கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/நளினி


4. நளினி
-க. நா. சுப்பிரமணியம்—

புதுமைப்பெண் அல்லள் நளினி. திருடனைக் கணவனாகக்கொள்ள முடியாமல் ஓடிவிட்ட பெண்! அவள் பாவாடைகட்டிய சிறுமியாக இருக்கும்போது, சீதாராமன் என்னும் கதாநாயகன் பருவதத்தம்மாள் என்கிற தன் மூத்த சகோதரி வீட்டுக்கு வண்டியில் வந்து இறங்குகிறான். பாவாடைகட்டிய “வளர்ந்த” பெண் நளினி, எதிர்வீட்டில் நிற்கிறாள்.

நளினி தாயை இழந்தவள்; ஒரு வகையாக வளர்ந்தவள், முரட்டுப் பிடிவாதத்துடன்! கையில் சின்னம்மாவின் குழந்தையுடன் நிற்கிறாள். “அதோ பாருடா பட்டணத்து மாமா!” என்கிறாள் குழந்தையிடம். “தேவலையே ! வாயாடிப் பெண்ணுக இருக்கும்போலிருக்கே! வளர்ந்த பெண்ணுகவும் இருக்கிறதே!” என்று - சொல்லிக்கொண்டே போகிறான் சீதாராமன், அந்தப் பட்டணத்து மாமாவையே மணந்து கொள்கிறநிலை நளினிக்கு வந்துவிடுகிறது. பெண்ணின் தகப்பனார் நல்ல உழைப்பாளி. வேலைசெய்து ஓய்கிற அனுபவம் அவருக்கு.

அன்றே சீதாராமனைப் போலீஸ் தேடிவருகிறது விஜயபுரம் அக்கிரகாரத்துக்கு தவறே செய்யாத நல்லவன்போல் போலீசாருடன் செல்கிறான் சீதாராமன், நளினியை விரும்பிய சீதாராமனும் சீதாராமனை மனத்தில் எண்ணிக் கலந்த நளினியும் சீதாராமனுக்காக வருந்திய அவன் அக்காளும் தபால் குமாஸ்தாவான நளினியின் தந்தை விஸ்வநாதய்யரும் குழம்பி நிற்கிறர்கள்.

பட்டினத்துப் பாங்கிலே இருபதினாயிரத்தைக் கொள்ளையடித்து சட்டத்தின் பிடியில் குருசாமி என்கிற எத்தனைப் பழிசாட்டி, சீதாராமன் நல்லவனாகித் தப்புகிறான். ஆனால் இருபதினாயிரத்தில் பங்குக்காகத் தன்னருகிலேயே காத்திருந்த எத்தன் குருசாமியை சீதாராமனால் உணரமுடியவில்லையே!

விஜயபுரம் வருகிறான். தன் அக்காள் வீடு பூட்டியிருக்கிறது. எதிரே நளினி நிற்கக்கண்டு திகைக்கிறான். பின்பு நளினியிடம் பேசுகிறான். நளினியின் வீட்டில் அவனுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால் குருசாமி திண்ணைக்கு வந்து விட்டதை அவன் அறிந்தபோது, நளினியிடம்கூடச் சொல்லாமல் - பெட்டிகூட எடுத்துக்கொள்ளாமல் ஓடிவிடுகிறன்!-நளினி நிலைக்கிறாள்! மூன்று ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சீதாராமன் வருகிறான். நளினியை மணக்க விரும்புகிறான். நளினியின் தந்தை விஸ்வநாதய்யர் மகளிடம் உடன்பாடு கேட்கிறார். நளினியோ, “போ அப்பா...!” என்கிறாள் நாணத்தின் மென்மையுடன். ‘திருமணத்துக்கு முன் சீதாராமன் அயோக்கியனா என்று தெரிந்து கொள்ளாவிடில் ஆயுசு பூராவும்...?’என்று கலங்கினாள் நளினி. ஆனால், அதை அறிய வாய்ப்பே இல்லை! திருமணம் நடக்கிறது. மருண்ட பார்வையோடு சீதாராமனைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த நளினியைக் கண்ட மணமகனுக்கு அமைதியே இல்லை.

