குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வள்ளுவர் வாக்கு

4. வள்ளுவர் வாக்கு
(1)

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.”

என்பது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் மொழிந்த திருக்குறள், இன்றைய நிலையில் பூத, பெளதிக உலகம் நெருங்கி வந்துள்ளது. "உலகம் ஒரு வீதி” என்று கூறும் அளவுக்கு நெருக்கமுற வந்தவிட்டது. மண்ணில் அமைந்துள்ள சாலைகளும். விண்வழிப் பயணங்களும், தொலை பேசிகளும் உலகம் நெருங்கி வரும்படி செய்துள்ள காலம். காலத்தையும் தூரத்தையும் வென்று விளங்குகின்றான் மனிதன்! இதுபோன்ற நிலை திருவள்ளுவர் காலத்தில் இல்லை! ஆனாலும், திருவள்ளுவர் ஓருலகமே கண்டார்! பிரிவினையற்ற உல்கமே திருக்குறளின் குறிக்கோள்!

எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? தான் சென்று வாழும் நாட்டையும் ஊரையும் தமது நாடாக - ஊராக ஆக்கிக் கொள்ளும் கல்வியைக் கற்றுக் கொள்ளாதவன் எப்படி வாழ்க்கையில் வெற்றி கொள்ளமுடியும்? இன்று, கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டும் நினைவுக்கு வருகிறது! ஏட்டுக்கல்வி மட்டும் கல்வியல்ல. பல்வேறு திறன்களையும் பண்பாட்டினையும் கற்றுக் கொள்வதும் கல்வியேயாம்!

ஒரு நாட்டில் சென்று வாழ்ந்தால், அந்நாட்டு மக்களுடன் கலந்து அந்நியமின்றி வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம். அங்ஙணம் வாழவில்லையெனில் சாதலை நிகர்த்த துன்பங்கள் விளையும்! சாகிற அளவு துன்பம் சூழினும் அவருடன் அந்நியமின்றி வாழக்கற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி வாழமுடியும்!

இன்றுள்ள சூழ்நிலையில் மனித குல நினைப்பே விழுமியது; இன்றியமையாதது. அதனை அடுத்துத்தான் நாட்டுவழிமக்கள்! மொழிவழி அமைந்த இனம்! சமயவழி அமைந்த சமுதாயம்! நாடு, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்து "மனிதகுல” உணர்வு வளரவேண்டும்! இன்று ஆங்கிலேயர் நன்றாக வாழ்கின்றனர்! அமெரிக்காவை நோக்குங்கள்! ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல இனத்தவர்களும் கூடி வாழ்கின்றனர்! கூட்டரசு கண்டுள்ளனர்! அதனால், இன்று ஆங்கிலேயர் உலகத்தை இயக்கும் இனமாகத் திகழ்கின்றனர்! சீனர்களும் அப்படியேதான்!

தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்தொடங்கியே குடியேறி வாழ்கின்றனர்! ஆனால், தாம் சென்று குடியேறிய நாட்டைத் தமது நாடாக ஆக்கிக் கொள்ளும் திறனைக் கற்றார்கள் இல்லை! அந்தந்த நாட்டு மக்களுடன் இனம் கண்டு கொள்ள இயலாத நிலையில் கலந்து வாழ்ந்தார்கள் இல்லை! ஆங்கிலேயர் உலக மொழிகளுக்குத் தொண்டு செய்ததைப் போலத் தமிழர்கள் பிறமொழிகளுக்குத் தொண்டு செய்வதில்லை! ஏன்? தமது சமய - கலைஞானத்தையும் கூட, மற்றவர்களுக்கு வழங்குவ்தில்லை! ஏன் இந்த நிலை?

