னையில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை பிரமான காங்கிரசென்றும் வைத்துக் கொள்வதே நலம் போலும்.

வங்காளத்தை இரண்டு பிரிவாகக் கர்ஜன் பிரபு விரித்துவிட்டபடியால் இராஜ துவேஷம் ஏற்பட்டதென்று கூறும் கனவான்கள் காங்கிரஸ் கமிட்டி இரண்டு பட்டதற்குக் காரண துவேஷம் யாது கூறுவார்களோ காணவில்லை. நமக்குள்ள ஊழலையும் ஒற்றுமைக் கேட்டையும் சீர்திருத்திக் கொள்ள சக்தியற்ற நாம் இராஜாங்க சீர்திருத்தங்களை எடுத்துப் பேசுவது வீண் கலவைகளேயாம். கணக்கெழுதுவோன் கணக்க சாதி, பணிக்கு செல்வோன் பணிக்க சாதி என்ப பரவுதல் போல் மிதவாதத்துள் மிதவாதமும் அமிதவாதத்துள் அமிதவாதமும் தோன்றும் போலும்.

இத்தகைய இரண்டுபட்ட காங்கிரசின் சென்னை காங்கிரஸ் கூட்டத்துள் சீர்திருத்த வகுப்பாருள் சிலர் பறையர்களைப் பற்றிப் பரிந்து பேசி அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதாக யோசிக்கிறார்களாம்.

இவ்வகைப் பரிந்த பேச்சுகள் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும் பேசக் கண்டுள்ளோமன்றி அனுபவத்தில் அவர்களுக்குள்ள குறைகளை நீக்கியவர்கள் ஒருவருமில்லை.

ஆதலின் நமது காங்கிரஸ் கமிட்டியாரும் உள்சீர்திருத்தச் சங்கத்தோரும் சற்றுச் சீர்தூக்கி தொனித்துப் பறையர்களுக்காய்ப் பரிந்து செய்யும் உபகாரத்தை நிறுத்தி அவர்களுக்குச் செய்து வரும் இடுக்கண்களை மட்டிலும் செய்யாமல் இருக்கச் செய்வீர்களாயின் அவ்வுபகாரமே போதுமாகும் . . .

கிராமங்களிலுள்ள அம்பட்டர்களைச் சவரம் செய்ய விடாமல் தடுத்து ரோமரிஷிகளாக்கிவிடும் இடுக்கண்களைத் தவிர்த்துக் குடும்பிகளாக்கி வையுங்கள் (அலாய்சியஸ் 186-87).

பட்டியல் உத்தியைக் கையாண்டு வாதிடுவதில் வல்லவர் தாசர். “சொல்லத்துலையா சாதிகளில் சுயராட்சியம் யாருக்காம்” என்னும் கேள்வியை எழுப்பி இங்குள்ள சாதிப்பாகுபாட்டு அவலத்தை எடுத்துக் காட்டுவார்.

வடகலை ஐயருடன் தென்கலை ஐயர் பொருத்த மாட்டார். பட்டவையருடன் இஸ்மார்த்த வையர் பொருந்த மாட்டார். கொண்டை கட்டி முதலியாற் மற்றும் முதலியாருடன் பொருந்த மாட்டார். துளுவ வேளாளர் காரைக்காட்டு வேளாளரைப் பொருந்த மாட்டார். தமிழ்ச் செட்டியார் வடுக செட்டியாரைப் பொருத்த மாட்டார். காஜுலு நாயுடு தெலுகு காடை, இடைய நாயுடைப் பொருத்த மாட்டார். இவ்வகை பொருந்தாதிருப்பினும் சமயம் நேர்ந்த போது சகலரும் ஒன்றாய்க் கூடிக் கொண்டு இவர்களால் தாழ்ந்தவர்கள் என்று ஏற்படுத்திக் கொண்ட பறையர்களைப் பொருந்த மாட்டார்கள் . . . .

சொல்லொண்ணா சாதிகள் நிறைந்த இச்சுதேசத்தில் மகா கனந்த்ங்கிய லார்ட் மார்லி அவர்கள் சகல சாதியோருக்கும் அளித்துள்ள சுதந்திரமே சுயராட்சியம் எனப்படும். இத்தகைய பேதமற்ற சுயராட்சிய சுதந்திரத்தை விடுத்து வேறு சுயராட்சியம் வேண்டும் என்பது உமிகுத்தி மணி தேடுவதே போலாகும். (அலாய்சியஸ் 1100).

பிரிட்டிஷ் அரசைப் பொதுவாக ஆதரித்து வந்தாரேனும் அது தவறு செய்தபோதும் ஒடுக்கப்பட்டவர்க்கு அநீதி இழைத்தபோதும் அதனைக் குத்திக்காட்ட அவர் தயங்குவதில்லை. அத்தகைய கட்டுரைகளில் எல்லாம் புகழ்வது போலப் பழிக்கும் உத்தியைக் கையாள்வார். சிற்றுார்களில் வாழும் தாழ்த்தப்பட்ட குடியினரின் குறைகளை முறையாக அறிந்து கொள்ளாது ஆங்கிலேய அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்பதை ஒரு சிறு கட்டுரையில், எடுத்துரைக்கும் போது,

“நமது கருணை தங்கிய பிரிட்டிஷ் ராஜரீகம் உலகிலுள்ள சகல ராஜரீகத்திற்கும் மேலான பாதுகாப்புற்ற ராஜரீகம் என்று கொண்டாடப் பெற்றதாயிருந்தும் சிற்சில கிராமக்குடிகள் மட்டிலும் வருத்தமடைகிறார்கள்”

என்று தலைப்பிட்டுக் கொண்டு,

இத்தேசத்தில் வாசம் செய்யும் சில சாதியோர் தங்களிடம் 10,000 ரூபாய் கையிருப்பு இருப்பினும் பத்து காசு தூரத்தில் ஒர் பிரபு ஆளொன்றுக்கு ஓரணா தானம் கொடுக்கிறாரென்று கேள்விப்பட்டவுடன் பணத்தின் பேரிலுள்ள பேராசையால் தூரத்தைக் கவனிக்காமல் ஓடி யாசகம் பெறுவது வழக்கம். இத்தகையப் பேராசை கொண்ட சாதியோருக்கு இராஜாங்க உத்தியோகங்களைக் கொடுத்து விடுவதினால் ஆயிரம் குடிகள் அர்த்த நாசம் ஆனாலும் ஆகட்டும் ஆன வரையில் பணத்தை சம்பாதிக்கும் சமயம் இதுதான் என்று எண்ணி தங்கள் வரவைப் பார்த்துக் கொண்டு இராஜாங்கத்தோரை நிந்தனைக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். இது போன்ற விஷயங்கள் யாவற்றின் மீதும் நமது கருணை தங்கிய இராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்துக் காப்பதே ஏழைக்குடிகளுக்கு ஈடேற்றமாகும் (அலாய்சியஸ் I 106).

என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் தம் கருத்தைச் சொல்லிவிடுவார்.

பிரிட்டிஷ் பேரரசைப் பாராட்டிவிட்டு இங்குள்ள ஆட்சியாளர்களின் குறைகளை அவர் உணர எடுத்துச் சொல்லும் வழக்கமும் அவர்க்குண்டு.

சிறப்புற்று ஒங்கும் நமது சக்கரவர்த்தியாராவர்கள் அமுத வாக்கும் அதனை முற்றும் தழுவாத மகா கனம் தங்கிய லார்ட் மார்லியவர்களின் போக்கும்

என்று தலைப்பிட்டுக் கொண்டு,

இந்து தேச சக்கிரவர்த்தியாய் நம்மையாண்டு வரும் யூரீமான் ஏழாவது எட்வர்ட் பிரபு அவர்கள் தனது பூரணக் கருணையால் இந்து தேசத்தில் இடியுண்டிருக்கும் ஏழைக்குடிகளை முன்பு சீர்திருத்தி சகல விஷயங்களிலும் சமரச நிலைக்குக் கொண்டு வந்த பின்பு இந்துக்களுக்குச் சிற்சில அதிகார நியமனம் கொடுக்க வேண்டும் என்னும் உத்தேசம் உடையவராய் லார்ட் மார்லியவர்களின் பிரேரேபனைக்கு முன்பே தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்.

சக்கிரவர்த்தியார் கருணை நிறைந்த அமுத வாக்கை லார்ட் மார்லியவர்கள் கவனியாமல் இந்து தேசத்திலிருந்து கமிஷன் விஷயமாகப் பல வகுப்பார் அனுப்பியிருக்கும் விண்ணப்பங்களைக் கருணை கொண்டு ஆலோசியாமலும் தனது விசாரணைக் கெட்டியவரையில் இந்து தேசத்தில் வாசம் செய்பவர்கள் யாவரையும் இந்துக்கள் என்ற எண்ணம் கொண்டு நூதன சட்டங்களை நிரூபிக்க ஆரம்பித்துக் கொண்டார். அத்தகைய எண்ணம் கொண்டவர் இந்து தேசத்தில் வாசம் செய்யும் முகமதியர்களையும் இந்துக்களாகப் பாவிக்காது முகமதியர்கள் வேறு இந்துக்கள்.வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுள் இடிபட்டு நசிந்து வரும் முக்கிய வகுப்பாரைக் கவனிப்பாரில்லை (அலாய்சியஸ் 108).

என அவர்கள் செய்த அடிப்படைத் தவற்றைத் தெளிவாக்குவார்.

பெளத்த மார்க்கத்தார்க்கும் பிராமண சமயத்தாருக்கும் உள்ள தீராப் பகை காரணமாக முன்னவர் எவ்வாறெல்லாம் பின்னவரால் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனரென்பதற்கு அவ்வப்பொழுது சான்றுகள் தந்து கொண்டேயிருப்பதைத் தம் கடமையாகக் கருதிய தாசர் பிராமண சமயத்தார் தந்திரமாகச் செயல்படும்போதும் கூர்த்த மதியோடு நிகழ்ந்தனவற்றை ஆய்ந்து தெளிவான விளக்கங்களோடு அம்பலப்படுத்துவார்.

