குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/பொகந்தலாவையில்

பொகந்தலாவையில்


தலைமுறை தலைமுறைகளாக நாடுவிட்டு நாடுவந்து உழைக்கிறீர்கள். ஆனால் உழைப்பின் பயனை அனுபவிப்பதாகக் காணோம். உடலை வருத்தி வெய்யிலும், மழையும் துன்புறுத்த மலைக்கு மலை தாவித் தேயிலை எடுக்கிறீர்கள். காலை முதல் மாலை வரை அவதியுறுகிறீர்கள். துன்பம் காலப்போக்கில் களிப்பையும் சுகத்தையும் கொடுக்கும் என்பர். ஆனால் உங்களைப் பொறுத்தவரை மருந்துக்குக் கூட மகிழ்ச்சியைக் காணோம்.

நூற்றியிருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கைவாழ் மக்களின் பொருளாதார வளத்துக்கும், வனப்புக்கும் உங்களது உழைப்புப் பயன்பட்டதையும்-இப்போது பயன் விளைவிப்பதையும் நினைக்க நினைக்க நெஞ்சம் பூரிப்படைகிறது. உங்களை நீங்கள் உயர்த்தாத நிலைபற்றி இங்கு கவலையோடு திரு. வெள்ளையன் கசிந்துரைத்த வார்த்தைகள் எம்மைத் துணுக்குறச் செய்தன. உழைப்பிருக்கும் இடத்திலிருந்து இகழ்ந்தொதுக்குதலும் பிறர்க்குதவா மனப்பான்மையும் அகலவேண்டும். வீணான முயற்சிகளும் வீண் செலவுகளும் வாழ்க்கையில் விரக்தியைத் தரக்கூடியன. பீடிகள் சாராயம் போன்றவற்றில் உள்ள அதிக ஈடுபாடு உங்கள் வாழ்க்கையை நாசம் செய்வதாகவும் அறிந்தேன். மனத்திற்கு அமைதிதேடி மதுப்பழக்கத்தை மேற்கொள்கிறீர்கள் போலும். குடி குடலைக் கெடுத்துக் குணத்தை அழிக்கும். நரம்பைத் தளர்த்தி உடம்பை வாட்டும். மரணப்பாதையில் மயானத்திற்கு அனுப்பிவிடும். இவ்வெளிப்படை உண்மை விளங்கியும் கூட நீங்கள் அவ்வழிச் செல்வது அல்லலைத் தருகின்றது.

கடவுளின் பெயராலும் உங்கள் கட்குடிப் பழக்கம் வழக்கிலிருப்பதாகக் கேள்வியுற்று வருந்துகிறேன். நல்லன. வற்றை நாடி வாழத்தான் நமக்குக் கடவுள் வழிபாடு இருக்கிறதே தவிர, தீயவற்றைத் தேடித்திரிந்து பெறுவதற்காக அல்ல. வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமைக்குச் சிந்தனையற்ற போக்குத்தான் காரணம். வாழ்வில் சிந்தனையில்லாது போனால் வரும்பொருள் சேராது-வளமும் பெருமையும் கிட்டா. நாளும் உழைத்ததைச் சேமித்து நல் வாழ்வுவாழ ஆசைப்படவேண்டும். பாடுபட்டு உழைத்து அதற்குரிய பயனை அனுபவியாமற் போனால், அது மனிதத் தன்மையாகுமா? உங்களது வாழ்க்கைக்கு-நல்வாழ்வுக்கு வழி சொல்லக்கூடிய பெரியாரை உங்களிடத்திலே தேடிப்பிடித்து -அவர் சொல்லும் அனுபவ உண்மைகளுக்குச் செவிசாய்த்து நீங்கள் வாழவேண்டும். வாழ்க்கைத் துணையில்லாது. போனால் வாழும் இல்லறம் சிறக்காது என்பார்கள். இல்லாள் இல்லாத இல்லம் இடுகாட்டுக்கு ஒப்பாகும் என்பது நம்மவர் வழக்கு. இதுபோல் நல்ல அறிவுக்கு-நற்சிந்தனைக்கு நாம் பெரியாரைத் துணைக்கொள்ளவேண்டும். ‘பெரியாரைத் துணைககோடல்’ என வள்ளுவரே ஓர் அதிகாரம் வகுத்திருக்கிறார். நல்லவர்களாகிய பெரியவர்களின் துணை நாம் சிந்தித்து வாழவும், சிரித்து மகிழவும் அடிகோலும்! அவர்களின் துணையற்ற நிலை தீமையை உண்டாக்கும்; “பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என்கிறது தமிழ் மறை. உங்களுக்கு முன்னேற ஆசை இருக்கிறது. ஒரு முறையான - நெறியான ஒழுங்கில்லை. உங்களிடையே நீங்கள் நல்லவர்களெனக்கருதிப் பின்பற்றும் பெரியார்கள் நன் முறையைக்காட்டினால் அவ்வழிச் சென்று அவனியில் உயர முயலவேண்டும். பெரியவர்கள், வழியை - முறையைக் காட்ட முடியுமேதவிர வேறெதுவும் செய்யமுடியாது. குதிரையை நீர்குடிப்பதற்காகக் குளத்துக்குக் கொண்டு செல்லலாம்; நீர் குடிக்கவேண்டியது குதிரையேதான். கொண்டு செல்பவரல்ல.

