கெடிலக் கரை நாகரிகம்/கெடில நாட்டுப் பெருமக்கள்

13. கெடில நாட்டுப் பெருமக்கள்

வரலாற்றுக் காலந்தொட்டு இன்றுவரை கெடிலக்கரைப் பகுதிகளில் பிறந்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் தொடர்பு கொண்டும் புகழ்பெற்று விளங்கின. பெருமக்கள் பலராவர். சமயப்பெரியார்கள் என்ன! புலவர்கள் என்ன! கலைஞர்கள் என்ன! இப்படியாகப் பல துறைப் பெரியர்ர்கள் கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் சிறந்து விளங்கினர்; இன்றும் விளங்கி வருகின்றனர்.

ஒரு நாடு நல்ல நாடா அல்லது கெட்ட நாடா என்று எதைக்கொண்டு தீர்மானிப்பது? ஒரு நாடு, தன் மாட்டுள்ள நிலவளம் - நீர்வளத்தாலோ, இயற்கைக் கணிப்பொருள் வளத்தாலோ, இன்னும் பிறவளத்தாலோ சிறந்த நாடாகக் கருதப்பட முடியாது. ஒரு நாடு மேட்டுப் பாங்காகவோ அல்லது பள்ளம் படுகுழியாகவோ இருக்கலாம்; ஒருநாடு காட்டுப் பகுதியாகவோ அல்லது கடல் சார்ந்ததாகவோ இருக்கலாம்; இன்னபிற அமைப்புக்களைக் கொண்டு நல்ல நாடு என்றோ, கெட்ட நாடு என்றோ முடிவுகட்டிவிட முடியாது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் தகுதியைக் கொண்டே அந் நாட்டின் தகுதியையும் வரையறுக்கமுடியும். இதனை, ஒளவையார் பாடிய


"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்ல வாழிய நிலனே'"

என்னும் புறநானூற்றுப் பாடல் (187) புலப்படுத்தும். இவ்வகையில் கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்த பெருமக்கட்குக் குறைவேயில்லை. அவர்களால் அந் நாட்டிற்கு உண்டான பெருமைக்கும் அளவேயில்லை. அவர்தம் வாழ்க்கைக் குறிப்புக்கள் வருமாறு:

சமயப் பெரியார்கள்

திருமுனைப்பாடி நாட்டோடு தொடர்பு கொண்டிருந்த சமயப் பெரியார்களுள் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்களின் வரிசையில், முதல் முதலாக அறியக் கிடைத்திருப்பவர்கள் திலகவதியாரும் திருநாவுக்கரசருமே. இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.

திலகவதியார்

கெடிலத்தின் வட கரையிலே உள்ள திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் தோன்றியவர் திலகவதியார். இவர்க்கு மருள் நீக்கியார் என்னும் தம்பி யொருவர் இருந்தார். திலகவதியார் மணப் பருவம் எய்தியதும், கலிப்பகையார் என்னும் படைவீரருக்கு இவரை மணம் பேசி முடிவு செய்திருந்தனர். திருமணம் நடைபெறுவதற்குமுன் போர் மூண்டதால், கலிப்பகையார் தம் மன்னனது படையொடு போந்து பகைவரோடு நெடுநாள் போர்புரிந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தீயூழாகப் புகழனாரும் மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்தனர். கலிப்பகையாரும் போரில் மாண்டுபோனார். திருமணம் ஆகாவிடினும் மணம் பேசி முடிவு செய்த கலிப்பகையாரைத் தம் கணவராகத் திலகவதியார் முன்னமேயே உள்ளத்தில் வரித்துக்கொண்டிருந்ததால், இப்போது அவர் இறந்ததும் அம்மையார் செய்வதறியாது திகைத்தார். கணவரையிழந்த அவர் தாமும் உயிர்துறக்கத் துணிந்தார். அப்போது தம்பி மருள்நீக்கியார் தமக்கை திலகவதியார் இறந்தால் தாமும் இறந்துவிடப் போவதாகக் கூறினார். பின்னர்த் திலகவதியார் தமது முடிவை மாற்றிக்கொண்டு தம்பிக்காக உயிர்வாழத் தொடங்கினார், கைம்மைக் கோலம்பூண்டு, திருவதிகை போந்து திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வரலாயினார்.

பூந்தோட்டம் வளர்த்தல், சிவபெருமானுக்குப் பூத்தொடுத்து அளித்தல், திருக்கோயில் அலகிடல், மெழுகிடல், புல் பூண்டுகளைதல் முதலிய திருப்பணிகளைத் திலகவதியார் புரிந்து வருகையில், தம்பி மருள் நீக்கியாரின் உள்ளத்தைச் சமண சமயம் கவர்ந்தது. அவர் தமது சைவ சமயத்தையும் தமக்கையாரையும் ஒருசேரத் துறந்து சமண சமயத்தில் சேர்ந்து பாடலி புத்திரம் என்னும் நகர்புக்குச் சமணத் தலைவராய் விளங்கினார். தருமசேனர் என்னும் தலைமைப் பட்டத்துடன் அங்கு வாழ்ந்துவந்த போது அவருக்கு வயிற்றில் சூலை நோய் கண்டது. சமணர்கள் எத்தனையோ மருத்துவங்கள் செய்து பார்த்தனர்; மருள் நீக்கியாரின் வயிற்று வலி தீர்ந்தபாடில்லை.