மணமான உடனே நளினியை இழுத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வருகிறான் சீதாராமன். இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம், அப்போதே அவளை அவன் ஆசையோடு நெருங்கிய சமயம், அவள் பழைய குருசாமியை நினைவு படுத்தி ‘நீதான் திருடனா?’ என்று கேட்காமல் கேட்கிறாள். முதலிலே கசக்கிறது சீதாராமனுக்கு. பின் வழித்துணை கொண்டு தஞ்சையை அடைகின்றனர், அடைந்திட்ட புதுமணக் கோலம் பூண்டு!

தஞ்சை வந்த நேரம் அந்தி மாலை. “அந்தப் பழைய கதையையெல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது” என்கிறான் கதாநாயகன்! “அதெப்படி சாத்தியம்?” என்கிறாள். நளினி. கடைத்தெருவுக்குப் போய் மீண்டதும் வெளிக்கதவு தாளிடாமலே சாத்தியிருந்தது. “நளினி” என்று அழைக்கிறான் சீதாராமன்.

—“எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ நான் விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவு அல்ல இது. என்னைத் தேட வேண்டாம். நான் விஜயபுரம் போகவில்லை!” என்று கடிதம் எழுதி இருந்தாள் நளினி.


அழியாக் கனவு

விஜயபுரம் என்று ஓர் ஊர், அங்கே ஓர் அக்கிரகாரம்; அங்கே பெண் ஒருத்தி; பெண் அல்ல. கன்னி. அவள் பெயர் நளினி. நளினமான பெயர்தான். அவளுக்குத் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ‘அழியாக்கனவு’களைக் கண்டுகொண்டிருப்பதுதான் அன்றாட அலுவல், அந்த அலுவலுக்கு உயிரூட்டுகிறது சீதாராமன், சீதாராமன் என்ற இளைஞனின் வருகை. நளினியை இரண்டு முறை பார்த்து, அதன் விளைவாக அவனுக்கு விளைந்த துன்பங்கள் அதிகம். அதனால்தானோ, என்னவோ, அவளை அவன் தன் உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால், அவளுக்கோ அவனது வாழ்வில் புதைந்து கிடந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு மிஞ்சுகிறது. உள்ளத்தின் தற்காப்பு உணர்ச்சி (Self— preservative—instinct) இது. அவளால் அன்பு சொட்ட அழைக்கப்பட்ட ‘பட்டணத்து மாமா’வான சீதாராமன், “அந்தப் பழைய கதையைஎல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது!” என்று முத்தாய்ப்பு வைக்கின்றான் இறுதியில் அவளது கடிதம் அவளுடைய அழியாக் கனவுகளுக்கு முத்தாய்ப்பு அமைத்து விடுகிறது. எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவல்ல இது. ‘என்னைத் தேட வேண்டாம்,’ என்று எழுதி, பின் குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தாள். அவள் தன் பிறந்தகத்துக்குச் செல்லவில்லையாம்!


ஒரு சிறு விஷயம்!

‘நளினி’ என்னும் மகுடம் ஏந்திக்கொண்டிருக்கும் இக்கதையை ‘நாவல்’ எனப் பெருமையுடன் தேர்ந்தெடுக்கின்றார், நளினியைப் படைத்தவர். இந்தப்படைப்பாளரை முதலில் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர் நம் மதிப்புக்குரியவர். பெயர் : க. நா. சுப்ரமணியம். பெரும்பாலோர் சொல்கிறார்கள் : “க. நா. சு. பெரிய இலக்கிய விமரிசகர்!” சிலருக்கு அவர் என்றால், சிம்ம சொப்பனம். அப்படிப்பட்ட ‘பயங்கர மனிதர்’, தாம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிய இந்த நளினியைப் பற்றி இப்போது முன்னுரை எழுதும்போது, ‘பேஷ்! தேவலேயே! ஒரு சிறு விஷயத்தை வெகு அழகாக எழுதி விட்டோமே?’ என்று குறிக்கிறார்; குதிக்கிறார். “நல்ல ‘பேஷ்!’ போங்கள், மிஸ்டர் கே. என். எஸ்!”

ஒரு சிறு விஷயம்! - அந்தச் சிறு விஷயமும் இல்லையென்றால், இதைப் படித்துத் தீர்க்க வேண்டுமென்று எனக்குத் தலைவிதியா, என்ன? வயதால் மட்டும் வளர்ச்சி யடையாமல், உள்ளத்தாலும் வளர்கின்ற பக்குவத்தை - மனத்திட்பத்தை - ‘நளினி’ மூலம் பரிசோதனை செய்து, பார்த்தார் க. நா. சு. விளைபலன்: தோல்வி! படுதோல்வி!


