குழந்தைச் செல்வம்/ஔவையும் இடைச் சிறுவனும்

36. ஔவையும் இடைச்சிறுவனும்

வேனிற் பருவத்திலே - ஒருநாள்
     வெய்யில் வேளையிலே,
ஞானத் தமிழ்க்கடலென் - றிந்த
     நாடு புகழும் ஒளவை, 1

தூரம் மிகநடந்து - களைத்துச்
     சோர்ந்து, வரும் வழியின்
ஓரத்தில் ஓர்நாவல் - நிழலில்
     ஒதுங்கிச் சற்றுநின்றாள். 2

அந்தமர மீதோர் - சிறுவன்
      ஆநிரை மேய்க்க வந்தோன்.
சிந்தை மகிழ்ந்து நல்ல - கனிகள்
      தின்று நிற்றல் கண்டாள். 3

நாவறளு தப்பா! - நாலைந்து
      நாவற் கனிபறித்து,
தாவென வேண்ட - அவனும்
      தருவேன் என்று சொல்லி, 4

'சுட்ட கனிவேண்டுமோ? - அன்றிச்
      கூடாத கனிவேண்டுமோ?
இட்டமுள்ள கனியைப் - பாட்டி நீ
      இயம்பெ"னக் கேட்டான். 5

கூறிய அம்மொழியால் - உள்ளம்
      குழப்ப மெய்தி யப்பால்
தேறி அவளும், "அப்பா!-சுட்ட
      தீங்கனிதா" என்றாள். 6

மெத்தப் பழுத்துலைந்து - கறுத்து
      வெடித்த கனியாக,
பத்துப் பதினைந்தை - ஒன்றாய்ப்
      பறித்து மண்ணிலிட்டான். 7

ஒட்டிய மண்நீங்கக் - கனியெடுத்
      தூதி நிற்கையிலே.
"சுட்ட கனியிதெ"னச் - சிறுவன்
      சொல்லி மறைந்திட்டான். 8

மாடு மேய்ப்பவனும் - என்னை
      மடக்கி விட்டான் என்று.
நாடு புகழும் ஒளவை - அன்று
      நாணித் தலைகுனிந்தாள். 9

கந்தன் முருகனே - ஔவையின்
      கருவம் போக்குதற்கிவ்
விந்தை செய்தானென்று - புலவர்
      விளம்பு கின்றாரம்மா! 10