குடியேறி வாழும் நாடு, எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? கவலற்க! அந்த நாட்டையே தாய்நாடாகக் கருதுக! அங்கேயே வாழ்க! அந்த நாட்டையே உழைத்து வளமுள்ள நாடாக ஆக்குக! அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்க அந்தந்த நாட்டுக் கலை ஞானங்களைக் கற்றுத் தெளிக! நம் மொழியை அந்த நாட்டு மக்களுக்குக் கற்றுத் தருக! நமது கலைஞானங்களை உலக வீதியில் வாழும் மக்களுக்குத் தருக! தமிழர் வாழ்க்கை, கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்க்கை; இந்தக் கலை ஞானத்தை ஏன் மரணத்தின் வாயிலில் நிற்கும் வரையிலும் கூடக் கற்றுக் கொள்ளாமல் காலம் கழிக்கிறீர்! பக்கத்தில் உள்ள மனிதருடன் கலந்து பழகாத வாழ்க்கை, மரணத் துன்பத்திலும் கொடிய வாழ்க்கையல்லவா? வேண்டாம், இந்த மரணவேதனை! எல்லா மொழிகளையும் கற்போம்! நமது மொழிகளை மற்றவர் கற்கும்படி செய்வோம்! நாடுகள் பலவாயினும் ஒர் உலகமே! எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கைமுறை.

உலக வாழ்க்கையில் இந்தத் திருக்குறள் நடைமுறைக்கு வந்துவிட்டால் உலகத்தில் போர் ஏது? மொழிச் சண்டைகள் ஏது? மதச்சண்டைகள் ஏது? இந்தத் திருக்குறளை வாழ்க்கையில் பதிக்கும் நாளிலேயே கெட்ட போரிடும் உலகம் மாயும்! ஓருலகம் தோன்றும்!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு."

(397)
வள்ளுவர் வாக்கு (2)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்

இந்தத் திருக்குறள் அருமையான செய்திகளை உடையது. தமிழர்க்கென்றே குறிப்பாய் செய்யப்பெற்ற திருக்குறளோ என்று தோன்றுகிறது. குடி என்பது ஒரே குருதிச் சார்புடைமையைக் குறிக்கும் சொல்லாகும். தமிழ் மரபில் குடி, குலம், இனம் - இவை உண்டு. பிறப்பின் வழி உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி முறைகள் இல்லை. குடி என்பது குருதி வழி மரபு. இது இன்றைய அறிவியல் உலகத்திலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற உண்மையேயாகும். ஒருவர் குறைந்த அளவு தாம் பிறந்த குடியையாவது சிறப்புற வாழச்செய்யவேண்டும் என்பது திருக்குறள் நெறி. அதனால் "குடி செயல் வகை" என்றே ஒர் அதிகாரம் அமைந்திருக்கிறது.

குடி செய்தல் என்பது, தாம் பிறந்த குடியில் உள்ள உற்றார் அனைவரையும் வளத்தோடும் மகிழ்வோடும் வாழச் செய்தலாகும். ஒவ்வொருவருக்கும் இது தவிர்க்க இயலாத கடமை. தாம் பிறந்த குடியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவோர், பருவகாலங்கள் நாள், கிழமைகள் பார்க்க வேண்டியதில்லை என்பது திருவள்ளுவர் கருத்து.

தமது குடிப்பிறந்தாரை நலமாக வாழ்விக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் பருவம், நான், கிழமை முதலியன பார்த்துக் காலத்தைக் கடத்தினால் பல்வேறு இழப்புகள் தோன்றும் என்ற கருத்தில் "பருவம் இல்லை" என்றே கூறுகிறது, வள்ளுவம். அடுத்து பருவத்தையும் நாளையும் கிழமையையும் எதிர்பார்த்து "இன்று” “நாளை” - என்று கடமைகளை ஒத்திப்போடுவது சோம்பலாகும்.