பெளத்த தன்மத்திற்கும் பெளத்தர்களாம் மேன்மக்களுக்கும் சத்துருவாகத் தோன்றிய வேஷ பிராமணர்கள் பெளத்தர்களைத் தாழ்த்திப்பறையரென்று.. நாவிலும் பரவி வருவதய்காய் பறைப்பருந்து பாப்பாரப்பருந்தென்றும் பறைமயினா பாப்பார மயினாவென்றும் பறைப்பாம்பு - பாப்பாரப் பாம்பென்றும் வழங்கி வருபவற்றுள் பறை நாய் என்னும் வார்த்தையையும் ஆரம்பித்தவர்கள் அதற்கு எதிர்மொழியாம் பாப்பார நாய் என்பதை வழங்கினால் அஃது தங்களை இழிவுபடுத்தும் என்று உணர்ந்து பறைநாய் என்னும் மொழியை மட்டிலும் வழங்கி வருகிறார்கள் . . . (அலாய்சியஸ் 1143).

வைஸ்ராய் மிண்ட்டோவும் அவர் மனைவியும் சிம்லாவில் தங்கள் நாயுடன் தெருவில் நடந்து கொண்டிருந்த போது ஒரு வெறி பிடித்த நாய் அவர்கள் நாயைத் தாக்க அதனை அவர்கள் விரட்டி விட்ட செய்தியை ஸ்டாண்டர்ட் எனும் ஆங்கில ஏடு, விஜயா எனும் தமிழ் ஏடு, சுதேசமித்திரன் ஆகிய மூன்றும் எவ்வாறு வெளியிட்டன என்பதை எடுத்துக் கொடுத்து, பிராமணப் பத்திரிகை ஆசிரியரின் குறுமதியையும் சாதிவெறியையும் தாசர் தெளிவுபடுத்துவார். ஸ்டாண்டர்டு பத்திரிகை அந்நாயைப் பைத்தியம் பிடித்த நாய் (a rabid animal) என்றும், விஜயா பத்திரிகை அதனை ‘வெறிநாய்’ என்றும் குறிப்பிட, சுதேசமித்திரனோ ஏழு வரிச் செய்தியில் மூன்று இடங்களில் ‘பறை நாய்’, ‘பறை நாய்’ என்று அதனைச் சுட்டுவதை உள்ளவாறு தந்து சுதேசமித்திரன் ஆசிரியரின் சாதி விரோத உணர்வை இது காட்டுவதாக மட்டும் எழுதி அவரை எந்த விதமான கடுஞ்சொற்களாலும் சாடாது விட்டுவிட்டார். தாசரின் பெருந்தன்மையும் சகிப்பு மனப்பான்மையும் இவ்வாறு வெளிப்படும் இடங்கள் மிகப்பல. ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லி இவற்றைச் செய்யாதீர்கள், செய்யாதீர்கள் என்று பிராமணர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதல்லாமல் அவர்களை இழி சொற்களால் ஏசுவதையோ அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதையோ அவர் என்றும் கருதவில்லை.

இந்தியர்கள் அறிவு வளர்ச்சியில் ஈடுபாடின்றி மூட நம்பிக்கைகளில் முழுகிக் கிடக்கிறார்களேயென்பதை வேதனையோடும் நகைச்சுவையோடும் பலவிடங்களில் பல்வேறு வகைகளில் தாசர் குறிப்பிடுவார்.

இந்தியர்கள் யாவரும் புத்தியில் மிகுந்தோர்களாய் இருப்பார்களாயின் இந்தியர்கள் ரைல்வே, இந்தியர்கள் டெல்லகிராப், இந்தியர்கள் போட்டோகிராப், இந்தியர்கள் லெத்த கிராப், இந்தியர்கள் போனகிராப்பென்னும் தொழில்களை விருத்தி செய்து சகல இந்துக்களையும் சுகமடையச் செய்விப்பார்கள்.

அத்தகைய புத்தியின் விருத்தியின்றிப் பொன்னால் கொட்டை சிறப்புப் பெற்றதா, கொட்டையால் பொன் சிறப்புப் பெற்றதா என்றுணராமல் உருத்திராட்சக் கொட்டை கட்டிக் கொள்ளும் விவேக விருத்தியும் நெற்றியால் நாமம் சிறப்புப் பெற்றதா, நாமத்தால் நெற்றிச் சிறப்புப் பெற்றதா என்றுணராது சிறிய நாமம் போடப்படாது நெற்றி நிறைய பெரிய நாமம் போட வேண்டுமென்னும் விவேக விருத்தியும் நெற்றியால் குழைத்துப் பூச்சும் சாம்பல் சிறப்பு பெற்றதா, குழைத்துப் பூச்சும் சாம்பலால் நெற்றிச் சிறப்புப் பெற்றதா என்றுணராது கோடிட்டுப் பூச வேண்டுமென்னும் விவேக விருத்தி கூறும்படியானவர்களுக்கு என்ன விருத்தி உண்டென்பதைக் கண்டு கொள்ளலாம். (அலாய்சியஸ் 1165).

காங்கிரஸ் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி இங்கிலாந்தில் நிகழ்த்திய சொற்பொழிவொன்றில் இந்தியாவில் வன்முறையில் ஈடுபடும் கொலை பாதகர்கள் இல்லையென்றும் புத்த தன்மத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னமேயே கொடுஞ்செயல்களை நீக்கிச் சீர்திருந்தினவர்களென்றும் சொன்னதை விமர்சிக்கும் தாசர் புத்த தன்மம் பற்றிய பானர்ஜியின் கருத்து சத்தியமாயினும் அவர் இந்தியர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என்று கூறியதை மறுத்து வாதங்களை அடுக்குவார்.

ஆயினும் சங்கராச்சாரி அவதரித்து புத்த தன்மத்தையே ஒட்டி விட்டாரென்று இந்தியர்கள் கூறி வருவதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

ஈதன்றிபாரத யுத்தத்தில் கிருஷ்ணரென்னும் கடவுளே சாரதியாகத் தோன்றி அர்ச்சுனனைக் கொண்டு குருசேத்திர பூமியில் தோன்றியவர்கள் யாவரையும் கொல்லும்படிச் செய்தது போதாமல் அப்பாவங்கள் துலைவ தற்காய அஸ்வமேத யாகம் செய்து மற்றும் சிற்றுார்களில் இருப்பவர்கள் யாவரையும் சுற்றிக் கொல்லும்படிச் செய்த கதையைக் கண்டாரிலை போலும்.

இராமரென்னும் கட்வுள் தோன்றி இலங்கையென்னும் தேசத்திலுள்ள சகலரையும் கொன்றாரென்னும் சங்கதிகளைக் கேட்டாரில்லை போலும். மற்றுமுள்ள தேவர்கள் தோன்றி அவன் தலையை வெட்டிவிட்டார், காலை வெட்டிவிட்டார் என்பது போக எண்ணாயிரம் பெளத்தர்களை, பத்தாயிரம் பெளத்தர்களைக் கழுவிலும் வசியிலும் கற்கானங்களிலும் வதைத்துக் கொன்றார்களென்று கூறும் கழுவேற்றிய படலத்தையும் கண்ணாரக் கண்டாரில்லை போலும். இத்தியாதி மக்களைக் கொன்று மாளக் கீர்த்தியைப் பெற்ற படுங்கொலை போதாது பசு மாடுகளையும் ஆடுகளையும் குதிரைகளையும் பதை பதைக்க நெருப்பிலிட்டுக் கொலை செய்து தின்ற கொறுாரக் கதைகளையும் கண்டிலர் போலும் (அலாய்சியஸ் 1166).

பானர்ஜியின் இனத்தவர் தங்களுக்குப் பெருமை சேர்க்கும் உண்மை நிகழ்ச்சிகள் என்று நம்புவனவற்றையே எடுத்துச் சொல்லி தாசர், ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கக் காணலாம்.

நாட்டில் அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைக் காலம், இடம், புள்ளி விவரங்களோடு எடுத்துக்காட்டி அரசிடமும் தனியாரிடமும் பணிவோடும் வினயமாகவும் நீதி கேட்கும் தாசர் மறைமுகமாக அரசாள்வோரின் மனத்தில் தைக்கும்படி எவ்விதமான உண்மை நிகழ்ச்சிகளையோ, கற்பனையானவற்றையோ சுட்டாது பொதுவாக அறவுரை கூறும் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தார். இவற்றில் அரசனின் கடமைகள் யாவை, அமைச்சரின் செயல்திறன் எவ்வாறிருக்க வேண்டும் என்றெல்லாம் பொதுப்படப் பேசுவார். “அரசியல்” என்னும் தலைப்பிலும் “மந்திரிகள் என்னும் மந்திரவாதிகள்” என்னும் தலைப்பிலும் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் இத்தகையவை. இவற்றிற்குத் திருக்குறளையும் ஏனைய நீதி நூல்களையும் பயன்படுத்திக் கொண்டு பிரிட்டிஷ் அரசில் இந்தியா இருந்த நிலையை மனத்திற் கொண்டு ஏற்ற கருத்துக்களைத் தொகுத்துச் சொல்கிறார். இக்கட்டுரைகளில் தனிமனிதர்கள், ஊர்களின் பெயர்கள் இடம்பெறுவதில்லையாயினும் நாட்டு நடப்புகளில் எவற்றை அவர் முன்னிறுத்த விழைகிறார் என்பது தெளிவாகவே தெரியும்.

சாதிப்பாகுபாட்டை வைத்து வயிறு பிழைப்பாரைத் தட்டிக் கேட்காதது அரசின் குற்றம் என்பதைத் தெரிவிக்க ஒரு குடும்பத்தை உருவகமாகத் தருவார்.

ஒர் தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் பிறக்குமாயின் அப்பிள்ளைகளை வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் பெருகச் செய்து தந்தை சுகம் அடைவதுடன் அவன் பெயரும் கீர்த்தியும் உலகத்தில் பரவும்.

