கம்பராமாயணம்/பால காண்டம்/நகரப் படலம்

3. நகரப் படலம்

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம். 1

நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ நிறைநெடு மங்கல நாணோ
இலகுபூண் முலைமேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர்கொலோ மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானோர்
உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென உரைப்பாம். 2

உமைக்கொரு பாகத் தொருவனும் இருவர்க்கு ஒருதனிக் கொழுநனும் மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும் உவமை கண்டிலர் அங்கது காண்பான்
அமைப்பருங் காதல் அது பிடித்து உந்த அந்தரம் சந்திரா தித்தர்
இமைப்பிலர் திரிவர் அதுவலால் இதனுக்கு இயம்பலாம் ஏதுமற் றியாதோ. 3

அயின் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும் அளகையும் என்றிவை அயனார்
பயிலுற வுற்ற படிபெரும் பான்மை பகர்திரு நகரிது படைப்பான்
மயன்முதற் றெய்வத் தச்சரும் தத்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்
புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து இந்நகர் புகலுமாறு எவனோ. 4

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்.
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ் ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல். 5

தங்கு பேரருளும் தருமமும் துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங்கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப திருவின் வீற்றீருந்தனன் என்றால்,
அங்கண் மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ. 6

அரசெலாம் அவண அணி எலாம் அவணரும் பெறல் மணி எலாம் அவண
புரைசை மால் களிரும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண
விரைசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர் முதலினோர் என்றால்
உரைசெய்வேன் யானே ஆனபோது அதனுக்கு உவமைதான் அரிது அரோ உளதோ. 7

நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி நனிதவ உயர்ந்தன பனிதோய்
மால்வரைக் குலத்தின் யாவையும் இல்லை ஆதலால் உவமைமற் றில்லை
நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நூலவர் உணர்வே
போல் வகைத் தல்லால் உயர்வினொடு உயர்ந்து என்னலாம் பொன் மதில் நிலையே. 8

மேவரும் உணர்வின் முடிவிலா மையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண்பொறி யடக்கிய செயலால்
காவலிற் கலையூர் கன்னியை யொக்கும் சூலத்தாற் காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும். 9

பஞ்சின்வான் மதியை யூட்டிய வனைய படருகிர்ப் பங்கயச் செங்கால்
வஞ்சிபோல் மருங்குற் குரும்பைபோற் கொங்கை வாங்குவேய் வைத்தமென் பணைத்தோள்
அஞ்சொலார் பயிலும் அயோத்திமா நகரின் அழகுடைத் தோஎன அறிவான்
இஞ்சிவான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே. 10

கோலிடை யுலகம் அளத்தலிற் பகைஞர் முடித்தலை கோடலின் மனுவின்
நூல்நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்கருங் காவலின் வலியின்
வேலொடு வாள்விற் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்குஅரு வலத்தின்
சால்புடை உயர்விற் சக்கர நடாத்தும் தன்மையின் தலைவரொத் துளதே. 11

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை,
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல கொதுகின்
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ. 12

பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும்
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கு மிரவிதன் குலமுதல் நிருபர்
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செந் தனிக்கோலும்
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணியென இயற்றியது அன்றே. 13

அன்னமா மதிலுக்கு ஆழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தென அகழி
பொன்விலை மகளிர் மனமெனக் கீழ்ப்போய்ப் புன்கவி எனத்தெளி வின்றிக்
கன்னியர் அல்குல் தடமென யார்க்கும் படிவரும் காப்பின தாகி
நன்னெறி விலக்கும் பொறியென எறியும் கராத்தது நவிலலுற் றதுநாம். 14

ஏகுகின்ற தன்க ணங்க ளோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகல்கி டங்கை நாம வேலை ஆமெனா
மேகம் மொண்டு கொண்டெ ழுந்து விண்தொ டர்ந்த குன்றமென்று
ஆக நொந்து நின்று தாரை அம்மதிற்கண் வீசுமே. 15

அந்த மாம திற்பு றத்து அகத்தெ ழுந்து அலர்ந்த நீள்
கந்த நூறு பங்க யத்த கான மான மாதரார்
முந்து வாள்மு கங்க ளுக்கு உடைந்து போன மொய்ம்பெலாம்
வந்து போர்ம லைக்க மாம தில்வ ளைத்த மானுமே. 16