உலகில் உயிர்களுக்கு இயற்கை சுறுசுறுப்பாக இருத்தல்; சோம்பியிருப்பது செயற்கை, சோம்பியிருத்தல் கூடாது என்பதை வலியுறுத்த, "மடி செய்து" என்றார். அடுத்து "மானம் கருதக் கெடும்" என்பது மிக முக்கியமான பகுதி. மானம் என்பது பெருமை என்று பொருள்படும். மானிட சாதிக்கு மானம் பெரிது என்று "மானம்" என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரே வலியுறுத்தியுள்ளார். தமது உடம்பில் உள்ள ஒரு சிறு உரோமத்தை இழந்தாலும் வாழாத கவரிமானைப் போல மானமிழந்தபின் வாழக் கூடாது என்று "மானம்” என்ற அதிகாரத்தில் திருக்குறள் வலியுறுத்துகிறது.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட அதிகாரத்தில் மானம் கருதக் கூடாது என்று திருக்குறள் கூறுகிறது. இஃது என்ன, திருக்குறளில் முன்னுக்குப்பின் முரண் என்று எண்ணத் தோன்றுகிறதா? திருக்குறளில் ஒன்றும் முரண்பாடு இல்லை! இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

பொதுவாக எந்த ஒரு நற்பண்பும் காலப்போக்கில் பொய்ம்மையாகப் போய்ப் பிடிவாதத்திற்கு இரையாதல் உண்டு, இந்த நிலையில் மானம் என்பது பொய்ம்மையைத் தழுவிய மானமாகி விடுகிறது! இயல்பாக உள்ள பெருமையில்லாமல் மற்றவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என்ற உணர்வில் ஒரு பொய்ம்மையான மான உணர்வு உறவுகளையும் பகையாக மாற்றிச் சீரழிவு செய்துவிடும்.

பெரும்பாலும் இத்தகு பொய்ம்மை மானத்தால் அழிந்த குடும்பங்கள் பல! பிரிந்த நண்பர்கள் எண்ணிலர்! நலிந்த காதலர்கள் பலர்! உடைந்த இயக்கங்கள் பலப்பல! இத்தகு பொய்ம்மை மானம்போற்றி ஒழுகின் தாம் பிறந்த குடியை வளர்க்கமுடியாது என்று திருக்குறள் ஐயத்திர்கிடமின்றிக் கூறுகிறது!

இத்திருக்குறளுக்கு அரிய இலக்கியமாக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார்! தம்மை இழித்தும் பழித்தும் பேசிப்புறக்கணித்து ஒதுக்கிய தலைவர்களிடத்திலும் குடிமைப் பண்பின் காரணமாக அயராது தனது அன்பையும், மதிப்பையும், காட்டி வாழ்ந்து, தாம் பிறந்த தமிழ்க் குடிக்கு வெற்றியைத் தேடித் தந்த அறிஞர் அண்ணாவை யார்தான் மறக்க இயலும்?

நாமும் அவ்வழியில் தமிழ்க் குடியினை வளர்க்கும் பணியில் பருவம் பார்க்காது, சோம்பலின்றி, மானம் கருதாது உழைப்போமாக!

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

வள்ளுவர் வாக்கு (3)

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

இந்தத் திருக்குறளின் பொருளை நோக்க இது விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஈகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஒப்புரவறிதல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? அல்லது குடிசெயல்வகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? - என்றெல்லாம் சிந்தனை ஒடும்! ஆனால் இந்த அதிகாரங்களில் இந்தத் திருக்குறள் இல்லை! பின் எந்த அதிகாரத்தில் இருக்கிறது? "கொல்லாமை" அதிகாரத்தில் இந்தத் திருக்குறள் இருக்கிறது? ஏன்? என்ன இயைபு?

ஒருவனை, கருவிகள் கொண்டு கொலை செய்தல் மட்டும் கொலை என்ற கருத்து இன்று நிலவுகிறது! சமய நூல்கள், சட்டங்கள் இப்படித்தான் கூறுகின்றன! ஆனால், திருவள்ளுவர் இதில் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுகிறார்! தருகிறார்! வாழப்பிறந்த உயிர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய பொறுப்பு, சமுதாயத்திற்கு இருக்கிறது. அரசுக்கு இருக்கிறது! ஏன்? ஒவ்வொரு மனிதனுக்குமே இருக்கிறது! இங்ஙனம் கடமை உணர்ந்து செய்தலே அறம்! உலக மொழிகளின் மறைநூல்கள், மற்ற இலக்கியங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அறங்களில் எல்லாம் சிறந்தது. பகுத்துண்டு வாழ்தல் என்ற அறம். இது நூலோர் தொகுத்துக் கூறும் அறங்கள் பலவற்றிலும் சிறந்த அறம். தலையாய அறம்!

