கலைக்களஞ்சியம்/அரசியலமைப்புப் பற்றிய சட்டம்

அரசியலமைப்புப் பற்றிய சட்டம் (Constitutional Law) சட்டங்கள் இல்லாமல் எந்தச் சமூகமும் வாழ முடியாது. குடிகள் ஒழுங்காக நடந்துகொள்வதற்காகவும், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மக்கள் சாதாரணமாக எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை ஊகிப்பதற்காகவும், தனிப்பட்டவர்களிடையே தோன்றும் தவிர்க்கமுடியாத வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காகவும் சட்டங்கள் தேவை. சட்டங்களைச் செய்து அமல் நடத்தவும், சமூகத்தை ஒருமைப்படுத்திக் காக்கவும் அரசாங்கம் அவசியமாகிறது. இத்தகைய அரசாங்கம் மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் ஒன்று சேர்க்கவும், அதற்கு முரண்படாமல் தடுக்கவும், பணிவிக்கவும் பூரண ஆதிபத்தியம் உடையதாக இருக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய இந்த ஆதிபத்திய அதிகாரத்தின் மூலத்தைப் பற்றிப் பல்வேறு கொள்கைகள் இருந்துவந்துள்ளன. இந்த அதிகாரம் அனைத்தும் கடவுளால் அளிக்கப்பட்டதென்று ஒரு கொள்கை இருந்தது. அரசனும் குடிகளும் செய்துகொண்ட உடன்படிக்கையின் விளைவே இந்த அதிகாரம் என்று சில அரசியல் அறிஞர்கள் கூறியதுண்டு. இந்த அதிகாரம் முழுவதும் குடிகளுக்கே சொந்தம்; குடிகளிடமிருந்தே. அரசாங்கம் இவ்வதிகாரத்தைப் பெறுகின்றது என்னும் கொள்கை இக்காலத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது. "இந்திய மக்களாகிய நாம் இந்த அமைப்புச் சட்டமூலமாக இந்த அரசியல் அமைப்பை ஏற்றுச் சட்டமாக ஆக்கி நமதாகச் செய்து கொள்கின்றோம்" என்பது இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையாகும்.

ஆயினும் அரசியல். அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது என்று கூறுவதற்கும், மக்களே ஆளுகின்றனர் என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு. உண்மையில் அரசாங்கத்தை ஒரு சிலரே நடத்த இயலும். எல்லோரும் சேர்ந்து ஒருங்கே ஆள முடியாது. ஆகையால் அரசாங்கத்தை நடத்தும் பல உறுப்புக்கள் எந்த எல்லைக்குள் இயங்கவேண்டும் என்று பொதுமக்கள் எண்ணப்படி வரையறுத்துக் கூறும் அடிப்படைச் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று வேண்டியிருக்கிறது.

அரசியலமைப்புப் பற்றிய சட்டம் என்பது, அரசாங்கத்தின் பல்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வேலைகளையும், அவ்வுறுப்புக்களிடையே இருக்கவேண்டிய தொடர்பையும், அவ்வுறுப்புக்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கவேண்டிய தொடர்பையும் நிருணயிக்கவும், ஒழுங்கு செய்யவும் தேவையான விதிகள் அடங்கிய சட்டம் எனலாம். அரசாங்கத்தின் அதிகாரங்கள் சட்டங்களைச் செய்தல், அரசியல் நிருவாகம் நடத்துதல், நீதி வழங்குதல் என மூன்று வகைப்படும்.

அரசியலமைப்புச் சட்டமானது 1. சட்டங்கள் இயற்றுவதற்கு வேண்டிய ஸ்தாபனங்கள். சட்டசபை உறுப்பினர் தேர்தல் நடத்தவேண்டிய முறை, சட்டங்கள் இயற்ற வேண்டிய முறை, சட்டங்கள் இயற்றவேண்டிய விஷயங்கள். 2. இராணுவ, போலீஸ் படைகளின் அமைப்பும், தொகையும், அரசியல் நிருவாகத்தின் அமைப்பு, அதன் பொறுப்பு, அது சட்டங்களை அமல் நடத்த வேண்டிய முறை. 3. நீதிக்குலத்தின் தரங்கள், வழக்குக்களைத் தீர்த்து வைக்க அதற்குள்ள அதிகாரம், அதன் தீர்ப்புக்களுக்குள்ள ஆணை, மரியாதை ஆகியவற்றைப் பற்றியது.