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்று முற்று பாரெலாம்
போழ்ந்த மாகி டங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர்மா
தாழ்ந்த வங்க வாரி யிற்த டுப்பு ஓணாம தத்தினால்
ஆழ்ந்த யானை மீது எழுந்து அழுந்து கின்ற போலுமே. 17

ஈரும் வாளின் வால்வி திர்த்து எயிற்று இளம்பி றைக்குலம்
பேர மின்னி வாய்வி ரித்து எரிந்த கட்பி றங்குதீச்
சோர வொன்றை யொன்று முன்தொ டர்ந்து சீறு இடங்கர்மா
போரில் வந்து சீறு கின்ற போர்அ ரக்கர் போலுமே. 18

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா அருங் கராக்
கோள் எலாம் உலாவு கின்ற குன்றம் அன்ன யானையா
தாள் உலாவு பங்கயத் தரங் கமும் துரங் கமா
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே. 19

விளிம்பு சுற்றும் முற்று வித்து வெள்ளி கட்டி உள்ளுற
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத் துறப் படுத்தலின்
தளித்த கல் தலத்தொடு அச்சலத்தினை தனித் துறத்
தெளிந்து உணர்த் துகிற்றும் என்றல் தேவ ராலும் ஆவதோ. 20

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்கிடந்த தூங்கு வீங்கு இருட் பிழம்பு
என்னலாம் இறும்பு சூழ்கிடந்த சோலை எண்ணில் அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே. 21

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்ததால்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும் அன்ன வாயிலே. 22

தா இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைத்திடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே. 23

கல்ல டித்த டுக்கி வாய் பளிங்க ரிந்து கட்டிமீது
எல்லி டப்ப சும்பொன் வைத்து இலங்கு பன்ம ணிக்குலம்
வில்லி டக்கு யிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மாமரம்
புல்லி டக்கி டத்தி வச் சிரத்த கால்பொ ருத்தியே. 24

மரக தத்து இலங்கு போதி கைத்த லத்து வச்சிரம்
புரைத புத்த டுக்கி மீது பொன்கு யிற்றி மின்குலாம்
நிரைம ணிக்கு லத்தி நாளி நீள் வகுத்த வோளிமேல்
விரவு கைத்த லத்தின் உய்த்த மேத கத்தின் மீதரோ. 25

ஏழ்பொ ழிற்கும் ஏழ்நி லத் தலம்ச மைத்த தென்ன நூல்
ஊழ்உ றக்கு றித்த மைத்த உம்பர் செம்பொன் வேய்ந்துமீச்
சூழ்சு டர்ச் சிரத்துநன் மணித்த சும்பு தோன்றலால்
வாழ்நி லக்கு லக்கொ ழுந்தை மெளலி சூட்டியன்னவே. 26

திங்களும் கரிதென வெண்மை தீற்றிய
சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை
வெங்கடுங் கால்பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே. 27

புள்ளியம் புறவுஇறை பொருந்து மாளிகை
தள்ளருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ளருங் கதிரவன் இளவெ யிற்குழாம்
வெள்ளியங் கிரிமிசை விரிந்த போலுமே. 28

வயிர நல் கால் மிசை மரகதத் துலாம்
செயிர் அறப் போதிகை கிடத்தி சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவு இல் கோடியே. 29

சந்திர காந்தத்தின் தலத்த சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை
செந் தனி மணித் துலாம் செறிந்த திண் சுவர்
இந்திர நீலத்த எண் இல் கோடியே. 30

பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன
சேடரைத் தழீஇயின செய்ய வாயின
நாடகத் தொழிலின நடுவு துய்யன
ஆடகத் தோற்றத்த அளவு இலாதன. 31

புக்கவர் கண் இமை பொருந்துறாது ஒளி
தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால்
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன இம்பர் நாட்டினும். 32

அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும்
தணிவன அறநெறி தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில பகலை வென்றன. 33

வானுற நிவந்தன வரம்பு இல் செல்வத்த
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள் தம் கொள்கை சான்றன. 34

அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின
பரு மணிக் குவையன பசும் பொன் கோடிய
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன. 35

