கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/மயேந்திரப் படலம்

வானரர், 'கடலைக் கடப்போர் யார்?' எனத் தமக்குள் பேசிக் கொள்ளுதல் தொகு

'பொய் உரைசெய்யான், புள் அரசு' என்றே புகலுற்றார், 'கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரை கண்டாம்; உய் உரை பெற்றாம்; நல்லவை எல்லாம் உற எண்ணிச் செய்யுமின் ஒன்றோ, செய் வகை நொய்தின் செய வல்லீர்! 1

'சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் விற் கை ஆரியனைச் சென்றே தொழுது, உற்றது அறைகிற்பின், சீர்நிலை முற்றும்; தேறுதல் கொற்றச் செயல் அம்மா; வாரி கடப்போர் யாவர்?' என, தம் வலி சொல்வார்: 2

கடல் கடக்க இயலாமை பற்றி, நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் மொழிதல்

'மாள வலித்தேம், என்றும் இம் மாளா வசையோடும் மீளவும் உற்றேம்; அன்னவை தீரும் வெளி பெற்றேம்; காள நிறத்தோடு ஒப்புறும் இந் நேர் கடல் தாவுற்று, ஆளும் நலத்தீர் ஆளுமின், எம் ஆர் உயிர் அம்மா!' 3

நீலன் முதல் பேர், போர் கெழு கொற்ற நெடு வீரர், சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை; 'வேலை கடப்பென்; மீள மிடுக்கு இன்று' என விட்டான், வாலி அளிக்கும் வீர வயப் போர் வசை இல்லான். 4

'வேதம் அனைத்தும் தேர்தர, எட்டா ஒரு மெய்யன் பூதலம் முற்றும் ஈர் - அடி வைத்துப் பொலி போழ்து, யான் மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர, மேரு மோத இளைத்தே தாள் உலைவுற்றேன் - விறல் மொய்ம்பீர்! 5

'ஆதலின், இப் பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி மீது கடந்து, அத் தீயவர் உட்கும் வினையோடும், சீதைதனைத் தேர்ந்து, இங்கு உடன் மீளும் திறன் இன்று' என்று ஓதி இறுத்தான் - நாலுமுகத்தான் உதவுற்றான். 6

'அனுமனே கடல் கடத்தற்கு உரியான்' எனச் சாம்பன் அங்கதனுக்கு உரைத்தல்

'யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு, "இனி யாரைப் போம் என வைப்போம்" என்பது புன்மை; புகழ் அன்றே; கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்றக் குமரா! நம் நாமம் நிறுத்திப் பேர் இசை வைக்கும் நவை இல்லோன். 7

'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனாலும், காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனாலும், மாருதி ஒப்பார் வேறு இலை' என்னா, அயன் மைந்தன் சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும்: 8

சாம்பன் அனுமனின் ஆண்மையைப் புகழ்ந்து பேசுதல்

'மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளீர்; நூலை நயந்து, நுண்ணிது உணர்ந்தீர்; நுவல் தக்கீர்; காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர்; கடன் நின்றீர்; ஆலம் நுகர்ந்தான் என்ன வயப் போர் அடர்கிற்பீர்; 9

'வெப்புறு செந் தீ, நீர், வளியாலும் விளியாதீர்; செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்; ஒப்பு உறின், ஒப்பார் நும் அலது இல்லீர்; ஒருகாலே குப்புறின், அண்டத்து அப் புறமேயும் குதிகொள்வீர்; 10

'நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி, நவை தீரச் சொல்லவும் வல்லீர்; காரியம் நீரே துணிவுற்றீர்; வெல்லவும் வல்லீர்; மீளவும் வல்லீர்; மிடல் உண்டே; கொல்லவும் வல்லீர்; தோள் வலி என்றும் குறையாதீர்; 11

'மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்; மாரி துளிக்கும் தாரை இடுக்கும், வர வல்லீர்; பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர்; பழி அற்றீர்; சூரியனைச் சென்று, ஒண் கையகத்தும் தொட வல்லீர்; 12

'அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை மறிந்து உருள, போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்; பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க எறிந்துழி, மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர்; 13

'போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா; ஓர்வு இல் வலம் கொண்டு, ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்; பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன், தேர் முன் நடந்தே, ஆரிய நூலும் தெரிவுற்றீர்; 14

'நீதியில் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம் ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும் ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர்; 15

'அண்ணல் அ(ம்)மைந்தர்க்கு அன்பு சிறந்தீர்; அதனாலே கண்ணி உணர்ந்தீர் கருமம்; நுமக்கே கடன் என்னத் திண்ணிது அமைந்தீர்; செய்து முடிப்பீர்; சிதைவு இன்றால்; புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்; 16

'அடங்கவும் வல்லீர்; காலம் அது அன்றேல்; அமர் வந்தால், மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர்; மதி நாடித் தொடங்கியது ஒன்றோ? முற்றும் முடிக்கும் தொழில் அல்லால், இடம் கெட, வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர்; 17

'ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும் பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும் பாண்டிதர் நீரே; பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்; வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர். 18

'ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்; ஓகை கொணர்ந்து உம் மன்னையும், இன்னல் குறைவு இல்லாச் சாகரம் முற்றும் தாவிடும் நீர், இக் கடல் தாவும் வேகம் அமைந்தீர்!' என்று விரிஞ்சன் மகன் விட்டான். 19

இலங்கை செல்ல அனுமன் ஒருப்பட்டுப் பேசுதல்

சாம்பன் இயம்ப, தாழ் வதனத் தாமரை நாப்பண் ஆம்பல் விரிந்தாலன்ன சிரிப்பன், அறிவாளன், கூம்பலொடும் சேர் கைக் கமலத்தன், குலம் எல்லாம் ஏம்பல் வர, தன் சிந்தை தெரிப்பான், இவை சொன்னான்: 20

'"இலங்கையை இடந்து வேரொடு இவ் வயின் தருக" என்றாலும், "விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி, பொலங் குழை மயிலைக் கொண்டு போது" எனப் புகன்றிட்டாலும், கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்! 21

'ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக, ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப, இருங் கடல் இனிது தாவி, வாசவன் முதலோர் வந்து மலையினும், இலங்கை வாழும் நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல்; பின்னும், 22

'"நீயீரே நினைவின் முன்னம், நெடுந் திரைப் பரவை ஏழும் தாய், உலகு அனைத்தும் வென்று, தையலைத் தருதற்கு ஒத்தீர்; போய், இது புரிதி!" என்று, புலமை தீர் புன்மை காண்டற்கு ஏயினீர் என்னின், என்னின் பிறந்தவர் யாவர்? இன்னும். 23

'முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான், முழங்கி முந்நீர், உற்றதேஎனினும், அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும், இற்றை நும் அருளும், எம் கோன் ஏவலும், இரண்டு பாலும் கற்றை வார் சிறைகள் ஆக, கலுழனின் கடப்பல் காண்டீர்! 24

அனுமன் அனைவரிடமும் விடைகொண்டு, மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுதல்

'ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி, மீண்டு இவண் வருதல்காறும்; விடை தம்மின், விரைவின், என்னா, ஆண்டு, அவர் உவந்து வாழ்த்த, அலர் மழை அமரர் தூவ, சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து உம்பர்ச் சென்றான். 25

கடல் தாவ அனுமன் பெரு வடிவு கொண்டு, மயேந்திரத்து நிற்றல்

பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்த்த தாள்போல் உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும் திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான். 26

பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன் போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு, தார் நிழல் பரப்பும் தோளான், தடங் கடல் தாவா முன்னம், நீர் நிழல் உவரி தாவி இலங்கைமேல் செல்ல, நின்றான். 27

பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க, உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி, ஊழின் நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்; மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான். 28

மின் நெடுங் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப, தன் நெடுந் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ, வல் நெடுஞ் சிகர கோடி மயேந்திரம், அண்டம் தாங்கும் பொன் நெடுந் தூணின் பாத சிலை என, பொலிந்து நின்றான். 29

மிகைப் பாடல்கள்

புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி விண் போந்த பின்னர், தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு அது சாம்பன் சிந்தித்து, உள்ளவர் தன்னில் வல்லார் யார் என உன்னி, யாண்டும் தள்ளரும் புகழோன் வாயுத் தனையனை நோக்கிச் செப்பும்:

ஆயவன் அங்குப் போகிய பின்னர், அகமீதே நோய் உறு தன்மைத்து ஆகிய வீரர்தமை நோக்கி, தூய மனத்தன் ஆகிய வாலி தரு தொன்மைச் சேயும் அவர்க்கே செப்பினன், நாடும் செயல் ஓர்வான். [இவ்விரு பாடல்களும் இப் படலத்தின் முதற்பாடலாக தனித்தனியே வெவ்வேறு ஏட்டில் காணப்படுகின்றன]

'ஆரியன் மின்னின் பேர் எழில் கூறும் அமைவாலும், "காரியம் உன்னால் முற்றும்" எனச் சொல் கடனாலும், மாருதி ஒப்பார் வேறு இலை என்னா, மனம் எண்ணி, சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும், என்றே' 8-1

நாலு மறைக்கும் வேலியும் ஆகி, நடு நிற்கும் சீலம் மிகுந்தீர்! திங்கள் மிலைச்சித் திகழ் வேணி, ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்! அது போதில் காலின் நிறைக்கோ காலனும் ஆகக் கடிது உற்றீர். 18-1

ஆதியர் இப் புத்தேள் அடிப்பாரித்து அணவு ஆதற்கு ஓது கருத்தில் சால நினைத்திட்டு, ஒழிவு இல்லாப் போது தளத்தில் புக்கிய செய்கைத் திறனாலே சாதல் கெடுத்துத் தான் அழியாதீர் அதனாலே. 18-2