குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/கூசாதுரைக்கும் சொல்


9
கூசாதுரைக்கும் சொல்!

பொய்! அம்மம்ம! அது இன்றைக்குப் பெற்றிருக்கும் செல்வாக்குக்கு எல்லையே இல்லை. எங்கும் இன்று பொய் நடமாடுகிறது; ஆட்டம் ஆடுகிறது. இன்றையப் பேச்சுலகில் உண்மைக் கலப்பும் இருக்கலாம். ஆனால் பொய்யே முதல்! இன்றைய மனிதன் பொய்யைப் புதுப்பாணியாக்கிவிட்டான். வள்ளுவன் கூறியதைப்போல் பொய்யைச் சொல்வன்மை, ஒப்பனை செய்து காப்பாற்றி வருகிறது. அதுமட்டுமா? “பொய் சொல்லலாம் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார்.” இப்படி ஓர் ஆதரவுப்படலம்! ஆம்! ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த’என்று வள்ளுவர் கூறியது உண்மை. ஆனால், பொய் வாய்மையாகிறது என்பது வள்ளுவத்தின் கருத்தல்ல. பொய், பொய்யேதான்! ஆனால், விளையும் பயன் நோக்கி வாய்மையிடத்தில் வைத்தெண்ணலாம் என்பதேயாம். ஆம்! சொல்லும் செயலும் பயன் நோக்குடையன. என்ன பயன்? உயிர்த்தகுதி மேம்பாடு அடைய வேண்டும். உயிர்கள் அறத்தில் அருளில் தூய்மையில், வாய்மையில் தோய்ந்து வளர்தல் வேண்டும். செடிக்கு நீரூற்றுதல் செயல். அதன் பயனாகச் செடி வளரவேண்டும். கரும்பலகையில் எழுதுதல் செயல் - சடங்கு. அதன் பயன் கரும்பலகையில் எழுதுவதைச் சிந்தையில் எழுதிக் கொள்ளுதலாகும். ஒளியைத் தாங்கிப் பேரொளிப் பிழம்பாகிய பரம்பொருளை வழிபடுதல் செயல் - சடங்கு. அதன் பயன் உயிர் ஒளிமயமாதல். ஆதலால் பயன் நோக்கியே செயல் - சடங்கு.

மனம் வாழ்க்கையின் அடிநிலம். அது எண்ணவல்லது; நினைக்க வல்லது; உணரவல்லது. ஏன் இத்தனைத் தொழிற்பாடு? மனம் நல்லவண்ணம் விளைந்து பயனுறுதற்கே! மனம்தானே மனிதனுக்கு உருவம் கொடுப்பது; வாழ்விப்பது; மனத்தின் வண்ணமே மனிதனின் வடிவு - செயல். ஆங்கிலக் கவிஞன் மில்ட்டன் “மனமே நரகத்தையும் சொர்க்கத்தையும் படைப்ப”தென்றான். இன்று சிலர் சொர்க்கத்தை நிலவரைப்படத்தில் தேடுகின்றார்கள்! பரிதாபம்! மனமே சொர்க்கத்தின் பிறப்பிடம்! அப்பரடிகளும், “மனத்தகத்தான்” என்றார். வாய்மை சொல்லி, மற்றவர்க்கு நன்மை வராது தீமைவரின் அது வாய்மையல்ல. சொல்லளவில் வாய்மை போலத் தோற்றினாலும், இயல்பால்-தன்மையால் வாய்மையன்று. பொய் சொல்லுவதின் மூலம் பிறர்க்கு நன்மை விளையுமானால் அந்தப் பொய்ம்மையை வாய்மையாகக் கருதலாம் என்பதே வள்ளுவத்தின் கருத்து. வாழ்க்கையின் இலட்சியம் நன்மை விளைவித்தலே. அந்த முழு நன்மையே - புரைதீர்ந்த நன்மையே கடவுள். “நன்றுடையானை” என்பது தேவாரம். புரைதீர்ந்த நன்மை எது? அது எப்படி இருக்கும்? இன்று அதைப் பார்த்தவர் யார்? யாருக்கும் தீமை தராமல் நன்மை தருவதே புரை தீர்ந்த நன்மை. ஆதலால் இன்றைய உலகியல், நன்மை - தீமைக் கலப்படமாகவே விளங்குகிறது. அதற்கு முதற்காரணம் மனிதன் வாழ்வித்து வாழவும், மகிழ்வித்து மகிழவும் விரும்புவதில்லை. அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையுணர்வே பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. ஒரு மனிதனுடைய ‘தன்னலம்’ பெரும் பகுதி மற்றவர்க்குத் தீமையாகவே இருக்கும். ‘பிறர் நலம்’ பெரும் பகுதி நன்மையாகவே இருக்கும். தன்னலத்தில் பொதுநலம் - பிறர் நலம் உள்ளடங்குவதில்லை. ஆனால் பொது நலத்தில் தன்னலம் நிச்சயமாக உள்ளடங்கியது. கழனியில் கிடக்கும் தண்ணீர் கழனியையும் தொடர்ந்து காப்பாற்றாது; கண் மாயையும் காப்பாற்றாது. ஆனால், கண்மாயின் தண்ணீர் கழனியைக் காப்பாற்றும். கண்மாய் - பொதுநலம், கழனி - தன்னலம். கண்மாயின் வாயிலாகக் கழனிக்குத் தண்ணீர் பாய்ச்சுதலே வாழ்வியல் முறை. கழனியின் மூலம் கண்மாய்க்குத் தண்ணீர் தேக்கமுடியாது.

ஆதலால், உயர்ந்த நன்மை விளைவிக்கக்கூடிய சொற்களே வாய்மை; சிந்தனையே வாய்மை; செயலே வாய்மை. இத்தகைய வாய்மையில் மனமும் வாயும் தோய்ந்து பழகவேண்டும். யாருடைய மனத்திற்கும் வாய்க்கும் பொய் கூச்சப்படும் பொருளாக இருக்கிறதோ, அவர்களே வாழ்வோர், வாழ்விப்போர். மனமும் வாயும் கூச்சப்படாமல் பொய்யைச் சொல்லுதலைத் திருஞானசம்பந்தர் கண்டிக்கின்றார். அவர்தம் பாடல்,

மாசூர் வடிவின்னார் மண்டையுணல் கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா வென்பார்கட் கில்லை யிடர்தானே.