குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/கடவுளியல் விளக்கும் காட்சி!

2
கடவுளியல் விளக்கும் காட்சி!

இறை, எல்லா உயிர்களையும் விட மிக்குயர்ந்து மேம்பட்டது. ஆற்றலாலல்ல; ஆட்பாலவர்க் கருளும் திறத்தால் மேம்பட்டது. கடவுளைக் காணாமல் போகலாம். கடவுளைப் பற்றி விவாதங்கள் நிகழலாம். ஆனால், கடவுளியலைப்பற்றி விவாதங்கள் நிகழ முடியாது. இன்று எங்கும் கடவுளியலைப் பற்றிப் பேச்சில்லை; கடவுளைப் பற்றிய பேச்சே அடிபடுகிறது. கடவுளியலைப் போற்றிப் புகழ்ந்து பேணுவாரைக் காணோம். கடவுளைப் பூசிப்பார் பலருண்டு. தமது இயலை விரும்பாமல் தம்மை விரும்புவாரைக் கடவுளும் நாடார். கடவுளியல் தண்ணளியுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; விழுமிய ஒருமைப்பாடுடையது; நன்றென்றே வாழ்த்தப் பெறுவது.

எம்பெருமான் “நீலகண்டம்” என்றும் அழைக்கப்படுகின்றார். அந் நீலகண்டத்தை வண்ணத்திற் காட்ட முடியாது போனாலும், வடிவத்தில் காட்டும் தோற்றமே ஒவ்வொரு மனிதரின் கண்டத்திலும் உருளும் உருளை என்று கூறுவர். எம்பெருமான் கண்டம் உயிர்களைக் காத்தது; இன்பத்தை வழங்கியது. ஆனால், அதன் நினைவாக விளங்கும் கண்டத்தின் உருளைகள் வாழ்விக்கப் பயன் படுவதில்லை; வண்ணமில்லையல்லவா? வண்ணமில்லாத வடிவமும் வடிவமோ? பயன் தருமோ? பயணமே பயன்படுதல் நோக்கமுடையது. கருங்கடலினின்று தண்ணீர் ஆவியாக மாறிப் பயணம் செய்கிறது. பயணத்தால் அந்நீரும் தூய்மை பெறுகிறது. நிலவுலகத்தையும் தூய்மை செய்கிறது. வானின்று மண்ணுக்குப் பயணம் செய்கிறான் இறைவன். ஏன்? மனிதர்களை ஆட்கொண்டு அருளுதற் காகவே! மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ன ஆகிறது? அவன் பயணத்தின் பயன் கருதுவதில்லை; பயன் தரத்தக்க பணிகளை மேற்கொள்ளுவதில்லை. அவனுடைய வாழ்க்கைப் பயணம் ஆகிவிடுகிறது. மனித வாழ்க்கையின் பயன் கடவுள் நலம் அறிய பயணம் பெறுதலேயாகும். இந்த ஒப்பற்ற கடவுள் நலம் - இன்ப அன்பு நலம் எளிதில் கிடைக்குமா? பூசனையால் மட்டும் பெற முடியுமா? தன்னல மறுப்பால் பெறலாம்; பிறர் நலம் பேணும் பெருந்தவத்தால் பெறலாம். இதுவே கடவுளியலின் உயிர் நாடி. இந்தச் சமய உயிரியலின் தன்மை இன்றைய சமய வாழ்க்கையில் இல்லை. அதனாலேயே சமய நெறிகளைப் பற்றிச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பதவிக்குப் பலர் போட்டி போடுவர்; ஆனால், பதவிக்குரிய தகுதி பேணார்; தக்க பணிகளைச் செய்யார். இது மனித உலகத்தின் இயல்பு மட்டுமல்ல; அமரர் உலகமும் அப்படியே! தக்கன் வேள்வியில் அமரர்கள் தலைமை வேண்டிப் பெற்றனர். ஆனால், அலை கடலில் ஆலகால் நஞ்சு எழுந்தபொழுது அலறி ஓடினர். எந்தை ஈசன் உண்ணற்கரிய அந்த நஞ்சை உண்டான்; அமரர்களைக் காப்பாற்றினான். நஞ்சினைத் தொடர்ந்து அமுதம் வந்தது. அமரர்கள் நாவில் எச்சில் ஊறியது. நஞ்சைக் கண்டு நடுங்கி ஓடிய அமரர்கள் அமுதுண்ண நாவாசை காட்டினர். இறைவன், அமுதுண்ண விரும்பாது அமரர்களுக்கு அதனை வழங்கினான். அமரர்களைப் போகத்தில் ஆழ்த்தினான்; வாழ்வித்தான். இஃதொரு புராண வரலாறு. ஆனாலும் தத்துவச் செறிவுடையது. நஞ்சனைய துன்பத்தை ஏற்றுக்கொள்; தொழிற்படு; மற்றவர்களை வாழவைத்திடு; அதுவே வாழ்க்கையின் தவம் என்பது இந்த வரலாறு புகட்டும் வாழ்க்கைத் தத்துவம். இந்தத் தத்துவம் உண்மையிற் செயற்படும் பொழுதே கடவுளியல் காட்சியளிக்கும். அதனாலேயே பெருமான் விடைக் கொடி உயர்த்தியிருக்கிறான். கொடி என்பது கொள்கையின் சின்னம், இறைவன் விடைக்கொடி உயர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன? பொருள் என்ன? உயிர்வர்க்கத்திலேயே கடுமையாக உழைக்கும் இயல்பினது விடையாகிய எருது. உழைத்த பயனையெல்லாம் மனித உலகம் உண்டு மகிழ வழங்கி விடுகிறது அது. ஆனால், அந்த எருதோ வெறும் வைக்கோலைத் தின்று உயிர் வாழ்கிறது. அங்ஙனம், உயிர்வாழ்தலும் கூட மீண்டும் உழைத்து உலகத்தை வாழ்விக்கவேதான்! இதுவே இறையியற் கொள்கை; கடவுளியல்காட்டும் தவம். இத்தகு வாழ்க்கை முறையை மேற்கொண்ட அனைவரும் சமயநெறியாளர்கள். அவர்கள் நெஞ்சில் இறைவன் கோயில் கொள்வான். அதுவே, விடையூர்தல் தத்துவத்தின் விளக்கம். இத்தகு வாழ்க்கைமுறை என்றைக்குத் தனி மனித வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்குகிறதோ அன்றே கடவுளியல் உலகத்தவரால் ஒப்புக்கொள்ளப் பெறும். வேறு எந்தவகையாலும் முறையாலும் உலகம் ஒப்புக்கொள்ளாது. இதனைத் திருஞான சம்பந்தர்.

உண்ணற் கரிய நஞ்சையுண் டொருதோழந் தேவர்
விண்ணிற் பொலிய அமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்

என்று பாடிப் பரவிப் போற்றுகின்றார்.