கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/அறுவடை

அறுவடை
–ஆர். ஷண்முகசுந்தரம்–

‘கூளப்ப நாயக்கன் காத’லையோ, அல்லது ‘விறலி விடுதூ’தினையோ ஏறெடுத்தும் பார்க்காத நாகரிக மனிதரும் வயோதிக மைனருமான சின்னப்ப முதலியாருக்குப் பலபெண்களைத் தன் இன்பத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட பரி பக்குவத்துக்குப் பிறகு, மீண்டும் திருமண ஆசை தலையெடுக்கிறது. நண்பர் கறுப்பண்ண முதலி அதற்கு ஒத்து ஊதுகிறார். மனைவி இறந்த பின், பெண்களுடன் ஊடாடிப் பழகியே வந்துவிட்ட சின்னப்ப முதலியாருக்கு கடைசி காலத்துக்கு மனைவி வேண்டும் என்று எண்ணுவது நண்பர் கறுப்பண்ண முதலியாருக்குச் சாதகமாக இருக்கிறது. பெரும் பணக்காரராகிய சின்னப்ப முதலியின் திருமணத்துக்குப்பின் தன் அருமை மகன் கல்யாணத்தையும் சின்னப்ப முதலியாரின் பணத்திலேயே நடத்தி விடுகிற திட்டம் கறுப்பண்ண முதலிக்கு உண்டு. இத் திட்டத்தைச் செயலாக்க அப்பாவி நாச்சிமுத்து அகப்படுகிறான். 

தேவானை அழகிய பெண். நாச்சிமுத்துவின் மகள். தகப்பனை உண்மை அன்பிலே குழைத்தெடுப்பவள். ‘ஆள்’ உயரத்துக்கு வளர்ந்து, ஓங்கி நிற்கிற சின்னப்ப முதலியாரின் சோளக் காட்டுக்குள்ளேதான் சின்னப்ப முதலியாரின் பேரன் சுப்பிரமணியத்தின் பேரின்பக் காடு அமைந்திருந்தது. தேவானையுடன் சோளக் காட்டுக்குள்ளேதான் அவன் தன்னுடைய இன்ப உலகத்தைப் படைத்திருந்தான். தகப்பனும் அத்தையும் வீட்டை விட்டுப் போன பின் சுப்பிரமணியத்தைச் சந்திக்கச் சோளக் காட்டுக்குள் வந்து விடுவாள் தேவானை! அவளுக்கும் அவனுக்கும் என்றே சோளக்காடு உண்டாகியது போல் ஆகிவிட்டது.

நாச்சிமுத்து போலீசில் அகப்படுகிறான். சூதாட்டத்திலே அகப்பட்ட அவன், சின்னப்ப முதலியின் ஆசை வலையில் சிக்குகிறான். அதாவது, தன் மகள் தேவானையை அந்தக் கிழவனுக்கு மணம் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டு சேவகரிடமிருந்து தப்புகிறான்.

தேவானை, சுப்பிரமணியத்தோடு நடத்தி வந்த ‘பகல் நேரக் களியாட்டம்’ நாச்சிமுத்துக்கோ, அவள் அத்தைக்கோ தெரியாது. உனக்கும் சின்னப்ப முதலிக்கும் கல்யாணம்! என்ற செய்தியைத் தன் மகளிடம் கூறத் தவிக்கிறான் நாச்சிமுத்து. அவள் ‘அறியாக் குழந்தை’ என்ற உணர்வு அவனுக்கு!-தேவானை தனக்கும் சின்னப்ப முதலிக் கிழத்துக்கும் கல்யாணம் என்றறிந்த போது ‘ஓ’வென்று அலறி அழுதாள். உடனே தன் ‘காதலனி‘டம் ஓடிப்போய் இச்செய்தியைத் துயரம் இழையோடத் தெரிவித்தாள். தந்தையின் சூதுமதியையும் விளக்கினாள்.