அங்ஙனம் இராது பிள்ளைகளை சன்மார்க்கத்தில் விடுத்தும் அதனைக் கருதாது துன்மார்க்கத்தைப் பின்பற்றி சகோதர ஒற்றுமையற்றுத் தாங்கள் நிலை குலைவதன்றி அன்னியர்களையும் நிலை குலையச் செய்வார்களாயின் தந்தை மறக் கருணையால் தெண்டித்து, சீர் பெறச் செய்வதும் உண்டு. அவ்வகை சீர்திருத்தம் செய்யாது அறக்கருணையால் பிள்ளைகள் போன போக்கில் விடுவானாயின் அவர்களும் கெட்டுத் தனக்கும் யாதொரு சுகமில்லாமல் போமென்பது திண்ணம் (அலாய்சியஸ் 13).

ஆட்சியிலிருக்கும் ஆங்கிலேயர் யாரை நம்ப வேண்டும், எக்குழுவினரை நம்பி ஏமாந்துவிடக் கூடாது என்பதை ஒரிடத்தில் தெளிவுபடுத்துவார்.

ஆதலின் அரசனது அரணும் அகழியும் ஆயுதங்களும் செல்வமும் குறைந்திருந்த போதிலும் தன்னைச் சூழ்ந்துள்ள அமைச்சக்குடி படைகள் நீதியையும் நெறியையும் வாய்மையையும் நிறைந்துள்ள குடும்பங்களில் பிறந்தவர்களாயிருப்பினும் அவர்கள் நீதி நெறிக்காப்பே அரசாங்கத்தைச் சிறப்பிக்கச் செய்யும். அங்ஙனமின்றிப் பித்தளையைத் தீட்டிப் பிரகாசிக்கக் காட்டிய போதிலும் அதைப் பொன்னென்று நம்பாமல் உரைக்கல்லும் ஆணியும் கொண்டு சோதிப்பது போல் அரச அங்கத்தில் சேர்ப்பவர்களின் உருவங்களை நோக்கிச் சேர்க்காமல் அவரவர்கள் குடும்ப குணா குணச் செயல்கள் அறிந்து சேர்த்தல் வேண்டும். ஏனெனில் பொருளைச் சேகரிக்கும் பெரும் அவாக் கொண்டவனை அரச அங்கத்தில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்வதால் அரச அங்கச் செயல்களில் அதி யூக்கம் அற்றுப் பொருள் சேர்க்கும் ஊக்கத்தால் அரசனையும் மற்ற அங்கத்தோர்களையும் விரோதிக்கச் செய்த அரசனுக்குத் தன்னை அதியுத்தமனைப் போல் காட்டி அபிநயிப்பான் (அலாய்சியஸ் 116).

தாசர் எவ்வினத்தாரை நம்பி மோசம் போக வேண்டாமென்று எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஒர் அரசில் அமைச்சனாக இருக்கத் தகுதியுடையோன் யார் என்று விளக்க முனையும் தாசர் நாட்டு நடப்பை மறைமுகமாகத் தெரிவிக்கிறார். அமைச்சன் நல்லவரையும் கெட்டவரையும் அடையாளம் கண்டு அவர்களைப் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

ஒரு பாஷைக்காரர்களாகும் கூட்டத்தாருக்குள் நல்லினத்தோரென்றும் தீயினத்தோரென்றும் கண்டறிய வேண்டியது விசேஷமாம்.

தீவினத்தோர் யாவரெனில்: வஞ்சித்தல், குடிகெடுத்தல், பொய்யைச் சொல்லிப்பொருள் பறித்தல், தனது ஒரு குடும்பம் பிழைப்பதற்குப் பத்துக் குடும்பங்களைப் பாழாக்குதல், எக்காலும் அடுத்தவர்களைக் கெடுக்கத் தக்க எண்ணம் கொள்ளுதல், தங்களுக்கு வேண்டிய பிரயோசனத்திற்காய் எதிரியை அடுத்துக் கேட்டபோது அவர்கள் கொடாவிட்டால் எவ்விதத்தாலும் அவர்கள் குடியைக் கெடுக்க ஆரம்பித்தல், தங்களுக்காக வேண்டிய காரியங்கள் நிறைவேறும் வரையில் எதிரியின் பாதத்தைப் பற்றித் தொழுதிருந்து தனக்கான காரியம் நிறைவேறியவுடன் எதிரியின் குடுமியை எட்டிப் பிடித்துக் கெடுத்தல் ஆகிய வன் நெஞ்சத்தை தன் நெஞ்சம் போல் நடித்துக் காட்டுவோர் தீய இனத்தவர்களாகும். நல்லினத்தோர் யாவரென்னில் கல்வி கற்பித்தவர்களைத் தந்தை போல் கருதும் நன்றியறிந்தவர்களும் வித்தை கற்பிப்பவர்களைத் தந்தை போல் கருதும் நன்றியறிந்தவர்களும் உத்தியோகமளித்துக் காப்பவர்களைத் தந்தை போல் கருதும் நன்றியறிந்தவர்களும் தாங்கள் சுகமடைவது போல் சகலரும் சுகமடைய வேண்டுமென்று முயற்சிப்பவர்களும் புல் விற்றேனும் வண்டியிழுத்தேனும் தேகத்தை வருத்திச் சம்பாதிப்பவர்களும் ஆகிய தன் நெஞ்சத்தை உடையவர்களே நல்லினத்தோர்களாகும் (அலாய்சியஸ் 1169).

அரசன் சுதேச மந்திரவாதச் செயல்களையும் புறதேச மந்திரவாதச் செயல்களையும் ஒரே அமைச்சனிடம் ஒப்பிவிடலாகாது என்று கூறும்போதும் யார் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அவரது வாசகர்கள் உணர்ந்திருப்பார்.

வேதங்கள், உபநிடதங்கள், அவை கூறும் அரிய தத்துவங்கள், ஆன்மா, பிரமம் பற்றிய விளக்கங்கள் என்றெல்லாம் ஒரு சாரார் முழக்கமிட்டு வந்ததைக் கண்டித்து “வேஷ வேதாந்திகள் பிறவி” என்னும் கட்டுரையில் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார் தாசர்.

தற்காலம் வேதம் இன்னது இனியது என்று அறியாத வேஷவேதாந்திகள் சமட்டியென்றால் வியட்டியென்றும் ஆரோபமென்றும் அபவாதம் என்றும் உள்ள வடமொழிகளைப் புகட்டி ஏனையோரை மருட்டிப் பிரமம் எங்கும் நிறைந்திருக்கிறாரென்று சொல்லுவேன், ஆயினும் பறையனிடமட்டிலும் இல்லையென்பேன்; பிரமம் சருவமயம் என்பேன்; பிராமணன் தனியென்பேன்; பிரமம் எங்கும் நிறைந்திருக்கினும் சூத்திரனுள் பிரமம் வேறு, வைசியனுள் பிரமம் வேறு, கூடித்திரியனுள் பிரமம் வேறு, பிராமணனுள் பிரமம் வேறென்பேன்.

காரணம், சூத்திரனாகப் பிறந்தவன் வைசியனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவானேல், மறுபிறவியில் வைசிகனாகப் பிறப்பான்.

வைசியனாகப் பிறந்தவன் கூடித்திரியனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சி பெறுவானேல் மறுபிறவியில் கூடித்திரியனாகப் பிறப்பான்.

கூடித்திரியனாகப் பிறந்தவன் பிராமணனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவானேல் மறுபிறவியில் பிராமணனாகப் பிறப்பான்.

என்பேன் எனக் கூறும் வேஷ வேதாந்திகள் விசாரிணையால் அறிந்துள்ள பிரமத்தின் செயலையும் சாதிகளின் பிரிவையும் ஆராயுங்கால் சூத்திர பிரமம் வேறு, கூடித்திரிய பிரமம் வேறு பிராமண பிரமம் வேறாகவுள்ளன போலும். அவற்றிற்கு ஆதாரமாம் செட்டி பிரமம் வேறு, ஆச்சாரி பிரமம் வேறு. அவர்கள்பால் நின்று தேற விசாரிக்கும் பறையன் பிரமம் வேறு போலும் (அலாய்சியஸ் 1172).

உபநிடதங்கள் பிரமத்தை விளக்கக் கையாளும் நடையையும் உத்தியையும் தாசர் இங்குக் கையாண்டு நையாண்டி செய்து மூலக்கருத்தை எளிதில் தகர்ப்பது குறிப்பிடத்தக்கது.

தமது தமிழன் பத்திரிகை தாய்நாட்டாருக்குப் பரிந்து பேசாமல் ஆட்சியிலிருக்கும் வெளிநாட்டாருக்குத் துணை போவது எனும் குற்றச்சாட்டுக்கு அயோத்திதாசர் தரும் விடை தெளிவானது.

அந்தோ! நாம் சுதேசிகளைத் தூற்றுவதற்கும் பரதேசிகளைப் போற்றுவதற்கும் வந்தோமில்லை. சகல மக்களின் சுகங்களைக் கருதித் தங்களது நீதியைச் செலுத்துகிறவர்கள் யாரோ அவர்களைப் போற்றியும் ஏற்றியும் கொண்டாடுவோம். இதுவே எமது சத்திய தன்மமாகும்.

அங்ஙனமின்றி சுதேசி சுதேசியெனத் தம்பட்டம் அடித்துக் கொண்டு சுயப்பிரயோசனம் கருதோம். அதாவது தற்காலம் சென்னையில் நிறைவேறி வரும் கோவில் வழக்குகளில் வாதிகளும் சுதேசிகளாயிருக்கிறார்கள். பிரதிவாதிகளும் சுதேசிகளாய் இருக்கிறார்கள். வாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கிறார்கள். பிரதிவாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி சுதேசக் கோவில் சொத்தை அழியவிடாது சீர்திருத்தக் கூடாதோ அல்லது தாங்களே ஒருவர் முதன்மையாயிருந்து நியாயமானத் தீர்ப்பளிக்கலாகாதோ.

இல்லை. அதன் காரணமோ சுயப்பிரயோசனத்தைக் கருதுவோர் சுதேசிகளென்று ஏற்பட்டுள்ளபடியால் சுதேசிகளுக்குச் சுதேசிகளே நம்பிக்கையற்றுப் பரதேசிகளை அடுத்து நியாயம் கேட்கிறார்கள்.