சூள்!

வாசகர்களின் மனோதர்மத்துக்குக் கதையின் முடிவைக் காணிக்கை வைத்துவிட்டு எழுத்தாளன் விலகி நிற்பது புதிய உத்திதான்; கோடிட்டு, ‘கோடி’ காட்டும் உட்குறிப்பு (subtle suggestion) இது. இத்தகைய முடிவுக்கு ஓர் தொடக்கம், வளர்ச்சி, இடைநிலை, கதைப் பிண்டத்தில் ஓர் அழுத்தம், உருவாக்கும் தலைமைக் கதாபாத்திரங்களிலே ஒரு தனித் தன்மை போன்ற பண்புகள் பொலிவு காட்ட வேண்டும். ‘நளினி’யில் நளினியைத் தவிர, மற்ற எல்லாப் பாத்திரங்களும் வெறும் அண்டா, குண்டான், குடம் வகையறாத்தான்! பத்து வயசுப் பெதும்பைப் பருவத்தில் நளினி அழகு காட்டுகிறாள். திடீரென்று பதினைந்து ஆகிறது: வயசில் சின்னம்மாவுக்கும் சாஸ்திரிகளுக்குமே தகராறு. எப்படியோ, அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ‘போலி மனிதனாக’ ஆக்கிவிட்ட சீதாராமனிடம் எப்படித்தான் நளினியை ஒப்படைக்கத் துணிந்தாரோ நம் க.நா. சு.?

சீதாராமன் நல்லவனோ, கெட்டவனோ, நாம் அறியோம், பராபரமே! அது க. நா. சு. அவர்களின் பேனாவுக்குத்தான் வெளிச்சம். ஆனால், நளினி தன் வாயால், ‘அவர் வண்டியிலேருந்து வந்து இறங்கச்சே நான் பார்த்தேன்; நன்னாத்தான் இருந்தார்!’ என்று பரிந்து பேசுவதைப் பார்க்கையில், அவன் ஆணழகனாகத்தான் இருக்கவேண்டும். அவன்-அவர் சீதாராமன். ஆனால் இந்தச் சீதா ராமன் செய்த ‘படுத்தடிக் காரியம்’ என்ன முடிவு கண்டது? பட்டணத்து வங்கி ஒன்றிலே களவு போன இருபதினாயிர ரூபாயின் ‘தலைவிதி’ என்ன? மேற்படி பணத்தைக் கையாடினவர் குருஸ்வாமி என்ற ‘உண்மை’ நம்மை எட்டிப் பிடிக்கத் தவறவில்லை. ஆனால், சீதாராமனின் நேர்மையும் நாணயமும் கண்ட தீர்ப்பு என்ன ஆயிற்று? பிராயச் சித்தமே இல்லாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டவன் போல அவன் தலை இறங்கியதற்குக் காரணம் என்ன? ‘ஒரு கத்தை நோட்டுக்கள்’ அவனுக்குக் கிடைத்தனவே, எப்படி? மறுமொழிகளை நாம்தாம் ஊகம் செய்து கொள்ளவேண்டுமாம்! ...

நளினியின் ‘குழந்தையுள்ளத்’தில் சீதாராமனைப் பற்றிய வரையில் இரண்டே இரண்டு காட்சிகள்தாம் நின்றன. ஒன்று, சீதாராமன் விஜயபுரம் வந்தபோது, அவனைப் போலீஸார் கைது செய்து அழைத்துப் போனது; இரண்டாவது, குருஸ்வாமியும் அவனும் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விவாதம் செய்தது.

சரி. இப்படிப்பட்ட இரண்டு காட்சிகளும் அவளுடைய மனத்தைச் சலனப்படுத்தியிருந்தால், அவனைப் பற்றி அவள் ஒரு புதுப் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கமாட்டாளா? காலங்கடந்து அவள் படித்துக் கொண்டதால்தானே, அவளது ‘இறுதிக் கடிதம்’ உருவானது? ‘குழந்தை உள்ளம்’ என்று ‘சப்பைக்கட்டு’க்கட்டி நளினியை நாட்டாற்றில் அகப்படச் செய்திருக்கும் இவர் ‘சீதாராமனைப் பற்றிய வரையில், நளினிக்கு ஒரு மனோ திடமும், சிந்திப்பதற்கான ஒரு முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே!’ என்று வேறு ‘வக்காலத்து’வாங்கிக் கொண்டு தத்தளிக்கிறார், பாவம்! தன் வாழ்க்கைப் பிரச்சினையின் புயல் பகுதியைப் போக்கிக்கொள்ள நளினிக்கு வாய்ப்பே கிடைக்கவில்லையாம்! விந்தையாக இல்லையா?