சுப்பிரமணியனிடம் பாலைமரத்தடியில் அனுபவித்த இன்பம், இனித் துன்பமாகிவிடப் போகிறது என்பதை மெய்ப்பிப்பது மாதிரி அவர்களிருவரும் சந்தித்துப் பேசி மகிழ்ந்து வந்த இன்ப ஊற்றின் உறைவிடமான சின்னப்ப முதலியின் அந்தச் சோளக் கொள்ளையிலே அன்று அறுவடை நடக்கிறது.

“இதுவரை சின்னப்ப முதலியார் கொண்டு வந்த பெண்கள் எல்லாம் படிதாண்டாப் பத்தினிகளா என்ன? அது போல நீயும் இரு. நமக்கும் அது நல்லது!” என்றான் சுப்பிரமணியம்.

தேவானை காரித்துப்பினாள் அவன் முகத்தில். ‘பளார்’ என்று ஒலியெழ ஓங்கி ஓர் அறையும் கொடுத்தாள். அவன் எழுமுன் வீட்டுக்கு ஓடினாள்.

சின்னப்ப முதலியார், திருமணத்தன்று, அவள் வாழ்வு உண்மையிலேயே அறுவடையாகி விட்டது. தேவானை மணப்பெண்ணின் கோலத்தோடு வீட்டு உத்திரம் ஒன்றிலே பிணமாகித் தொங்கினாள்!

அறுவடை ஆகி முதிர்ந்த கதிர் தலை சாய்த்துத் தொங்கியது! கதைக்கு ஓர் அம்சம்!

கதைச் சுருக்கத்துக்குப் பின் கதையம்சம் என்று ஒன்றினைச் சொல்லிவிட்டால், கதையின் மூலக்கூறுகள் பிடிபட்டுவிடும் அல்லவா? கொங்கு நாட்டுச் சிற்றூர் ஒன்றில். இளைஞன் ஒருவனின் காமத்துக்கு அறுவடையாகிவிடுகிறாள் ஓர் அழகி தன் வாழ்வை, புன்மை நிறைந்து வழியும் வாழ்வாக ஆக்கிக் கொள்ள விரும்பாமல், தன் வாழ்வையே அறுவடை செய்து, உளுத்துப்போன மரத்தினின்று உதிரும் கடைசிக் கனிபோல வீழ்ந்த தமிழ்ப் பெண் தேவானைதான் இந் நாவலின் கதைக்கு ஓர் ஆணிவேராக இருக்கிறாள்.


அனுதாப முக்கோணம்!

அறம்கொண்டு மறம் கண்ட கன்னிப் பெண் தேவானை.

ஒருநாள்:

ஆள் உயரத்திற்குச் சம்பாச் சோளப் பயிர் பால் பூட்டையுடன் தலைதுாக்கி நின்றது.

இந்தக் சோளக்காடுதான், வேதனையின் மனம் தொட்ட சுப்பிரமணியத்திற்கு பேரின்பக்காடு.

அதோ, தேவானை!

அவள் வந்ததும், அவனை நெருங்கினான் இளைஞன். அணைத்தான். இன்ப மெத்தையிலே இருத்தினான். கண்னொடு ‘கண் இணை’ நோக்கின. அப்படியிருந்தும், இருவரும் பேசாமல் இருந்தார்களா? அதுதான் இல்லை. பேசினார்கள். “ஐயோ! ஏன் இப்படிப் பாக்கறிங்க?” என்றாள். 

‘கருமணியிற் பாவாய்’ என அவள் ஆகிவிட்டாளா? ஊ ஹும்!

சுப்பிரமணியம் கைகாரன். ‘சும்மா பார்த்தேன்’ என்கிறான்.

பிறகு, தன்னைப் பணக்காரன் ஒருவனுக்குக் கட்டிக் கொடுக்கத் தன் தந்தை திட்டம் புனைந்திருப்பதாக விவரம் மொழிகிறாள் அவள்.

