கலைக்களஞ்சியம்/அறியொணாமைக் கொள்கை

அறியொணாமைக் கொள்கை (Agnosticism): ஆன்மா, கடவுள், நிலைபேறு என்பவற்றைப்பற்றிய கொள்கைகள் மதங்களிலே அடிநிலையாக உள்ளவை. அவற்றை அறிவு வழியாக அறிய முடியும் என்பதை டி. எச். ஹக்ஸ்லி என்பவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆதலால் அவற்றை மனிதன் தன் அறிவினால் அறியமுடியாது என்னும் தம்முடைய கருத்துக்கு அறியொணாமைக் கொள்கை என்று பெயரிட்டார்.

இயற்கையில் நிகழும் செயல்கள் பல தேவதைகளால் ஏற்படுபவை என்று மக்கள் நீண்ட காலமாக நம்பி வந்தார்கள். ஆனால் கோப்பர்நிக்கஸ், நியூட்டன், டார்வின் போன்ற பெரிய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சிகளின் பயனாக 19ஆம் நூற்றாண்டில் இந்த நம்பிக்கை மாறியது. இயற்கை நிகழ்ச்சிகளுக்கு இயற்கைக் காரணங்கள் தவிர, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இல்லை என்ற ஒரு கருத்துப் பரவலாயிற்று. உயிருள்ளவையும் உயிரில்லாதவையும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நடந்துவருகின்றனவேயன்றி, சமயவாதிகள் கூறுவதுபோல, அவற்றுள் எவையும் எந்தக் காலத்திலும் தேவதைகளுக்கு உட்பட்டு நடப்பதில்லை. இந்தக் கருத்து எழுந்த சமயத்தில்தான் 'அக்னாஸ்டிசிசம்' என்னும் சொல் உண்டாக்கப்பட்டதாகும்.

மனிதனிடம் காணப்பெறும் உணர்வு நிலை அவனுடைய மூளையில் நடைபெறும் நரம்பு மண்டலத் தொழிலே; சடம்தான் பிரதானமான கருத்தா; அதன் தொழில் காரணமாக விளைவதே உணர்வுநிலை; இயற்கை விதிப்படியே எல்லாம் நிகழ்வதால் இன்னது நிலைமை என்றால் உடனே இன்னது விளையும் என்று உறுதியாக உரைக்கலாம் என்று இக்கொள்கையினர் கூறினார்கள். ஆகவே இயற்கை விதிக்கொள்கையும் அறியொணாமைக் கொள்கையும் ஒன்றே.

ஹியூம், கான்ட் என்னும் தத்துவ சாஸ்திரிகளும் அறியொணாமைக் கொள்கைபோன்ற ஒரு கொள்கையே உடையவர்களா யிருந்தார்கள். ஆயினும் ஹக்ஸ்லியின் கொள்கைக்கும் அவர்களுடைய கொள்கைக்கும் சிறிய வேறுபாடுகள் உண்டு.

லாக் என்னும் தத்துவ சாஸ்திரி, பொருள்களின் குணங்கள் மூலக் குணங்கள் என்றும் சார்புக் குணங்கள் என்றும் இருவகைப்படும் என்றும், பரப்பு முதலியவை மூலக்குணங்கள், நிறம், சுவை முதலியன சார்புக் குணங்கள் என்றும், மூலக் குணங்களே பொருள்கட்குரியவை, சார்புக் குணங்கள் அறிபவர் மனத்திற்கே உரியவை என்றும் கூறினார்.

அவருக்குப்பின் வந்த பார்க்ளே என்பவர் மூலக் குணங்களும் மனத்திற்கே உரியவை என்றும், அதனால் பொருள்கள் என்பவையெல்லாம் மனத்தின் அல்லது ஆன்மாவின் கருத்துக்களேயன்றி வேறல்ல என்றும் கூறினார்.

அவருக்குப்பின் வந்த ஹியூம் என்பவர், மனத்தை ஆராய்ந்தால் கருத்துக்கள் மட்டும் காணப்படுவதால் அவற்றிற்குப் புறம்பாக ஆன்மா அல்லது மனம் என்னும் ஒன்று உள்ளதாகக் கூறமுடியாது என்றும், இன்னது இன்னதற்குக் காரணம் என்று கூறுவதெல்லாம் அவ்விரண்டும் எப்பொழுதும் சேர்ந்து வருவதை அனுபவ மூலமாக அறிந்ததால் தோன்றும் கருத்தேயன்றி வேறன்று என்றும் கூறினார்.

இவ்வாறு ஹியூம் சமயத்தின் அடிநிலையாகவுள்ள தத்துவங்களுக்கு ஆதாரம் கிடையாது என்று கூறினார். அதனால் இவருடைய தொள்கை அறியொணாமைக் கொள்கை போன்றதேயாகும்.

அறிவைப் புலன்களின் வாயிலாகவே பெறுகிறோம் என்று லாக் கூறியது உண்மைதான். ஆனால் அவ்வாறு அறிவு காட்டும் உலகத்துக்கும் அப்பாற்பட்ட ஓர் உலகம் உள்ளது. அதை அறிவால் அறிய முடியாது என்று கான்ட் என்னும் ஜெர்மன் தத்துவ சாஸ்திரி கூறினார். இதுவும் அறியொணாமைக் கொள்கை போன்றதே.

உலகத்தை உள்ளவாறு அறிய அறிவிற்கு இயலாது. இயற்கை நிகழ்ச்சிகளை மட்டுமே அறிவினால் ஆராய்ந்து அறிய முடியும் ஆதலால் சமயம் கூறும் ஆன்மா, கடவுள், நிலைபேறு ஆகியவை அறிவுக்கு அப்பாற்பட்டனவாகும். ஆகவே நாம் அறிவனவெல்லாம் இயற்கை விதிப்படி நடப்பன என்பதும், இயற்கை நிகழ்ச்சிகள் எந்தத் தேவதையின் ஆட்சிக்கும் உட்பட்டவையல்ல என்பதும், சமயத்தத்துவங்கள் என்று சொல்பவற்றை அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதுமே அறியொணாமைக் கொள்கையாகும். சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்து அறிஞர்களிடையே பரவியிருந்த கொள்கை இது. ஏ. ச.