இவர் சொல்ல நினைந்த இதே கதைக் கருவை அடி நாதமாக்கி, அற்புதம் பொருந்திய, உண்மையான, சிறப்புமிக்க நவீனத்தை என்னால் படைக்கமுடியும். ‘நளினி’ தோல்வியினை அங்கீகரித்து, இந்தப் ‘போட்டியை’ திரு க. கா. சு. ஏற்பாரேயானால், தமிழ் இலக்கியம் பிழைத்து விடும் என்று நாம் எண்ண வாய்ப்பு இருக்கிறது.


காந்திஜியும் க. நா. சு. வும்

தமிழ்ப் புதினத்தின் வளர்ச்சியில் ‘தேக்கம்’ கண்டிருப்பதாக ஏக்கம் கொண்டு ஏசி, அதற்கென ஒரு பத்து ஆண்டுகளையும் காணிக்கை வைத்துப் பேசியவர் க.நா.சு. என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அவர் மட்டும் மறந்திருக்கத்தான் வேண்டும். அந்த ‘மறதி’க்கு வாழ்த்துக் கூறவேண்டும். காரணம் இல்லாமல் இல்லை. நவீனத்தின் ‘இருட்டுக்காலத்’தைப் பற்றிப் பேசவந்த இவர், தாம் படைத்த நளினியையும் மனத்தில் ஏந்தி வைத்துத்தான் அவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில், தம் ‘முடிவுக் கருத்துரை’களை வைத்திருக்கவேண்டும். சாதாரணமாக நடைமுறையில் சொல்வது உண்டு. தன் பலம், தனக்குத் தெரியாதாம். ஆனால் இவருக்கோ, இவர் பலம் அப்பட்டமாகத் தெரியும் என்பது இவருடைய தனித்த கருத்து. அதனால்தான், இலக்கியப்பட்டம் விசி விளையாடிவருகிறார், பட்டம் அடிக்கொரு முறை அறுந்து விடுகிறது; அல்ல, அறுத்துக் கொள்கிறது. ஏன் தெரியுமா? அவருடைய ‘கை’யில் பலமில்லை. அப்படிப்பட்ட கையில் பேனாவைப் பிடிக்கலாமோ? தம் தோல்வியை தமிழ்ப் புதின உலகின் தோல்வியாக ஆக்கிவிடுகிறார்; ஆனால் ஓர் இரகசியம்: க. கா. சு. ஒருநாளும் காந்திஜியாக முடியாது!

பாத்திர அமைப்பைப் பற்றிப் பிறருடைய நவீனங்களில் குறைகாணும் திரு க.நா.சு. தம் பெயரை அறவே மறந்து விடுகிறார். தம் சொந்தக் கருத்துக்களுக்குப் பிறர் நூல்களை மேடையாக்கி ‘அதிகப் பிரசங்கம்’ செய்கிறவர் இவர். தமிழ் நூல்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து தெளிந்து,இப்போது தமிழ்வளர்க்கும் தகைமையாளர்களாக நம்மிடையே திகழ்ந்து வருபவர்கள் சிலரை வம்புக்கு இழுத்திருக்கிறார்: தமிழ்ஞானம் எழுத்தாளனுக்கு அறிவைக் கொடுக்காது என்பது இவர் வாதம். இது 'முடக்கு வாதம்!' ‘நளினி’யைப படித்து மூடிக்க ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வோர் அரையணா எனக்குச்செலவு ஆயிற்று. திரு க. நா. சு-வின் தமிழ் நடையைப் படிக்கிறீர்களா?

‘...லீவு கிடைத்த சந்தர்ப்பத்திலே, தன் சகோதரியைப் பார்த்து எவ்வளவோ நாள் ஆகிறதே, பார்த்துவிட்டு, அவளுடன் இரண்டொரு நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று எண்ணி வந்திருந்தான் சீதாராமன்,’

உன்னிப்பாகப் படியுங்கள். ‘விரசம்’ தட்ட வில்லையா?