பரதேசிகளோ தன்சாதி புறசாதி என்னும் சாதியற்றவர்களும் தன்மதம் புறமதம் என்னும் மதமற்றவர்களும் ஆதலின் சகலருக்கும் பொதுவாய் நியாயம் கூறிச் சீர்படுத்தி வருகிறார்கள் (அலாய்சியஸ் 1173-74).

சுதேசிகளென்று தம்மை அழைத்துக் கொள்வார். தம் நலமே கருதி அயலவரிடம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு அவரோடு போரிடுவது போல் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதைப் பலவாறு தாசர் எடுத்துக்காட்டுகிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்களுள் இந்து சமயத் தலைவர்களெனப்பட்டோர் வெளியிட்ட கருத்துகளையெல்லாம் உடனுக்குடன் அலசி ஆராய்ந்து அவற்றுள் எவை ஏற்புடையவை எவை பித்தலாட்டமானவை என்பதை விளக்குவதைத் தாசர் தமது முதற் கடமையாகக் கொண்டு செயல்பட்டார். பேரறிஞர்கள் என்று கருதப்பட்டவர்கள் வெளியிட்ட முடிவுகளையும் முறையாக எடையிட்டு அவற்றின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும்போது அவருடைய மதி நுட்பமும் வாதத்திறமையும் வெளிப்படும். சுரேந்திரநாத் பானர்ஜி என்னும் வங்க அறிஞர் ஆங்கிலத்தில் பேச்சாற்றல் மிக்கவர். அவர் இந்தியாவில் உள்ள அமைதியற்ற சூழலுக்கு ஆறு காரணங்கள் என்று சுட்டியவற்றை மறுத்து அயோத்திதாசர் உண்மைக் காரணங்களை அடையாளம் காட்டுதல் அவரது சிந்தனை ஆற்றலைப் புலப்படுத்தும்.

1. இந்தியக் குடிகளை கவர்ன்மென்டார் அடியோடு அவமதித்ததே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கிறார். இந்தியாவில் வாசம் செய்யும் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மநுக்களை மாடு, ஆடு, குதிரை, கழுதை, நாய் முதலிய மிருக ஜெந்துக்களினும் தாழ்ச்சியாக அவமதித்து வருவதுடன் மிக்க இழிவுகூறி நாணமடையச் செய்தும் வருகிறார்களே இதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

2. சில சாதியோரை கவர்ன்மென்டார் பட்சபாதமாக நடத்துவதே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கிறார்.

ஒர் ஐரோப்பியர் கலெக்டராக வருவாராயின் மற்றும் வேண்டிய எட்கிளார்க், அஜூர் செருசதார், தாசில்தார், உத்தியோகங்களுக்காக ஐரோப்பியர்களையே தருவித்து வைத்துக் கொள்கின்றார்களா, இல்லையே.

இந்து தேசத்திலுள்ளவர்களில் பிராமணர் என்று சொல்லிக் கொள்வோர்களில் ஒருவர் செருசதாராயினும் தாசில்தாராயினும் சேர்க்கப்படுவாராயின் நாலைந்து வருஷத்துக்குள் அந்த ஆபீசு முழுவதும் பிராமணரென்று சொல்லிக் கொள்கிறவர்களே நிறைந்து விடுகிறார்கள். இத்தகைய செயலுள் ஐரோப்பியர்கள் பாரபட்சம் உடையவர்கள, இந்தியர்கள் பாரபட்சமுடையவர்களா என்பதை பானர்ஜியார் அறியார் போலும்.

3. இராணியார் இந்துக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யாது இராஜிாங்க நிருவாகத்தில் ஒதுக்கி வைத்தலே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கிறார்.

இந்தியர்களுக்குக் கொடுத்துள்ள சுதந்திரங்களைக் கேட்போர்கள் தற்காலம் பெற்றிருக்கும் சுதந்திரங்களில் சகல சாதியோர்களும் அநுபவிக்கும்படியான வழிகளைத் திறந்திருக்கிறார்களா, அடைத்திருக்கிறார்களா என்பதை நமது பானர்ஜியார் அறியார் போலும் 4. ஐரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணம் என்கிறார்.

இந்து தேசத்திலுள்ள மநுக்களில் ஆறு பேருக்கு ஒருவராகத் தோன்றி தேகத்தை வருத்திச் சம்பாதிக்கக் கூடியவர்களும் சாதி பேதமில்லா விவேகிகளும் ஆனோர்களைப் பறையர்களென்றும் தீயர்களென்றும் சண்டாளர்களென்றும் இழிவு கூறி வருவதும் அன்றி மற்றவர்கள் பிரிட்டிஷ் துரைத்தனத்தில் அடைந்து வரும் சுதந்திரங்களை இவர்கள் அடைய விடாமலும் இழிவு கூறித் தாழ்த்தி வருவதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

5. ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் இந்தியர்களின் நியாயமான விருப்பங்களை நிந்தித்துப் பேசி வர அப்பத்திரிகைகளை மதித்து கவர்மென்டார் நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணம் என்கிறார்.

இந்து தேசத்தின் பூர்வக்குடிகளும் சகல சாதியாருக்குள்ளும் பெருந்தொகையினரான பூர்வ பெளத்தர்களைப் பறையர்களென்றும் தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்துப் பொய்ச் சரித்திரங்களை ஏற்படுத்திப் புத்தகங்களில் அச்சிட்டுக் கொண்டு கூத்து மேடைகளில் அவமானப்படுத்தி வருவதும் ஆகிய பொறாமைச் செயல்களை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

6. வங்காளத்தை இரண்டு பிரிவினையாகப் பிரித்துவிட்டதே அமைதியில்லாச் செயலுக்குக் காரணம் என்கிறார்கள்.

இந்து தேசத்தில் சாதியுள்ளவர்கள் யாவரும் ஒரு பிரிவு சாதியில்லாதவர்கள் யாவரும் ஒரு பிரிவென்று இரண்டாகப் பிரித்துச் சாதியுள்ளவர்கள் மட்டிலும் தங்கள் கலாசாலைகளிலும் கைத்தொழில் சாலைகளிலும் வந்து கற்றுக் கொள்ளலாமென்றும் சாதியில்லாதவர்கள் வரலாகாதென்றும் ஐயர்கள் வாசம் செய்யும் இடங்களை ஐயர்கள் வீதியென்று கூறாமலும் நாயுடுகள் வாசம் செய்யும் வீதிகளை நாயுடு வீதிகளென்று கூறாமலும் முதலிகள் வாசம் செய்யும் வீதிகளை முதலிகள் வீதிகள் என்று கூறாமலும் பூர்வ ஏழைக்குடிகள் வாசம் செய்யும் இடங்களுக்கு மட்டிலும் மயிலாப்பூரான் பறைச்சேரி வீதி, இராமசாமி முதலி பறைச்சேரி வீதியென்று போர்டுகளில் எழுதியே பிரித்து இழிவு கூறி வருகிறார்கள். ஒர் தேசத்தை இரண்டாகப் பிரித்ததற்கே தோஷம் கூறிய பானர்ஜியவர்கள் மநுக்கூட்டத்தோர்களையே இரு வகையாகப் பிரித்து இழிவு கூறி வருவதை அறியார் போலும்.

அந்தோ நமது கனந்தாங்கிய பானர்ஜியார் இந்தியாவில் உள்ள இத்தியாதி ஒற்றுமைக் கேடுகளையும் உணராது அமைதியற்ற நிலைக்குக் கூறிய அறுவகைக் காரணங்களும் வீணேயாம் (அலாய்சியஸ் 1176 - 77).

சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியச் சமுதாயத்தின் உண்மை நிலை அறியாதிருப்பதையும் அதனைத் திருத்துவதைத் தமது முதற் கடமையாகக் கொண்டிராமல் யார் யாரையோ தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறார் என்பதை எடுத்துக்காட்டும் தாசர் காங்கிரஸ் தலைவர்கள் இந்நாட்டில் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறியாமலும் அறிந்து கொள்ள முயலாமலும் அது பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமலும் இருக்கும் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

பிராமணர் அல்லாதார் சிலர் சேர்ந்து கொண்டு நான்பிராமின்ஸ் (Non-Brahmins) சங்கம் என்று ஒன்று தொடங்கியபொழுது ‘நான் பிராமன் கூட்டத்தோரென்றால் யாவர்’ என்ற தலைப்பில் அத்தகைய சங்கத்திலிருக்கும் உள் முரண்பாடுகளை எடுத்துக்காட்டி அவர்களுடைய நோக்கங்களைத் தெளிவுபடுத்துமாறு தாசர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்காலம் பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதி யென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதி பேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தவர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களையும் அப்பிராமணர் என்போர்களே ஏற்படுத்தி அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே யாவர் . . .

ஆதலின் இவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தற்காலம் தோன்றியிருக்கும் ‘நான் பிராமன்ஸ்’ என்போர் யாவரென்றும் அவர்கள் கூட்டத்தின் கருத்துக்கள் யாதென்றும் தெரிவிக்கும்படிக் கோறுகிறோம்.

கூட்டவோட்டச் செலவுகள் யாவும் எங்களைச் சார்ந்தது. ஆட்டபாட்டச் சுகங்கள் யாவும் ஐயரைச் சார்ந்தது என்பாராயின் யாது பலன் என்பதேயாம் (அலாய்சியஸ் 1183-84).