“அப்படியா? நெசமாணுமா? எனக்குத் தெரியாதே?” என்கிறான் காதலன்.

“தெரிஞ்சா என்ன பண்ணுவீங்களாம்?” என்று வினவுகிறாள் காதலி.

“என்ன பண்ணுவனா? அது எனக்கே தெரியாது!” என்று வீரத்துடன் கூறினான் சுப்பிரமணியன். அவன் வஞ்சன்! அதனால்தான் அவன் உள்ளுரச் சிரித்தானோ?

பேதை அவள் நம்பினாள். நம்பாமல் இருக்கமுடியுமா?

பேசிக்கொண்டிருப்பதில் புண்ணியம் இல்லை. என்ற ‘காரியச் சித்தக்காரன்’ சுப்பிரமணியம். காலத்தைக் காட்டி, கனவைக் கூட்டி, காதலியை ஓட்டி, காலத்தை ஓட்டினான். அவளைத் தன் இன்பக் கருவியாக ஆக்கி விட்டான்.

பேதை அவள்!

இறுதியில்:

தன்னைத், தெய்வம்போல வந்து சிறையினின்றும் மீட்ட கிழம் சின்னப்ப முதலியாருக்குத் தன் அருமைப் புதல்வி தேவானையைக் கட்டிக்கொடுக்கப் போவதாக மகளிடம் சொல்கிறான் நாச்சிமுத்து. “ஏராளமா நகை போடப் போறாரு. தம் சொத்தெல்லாம் உம் பேருக்கு எழுதிவைக்கப் போறாரு!”

தேவானை ஊமையாகி விட்டாள்.

ஊமையானவள் ஆசைக் காதலன் சுப்பிரமணியத்தைக் கண்டதும், வாய் திறந்து பேச முனைகிறாள். நிலை குறித்து விம்முகிறாள்.

அவன் என்ன பதில் விடுக்கிறான், புரிகிறதா? “எவனேயாவது கட்டிக்கிட்டு எங்காச்சும் போயிருந்தாயானால் நமக்கு எவ்வளவு கஷ்டம்? எங்க தாத்தெனக் கட்டிக்கிறது நல்லதாப் போச்சு!” என்கிறான்.

அவள் கொதிக்கிருள். பிறகு, சாத்மீகமான தொனி எடுத்து, காம சிநேகிதமா இருந்ததே ஊருக்குள்ளே எல்லார்த்தெ கிட்டெயும் சொல்லிடுங்களே?' என்று இறைஞ்சுகிருள்.

“அதுலே உனக்கு என்ன லாபம்?”

“உங்க தாத்தாவிடமிருந்து தப்பிச்சுக்குவேன்!”

“அவரு உன்னெக் கலியாணம் பண்ணிக்க மாட்டாருண்ணு நெனச்சுக்கிட்டாயா?”

“ஆமா!”

“தாத்தாக்கிட்டிருந்து தப்பிச்சுக்கிட்டாலும், வேறொருத்தனும் கட்டிக்க மாட்டானே?”

“எனக்குக் கல்யாணமே வேண்டாம்!”

“ஆனா எனக்குக் கல்யாணம் பண்ணாமெ எங்கம்மா உடமாட்டாளே! எனக்கு அப்புறம் யாரு பொண்ணு கொடுப்பாங்க?” 

“உங்களெ நம்பினதுக்கு இந்த உபகாரமாவது செய்யக் கூடாதா?”

“இதுக்கெல்லாம் எங்க காத்தா மசியமாட்டார்! இதுக்கு முன்னாலே அவரு படிதாண்டாப் பத்தினிகளைத் தான் கூட்டிக்கிட்டு வந்து வச்சிருந்தாரா? எல்லா தேவடியாள்கள் தானே?”

