கலைக்களஞ்சியம்/அம்மூவனார்

அம்மூவனார் சங்கமருவிய புலவர்; சேரனாலும், பாண்டியனாலும், திருக்கோவலூர்க் காரியாலும் ஆதரிக்கப் பெற்றவர். மேலைக் கடற்கரையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடல்கள் நற்றிணையில் பத்தும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397), குறுந்தொகையில் பதினொன்றும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறு நூற்றில் நெய்தல்பாட்டு நூறும், அகநானூற்றில் ஆறும் (10, 35, 140, 280, 370, 390) கிடைத்துள. இவர் பெயர் அம்மூவன் என்றும் குறுந்தொகையிற் காணப்படுகிறது.