சாதிப் பாகுபாடுகளையும் சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே நான்பிராமின்ஸ் என்று சங்கம் கூடியிருக்கின்றனரா அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து அத்தகைய சங்கத்தை அமைத்துள்ளனரா வென்று தாசர் கேட்ட கேள்வி தொலைநோக்குடையதாகும். பின்னால் வந்த நீதிக்கட்சியினர் பலர் சாதி ஆசாரங்களை ஏற்றுக் கொண்டு அரசாங்கத் துறைகளில் பல சாதியாருக்கும் பதவிகள் வழங்க வேண்டுமென்பதை முதல் குறிக்கோளாக வைத்துப் போராடினர். ஆனால் இந்நோக்கம் அடிப்படையில் தவறானது என்பதை அயோத்திதாசர் சுட்டிக் காட்டுகிறார். சாதியாசாரங்களையும் சமயவாசாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாயின் அதனோடு பலர் சேர்ந்துழைக்கத் தாமும் பிறரும் தயாராயிருப்பதையும் அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புக்காக மட்டும் நான் பிராமன்ஸ்’ சங்கம் போராடுமென்றால் அது பயனற்றதென்பதையும் தாசர் தெளிவுபடுத்துவது உணர்ந்து பாராட்டத்தக்க நிலையாகும்.

இதே போல் டிப்பிரஸ்டு கிளாஸை(Depressed Classes) சேர்ந்தவர்களை உயர்த்தப் போகிறோமென்னும் சில மேட்டுக் குடியினர் முன்வந்த போதும் அவர்கள் உள்நோக்கம் என்னவென்பதை அறிவிக்குமாறு தாசர் கேள்வி யெழுப்பினார். பரோடா மன்னர் தமது நாட்டில் கனத்திலும் தனத்திலும் தாழ்ந்தவர்கள் உயர வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்பின் மிகுதியால் ஏழைகளுக்குக் கலாசாலைகளும் கைத்தொழில் சாலைகளும் அமைக்க உதவி செய்தபோது அவரைப் பாராட்டிய தாசர், தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்டோரை மேலே கொண்டு செல்வோம் என்று முன்வருபவர்கள் யாரை எப்படி ஏமாற்ற முயலுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இதற்காதரவாக இம்மாதம் ஆறாம் தேதி சனி வாரம் வெளிவந்த சென்னை சுதேசமித்திரன் பத்திரிகை நான்காம் பக்கம் நான்காவது கலத்தில் “கீழ் வகுப்பு சாதியாரை உயர்த்தல்” என்னும் காப்பிட்டு (பரித்பூர்) என்னும் தேசத்துள் கூடிய கூட்டத்தில் சில பிராமணர்கள் வந்திருந்து அவ்விடம் உள்ளோர்களைப் பார்த்து அன்னிய தேச சரக்குகளை பாய்காட் அதாவது “வர்ஜ்ஜனம் செய்வோர்களை உயர்த்தி விடுவதாகக் கூறினார்களாம். இதன் ஆதரவைக் கொண்டே சாதி பேதம் வைத்துள்ள கூட்டத்தார் தங்கள் சுதேசியக் கூட்டத்தை வலுச் செய்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தால் டிப்பிரஸ் கிளாசை சீர்படுத்தப் போகிறோமென வெளித் தோன்றியுள்ளார்களென்று கூறியுள்ளோம் (அயோத்திதாசர் I 204).

சாதிபேதமற்ற திராவிடர்கள் யாவரும் இக்கூட்டத்தினரின் எண்ணங்களை ஆராய்ந்தறியும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளும் தாசர், முன்னடந்த வரலாற்று நிகழ்ச்சியொன்றை அவர்களுக்கு நினைவூட்டுவார்.

தற்காலம் பிராமணர்களென்று சொல்லிக் கொள்ளும்படியானவர்களுக்கும் கம்மாளர்கள் என்பவர்களுக்கும் சில கலகங்கள் நேரிட்டபோது பிராமணர்களென்போர் கம்மாளர்களுக்குப் பயந்து பறையர்கள் என்று அழைப்போர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு நீங்கள் வலங்கையர்கள், உங்களுக்கு சகல சுகங்களும் உண்டு, எங்களுடன் வலது கைப்பக்கம் நீங்கள் இருக்க வேண்டுமென்று வெறுஞ் சுதந்திரமும் வெறும் உற்சாகமும் கொடுத்துத் தங்கள் காரியங்கள் யாவும் கைகூடியவுடன் நீங்கள் பழைய பறையர்களேயென்று பாழ்படுத்தி வருவது அனுபவமேயாகும் (அலாய்சியஸ் I 204).

பிராமணர் அல்லாதாரின் சங்கங்களையும் “டிப்பிரெஸ்டு கிளாஸை” உயர்த்துவோம் என்பாரையும் நம்பி, சாதிபேதமற்ற திராவிடர்கள் ஏமாந்துவிடக் கூடாதென்று பல கட்டுரைகளில் தாசர் கூறும் அறிவுரை பின்னைய நிகழ்வுகளை வைத்து எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

கடவுள் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவாரைச் சாடுவதற்கு அவர்களைக் கள்ளுக்கடை வைத்திருப்பவரோடு ஒப்பிட்டுக் காட்டுவார் தாசர்.

கள்ளுக்கடை விற்போன் தன் கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளை வாங்கி விற்று அதன் லாபத்தால் சீவிக்கின்றான். கரிதோசை விற்பவளோ தன் கைப்பொருள் கொண்டு சரக்குகளை வாங்கிக் கரிதோசை செய்து அவற்றை விற்று அதனால் சீவிக்கிறாள். . . . .

குடிப்பவர் ஒழிந்தால் விற்பவர்கள் இரார் என்பது திண்ணம் ஓர் வஸ்துவை வாங்குவோர் இல்லாவிடத்து விற்போர் இரார் என்பது கருத்து.

ஆனால் கடவுட்கடை வைத்திருப்பவர்களோ அவர்கள் சாமி சரக்கைத் தாங்களே காணாதிருப்பினும் பஞ்ச சாதகங்களில் ஒன்றாகிய பொய்யைச் சொல்லி எங்கள் தேவனே தேவன், மோட்சத்திற்கு நேரில் கொண்டு போய் விட்டுவிடுவார், சாமியை நேருக்கு நேரில் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்; ஆயினும் எங்கள் உண்டிப் பெட்டிக்குப் போடும் பணங்களை மட்டிலும் தடை செய்யாதீர்கள் . . .

இதற்கு சாமியென்னும் முதலே கடைச்சரக்குகளாய் இருக்கின்றபடியால் கள்ளுக்கடைக்குக் கைம்முதல் வேண்டியிருப்பது போல் கடவுள் கடைகளுக்குக் கைம்முதல் வேண்டுவதில்லை. இன்னும் கடையை விருத்தி செய்ய வேண்டுமாயின் சொத்துள்ள கைம்பெண்கள் எங்கு இருக்கின்றார்களென்று அறிந்து அவர்களை அணுகி அம்மாதர்களை . . . . தங்கள் மதக்கடைக் கணக்கில் சேர்த்துக் கொண்டு சாமி வியாபாரத்தைச் சம்பிரமமாகச் செய்து வருவார்கள். தங்களுடைய சொத்துக்களை மறந்தும் மதக்கடை பெயரால் எழுதுவார்களே ஒருக்காலும் எழுத மாட்டார்கள் (அலாய்சியஸ் I 210).

தாங்கள் கேளாததும் காணாததுமான ஒன்றைச் சொல்லிப் பொருள் பறிக்கும் பாதகம் கடவுட்கடையென்பதால் அதனை நடத்துவார்கள் விற்பாரினும் கொடியவர் என்று தாசர் எழுதிச் செல்வார்.

ஒரு மனிதர் அல்லது நிகழ்ச்சி அல்லது குழு அல்லது நிறுவனம் பற்றிப் பேசும்போது அதனையொத்த மனிதரோடு அல்லது நிகழ்ச்சியோடு அல்லது குழுவோடு அல்லது நிறுவனத்தோடு ஒப்பிட்டுக் காட்டி நிறைகுறைகளைப் பேசுவது தாசர் அவ்வப்போது கையாளும் உத்தியாகும். இந்தியப் போலீசு பற்றிக் குறிப்பிட விரும்பும்போது,

ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த பஞ்சாபி ஒருவன் ஒர் ஐரோப்பியரைச் சுட்டுவிட்டபோது ஐரோப்பியப் போலிஸ் உத்தியோகஸ்தர்கள் யாவரும் பஞ்சாபி ஒருவரை மட்டிலும் பிடித்துக் கொண்டு அவனைக் கைதியாக்கிக் கொலையின் குற்றத்தை ரூபித்தார்களன்றி அவனருகில் இருந்தவர்களையும் அவனது நேயர்களையும் பிடித்து உயத்திரவம் செய்தது கிடையாது. நமது இந்து தேசத்திலுள்ள இந்தியப் போலீசு உத்தியோகஸ்தர்களோ என்றால் கொலை செய்தவன், கொலை செய்தவனுக்கு அருகில் நின்றவன், அருகில் நின்றவனை அடுத்துப் பார்த்தவன், அடுத்துப் பார்த்தவனை முடுத்துப் பார்த்தவன் யாவரையும் சேர்த்துக் கொண்டு போய் கைதியாக்கி விசாரினை நிறைவேறுங்கால் கொலை செய்தவன் இன்னான் கொலைக்கு உதவியாளன் இன்னான் கொலை செய்யாதவன் இன்னானென்று ரூபிக்கப் பாங்கில்லாது கொலை செய்தவனே தப்பித்துக் கொள்ளுகின்றான் (அரலாய்சியஸ் I 197).

என்றெழுதுவார்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைப் பற்றியெழுத நேர்ந்தபோது சென்னைக் கத்தோலிக்கர்களையும் புதுவைக் கத்தோலிக்கர் களையும் ஒப்பிடுவார். சென்னைக் கத்தோலிக்கக் குரு ஒருவர் கத்தோலிக்கரால் தாக்கப்பட்ட நிகழ்ச்சியையும் புதுவைக் கத்தோலிக்கக் குரு ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியினரை இழிவாக நடத்தியதையும் எடுத்துச் சொல்லி,

கத்தோலிக்கப் பாதிரிமார்களே, இவைகளைச் சற்றுக் கண்ணோக்கிக் கவனியுங்கள். சென்னையில் பாதிரியாரை அடித்துக் கோர்ட்டு வழக்கில் இருப்பவ்ர்களும் கிறிஸ்தவர்களே. புதுவையில் பாதிரியாரால் அவமானப்பட்டுக் கோர்ட்டிற்குப் போயிருப்பவர்களும் கிறிஸ்தவர்களே. ஆதலின் இவ்விரு கிறிஸ்தவர்களுள் குருவை அடித்தவர்கள் யதார்த்தக் கிறிஸ்தவர்களா இவர்களுள் யாரால் கிறிஸ்து மார்க்கம் சிறப்படையும். பாதிரிகளே, பணவரவைப் பாராதீர்கள். ஞானவாட்களாம் குணவரவைப் பாருங்கள், குணவரவைப் பாருங்கள் (அலாய்சியஸ் I 193).