‘தேவடியாள்’ என்ற சொல்லைக் கொடுத்த சுப்பிரமணியத்துக்குப் ‘பளார்’ என்று கன்னத்தில் ஓர் அறை கொடுத்து அவன் முகத்தில் காறித்துப்பிவிட்டுப் பறக்கிறாள் தேவானை!

முடிவு:

மணப்பெண் கோலத்தில் கல்யாணப் பெண் கழுத்துக்குச் சுருக்கிட்டு, விட்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறாள்!

பாவம்! கல்யாணப் பெண் தேவானை!


க. நா. சு + ஆர். ஷண்முகசுந்தரம்

எனக்கு எப்போதுமே ஒரு கொள்கை உண்டு. ஒரு பாத்திரத்தைக் கட்டுக் கோப்புடையதாகச் செய்ய ஒரே ஒரு சம்பவமாவது உயிர்த்துடிப்புடன் விளங்கவேண்டுமென்று கருதுபவன் நான்.

தஞ்சை மாவட்டச் சூழலைப் பகைப் புலமாக்கி ‘மருதாணி நகம்’ என்ற நவீனத்தை எழுதினேன். பஞ்சவர்ணம் நாயகி. படுசுட்டி அவளது கற்பைக் களவாட நினைத்தவர்களைத் தீயாகப் பொசுக்குகிறாள். உச்சக் கட்டத்தை உருவாக்கும் புண்ணியம் தீக்குக்கிட்டுகிறது. “நெசமான அன்பும் நேசமும் இல்லாத பொய்யான ஆளுங்களுக்கு ஊடாலே, பொண்ணாப் பொறந்தவ நானு வாழ்ந்துப் புடலான்னு. நெனச்சதே குத்தமின்னு புரியிறத்துக்கு இம்மாங் காலமாயிருக்குது!” என்று அழுகிறாள்.

இந்தத் தேவானையின் கதியும் அம்மாதிரிதான்!

ஆம்; பெண்மையின் அரணாகப் பெண்மை மதிக்கப் பெற்று வாழ்த்தப்பட வேண்டும்.

இவ்வகையில் நான் படைத்த பஞ்சவர்ணத்தின் நிழலில் ஒண்டுகிறாள் தேவானை. வாழ்த்தத்தான் வேண்டும். யாரை?... பஞ்வர்ணத்தை!... ஆமாம்; பஞ்சவர்ணத்தைத் தான்!...

ஆனால், அவளை வாழ்த்த அவளது தற்காலிகக் காதலன் (Temporary lower) தயாராக இல்லை! அதனால் தான், கதைக் கருவுக்கு ஓர் பிடிப்பும், கதை உறுப்பினளான தேவானைக்கு ஓர் உயிர்த்துடிப்பும் இருக்கிறது. ஆனால் அவளது உயிர்துடிப்பைப் பறித்துக் கொண்ட குற்றத்திற்கு சுப்பிரமணியம் மட்டும் ஆளாகவில்லை. இந்த நாவலின் ஆசிரியரும் உடந்தையாகிறார்! அபலை தேவானையின் கற்பு முழுமை பெறாதது போலவே அவரது பாத்திரமும் அரைகுறையாகிறது.

அனுதாபங்கள் முக்கோண ரீதியில் பிரிவினை பெறுமாக!..


பாத்திரங்கள்-செப்பு!

பாத்திரத்தில் இருக்கும் நீர் நிரம்பி வழியவும் இல்லை. வற்றிப்போய் விடவும் இல்லை. அதில் என்ன பயன்? 

பாத்திரத்தில் நீர் இருந்தால்தான் பயன்படும்; வெற்றுப் பாத்திரமாய் இருந்தால், வெறும் பாத்திரம் என்றாவது சொல்லிக்கொள்ள முடியும்! கொஞ்சம் நீருடன் இருப்பதை என்னவென்று சொல்லமுடியும்? அப்படியொரு புது உவமை கூறும்படிதான் இருக்கிறது. ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதி ‘முன்னுரை’யோடு வெளி வந்துள்ள ‘அறுவடை’ என்னும் இந்த நாவல். நாவலாகவும் இல்லாமல், நாவல் என்கிற இலக்கணங்களை மீறியதாகவும் இல்லாமல், ஏதோ ஓர் ‘இரண்டுங்கெட்ட’ போக்கில் உருவாக்கப்பட்டு, க.நா.சு. மட்டும் ரசிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார்! ‘குருசிஷ்ய விசுவாசம்’ என்றார்களே, அப்பண்பாடு, இவ்வகைதானோ?...