மேலும் அது இராச்சியத்தின் ஆதிபத்திய அதிகாரம் செல்லும் பிரதேசம், அப்பிரதேசத்தின் எல்லைகள், அத்துடன் சேர்த்தல் அல்லது நீக்குதல், அதன் குடிகளாவதற்குரிய தகுதிகள் ஆகியவற்றையும் வகுக்கும். இங்கிலாந்தில் அது அரச பரம்பரையையும் கூட வரையறுக்கின்றது. இந்தியாவில் அது அரசாங்க மொழி இதுவென்றும் வகுத்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா போன்ற சில நாடுகளில் அரசியல் அமைப்புப் பெரும்பாலும் எழுத்து மூலமாக அமைந்துளது. இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் பண்டைய பழக்கத்தை ஒட்டிப் பல பாகங்கள் எழுதாமலே இருந்துவருகின்றன. எழுதப்படாத அரசியல் அமைப்புள்ள நாடுகளில் சட்டசபைகள் சாதாரண முறையிற் சட்ட மியற்றி அரசியல் அமைப்பை மாற்ற முடியும். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள விசேடமானதும் சிக்கலானதுமான முறையைத் தழுவியே அரசியல் அமைப்பை மாற்ற முடியும். முந்திய வகை அரசியலமைப்புக்கள் நெகிழ்வுடையவை என்றும், பிந்திய வகை அரசியலமைப்புக்கள் நெகிழ்வற்றவை என்றும் கூறுவர்.

சில பழைய அரசியலமைப்புக்கள் தம் பழைய முறைகளையும் குறிக்கோள்களையும் விடாது தாங்குவதுபோல் புறத்தே தோன்றினும், தமது அகத்தே பெரிய, புதிய மாறுதல்களை ஏற்றுக்கொண்டிருக்கலாம். அண்மையில் தோன்றிய சில அரசியல் அமைப்புக்களில் தற்கால அரசியல் கருத்துக்கள் திட்டமான இடம் பெற்றுள்ளன. சில அரசியல் அமைப்புக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் விவரமாகக் கூறும்; மற்றுஞ் சில அமைப்புக்கள் பொதுவான தத்துவங்களை மட்டுமே கூறும். உதாரணமாக, இந்திய அரசியலமைப்பு 395 விதிகளும் பல சேர்க்கைகளும் கொண்ட நீண்ட சாசனம். ஆனால், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பில் 21 விதிகளும், சென்ற 175 ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகச் சில திருத்தங்களும் மட்டுமே காணப்படுகின்றன.

அரசியலமைப்புக்களை வேறு பலவகையாகவும் பகுக்கலாம். இப்போது. எங்கும் சமூகங்கள் ஜனநாயகத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு விட்டதால், முடியரசு, பிரபுத்துவம், ஜன நாயகம் என்று இதுவரை கூறிவந்த பாகுபாடுகள் இன்று நடைமுறையில் பொருளற்றுப் போயின.

ஜனநாயக அரசாங்கங்கள் இக்காலத்தில் சட்டசபை வகை என்றும், ஜனாதிபதி வகை என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. முந்திய வகையில், தேர்ந்தெடுக்கப் பெற்ற சட்டசபைக்குப் பொறுப்புள்ள மந்திரிசபையால் அரசாங்கம் நடத்தப்படுகிறது. பிந்திய வகையில், அரசாங்க அதிகாரம் சட்டசபைக்குப் பொறுப்பு வாய்ந்ததாக இல்லாத நிருவாகத்தின் கையில் உள்ளது. இங்கிலாந்தும் இந்தியாவும் முந்தியதற்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் பிந்தியதற்கும் எடுத்துக்காட்டுக்கள். அமெரிக்க - ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பை வகுத்தவர்கள் முற்கூறிய மூன்று அரசாங்க அதிகாரங்களைப் பிரிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களா யிருந்தபடியால், அரசியலை ஜனாதிபதி வகையில் அமைத் தார்கள். ஆனால், அரசாங்க அதிகாரங்களை முற்றிலும் தனியாகப் பிரித்துவிட முடியாது என்பது அனுபவத்திலிருந்து தெரியவருகிறது. அதிகாரப் பிரிவினைக் கொள்கை என்பது, அரசியல் நிருவாகம் நடத்துவோர், சட்டம் செய்வோர், நீதிவழங்குவோர் ஆகிய இவர்கள் தமது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தாதிருக்கும் படி அதற்கு வேண்டிய தடைகளை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட உபாயம். இதுவே இதன் முக்கியத்துவமாகும்.