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின
முகிலொடு வேற்றுமை தெரிகலா முழுத்
துகிலொடு நெடுன் கொடிச் சூலம் மின்னுவ
பகல் இடு மின் அணிப் பரப்புப் பொன்றவே. 36

துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே. 37

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும்
சேண் மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்கவே. 38

பொந்திணி மண்டபம் அல்ல பூத்தொடர்
மன்றுகள் அல்லன மாட மாளிகை
குன்றுகள் அல்லன மணிசெய் குட்டிமம்
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. 39

மின்னென விளக்கென வெயிற்பி ழம்பெனத்
துன்னிய தமனியத் தொழில்த ழைத்தஅக்
கன்னிநன் னகர்நிழல் கதுவ லால் அரோ
பொன்னுலகு ஆயதுஅப் புலவர் வானமே. 40

எழுமிடத் தகன்றிடை யொன்றி எல்படு
பொழுதிடைப் போதலிற் புரிசைப் பொன்மதில்
அழன்மணி திருத்திய அயோத்தி யாளுடை
நிழலென பொலியுமால் நேமி வான்சுடர். 41

ஆய்ந்தமே கலையவர் அம்பொன் மாளிகை
வேய்ந்தகார் அகிற்புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்தமாக் கடல்நறுந் தூப நாறுமேல்
பாய்ந்ததா ரையின் நிலை பகர வேண்டுமோ. 42

குழலிசை மடந்தையர் குதலை கோதையர்
மழலையங் குழலிசை மகர யாழிசை
எழிலிசை மடந்தையர் இன்சொல் இன்னிசை
பழையர்தம் சேரியிற் பொருநர் பாட்டிசை. 43

கண்ணிடைக் கனல்சொரி களீறு கால்கொடு
மண்ணிடை வெட்டுவ வேட்கு மைந்தர்கள்
பண்ணைகள் பயிலிடம் குழிப டைப்பன
சுண்ணம்அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன. 44

பந்துகள் மடந்தையர் பயிற்று வாரிடைச்
சிந்துவ முத்தினம் அவைதி ரட்டுவார்
அந்தமில் சிலதியர் ஆற்று குப்பைகள்
சந்திரன் ஒளிகெடத் தழைப்ப தண்ணிலா. 45

அரங் கிடை மடந்தையர் ஆடு வார்அவர்
கருங்கடைக் கண்ணயில் காமர் நெஞ்சினை
உருங்குவ மற்று அவர்உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன வளர்வது ஆசையே. 46

பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறு மெல்லென
நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன தணந்தவர் கொதிக்கும் கொங்கையே. 47

இறங்குவ மகரயாழ் எடுத்த இன்னிசை
நிறங்கிளர் பாடலால் நிமிர்வ அவ்வழி
கறங்குவ வள்விசி கருவி கண்முகிழ்த்து
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே. 48

குதைவரிச் சிலைநுதற் கொவ்வை வாய்ச்சியர்
பதவுகைத் தொழில்கொடு பழிப்பி லாதன
ததைமலர்த் தாமரை அன்ன தாளினால்
உதைபடச் சிவப்பன உரவுத் தோள்களே. 49

பொழுதுணர் வரியவப் பொருவின் மாநகர்த்
தொழுதகை மடந்தையர் சுடர்வி ளக்கெனப்
பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்
எழுதுசித் திரங்களும் இமைப்பி லாதவே. 50

தணிமலர்த் திருமகள் தயங்கு மாளிகை
இணரொளி பரப்பி நின்று இருள்து ரப்பன
திணிசுடர் நெய்யுடைத்தீவி ளக்கமோ
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே. 51

பதங்களில் தண்ணுமை பாணி பண்ணுற
விதங்களின் விதிமுறை சதிமி திப்பவர்
மதங்கியர் அச்சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவித் தாள்களே. 52

முளைப்பன முறுவல் அம்முறுவல் வெந்துயர்
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண்ணிடை இளைப்ப மென்முலை
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே. 53

இடையிடை எங்கணுங் களிய றாதன
நடையிள அன்னங்கள் நளின நீர்க்கயல்
பெடையின வண்டுகள் பிரச மாந்திடும்
கடகரி யல்லன மகளிர் கண்களே. 54