என்று அறிவுரை கூறி முடிப்பார்.

“பாதிரிகளுக்கோர் விண்ணப்பம்” எனும் நீண்ட கட்டுரையில் கத்தோலிக்கப் பாதிரியார்களும் பிராட்டெஸ்டெண்ட் பாதிரியார்களும் முதலில் நாட்டிற்குச் செய்த நலன்களையும் பின்னால் திச்ை தடுமாறிப் போய் சாதி பேதமற்ற திராவிடர்களுக்குச் செய்த தீமைகளையும் தொகுத்துச் சொல்லி அவர்களிடம் இந்நாட்டு ஏழைக் குடிகள் எதிர்பார்ப்பது என்னவென்பதைப் பணிவோடு விளக்குவார்.

தமது முதல் விண்ணப்பத்தைக் கத்தோலிக்கப் பாதிரியார்களுக்குச் சமர்ப்பிக்கும் தாசர் சவேரியார் என்னும் பெரியோரும் பெஸ்கி என்னும் பெரியோரும் 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து செய்த தொண்டினைப் பாராட்டி இங்கிருந்த பூர்வ பெளத்தர்கள் அவர்களிடம் அடைக்கலம் பெற்றதைச் சுட்டிக் காட்டுவோம்.

சாதி பேதமற்ற திராவிடர்கள் ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களாகத் தங்கள் சத்துருக்களின் இடுக்கண்களால் நசுங்குண்டு குலகுருவாம் ஞான சூரியனையும் குலதேவதையையும் ஞானம்பிகையையும் அவர்கள் போதித்துள்ள நல்லொழுக்கங்களையும் நழுவ விட்டுத் தங்கள் சொந்த மடங்களையும் சத்துருக்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பராயர்கள் திரிமூர்த்தி கோவில்களுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டுத் தாய் தகப்பனைத் திசை தப்பவிட்டுத் தவிக்கும் மைந்தர்களைப் போல் கலக்கமுற்று ஆங்கிலேயர்களின் ஆதரவைப் பெற்றுச் சற்று சுகித்திருந்தார்களாதலின் இப்பாதிரிகளும் ஆங்கிலேயர் போல் காண்கின்றபடியால் அவர்கள் மதத்தில் நாம் பிரவேசிப்போமாயின் இன்னும் சீரும் சிறப்பும் பெருகுவதுடன் அவர்கள் கோவிலுக்குள் யாதோர் தடையுமின்றிப் போக்கு வருத்திலிருக்கலாம் என்னும் ஆசை சொண்டும் உங்கள் அடைக்கலம் புகுந்தார்கள். . . .

அவர்களின் நோக்கங்களை அறிந்த கத்தோலிக்கப் பாதிரிமார்களும் அவர்கள் வாசம் செய்யும் சேரிகளின் மத்தியிலும் பக்கங்களிலும் பூமிகளை வாங்கி ஐயாயிரம், ஆறாயிரம் ரூபாயில் ஒவ்வோர் கோவில்களைக் கட்டிச் சுற்று மதில்களை எழுப்பி அதற்குள்ளாகவே பிணங்களைப் புதைக்கத் தக்க சில இடங்களும் நிரூபித்துக் கொண்டார்கள். . . . அந்தோ! இத்திராவிடர்கள் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் அஞ்சர்தவர்கள். கிழவன் கிழவியான போதிலும் ஒருவரிடம் சென்று உதவியென்று கேட்காமல் விறகு விற்றேனும் புல் விற்றேனும் ஒரணா சம்பாதித்து சீவிக்கும் ரோஷமுடையவர்கள். இத்தகைய ரோஷமுடையோர் உங்களை அடுத்துக் கண்ட பலன் கைகளில் கப்பரையும் கழுத்தில் மணிகளுமேயானார்கள். . . .

அம்மட்டிலும் விட்டுவிடாமல் இவர்களுக்கு 1500 வருடமாகச் சத்துருக்களாயிருந்து நசிந்து வந்த சாதி பேதம் உள்ளோர்களைச் சேர்த்துக் கொண்டு நீங்கள் கிறிஸ்தவக் கூட்டத்தில் சேர்ந்த போதிலும் முதலியார் முதலியாராய் இருக்கலாம். நாயகர் நாயகராய் இருக்கலாம். செட்டியார் செட்டியாராய் இருக்கலாம். சந்தனப் பொட்டு வைக்க வேண்டுமானால் சந்தனக் கட்டையை விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். குங்குமப் பொட்டு வைக்க வேண்டுமானால் குங்குமம் விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். எங்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் மட்டிலும் சரி வரச் சேர்த்து விட்டால் போதும் என்று உயர்த்திக் கொண்டு ஆதியில் கிறிஸ்து மதத்தை அடுத்து எங்கும் பரவச் செய்த ஏழை மக்களை எதிரிகளிடம் இரக்கமில்லாமல் காட்டிக் கொடுத்து இவர்கள் பழய கிறிஸ்தவர்கள் அல்ல, பறைக் கிறிஸ்துவர்கள் என்றும் தாழ்த்தி மனம் குன்றி நாணம் அடையச் செய்து விட்டீர்கள் (அலாய்சியஸ் I 88-89).

கத்தோலிக்கப் பாதிரியார்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தமது வேண்டுகோளில் தாசர் எடுத்துரைப்பார்.

ஆதலின் பாதர்களென்னும் பெரியோர்களே இவ்வேழைக் கிறிஸ்தவர்களிடம் பணம் சம்பாதிக்கும் எண்ணங்களை ஒர் புறம் அகற்றி நீங்கள் சேர்த்து வைத்துள்ள தொகைகளில் கல்விச் சாலைகளும் கைத்தொழிற்சாலைகளும் ஏற்படுத்தி இவ்வேழை பேதை மக்களுக்கு இலவசமாகக் கற்பித்துக் கல்வியிலும் கைத்தொழிலிலும் முன்னுக்குக் கொண்டு வருவீர்களாயின் நீங்கள் சிறப்படைவதும் அன்றி உங்கள் கத்தோலிக்க மார்க்கமும் சிறப்பைப் பெறும் (அலாய்சியஸ் I 90).

இதே நேர்மை உணர்வோடும் பண்போடும் பிராட்டெஸ்டெண்ட் பாதிரியார்களுக்கும் அவர்கள் செய்து வரும் தொண்டின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுவார் தாசர்.

கத்தோலிக்கு மார்க்கத்தோர்களுக்குப் பின்பு இத் தென்னிந்தியாவில் குடியேறி கிறீஸ்துவின் மார்க்கத்தைப் பரவச் செய்வதற்காய் சகல மக்களுக்கும் உபகாரமாகும் கல்விச் சாலைகளை விருத்தி செய்தீர்கள்! . . .

அவர்களுடைய வஞ்சகக் கூத்துகளை அறியா தாங்களும் பெரிய சாதிகளெல்லாம் கிறிஸ்தவர்களாகி விடுகிறார்கள் என்னும் பெருஞ் சந்தோஷத்தாலும் பெரிய சாதியோரைக் கிறீஸ்தவர்களாக்கி விட்டார்கள் என்னும் பெரும்பேர் கிடைக்கும் என்றெண்ணி நூதனக் கிறீஸ்தவர்களின் மீது அன்பு வைத்து அவர்களுக்கே பாதிரி உத்தியோகங்களையும் உபதேசிகள் உத்தியோகங்களையும் உபாத்திமார் உத்தியோகங்களையும் கொடுத்து விருத்தி செய்து கொண்டு இக்கிறீஸ்து மதத்தைப் பரவச் செய்வதற்காய்க் கல்லடிகளும் சாணத்தினடிகளும் தடிகளினடிகளும் பட்டுப் பரவச் செய்தப் பழயக் கிறிஸ்தவர்களைப் பறைக் கிறிஸ்துவர்கள் என்று சொல்லுவதற்காய்த் தாங்களும் தாழ்ந்த எண்ணத்தை விருத்தி செய்து கொண்டு ஏழைத் தமிழ் கிறிஸ்தவர்களை நடுத்தெருவில் விட்டு தீங்கு செய்ய வைத்தீர்கள் . . . அங்ஙனமின்றி சாதிய ஆசாரமும் பெருக்க வேண்டும், உத்தியோகங்களும் உயர வேண்டும், பொருளாசையும் வளர வேண்டும், கிறீஸ்தவர்கள் என்னும் கூட்டமும் அதிகரிக்க வேண்டும் என்பதாயின் கிறீஸ்துவின் நீதி போதங்கள் ஒருக்காலும் பரிமளிக்க மாட்டாது. அவரது போத பரிமளம் எக்காலத்தில் மறைகின்றதோ அப்போதே கிறிஸ்துவின் மார்க்கமும் மறைவதற்கு வழியாகும் . . . மத்தேயு 20-ஆம் அதிகாரம் 29-ஆம் வசனம்: கிறீஸ்துவானவர் தனது மாணாக்கர்களையும் அவ்விடம் வந்துள்ள மக்களையும் நோக்கி என் நாமத்தின் நிமித்தம் வீட்டையாவது சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ அவன் அதற்கு நூறத்தனையான பலனை அடைந்து நித்திய சீவனையும் பெறுவானென்று திட்டமாகக் கூறியிருக்கிறார். . . .

“கிறிஸ்தவன் எனும் சிறந்த மொழியானது

அவன் கிறிஸ்து எனும் பொருளைத் தரும்”

அதாவது கிறிஸ்துவின் நடையுடை பாவனை ஒழுக்கங்களைப் பின்பற்றியவன் எவனோ கிறிஸ்து அவனாவான் என்பதாம் (அலாய்சியஸ் I 92).