அரசியலமைப்புக்களை ஒற்றையாட்சி அரசியலமைப்பு (Unitary constitution) என்றும், கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal c.) என்றும் பகுப்பதுண்டு. முந்தியதில், அரசாங்க அதிகாரம் அதா வது சட்டம் செய்யும் அதிகாரமும், அரசியல் நிருவாக மும் ஓரிடத்தில் இருக்கும். பிந்தியதில் சில அதிகாரங்கள் இராச்சிய அரசாங்கத்திடழும், மற்றவை மத்திய அரசாங்கத்திடமும் இருக்கும். இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சியாகும். அரசியலமைப்பு எழுதப்பட்டதாக இருக்கும் நாடுகளில்கூட அரசாங்கம் நடைபெற வேண்டிய முறையை வகுக்கும் விதிகள் அனைத்தும் எழுதப்பட்டிரா. எழுதப்படும் விதிகளுடன், அவற்றை அமல் நடத்த வேண்டிய முறைகளைப் பற்றி எழுதப்படாத வழக்கங்கள் பல நாளடைவில் தோன்றி நிலைத்துச் சட்டத்துக்கு நிகரான வலுப்பெற்றிருக்கும். இத்தகைய வழக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இங்கிலாந் தில் அரசருக்குள்ள வீட்டோ (Veto) அதிகாரமாகும். சட்டசபை இயற்றும் எந்தச் சட்டத்தையும் வேண் டாம் என்று நிராகரிக்கும் அதிகாரம் சட்டபூர்வமாக அரசர்க்கு இருப்பினும், 1704 முதல் இங்கிலாந்து மன்னர் யாரும் அதைச் செலுத்தியதில்லை.

இராச்சியம் இருப்பது குடிகளுடைய பொது நலனைப் பெருக்குவதற்காகவே என்றாலும், ' பொது நலன்' என்னவென்பது பற்றி நாட்டுக்கு நாடு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அரசாங்கத்தின் வேலைகளும் கடமைகளும் நாளடைவில் மாறிவருகின்றன. இவ்வுண்மையை அந்தந்த நாட்டின் அடிப்படை நோக்கங்களை உருவாக்கும் அரசியலமைப்பில் காணலாம். மேலும் அரசியலமைப்பு, பொதுச் சமூகத்தின் பொருளாதார அமைப்பையும், மக்களின் சொத்து நிலைமையையும், மக்கள் கூட்டத்தின் உறுப்புக்களின் அமைப்பையும், கல்வி நிலையையும், பண்பாட்டு வகையையும், பெரும்பான்மையான மக்களின் சாதி பேதங்களையும், மதத்தையும், அவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வகையையும், அவர்களிடையிருக்கும் ஒருமை யுணர்ச்சியையும் பொறுத்ததாக இருக்கிறது. இத்த கைய காரணங்களால் அரசியலமைப்புக்கள் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் மாறுபடக் கூடும். ஒரு நாட்டின் அரசியலமைப்பு, குறிப்பிட்டகாலத்தில் அதன் நலத்தையும் முன்னேற்றத்தையும் வளர்ப்பதாக இருந் தால் மட்டும் போதாது. வருங்காலத்தின் புதுத் தேவை களுக்கேற்பப் புரட்சியின்றி எளிதில் மாற்றி அமைத் துக் கொள்ளும்படியும் இருப்பது நன்று.