கலைக்களஞ்சியம்/அமைதி

அமைதி (Peace) என்பது போர், சண்டை அல்லது சச்சரவு இல்லாத நிலைமையைக் குறிக்கும். போரும் இன்றி, அமைதியும் இன்றி இருக்கக்கூடிய நிலையும் உண்டாகையால், உலகில் எப்போது அமைதி நிலவுகிறதென்று தெளிவாகச் சொல்ல முடியாது. உலகம் அறிய இராச்சிய உறவு முறியாமல் இருக்கும்வரை இரண்டு நாடுகளுக்கிடையே அமைதி நிலவுவதாகக் கொள்ளலாம். இரண்டு நாடுகளின் படைகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட்டிருக்கும்போது அந்நாடுகளுக்கிடையே அமைதி யில்லையென்றும் கூறலாம். இவ்வாறின்றி, வியாபாரப் போட்டியையும் ஒருவகைப் போராகக் கொள்வாருமுண்டு. பிரசாரமும் எதிர்ப் பிரசாரமும் ஒருவகையான போர்ச் சூழ்நிலையை உண்டாக்குகின்றனவாயினும், அமைதி குலைந்து போர் தொடங்கிவிட்டதாகக் கருதுவதற்கு இருநாட்டுப் படைகளுக்கிடையே கைகலப்பு நிகழவேண்டும். போர் நிகழாமல் அமைதி நிலவுவதற்குப் பல முறைகள் ஆராயப்பட்டு வந்துள்ளன. வல்லரசுகளுக்கிடையே ஒரு சமநிலை இருந்தால் ஒன்றையொன்று விஞ்ச முயலாதாகையால் இச்சமநிலை கெடாமல் பார்த்து வரவேண்டும் என்பது ஒரு பழைய முறை. சர்வதேச சங்கம், ஐ. நா. ஸ்தாபனம் முதலிய சங்கங்கள் வாயிலாகப் பல நாடுகள் சேர்ந்து போரைத் தடுக்க முற்படுவது ஒரு முறை. ஆயினும் அம்முறை இதுவரை பயனளிக்கவில்லை. ஐ. நா. ஸ்தாபனத்தில் காணப்படும் கருத்து வேறுபாடு அரசியல் உலகை இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறது.

அமைதியை நிலைநாட்டுவதற்கே போரை மேற்கொள்வதாகச் சொல்பவர்களும், அமைதிக்காகப் பிற ஆதார உரிமைகளை விட்டுக்கொடுத்தல் கோழைத்தனமும் கடமை தவறுதலுமாகும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆகையால் அமைதி பலமுறை குலைகிறது. 'எவ்வாறாயினும் அமைதி' என்பதைச் சிலர் 'வல்லரசுகளின் பேராசைக்கு இடங் கொடுப்பதற்குச் சமம்' என்று கருதுவதால் அவர்கள் அமைதியைவிட வேறு குறிக்கோள்களை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பது தெளிவு. அன்றியும் தேசிய ஆதிபத்தியக் கொள்கை என்பது தன்னாட்டைத் தன் கருத்துப்படி ஆளப் பூரண உரிமை ஒவ்வொரு நாட்டிற்கும் அளிப்பதேயாகையாலும், நாட்டிற்கு நாடு ஆட்சிக் கருத்துக்கள் மாறுவதாலும் இக்கருத்து வேறுபாடு போருக்கு அடிகோலுகிறது. 1899லும், 1907லும் ஹேகில் நடந்த அமைதி மாநாடுகள் போரை யொழித்து அமைதியை நிலைநாட்ட முயன்றன. ஆயினும் இன்னும் உலகில் போர்கள் நடந்து வருவதால், நிரந்தர அமைதிக்கான வழியொன்றும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது தெளிவு.

அமைதி: பூமிமீது வாயுமண்டல அழுத்தம் மிகுதியாயுள்ள சில இடங்களில் உயரத்தில் உள்ள காற்றுக் கீழிறங்கி நாற்புறமும் பரவுவதால் அவ்விடங்களில் அதிகக் காற்றின்றி அமைதியாக இருக்கும். இதைப் பூகோளவியலில் 'அமைதி' என்னும் சொல்லால் குறிப்பர். அமைதி கடக அமைதி, மகர அமைதி என இருவகைப்படும். கடகரேகைப் பிரதேசத்துக்கு மேலுள்ள காற்றுக் கீழே இறங்கி வடக்கேயும் தெற்கேயும் பரவுவதால் அங்கு உண்டாகும் அமைதி கடக அமைதி எனப்படும். இவ்வாறே மகரரேகைப் பிரதேசத்தில் உண்டாகும் அமைதி மகர அமைதி எனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அமைதி&oldid=1453903" இலிருந்து மீள்விக்கப்பட்டது