பைபிளிலிருந்து தக்க மேற்கோள்களைத் தந்து எத்தகைய அச்சமோ உள்நோக்கமோ இல்லாமல் பாதிரியார்களுக்கு அவர்களுக்கு விருப்பமான அவர்கள் கையாண்டு வந்த மொழியிலேயே தாசர் விண்ணப்பத்தைச் சார்ந்திருப்பது பெரும் பாராட்டுக்குரியதாகும்.

உண்மைகளை விளக்கி அவற்றை நிலைநாட்டத் தாசர் தக்க வாதங்களையும் சான்றுகளையும் தக்கமொழி நடையில் எடுத்துச் சொல்வார்."தாழ்ந்த சாதியினர் அல்லது தாழ்ந்த வகுப்பார் என்பவர்கள் யார்’ எனும் தலைப்பில் அவர் எழுதும் சிறிய கட்டுரையில் பிறரை வஞ்சித்துத் தமது நிலையை உயர்த்திக் கொண்டவர்கள் மீது அவர் காட்டும் அறச்சினம், ஏமாற்றப்பட்டவர்கள் மீது காட்டும் பரிவு, உண்மையறியாது ஆள்வோர் அநீதி தொடரக் காரணமாகின்றார்களே என்ற வருத்தம், உண்மையை யாவரும் அறிய வேண்டுமே என்ற ஆதங்கம், எது சரியென்பது தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஆகிய உணர்வுகளெல்லாம் பளிச்சிடக் காணலாம்.

இத்தேசத்துள் பிச்சை இரந்து தின்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா, பொய்யைச் சொல்லிச் சீவிக்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா, களவு செய்து சீவிக்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா. இதன் விபரம் தெரியவில்லை பூர்வ புத்த தன்ம காலத்தில் பஞ்ச பாதகர்களை மிலேச்சர்கள் என்றும் தீயவர்களென்றும் தாழ்ந்த வகுப்பாரென்றும் இழிந்தோரென்றும் வகுத்து வைத்திருந்தார்கள். காரணம் யாதென்பீரேல், பெண் சாதி பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கையிலிருந்து உழைக்கக்கூடிய தேக பலமிருந்தும் சோம்பேறிகளாய்ப் பிச்சை இரந்து தின்பவர்களை மிலேச்சர்கள் என்றும் கொலை, களவு முதலியவைகளால் சீவிப்பவர்களைத் தீயவர்களென்றும் விபச்சாரம், கள்ளருந்தல் முதலிய செயலுடையோரை இழிந்தோரென்றும் தங்கள் சுயத்தொழில் இன்றி எக்காலும் ஒருவரை வணங்கிச் சீவிப்பவர்களும் விவேகமற்றவர்களும் ஆனாரைத் தாழ்ந்தவர்கள் என்றும் வகுத்திருந்தார்கள். . .

கருணானந்த நீதிபதியர்களும் நீர் எப்படி உயர்ந்தவன் ஆனிர், அவன் எப்படித் தாழ்ந்தவன் ஆனான் என்னும் விசாரணையின்றி ஒரு சார்பினர் மொழிகளைக் கேட்டுக் கொண்டே தீர்ப்பளிக்கலாமோ (அலாய்சியஸ் 1 198-199).

ஐரோப்பியர்கள் இந்தியர்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று எழுதிய வங்கப் பத்திரிகை ஆசிரியரிடம் இந்தியர்களே இந்தியர்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளை அவர் எவ்வாறு அறியாது போனார் என்ற வினாவைத் தாசர் எழுப்புவார்.

சொற்ப சுதந்திரம் இந்தியர்களுக்குக் கொடுத்துள்ளவிடத்தில் இந்திய ஏழைகள் படும் கஷ்டங்களைச் சற்று நோக்குவீராக. ஓர் பார்ப்பான் இரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராயிருந்து மற்றோர் பார்ப்பான் இன்ஸ்பெக்டராகவாயினும் தாசில்தாராகாவாயினும் இருந்து தன் குடும்பத்தோரை ரயிலிலேற்ற வந்த போது தங்களுக்கு இடம் கிடிையாமல் போமாயின் ஏழை இந்துக்கள் யாவரையும் வெளியில் இழுத்துவிட்டுத் தவிக்கச் செய்து தங்கள் குடும்பத்தோரை ஏற்றிவிடுகிறார்கள்.

ஏழைகள் அனுபவித்து வரும் குளம் குட்டை தங்களுக்கு வசதியாகத் தோன்றுமாயின் சாதித் தலைவர்களாம் அதிகார உத்தியோகஸ்தர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு ஏழைகளை ஊரை விட்டே ஒட்டிக் குளம் குட்டைகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள் . . .

இவ்வகையாகப் பார்ப்பான் வீட்டுப் பல்லி முட்டை, பறையன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும் அதிகாரத்தில் இருப்பதை பெங்கால் பத்திராதியர் கண்ணோக்கிச் சீர்திருத்தாது ஐரோப்பியரை நிந்திப்பதால் யாது பயன்? (அலாய்சியஸ் 1207-208).

லாகூரில் 1910-இல் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசு இரண்டு மகமதியர்களைக் கவுன்சில் உறுப்பினர் களாக்கியதைக் கண்டித்து மகமதியரையும் இந்தியரையும் அரசாங்கத்தார் வேறாகப் பிரித்துக் குறுக்கில் பெரிய ஒரு மதிலைப் போட்டு விட்டார்களென்று காங்கிரசார் வாதிட்ட போது தாசர் தமது கருத்தை வெளியிட்ட முறை நோக்கற்பாலது.

தற்காலம் சென்னை ராஜதானியில் சேர்ந்திருக்கும் கவுன்சில் மெம்பர்கள் 47 பெயர்களில் மகமதியர்கள் 23 பெயரையேரேனும் நியமித்துவிட்டார்களா, இல்லையே. 47 மெம்பர்களில் மகமதியர் இரண்டு பெயரைத்தானே நியமித்திருக்கின்றார்கள் . . . மகமதியர் மட்டும் 16 பெயருக்கு ஒருவர் இருக்கிறார் என்று கணக்கெடுத்துப் பேசியவர் தாங்கள் எவ்வளவு பெயர் இருக்கிறோமென்று கணக்கெடுக்கவில்லை போலும் . . .

கருணை தங்கிய இராஜாங்கத்தோர் மகமதியருக்கென்று யாது சுகத்தைக் கொடுத்துவிட்டு இந்தியரைக் கெடுத்துவிட்டார்கள்.

இந்துக்களைப் போல் ஆறு கோடி மக்களைத் தீண்டப்படாது தீண்டப்படாதென்று தீட்டு மதில் போட்டு விட்டார்களா, ஆறு கோடி மக்களைச் சுத்த ஜலம் கொண்டு குடிக்க விடாமல் சுற்று மதில் போட்டு விட்டார்களா; ஆறு கோடி மக்களுக்குத் தங்கள் வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாது அண்ணாந்த மதில் போட்டு விட்டார்களா; இல்லையே. சுவாமியென்பது சகலருக்கும் பொதுவென்பதே உலக சம்மதம். ஆனால் இந்துக்கள் என்னும் கூட்டத்தோர் தொழுது வரும் சுவாமிகள் இருக்குமிடத்திற்குச் சாதிபேதமற்ற ஆறு கோடி மக்களும் போகப்படாது, ஆங்கிலோ இந்தியர்களும் போகப்படாது, மகம்மதியர்களும் போகப்படாது, பாரசீகர்களும் போகப்படாது, கிறிஸ்தவர்களும் போகப்படாது.

பொதுவாகிய சுவாமியைத் தொழும் இடங்களுக்கு இத்தனை பேர் போகக் கூடாத பெருமதில் கட்டியிருக்கும் இந்தியர்கள் வசம் பொதுவாகிய ஆலோசனை சங்க நியமனத்தை விட்டிருப்பார்களாயின் சகல சாதியோடும் உள்பிரவேசிக்கக் கூடாத எப்பெரிய மதிலிட்டிருப்பார்களோ தெரியவில்லை (அலாய்சியஸ் I 220).

கிறிஸ்தவர்களுக்குள் சாதி வைக்கலாமா, வைக்கக்கூடாதா என்று ஆலோசித்து வருகின்றார்களென்பதைக் கேள்வியுற்ற தாசர் அவர்களுக்கு அறிவுரை கூறும் பணியை உடன் மேற்கொண்டார்.

சாதியை உண்டு செய்தவர்களே சாதிகளை ஒழித்துக் கொண்டு வரும்போது சாதி நாற்றமில்லாமல் இத்தேசத்திற்கு வந்துள்ள கிறிஸ்து மதத்தில் சாதி வைக்கலாமா வைகலாகாதா என்று ஆலோசிப்பது விந்தையே . . . இத்தகைய சாதிக் கிறிஸ்தவர்களென்றும் சாதியில்லாக் கிறிஸ்தவர்களென்றும் ஏற்படுவார்களாயின் கருணை தங்கிய ராஜாங்கத்தார் அவற்றைக் கண்ணோக்க வேண்டியதேயாகும். காரணம் கிறிஸ்தவர்களாகியும் சாதியை வைத்துக் கொண்டுள்ளவர்கள் ஏதோ ஒர் காலத்தில் சாதியை வைத்துள்ள கூட்டத்தோருடன் கூடிக் கொள்ளுவதற்கு ஏதுக்கள் தோன்றினும் தோன்றும்...

வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்தால் ஒர் பெருங்கூட்டத்தோரைத் தீண்டாதவர்களென்றும் தாழ்ந்த சாதியோரென்றும் கூறி மனத்தாங்கல் உண்டாக்கி வரும் துற்கருமப் பலனானது இவ்வுலகத்திலும் விடாது நடுத் தீர்வையிலும் விடாதென்பது சத்தியம்.

கிறிஸ்துவின் சத்திய மொழி “தாழ்த்தப்பட்டவன் உயர்த்தப்படுவான்” (அலாய்சியஸ் I 235).

