கலைக்களஞ்சியம்/அல்செஸ்டிஸ்

அல்செஸ்டிஸ் கிரேக்கப் புராணக் கதையில் தெசலி அரசன் அட்மிட்டனின் மனைவி. அவனுக்காக வேறு யாராவது தமது உயிரைக் கொடுத்தாலொழிய அவன் இறக்க வேண்டும் என்று விதியிருந்தது. அவனுடைய பெற்றோர் முதியவர்களாயினும், அவன் பொருட்டுத் தமது உயிரைக் கொடுக்க மறுத்துவிட்டனர். மனைவி அல்செஸ்டிஸ் தன்னுயிரைக் கொடுக்க ஒப்புக்கொண்டாள். அட்மிட்டஸ் உயிர்த்து எழ எழ, அல்செஸ்டிஸின் உயிர் போய்க்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் ஹெர்குலிஸ் வந்து யமனுடன் போராடி அவனை வென்றான். அல்செஸ்டிஸ் உயிருடன் எழுந்தாள். இந்தக் கதையை யுரிப்பிடீஸ் என்னும் கிரேக்கக் கவி நாடகமாக எழுதியிருக்கிறார்.