தொழிலாளர் என்ற முறையிலே ஒற்றுமையாக-ஒரு குலமாக இருத்தல் வேண்டும். தொழில் இனங்களிடையே பிரிவும்-பிளவும் இருந்தால் காலப்போக்கில் கசப்பு முற்றிக் கைகலப்பிலும்- பெருங்கலவரத்திலும் முடியும். உழைப்பவர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்தால் இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படும்பொழுது ஓடிச் சென்று உதவமுடியும் - உதவிகளைப் பெறமுடியும். தொழிலாளர்களது கட்டுக் கோப்பிலே-திட்டமானதொரு முயற்சியால் பெட்டி பெட்டியாகப் பணம் சேர்க்கலாம். பலருக்கு உதவலாம். கட்டுக் கோப்பு இல்லையேல் நல்ல திட்டமும் இருக்காது. பெட்டியில் பணமும் நிரம்பாது, அவற்றுக்குப் பதிலாக வீட்டில் கடன் இருக்கும்-கவலையிருக்கும் - அழகாக அலங்காரமாக உடையணிந்து உலாவமுடியாது. போனால் மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து என்ன பயன்! நல்ல குறிக்கோளோடு ஒன்றி வாழவேண்டும். “ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு” என்றும் “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்றும் எண்ணி அதற்கேற்ற முறையில் வாழ்வை அமைக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பிளவுபட்டுப் பலப்பல சங்கடங்களை உண்டாக்குவது பயன்தராது. பிரிவும்-பிளவும் நன்மையைத் தருவதில்லை. இதனாலேதான் வள்ளுவர் பல்குழு கூடாதென்கிறார். தொழிலாளியின் நலனைப் பேணக்கூடிய- மனக்கவலை பொருளற்ற துன்பம் போன்றவைகளை அகற்றக்கூடிய ஒரு மாபெரும் சங்கத்தை உண்டாக்க வேண்டும். உலகியலிலே-அதுவும் இன்றைய நிலையில் பொருள்தான் மிகமுக்கியமானது. வேராடினால் மரம் வளராது; பூத்துக் காய்த்துக் கனி தராது. அதுபோலவே பல நன்மைகளுக்கும் பொருட்சேமிப்பு அவசியம் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை யென்பதைப் போலவே பொருளற்ற சங்கத்துக்கும் வாழ்வில்லை; வளர்ச்சியில்லை. பொருளாதார வளம் உண்டாகிவிட்டால் வறுமையில் செம்மையோடு வாழ்க்கையில் நேர்மையாக வாழ வழி பிறக்கும். ஆன்மீகச் செழுமையும் அரும்பி வளரும். ஆகவே கட்டுக்கோப்பான ஒற்றுமையும், உழைப்பும், சேமிப்பும், நேர்மையும், செம்மையும் உங்களிடத்தே உருவாக வேண்டும். அத்தகைய நிலைக்கு ஆண்டவனது துணையும் அவசியமானது.