தாசர் தக்க சமயத்தில் கூறிய கருத்து தொலை நோக்குடையது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இந்தியாவிலிருந்து நெட்டாலுக்குச் சென்று அங்குக் கூலி வேலை செய்வோர் கொடுமைப்படுத்தப்படுகிறார்களென்றும் அவர்களை அங்கு அனுப்பக் கூடாதென்றும் கோகலே போன்றவர்கள் பிரிட்டிஷ் அரசைக் கேட்டுக் கொண்டபோது அச்சிக்கலைப் பற்றி ஆராய்ந்து நம்மவர்களுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார் தாசர்.

அதாவது நெட்டாலுக்குச் சென்றுள்ள இந்திய வியாபாரிகளுக்குச் சில இடுக்கண்கள் நேரிட்டு வந்ததாகப் பத்திரிகைகளின் வாயிலாகக் கண்டுள்ளோமன்றிக் கூலிகளுக்கு இடுக்கண் உண்டரனதென்று கேள்விப்படவில்லை. அங்ஙனம் இந்தியக் கூலிகளுக்கு என்ன இடுக்கண் iண்டாகியிருக்குமென்றால் சில ப்புத் தொழில் அதிகரித்திருக்கக்கூடும். ஆயினும் இந்தியாவில் அரை வயிற்றுக் கஞ்சியேனும் சரிவரிக் குடியாது நாள் முழுவதும் உழைப்பவர்களுக்குப் பசியாற உண்டு அதிகம் உழைப்பதனால் யாதொரு கெடுதியும் நேரிடாது.

ஈதன்றி நெட்டாலுக்குச் செல்லும் ஏழைக்குடிகள் பெரும்பாலும் தென்னிந்திய வாசிகளேயாம். இத்தென்னிந்திய ஏழைகள் மட்டிலும் நெட்டாலுக்குப் போகும் காரணம் யாதென்றால் சாதிபேதக் கொடுரச் செயலால் நல்ல தண்ணிரை மொண்டு குடிக்க விடாமலும் வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும் அம்மட்டர்களைச் சவரம் செய்ய விடாமலும் நாள் முழுதும் கஷ்டப்பட்ட போதிலும் அரை வயிற்றுக் கஞ்சிக்காகும் கூலியைக் கொடாமலும் கொல்லாமல் கொன்றும் வதைக்காமல் வதைத்தும் சாதித் தலைவர்கள் செய்து வரும் படுபாவச் செயல்களுக்குப் பயந்தே பரதேசமாம் நெட்டாலுக்குப் போய் சீவிக்கிறார்கள். அவ்வகை நெட்டாலுக்குச் சென்று இந்தியாவுக்கு வந்துள்ள ஒவ்வோர் ஏழைக்குடிகளும் இரண்டு வீடு மூன்று வீடுகளை வாங்கிக் கொண்டு சுகசீவிகளாக வாழ்வதுடன் நாடுகளிலும் இரண்டு காணி மூன்று காணி பூமிகளை வாங்கிக் கொண்டு சொந்தத்தில் உழுது பயிர் செய்து சுகித்திருக்கிறார்கள் (அலாய்சியஸ் I 237).

இந்திய சாதித் தலைவர்களின் பிரதிநிதியாகவே பேசியுள்ள கோகலே இந்திய ஏழைகளுக்கென்று பாடுபடுவாராயின் பொதுவாய பிரதிநிதியென்று அவரை ஏற்றுக் கொண்டாடலாம் என்றும் பத்து வியாபாரிகளுக்காக முனைந்து கொண்டு தொண்ணுரறு ஏழைக்குடிகளைக் கெடுத்துவிடலாகாதென்றும் தாசர் அறிவுறுத்துகிறார்.

வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியக் கூலிகள் படும் பாட்டைப் பற்றி இந்தியா பத்திரிகை இதழொன்றில் அப்போது கட்டுரையெழுதிய பாரதியும் சிக்கலின் மூல காரணத்தைப் பற்றிப் பேசாது அக்கூலிகள் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் பொறுத்துக் கொண்டு தாய்நாட்டிலேயே இருந்துவிட வேண்டும் என்று தான் கூறுவார். ஏழைக் கூலிகள் வெளிநாடு சென்று பிழைக்க இங்குள்ள மேல்சாதிக்காரர்களே காரணமாவார்கள் என்பதையோ சாதி பேதமற்ற ஏழைகளுக்கென்று இராஜாங்க சங்கத்தில் ஒரு பிரதிநிதி இருப்பது நல்லதென்றோ தாசரைப் போல் எடுத்துச் சொல்லும் வழியில் பாரதி சிந்திக்கவேயில்லையென்பது தெளிவாகிறது.

அன்னிய தேசங்களுக்கு இத்தேசத்துக் கூலியாட்களை அனுப்பிவிடுகிறபடியால் இங்கு ஏற்படுத்தப் பெறும் கைத்தொழிற் சாலைகளுக்குக் கூலியாட்கள் கிடைக்காமல் போகிறார்கள் என்று இங்குள்ள பத்திரிகைகள் எழுதிய போதும் தாசர் அடிப்படை உண்மையை அவை மறைத்து வருவதைச் சுட்டிக் காட்டுவார். பச்சையப்பன் கல்லூரியில் கைத்தொழில் கற்பிக்கும் கலாசாலை தொடங்கியபோது கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் “சாதி பேதம் வைத்துள்ளவர்கள் மட்டிலும் அக்கலாசாலையில் வந்து கற்றுக் கொள்ளலாம். மற்ற சாதி பேதம் அற்றவர்களுக்கு அதில் இடம் கிடையாது என்று பயிரங்கப்படுத்தியிருந்தார்கள். . . . அவர்களை மட்டிலும் ஏன் துரத்தி விடுகிறீர்கள் என்று கேட்டாலே தங்களுக்குச் சாப்பாடு கொண்டு வருவதற்கும் ஜலம் முதலியன மொண்டு கொடுப்பதற்கும் இடைஞ்சலாகிவிடும். ஆதலால் அவர்களைச் சேர்ப்பதில்லையென்று திட்டவட்டமாகக் கூறுகின்றார்கள் (அலாய்சியஸ் I 238).

சாதிபேதமற்ற ஏழைகளாகிய பறையர்களுக்கு இங்கு வேலையும் கொடாது கைத்தொழிற்சாலைகளில் இடமும் தராது புறக்கணிப்பார். அவர்கள் வெளிநாடு சென்றாவது பிழைப்பதையும் தடுக்க வேண்டாம் என்று தாசர் கேட்டுக் கொண்டது யார் காதிலும் விழவில்லை.

பிரிட்டிஷ் அரசு சாராயம், வெள்ளி, மண்ணெண்ணெய், புகையிலை ஆகியவற்றின் மேல் இருந்த வரிகளை அதிகப்படுத்தப் போவதாக அறிந்த தாசர் அரசுக்குக் கூறும் அறிவுரை குறிப்பிடத் தக்கது.

அவற்றுள் மனு குலத்தாருக்குச் சீர்கேட்டை உண்டு செய்யும் சாராயம், புகையிலை இவ்விரண்டிற்கும் வரிகளை அதிகப்படுத்துவது சுகமேயாம். மனுக்களுக்கு உபகாரமாக விளங்கும் வெள்ளியின் பேரிலும் மண் தைலத்தின் பேரிலும் வரிகளை அதிகப்படுத்தாமலிருப்பது சுகமாம். எவ்வகையில் எனில் தற்காலம் வெள்ளி சகாயமாய்க் கிடைக்கின்றபடியால் ஒரு ரூபா, அரை ரூபா, கால் ரூபா என்னும் வெள்ளி நாணயங்கள் சேதமில்லாமல் வழங்கி வருகின்றன. . . மண் தைலத்தின் சுகமோ தினேதினே ஓரணா சம்பாதிக்கும் கூலியாளும் ஒரு காசு தைலமேனும் வாங்கிக் குடுக்கையில் வைத்துத் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்துச் சுகித்து வருகிறார்கள் . . .

சாராயத்திற்கோ இன்னும் வரியை அதிகம் உயர்த்த வேண்டுகிறோம். ஏனென்பீர்களாயின் மனிதர்களாகப் பிறந்தும் மிருகத்திற்கும் கேடாகச் செய்துவிடுவது சாராயமாகும். . .

புகையிலைக்கும் வரியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுகிறோம். ஏனென்பீர்களாயின் சிறு வயதிலேயே மக்களின் மார்பு வறண்டு உதிரம் கக்கச் செய்வது புகையிலையேயாம் (அலாய்சியஸ் 1242).

சமுதாயத்தின் அடித்தள மக்களுடைய வாழ்க்கையைப் பற்றி முற்றும் அறிந்த தாசர் அவர்களின் நிலையை மனத்திற் கொண்டு அவர்களுக்கு விளையும் நன்மை தீமைகளைக் கணக்கிலெடுத்துத் தீர ஆய்வு செய்து பிரிட்டிஷ் அரசு, காங்கிரஸ் அரசு, பிராமணர் அல்லாதார் சங்கம், பிராமணர்களின் பத்திரிகைகள் ஆகியவற்றின் முடிவுகளையும் செயற்பாடுகளையும் விமரிசிப்பதை எல்லாக் கட்டுரைகளிலும் காணலாம்.

அயோத்திதாசரின் அரசியல் கட்டுரைகள் அரசியலின் எல்லாக் கூறுகளையும் எட்டியவை. சமயக் கட்டுரைகளையும் இலக்கியத்தையும் போலவே அவரது ஆழ்ந்தகன்ற அறிவைப் புலப்படுத்துபவை. அவரின் வாதத் திறமையின் நுட்பத்தைக் கண்டு மகிழும் நாம், உவமைகளையும் பழமொழிகளையும் பொருளுக்கேற்ற வேறுபட்ட உத்திகளையும் தலைப்பிலிருந்து இறுதி வரி வரையிலும் அவர் கையாளும் சொற்களையும் வியந்து பார்த்து முருகியல் இன்பமும் பெறுகிறோம்.