இன்னும் பாருங்கள்:

‘...ஆனால் அதெல்லாம் ஏதோ காவியம் படிப்பது போல அவர்கள் உள்ளத்தைத் தொடாமல் போய் விட்டது!’

அமரர் புதுமைப்பித்தனின் ஒப்புவமை எந்த மூலை, போங்கள்! 

‘எண்ணை மில் ஒன்று!’

இலக்கியத்தில் அஷ்டாவதனம் செய்து, தெய்வப் புலவரின் தலையிலேயே கையை வைத்த அன்பரின் ‘எண்ணைமில்’ அழகாக இல்லையா? அச்சுப் பேயைக் கைகாட்டினல், அது தவறு!

‘கல்யாணத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் நடந்தது!’

இலக்கணம் வதைப்படவில்லையா?

‘அபிவாதையே சொல்லாத குறையாக சாஸ்திரிகள் சொன்னார்.

என்ன அர்த்தமாம்?

‘கிரோஸின் சிம்னியுடன்’ சமையல் அறை வாசற்படி யண்டை நின்றாள்!’

நல்ல தமிழிலே எழுதக்கூடாதோ?

இம்மாதிரி இன்னும் எவ்வளவோ வரிகள் புரியாதனவாகவும், ஆழ்ந்து படிக்கும்போது, சிரிப்புத் தருவனவாகவும் இருக்கின்றன. ‘தமிழறிவு’ வளம்பெற்றிருந்தால், இப்படிப்பட்ட பிழைகள் ஏற்பட்டிருக்குமா?

மொழி நடையின் தூய்மைக்கென அமைந்திருக்கும் வேலிகளான இலக்கணம், மரபு ஆகியவற்றின் தேவைகளின் இன்றியமையாத் தன்மை குறித்து திரு நா. பார்த்த சாரதி ஒருமுறை எழுதியிருந்தார்: ‘ஓட்டைக் கிண்ணத்தில் எண்ணெய் தங்குமா? ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழி நடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?’

பொய்மை கொண்ட கலி!

‘என் அகக் கண்ணில் நளினி புதுமைப் பெண் அல்ல; என்றும் இருந்து வந்திருக்கின்ற இந்தியப் பெண் மணிதான்’ என்று சொல்லுகிறார் நாவலாசிரியர். புதுமைப் பெண் என்றாலே அவளும் இந்தியப் பெண்மணிதான்; ஆனால் இவரோ புதுமைப் பெண்ணை ஏனோ துண்டுபடுத்திக் காட்டுகிறார். ‘பொய்மை கொண்ட கலிக்கு’ ஒரு விடிபொழுதெனச், சொற்களும் செய்கைகளும் ஏந்தி நிற்பவள் புதுமைப்பெண் தான்!


இப்ஸன் வழி

தேம்ஸ், மிஸிஸிப்பி, நைல் போன்ற மேலைநாட்டு ஆறுகள் பாவம் செய்தவை; அதனால்தான், திரு க.நா.சு. அவர்கள் அங்கே பிறப்பெடுக்கவில்லை. தமிழ் நாட்டில் - அவதரித்தார். விட்டகுறை தொட்டகுறையின் விளைவாக ‘மேலைநாட்டு இலக்கியத்தில்’ கரை காணத்துடிக்கிறார். மதிப்புப் பெறவேண்டும். ஆனால், இப்ஸன் (Henry Ibsen) தம் நாடகம் ஒன்றில் கதவடைப்பைச் சித்திரிக்கின்றார். அதில் உயிர் இருக்கிறது. இங்கே இவர் காட்டும் ‘அடைத்த கதவு’க்குப் பின்னேதான் கதையின் முடிவே ஒளிந்து கொண்டிருக்கிறதாம், சொல்லுகிறார்! இவர் எழுதிய ‘வரவேற்பு’ என்னும் சிறு கதையிலும் கதவடைப்பு நிகழ்ச்சி வருகிறது. அது அற்புதம்!

இன்னொன்று கதவை ஓங்கிச் சாத்திவிடும் உரிமை பெண்ணுக்குக் கிடைத்திருப்பதைப் பெருமையாகப் பேசுகின்ற க. நா. சு. அவர்கள், அந்தப் பெருமையை உரிய வழியில், உரிய முறைப்படி, உரிமையாக்கத் தவறிவிட்டார்; அவருக்கு இப்பணி பிடிபடவில்லை!