உங்களின் கட்டுக்கோப்பில் சாதியோ, மொழியோ, மதமோ குறுக்கிடக்கூடாது. அவை தலைகாட்டினால் கட்டுக் கோப்புக் குட்டிச் சுவராகிவிடும். நாமெல்லாரும் மனிதர்கள்; ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள்; நமக்கெல்லாம் தாயும் தந்தையுமான அம்மையப்பன் தலைவனாக இருந்து அருள் சுரக்கிறான். அவனது அருள் மழை நம் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கவே நம்மை ஆண்டவன் மனிதராகப் படைத்திருக்கிறான். பிறவிகளில் மனிதப் பிறவி உயர்ந்தது. “அரிது அரிது மானிடராதல் அரிது” என்று அவ்வைப் பிராட்டியும், “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று அப்பரடிகளும் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை எண்ணி ஒற்றுமையைப் பேணவேண்டும். ஒற்றுமை உணர்வை உண்டாக்கக் கல்வியறிவு அவசியமானது. கல்வியில்லாத வாழ்வு காட்டு வாழ்வாகும். மற்றெல்லாச் செல்வங்களையும் விட, கல்விச்செல்வமே உயர்ந்ததென உயர்த்திப் பேசப்படுகிறது. “கேடில் விழுச் செல்வம் கல்வி” என்கிறார் வள்ளுவர். கல்வி இல்லையேல் சிந்திக்க இயலாது. சிறக்க இயலாது. கல்வி கற்கப் போதிய வசதி உங்களிடத்தில் இல்லாதது குறைதான். அக்குறையை நீக்கத் தோட்ட முதலாளிகள் முனையவேண்டும். அவர்கள் தொழிலாளிகளின் குழந்தைச் செல்வங்களைக் கல்விச் செல்வங்களாக்கினால் பொருட் செல்வத்தோடு புகழ்ச் செல்வமும் வந்தடையும்.

தொழிலாளர்களும் தமது குழந்தைகளைப் படிப்பிக்க ஆசைப்படவேண்டும். பட்டங்கள் பலபெற்றுப் பாரில் சிறக்க முடியாவிட்டாலும் பண்பாக வாழப் பழக - வாழ வைக்கப் பழகக் கல்வி மிக அவசியம் தேவையானதென்பதை ஒவ்வொரு பெற்றோரும், உணரவேண்டும். படித்தும் முட்டாள்களாகத் திரியும் இந்தக் காலத்தில் படிக்காதும் போனால் என்ன ஆகும்.

படிப்பு பக்குவத்தைத் தருவதோடு பல்லுயிர்களோடு அன்பாக வாழவும் தூண்டுகிறது. நகரமும் நாடும் படிப்பு விஷயத்தில் போட்டி போடுகின்றன; நகரத்தைத் தோற்கடிக்கக் கிராமமும் கிராமத்தைத் தோற்கடிக்க நகரமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் கெட்ட சிந்தனைகளைத் தோற்கடித்து நல்ல சிந்தனைகளை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி இன்றியமையாதது. சாப்பிடாமல் உயிர்வாழ முடியாததென்பதைப்போல் படிப்பில்லாமல் உயரமுடியாது. வேட்டி கட்டிக்கொள்வது தனிமனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல; சமுதாய ஒழுக்கத்துக்கும் பயன்படுகிறது. அதுபோலவே கல்வி தனிமனிதனின் நலத்துக்கு மட்டுமல்ல - சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகின்றது. வாழ்க்கையில் துணிவை - தன்னம்பிக்கையைப் பெற உங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்குமாறு வேண்டுகின்றேன்.

இனி, கடவுளைப் பற்றிய எண்ணம் தொழிலாளர்களுக்கு எங்கும் எப்பொழுதும் வேண்டும். வேலைக்குச் செல்வதால் கடவுளை வணங்க நேரமற்ற நிலை உங்களுக்கு உண்டென்பதை நான் உணராமலில்லை. தேயிலைக் கொழுந்தைக் கொய்யும் பொழுதும், கூடையில் போடும் பொழுதும் கடவுளை நினைக்கலாம்-வணங்கலாம். கூடையில் கொழுந்தைப் போடும் பொழுது. முருகா! முருகா! என்று சொல்லிப் போட்டால் அது முருகனுக்கு லட்சார்ச்சனையாகிவிடும். மலையின் உச்சியிலே கொழுந்து கொய்யும் உங்களுக்கு ஏறுமயிலேறி மலைதோறும் மகிழ்வுடன் உலாவரும் முருகக் கடவுளின் கருணைகிட்டும்.

ஆகவே! தொழிலாளர்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக - ஒரு குலமாக வாழ்ந்து, கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் பெற்று, சிறப்புடன் திகழ்ந்து கவலையற்ற, நேர்மையும் செம்மையும் நிரம்பிய நிலையுடன், குடி கெடுக்கும் செயல்களைத் தள்ளி - திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து, யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ வாழ்த்தி விடைபெறுகிறோம்.