நடையும் தமிழும்

மாவட்ட இலக்கியம் (Class Literature) என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூட, ஊன்றிப்பார்த்தால் இப் புதினத்தில் ஏதும் இல்லை என்பதை மிக எளிதில் கண்டு கொள்வார்கள்!

“தமிழ் இலக்கியத்துக்கே தொண்டு!”என்று இதைப் பற்றி மார்தட்டிச் சொல்லிக்கொள்ளத்தக்க அளவுக்கு இதில் என்ன இருக்கிறதோ, அந்தக் கலைத்தன்மை அந்தக் க.நா.சு. வுக்கே வெளிச்சம்! க.நா.சு. வின் வாக்கு தேவ வாக்கன்று என்பதை அம்பலப்படுத்திய கடமை யாரைச் சார்ந்ததென்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்!

“No novel is perfect” என்கிறார் சாமர்செட்மாம். “நாவல் பழையதைத்தான் சொல்கிறது; ஆனால் பழையதைப் புதியதாகச் சொல்கிறது.” என்கிறார் அவர் எந்த நாவலும் நம் விருப்பத்திற்கேற்றபடி அமைவது கிடையாதுதான். அதைக்கூறிவிட யாருக்கும் உரிமை இல்லை தான். அதற்காக ஒன்றுமில்லாத எழுத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு புகழ்வதில் என்ன லாபம்? லாபமில்லாமல் என்ன? இந்தத் திருக்கூட்டத்தின் தலைவலி நம்மீது சுமத்தப்பட்டுவிடுகிறதே!...


பார்வை

கொங்கு நாட்டுத் தமிழைச் சிறப்பாகப் பயன்படுத்தி அதற்குக் கலை வடிவம் தருவதில் சிறப்பான நயம் இந்நாவலாக்கத்தாளரிடம் இருக்கிறது. இச் சிறப்பியல்பு - மட்டும்; அவரைப் பூமாலை சூட்டிக் கவுரவப்படுத்திவிட முடியாதல்லவா?

அவருடைய முதல் நாவல் ‘நாகம்மாள்’. விதவை ஒருத்தியின் “கோயில் காளை’த் தனத்தை உருவாக்கி கொங்கு நாட்டு வளப்பச் சூழலுடன் அழகுற எழுதி ஓரளவு வெற்றிபெற்று, கலைஞர். கு.ப. ராஜகோபாலன் அவர்களிடம் பாராட்டுப் பெற்றார். அதே வேகத்துடன், தன் இலக்கிய வாழ்வில் அவர் வளரவில்லை என்பதை அறிய அவருடைய சிறுகதைகளைப் படித்தாலே போதும்! -கொஞ்சநாள்-கல்கி பாணி-கொஞ்சம் க.நா.சு தடம்-கொஞ்சம் சரத்பாபுவின் வழி!-அதன்பின் இன்னும் சில சிறு கதைகள்-‘மெளனி’யைப் பின்பற்றியவை: அப்பால், மாப்பஸான். பால்ஸாக், பிளாபர்ட் போர்வை!-இப்படிக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தே வளர்ந்த வளர்க்கப்பெற்ற வளர்ச்சி இது! உண்மையான அவருடைய இலக்கிய வாழ்வை-அவருடைய கலைத்தன்மையை எவ்வளவு தூரம் பாதித்து முழுமை பெறாதபடி ஆக்கியிருக்கிறது என்பதை “அறுவடை” இயம்புகிறது. போதும்! திரு க.நா.சு. வரிந்து கட்டிக்கொண்டு, “தமிழில் என்னுடைய ‘பொய்தேவு,’ ஆர். ஷண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்’ ” —என்று தமிழ் நாவல் இலக்கியத்திற்கு ஓர் எல்லைக்கோடு கிழித்து, ‘வீண் ஜம்பம்’ பேச இனி முன்போலத் துணிவு பெறார். ஏனெனில், எல்லைக் கோட்டு விஷயம் போர்க்கோலம் பூண்ட கதையை அவர் அறியமாட்டாரா என்ன?