‘பகுத்துண்டல்’ என்றால் வெந்த சோற்றைப் பங்கிட்டு உண்ணுதல் என்ற அளவில் மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. இங்ஙனம், கொள்வதற்கு, "பல்லுயிர் ஒம்புதல்” என்ற பின் வரும் சொற்களும் அச்சொற்களின் கருத்தும் தடையாக உள்ளன. "ஓம்புதல்” என்ற சொல், அகன்ற - உயர்ந்த பொருள் நோக்குடையது. ஓம்புதல் என்ற சொல் பாதுகாத்தல், வளர்த்தல், வாழ்வித்தல் என்ற பொருள்களையும் தருகின்றது. அதாவது; உணவு, மருந்து முதலியவற்றால் பாதுகாத்தல், கல்வி - கலைஞானங்களால் வளர்த்தல், தக்காங்கு தாமே வாழும் தகுதியைப் பெறச் செய்து வாழ்வித்தல் என்றெல்லாம் பொருள் தரும். இத்தகைய கடமைகளைச் சோறு வழங்குவதால் மட்டும் இயற்ற இயலாது உயிர் வாழ்வதற்குரிய நுகர்பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக் களங்களைத் தனி உடைமையிலிருந்து பொதுவுடைமையாகப் பகுத்துக் கொண்டும் உறவும் உணர்வும் கலக்கக் கூடி உண்டும், வாழ்தல் வேண்டும். இத்தகு வாழ்க்கை அறவாழ்க்கை.

அறம் என்றால் கடவுளை நோக்கிச் செய்ய வேண்டும் என்பதல்ல. மனிதனை நோக்கி மனிதனுக்காகச் செய்தாலும் அறமேயாம்! இல்லை, அதுவே அறம்! இந்தத் திருக்குறள் இன்னும் வாழ்வாக மலரவில்லை! மீண்டும் மீண்டும் நமது நாட்டு மக்கள் மனித குலத்தை ஒருமைப்படுத்தி உண்பித்து வாழ்விப்பதை அறமாக ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை! ஆரவாரமான கடவுட் பூசைகள், வேள்விகள், சடங்குகளிலேயே ஈடுபடுகின்றனர். ஏன்? நமது நாட்டின் அறிஞர்களில் பலரும் கூட இத்தீமைக்கே ஆளாகி உள்ளனர். இது நன்றன்று; தீதேயாம்.

செல்வம் பொதுமையானது. பலரும்கூடி உண்டு வாழவேண்டும். எல்லா உயிர்களும் உண்டு, உடுத்து வாழ்வதற்குரிய செல்வத்தினை உழைப்பால் பெறவேண்டும். உழைப்பதற்குரிய வாய்ப்பும், உழைப்பால் உற்பத்தியாகும் செல்வம் மற்றவர்களால் கவரப் பெறாத சமுதாயப் பாதுகாப்பும் வேண்டும். சோற்றால் மட்டுமே உயிர்வாழ்வு அமைந்துவிடுவதல்ல. களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; கல்வியும் கலைஞானமும் தேவை; மெய்யுணர்வும் தேவை இவற்றைச் சமுதாயமும் அரசும் உயிர்க்குலத்திற்கு வழங்கவேண்டும். அப்போதுதான் சமுதாயம் வளரும்; வாழும்; இன்பஉலகு அமையும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

(322)

என்ற குறள்நெறி வையகத்தின் வாழ்வு நெறியாக மலர உரிய கடமைகளைச் செய்வோம்! செல்வக் குவியலைத் தவிர்ப்போம்! உடைமையாளராக வாழ்வதைவிட, பலருக்கும் உறவினராக வாழ்வதையே விரும்புவோம்! செல்வத்தைப் பொதுமை செய்வோம்! பலரோடும் கூடிப் பகுத்துக்கொண்டு, உண்பித்தும் உண்டும் மகிழ்வோம்! மகிழ்வுறுத்துவோம்! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கை; அன்பு வாழ்க்கை! அறவாழ்க்கை.