குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/தலைமையின் தகுதிப்பாடு

8
தலைமையின் தகுதிப்பாடு

தகுதி வாய்ந்தது தலைமை. தலைமைக்குரிய தகுதிகள் ஒன்றல்ல; பலப்பல. தகுதியனைத்தும் பெற்ற தலைமை தரணியில் கிடைப்பதில்லை. ஏன்? அமரர் உலகத்தும் கிடைப்பதில்லை. பொதுவாகப் பலர் தம்முடைய தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், தலைமைக்கு மட்டும் முந்திக்கொண்டு போட்டி போடுகின்றனர்.

மாணிக்கவாசகர், அமரர் உலகத்திலும் தகுதியுடைய தலைவர்கள் வேண்டுமென்று விழைகின்றார். தக்கன் வேள்வி செய்தான். வேள்வியில் இடப்படும் திருவமுதுப் படையற் பொருள்களைச் சிவனே பெறுதற்குரியவன். ஆனால் மண்ணில் நடமாடுவோர்க்கு இருப்பதைப் போலவே நான்முகனுக்கும், திருமாலுக்கும் தலைமை வேட்கை வந்து விட்டது. தலைமை வேட்கை வெறி பிடித்ததல்லவா? சதி பிறந்தது. வேள்விக்குச் சிவம் அழைக்கப்பெறவில்லை. நான்முகனும் திருமாலும் தலைமைக்குரிய இன்பத்தை அனுபவித்தார்கள். தூய்த்தலும், மகிழ்தலும் தலைமைக்குரிய இலக்கணமல்லவே! தாங்குவதன்றோ தலைமையின் இலக்கணம். அலை கடலில் நஞ்சம் எழுந்தது. தலைமையைத் தேடிப் பற்றிக்கொண்ட நான்முகனும் திருமாலும் நஞ்சினை ஒடுக்கி உலகைக் காப்பாற்ற முடியாமல் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அழுது அரற்றினர். எந்தை ஈசனிடம் முறையிட்டனர். அவன் தனக்குவமையில்லாத் தலைவனன்றோ; நஞ்சை யுண்டு உலகத்தைக் காத்தனன்.

இன்றும் பலர் தலைமையை விரும்புகின்றனர். ஆனால் அதற்குரிய தகுதியை முயன்று அடைய மறுக்கின்றனர். அது மட்டுமா? தலைமைக்குரிய தகுதிகளுடையாரை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றனர். இழித்தும் பேசுகின்றனர். இதனால் எல்லாமா தலைமை வந்துவிடும்? தலைமைக்குரிய தகுதியுடையாரை உலகம் ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் தலைவர் அல்லர் என்று ஆகிவிட மாட்டார்கள். தலைமை, தலைமைதான்!

தலைமைக்குரிய இயல்பு - தகுதி போகம் துய்த்தலன்று. புகழில் மயங்கித் திரிதலன்று. ஆன்ற ஆள்வினையே தலைமைக்குரிய தகுதியை நிலைநாட்டும். கொலையே தொழிலெனக் கொண்டு, கோட்டை கொத்தளங்கள் கட்டி, வாழ்ந்த திரிபுர அரக்கர்கள் நிலை என்ன ஆயிற்று? அளவற்ற செல்வத்தாலும், வலிமையினாலும் அரக்கர்கள் கை ஓங்கி நின்றது. அமரர்களும்கூட அவர்களுக்கு ஏவல் செய்யத் தலைப்பட்டனர். ஆயினும் அறத்தின் சார்பின்மையால் அந்தத் தலைமை தற்காலிகமாயிற்று. அதுதானே நியதி! எந்தை ஈசன் மேருமலையை வில்லாகக்கொண்டு, முப்புரமழித்து மூவுலகையும் காத்தனன். ஆயினும் தலைமைக் கிறுக்குப் பிடித்த இந்த அமரர்கள் சிவபெருமானை நாள்தோறும் - வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் “இவரா தலைவர்! இல்லை, இல்லை! இவர் தலைவரல்லர்” என்றெல்லாம் பேசுகின்றனர். இவர்கள் எதைப் பேசினாலென்ன? அவன் தனக்குவமையில்லாத் தலைவனேயாம்.

ஆதலால் தலைமைப் பண்புகளைப்பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தனக்குவமையில்லாத் தலைவன் தாளினைப் பணிந்து அவன் இயல்புகளைப் பெறவேண்டும். தகுதியால் வருவதே தலைமை. மற்றபடி இடத்தால் - பொருளால் - வாய்ப்பால் - அதிட்டத்தால் - மற்றவர் ஏமாற்றத்தால் வரும் தலைமை, தலைமையாகாது. ஒவ்வொருவரும் நிறை நலமிக்க தலைமைக்கு முயற்சி செய்யவேண்டும்.

கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவரல் லாமை யுரைப்பீர்காள்
நிலவரை நீல முண்டதும் வெள்ளை நிறமாமே!

-திருஞானசம்பந்தர்