குழந்தைச் செல்வம்/கிளியை அழைத்தல்

8. கிளியை அழைத்தல்

பச்சைக் கிளியே! வா வா ;
    பாலும் சோறும் உண்ணவா ;
கொச்சி மஞ்சள் பூச வா ;
    கொஞ்சி விளையாட வா. 1

கவலை எல்லாம் நீங்கவே,
    களிப் பெழுந்து பொங்கவே,
பவழ வாய் திறந்து நீ
    பாடுவாயோ தத்தம்மா! 2

வட்டமாய் உன் கழுத்திலே
    வான வில்லை ஆரமாய்,
இட்ட மன்னர் யாரம்மா!
    யான் அறியக் கூறம்மா! 3

பையப் பையப் பறந்து வா,
    பாடிப் பாடிக் களித்து வா;
கையில் வந்திருக்க வா.
    கனி அருந்த ஓடிவா. 4

பவழக் காரத் தெருவிலே
    பவழங் காண வில்லையாம்;
எவர் எடுத்துச் சென்றனர்?
    எனக் கறிந்து சொல்வையோ? 5

பங்க ஜாட்சி கையிலே
    பவழங் காண வில்லையாம்;
எங்கும் உன்னைத் தேடினார்.
    எடுத்த துண்டோ? தத்தம்மா? 6

அரசர் மார்பில் ஆரத்தை
      ஆரோ கொண்டு போனாராம்;
திருடிச் சென்றார் எவரம்மா?
       தெரியு மானால், சொல்லம்மா! 7