தாக்கரேயை (Thackeray) கதை உறுப்பினர்கள் ஆண்டனராம். ஆனால் நம் க. நா. சு. வோ நளினியை ஆள்கிறார், ஸ்காட் (Scott) கொண்டிருந்த கொள்கைக்கு எதிரானவர் இவர். கதையில் வருகின்ற ஏழெட்டு நிகழ்ச்சிகள் காரண காரியமின்றி நுழைக்கப்பட்டிருக்கின்றன.

‘இலக்கிய விமரிசகர் என்றால், தாமே இலக்கியம் படைத்துத் தோல்வியுற்றவர் அல்லர்!’-மேலைநாட்டுச் சிந்தனே இது. இக்குறிப்பு நினைவுக்கு வரும் நேரத்தில், எனக்கு ஓர் எண்ணம் எழுவது உண்டு. க. நா. சு. இப்போது இலக்கிய விமரிசகராக ‘அவதாரம்’ எடுத்திருப்பதும் நல்லதுதான். ஏனென்றால், இவருடைய இலக்கிய வெற்றி தோல்வியைப் பற்றிய முடிவைக்கூற வாய்ப்பு உண்டாகும் வேளையில், என் போன்றவர்களை நளினி காப்பாற்றுவாள்!’

உதிரிக் கதைக் கூடாகத் (Loose Pol) தோற்றம் தருகின்ற ‘நளினி’ திரு கா. நா. சு.வுக்கு மட்டுமல்ல, தமிழ்ப் புதின இலக்கியத்துக்கே ‘ஒரு கெட்ட சோதனை.’ கடைசியில் காணப்பெறும் நளினியின் நாலுவரிக் கடிதத்தைத் தவிர, சுவைப்பதற்கோ, சிந்திப்பதற்கோ ‘தொண்ணூற்றிரண்டு பக்க நாவலில்’ வேறு எதுவுமே இல்லை.

‘தம் சொந்தக் கஜக்கோலைக்’ கொண்டு ‘இலக்கிய நியதி’யைப் பற்றி உரையாடி ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ என்ற ஒரு விமரிசனக் கட்டுரைத் தொடரை க.நா.சு. எழுதினார். தி. ம.பொன்னுச்சாமி பிள்ளையின் நிகழ்ச்சிக் கோவை; பி. ஆர். ராஜா ராமய்யரின் ‘குணச் சித்திர விளக்கம்; வேதநாயகம் பிள்ளையின் ‘வேகம் கெடாத நடை’; அ. மாதவய்யாவின் ‘மகிழ்வூட்டும் கதை’; பண்டித நடேச சாஸ்திரியின் ‘எழுத்துக் கவர்ச்சி, நிதானம்’ ஆகிய இலக்கியப் பண்புகளைப் போற்றும் இவர், தம் எழுத்துக்களில் மேற்கண்டவற்றை அரை குறையாகப் பற்றக்கூட முயலவில்லை!


ஒரு நாள் க. கா. சு!

‘நளினி’ என் அனுதாபத்திற்கு இலக்காகும் ஓர் அபலைப் பெண். அவளுடைய பேதை மனத்தின் நுணுக்கமான மனத்தவத்தை-அந்த உயிர்த் தத்துவத்துக்கு அடித்தளமாய் அமைந்திருந்த அவளுடைய களங்கமில்லாப் பாவனைகளை நுழைபுல நுண்மாண் அறிவுடன், மரபறிந்து, மாயை புரிந்து, மணம் எடுத்துச் சொல்வதற்கு ‘தகுந்த உள்ளம்’ அவளுக்குக் கிடைக்கவில்லை!

பட்டம்:

‘ஒரு நாள்’ என்னும் அற்புதமான நவீனத்தை எழுதிய ‘அந்த ஒரு நாள் க. நா. சு.‘ அவர்களை இனி தமிழ் எழுத்துலகம் தரிசிக்க வாய்ப்பில்லையோ, என்னவோ?

பெருங்காயம் வைத்த வெறும் பாண்டம்= க.நா. சுப்ரமணியம்...! உள்ளே பண்டமில்லை ‘கமகம’ என்ற மணம் ஏமாற்றத்தைத் தருகிறது.