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நகர் களிற்றைன் மும் மத
மழை விழும் விழும்தொறும் மண்ணும் கீழ் உறக்
குழை விழும் அதில் விழும் கொடித் திண் தேர்களே. 55

ஆடு வார் புரவியின் குரத்தை ஆர்ப்பன
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலைக் கொழித்த சாந்தமே. 56

இளைப்ப அருங் குரங்களால் இவுளி பாரினைக்
கிளப்பன அவ் வழி கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி அவை ஓளிர மீது தேன்
துளிப்பன குமரர்தம் தோளின் மாலையே. 57

விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ
குலக்கொடி மாதர்வாய் குமுத நாறுவ
கலக்கடைக் கணிப்பருங் கதிர்கள் நாறுவ
மலர்க் கடி நாறுவ மகளிர் கூந்தலே. 58

கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர் தம் நகரியைச் செப்புகின்றது ஏன்
யாவையும் வழங்கு இடத்து இகலி இந் நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே. 59

அதிர் கழல் ஒலிப்பன அயில்இ மைப்பன
கதிர்மணி யணிவெயில் கால்வ மான்மதம்
முதிர்வுறக் கமழ்வன முத்தம் மின்னுவ
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே. 60

வளையொலி வயிரொலி மகர வீணையின்
கிளையொலி முழவொலி கின்ன ரத்தொலி
துளையொலி பல்லியந் துவைக்கும் சும்மையின்
விளையொலி கடலொலி மெலிய விம்முமே. 61

மன்னவர் தருதிறை யளக்கும் மண்டபம்
அன்னமென் நடையவர் ஆடும் மண்டபம்
முன்னரும் அருமறை ஓதும் மண்டபம்
பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம். 62

இரவியிற் சுடர்மணி இமைக்கும் தோரணத்
தெருவில் சிறியன திசைகள் சேண்விளங்கு
அருவியிற் பெரியன ஆனைத் தானங்கள்
பரவையிற் பெரியன புரவிப் பந்தியே. 63

சூளிகை மழைமுகில் தொடக்குந் தோரணம்
மாளிகை மலர்வன மகளிர் வாள்முகம்
வாளிகள் அன்னவை மலர்வ மற்றவை
யாளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே. 64

மன்னவர் கழலொடு மாறு கொள்வன
பொன்னளித் தேரொலி புரவித் தாரொலி
இன்னகை அவர்சிலம்பு ஏங்க ஏங்குவ
கன்னியர் குடைதுறைக் கமல அன்னமே. 65

ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும் பொழுது போம்சிலர்க்கு அத் தொல் நகர். 66

முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம்சிலர்க்கு அம் மா நகர். 67

கரியொடு கரியெதிர் பொருத்திக் கைப்படை
வரிசிலை முதலிய வழங்கி வாலுளைப்
புரவியிற் பொருவில்செண்டு ஆடிப் போர்க்கலை
தெரிதலிற் பொழுதுபோம் சிலர்க்கு அச்சேண்நகர். 68

நந்தன வனத்தலர் கொய்து நவ்விபோல்
வந்திளை யவரொடு வாவி ஆடிவாய்ச்
செந்துவர் அழிதரத் தேறல் மாந்தித்தூது
உந்தலிற் பொழுதுபோம் சிலர்க்குஅவ் வொண்நகர். 69

நானா விதமா நளிமாதிர வீதி யோடி
மீனா றுவேலைப் புனல்வெண்முகில் உண்ணு மாபோல்
ஆனாத மாடத்து இடையாடு கொடிக்கண் மீப்போய்
வானறு நண்ணிப் புனல்வற்றிட நக்கு மன்னோ. 70

வந்தோ ரணங்கள் புணர்வாயிலும் வானின் உம்பர்
சென்றோங்கி மேலோ ரிடம் இல்லெனச் செம்பொன் இஞ்சி
குன்றோங்கு தோளார் குணங்கூட்டிசைக் குப்பை யென்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின உம்பர் நாண. 71

காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்
ஆடும் குளனும் அருவிச் சுனைக் குன்றும் உம்பர்
வீடும் விரவும் மணப் பந்தரும் வீணை வண்டும்
பாடும் பொழிலும் மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ 72

தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ. 73

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ. 74

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே. 75