கம்பராமாயணம்/யுத்த காண்டம்/இராமன் தேர் ஏறு படலம்

இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி, விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர் அழுந்து பணிமீது அமளி, 'அஞ்சல்' என, அந் நாள், எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 1

கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன் விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான், 'மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம் இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று' என இசைத்தான். 2

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின் பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ? இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். 3

புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின் அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக் கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். 4

இராமனுக்குத் தேர் அனுப்புமாறு, சிவபெருமான் தேவருக்கு கட்டளையிடல்

'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர், பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர் ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் இசைத்தான். 5

இந்திரன் கூற மாதலி தேரைக் கொணர்தல்

தேவர் அது கேட்டு, 'இது செயற்கு உரியது' என்றார்; ஏவல் புரி இந்திரனும், 'அற்று' என இசைத்தான்; 'மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக் கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி' என்றான். 6

மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு

மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்; சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். 7

குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும், அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும், கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின் வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 8

ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில் பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். 9

மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக் கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம் மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப் பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 10

மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித் தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக் கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து, உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. 11

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம் உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன், அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். 12

வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும், பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர் மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும், 13

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும், ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும், பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும் பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். 14

மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்

வந்ததனை வானவர் வணங்கி, 'வலியோய்! நீ எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்; தந்தருள்வை வென்றி' என நின்று, தகை மென் பூச் சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். 15

'வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான மனத்தின் விசை பெற்றுளது வந்தது' என, வானொடு அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்; நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். 16

தேரினை வியந்த இராமன், தேர் கொணர்ந்தது குறித்து மாதலியை வினாவுதல்

'அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்; உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்; நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா; தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? 17

'என்னை இது நம்மை இடை எய்தல்?' என எண்ணா, மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, 'வந்தாய், பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?' என்றான்; அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: 18

மாதலியின் மறுமொழி

'முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள், அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! 19

'அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக் கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்; புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். 20

'கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால், உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்; விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே, எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! 21

'நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும் பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின் பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத் தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! 22

'தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள், மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது' என்றான், மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 23

இராமன் அரக்கர் மாயையோ என ஐயமுற, மாதலி தேரில் பூட்டிய குதிரைகள் உண்மை என்பதை விளக்குதல்

ஐயன் இது கேட்டு, 'இகல் அரக்கர் அகல் மாயச் செய்கைகொல்?' எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்; மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். 24

இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்

'இல்லை இனி, ஐயம்' என எண்ணிய இராமன், நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன, 'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர் சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 25

மாருதியையும் இளவலையும் நோக்கி, 'உம் கருத்து யாது?' என, அவர்களும், 'இதில் ஐயம் இல்லை' என்றல்

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி, 'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும்' என, நின்றான்; ஆரியனை வணங்கி, அவர், 'ஐயம் இலை, ஐயா! தேர் இது புரந்தரனது' என்றனர், தெளிந்தார். 26

மாதலி கொணர்ந்த தேரில் இராமன் ஏறுதல்

விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப, தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள, அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் - இராமன். 27

மிகைப் பாடல்கள்

இத் தகையன் ஆகி, 'இகல் செய்து, இவனை இன்னே கொத்து முடி கொய்வென்' என, நின்று எதிர் குறிப்ப, தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில், சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். 4-1