இந்த நாவலின் கதையம்சமும் கருவும் என்ன கூறுகிறது என்பதை உற்றுப் பார்க்கும்போது, இந்தக் கதைக் கரு, ஒரு நாவலுக்குரியதாகவே அமையக் காணோம்! அவர் பிறப்பித்துள்ள கதைக் கருவும், சிருஷ்டித்துக் காட்டியுள்ள மனிதர்களும் ஒரு நாவலுக்குரியவர்களாகவே தோன்றவில்லை. ஒரு சிறு கதைக்குரிய நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு, ‘நாகம்மாள்’ எழுதிய காலத்தில் எழுதிய அதே பழைய உத்திகளோடு இன்று ‘அறுவடை’ யையும் எழுதியிருக்கிறார்.

“எதற்காக எழுதுகிறேன்” என்ற கேள்விக்கு ஆர். ஷண்முகசுந்தரம் கூறும் மறுமொழி “தனி மனிதன், குடும்பம் இவற்றின் மீது பணத்துக்கு உள்ள ஆதிக்கம் குறைந்தால், எதற்காக எழுதுகிறேன் என்ற கேள்விக்கு, நான் தரும் பதில் ஒரு தனிக் காவியமாக இருக்கும்!”

தனி மனிதன், பண ஆதிக்கம்-இவை தான் இவருடைய ஆரம்பகால நாவல்களின் அடிப்படையாக இருந்தன. முடிவு !

“எழுத்து” விமரிசனம் செய்திருக்கிறது. இந்த எழுபது பக்கத்து நவீனம் ‘சாஹித்ய அகாடெமி’ப் பரிசுக்கு எட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறதாம்.

பாவம்!...பரிதாபம்!...

நவீனத்திற்குரிய பரப்பான கட்டுக் கோப்பு, நிலையான களன், உறுதியான உறுப்பினர் அமைப்பு, உட்பொருள், தூண்டுதல், உருவம், சோதனை போன்ற இன்றியமையாப் பண்புகளைத் தொட்டுக்காட்ட விழையாமல், க.நா.சு என்கிற ஒற்றைப் பனைமர நிழலில் ஒண்டி, அந்த நிழலின் தற்காலிகமான சுகத்தின் அளவையே தன் இலக்கிய அதிர்ஷ்டத்தின் தலையெழுத்தாகவும், அந்தத் தலையெழுத்தையே தன் இலக்கிய வெற்றிக்கு உரிய ஓர் எல்லைக் கோடாகவும் தன் கருத்தில் ஏற்றிக்கொண்டு அதன் கனத்திலேயே ஆத்ம திருப்தி பூண்டு ஒழுகி வரும் அன்பர் திரு. ஆர். ஷண்முகசுந்தரம், புதிய விழிப்பும், பழைய பெயரும் பெறவேண்டுமானல், அவர் அந்த ‘அதிசய உள்ளத்’தினின்றும் விலகித் தம்முடைய ‘சொந்த வழி’யில் நடக்க வேண்டும்!... ‘சொந்த நடை’யில் நடக்கவேண்டும் அதுதான் அழகு.

ஆம்; உண்மை என்றைக்குத்தான் இனித்தது, ஐயா!...நான் சொல்வது கசப்பாக இருக்கிறதா?