வலி பொறுக்க முடியாத மருள் நீக்கியார் சமணர்க்குத் தெரியாமல் தமக்கை திலகவதியாருக்குத் தமது நிலையைச் சொல்லியனுப்பினார். திருவதிகை வந்து விடுமாறு தமக்கையார் பதில் மாற்றம் சொல்லியனுப்பினார். அவ்வாறே சமணர் அறியாதபடி இரவோடிரவாகத் திருவதிகை போந்து தமக்கையின் அடிபணிந்தார் தம்பி, தமக்கையார் தம்பியின் நெற்றியில் திருநீறு பூசித் திருவதிகைச் சிவனை வணங்குவித்தார். மருள் நீக்கியாரின் சூலைநோய் பறந்தோடியது. சமணர்கள் இழைத்த பல கொடுமைகளினின்றும் மருள்நீக்கியார் தப்பிப் பிழைத்து, அப்பர், திருநாவுக்கரசர் என்னும் பெயர்களுடன், சிவப் பதிகள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஆயிரக் கணக்கான தேவாரப் பாடல்களை அருளிச்செய்து சைவமும் தமிழும் ஒருசேரத் தழைக்கச் செய்தார்.

திருநாவுக்கரசரால் தமிழுலகம் அடைந்திருக்கும் நன்மைக்கும் சிறப்பிற்கும் அளவேயில்லை. தமிழுலகத்திற்கு இந்த வாய்ப்பளித்த பெருமையில் திலகவதியார்க்குப் பெரும்பங்கு உண்டு. அம்மையார் இல்லையேல் நாம் அப்பர் அடிகளைப் பெற்றிருக்க முடியாது; திலகவதியார் இல்லையேல் நாம் திருநாவுக்கரசரைப் பெற்றிருக்க முடியாது; தருமசேனர் தான் கிடைத்திருப்பார். எத்தனையோ சேனர்களுக்குள் ஒரு சேனராகத் தருமசேனர் மறைந்துவிட்டிருப்பார். தரும சேனராக மாறிய மருள் நீக்கியாரைத் திருநாவுக்கரசராக மாற்றித் தந்த பெருமை திலகவதியாரையே சாரும்.

அந்தோ! அம்மையாரின் வாழ்க்கையை எண்ணும் போது இரக்கம் ஏற்படுகிறது. ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்று வாசகம் சொல்வது வழக்கம். ஆனால், அம்மையாரோ, ‘கல்யாணம்’ பண்ணாமலேயே கைம்பெண்’ ஆகிவிட்டார், என்ன கொடுமை! இந் நிலைமை அம்மையாரின் உயர்ந்த பண்பை அறிவிக்கிறது; அதே நேரத்தில் சமுதாயத்தின் கொடுமையையும் அறிவிக்கிறது. ஒருவேளை, திருநாவுக்கரசரை உருவாக்கி உலகிற்கு அளிப்பதற்காகத்தான் திலகவதியார்க்கு இரங்கத்தக்க இந்நிலை ஏற்பட்டதோ! அம்மையார் வீட்டு வாழ்க்கையில் தோல்வியுற்றாலும், நாட்டு வாழ்க்கையில் முழு வெற்றி பெற்று நற்பணி யாற்றி நற்பெயர் பெற்றிருப்பது. உள்ளத்திற்கு ஆறுதலும் நிறைவும் ஒருசேர அளிக்கிறது.

திலகவதியார் சைவவேளாளர் குலத்தினர். இவர்க்கு நேர்ந்த இரங்கத்தக்க நிலைமை தொடர்பான அச்சம், இன்னமும் திருவாமூர்ப் பகுதிச் சைவ வேளாளர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. மணம் பேசி உறுதி செய்ததும் மனம் நிறைவேறுவதற்கு முன்னே மணமகன் கலிப்பகையார் போரில் மாண்டு விட்டதால் திலகவதியார் கைம்மை பூண் நேர்ந்ததல்லவா? இந்த அச்ச உணர்வால், திருவாமூர்ப் பகுதி வேளாண் மக்கள், மணம்பேசி உறுதி (நிச்சயதார்த்தம்) செய்தல், திருமணம் நிகழ்த்துதல் ஆகிய இரண்டு வினைகளையும் ஒரே நாளில் நடத்தி வருகின்றனராம்.

தமது பெருந்தகுதியால் தமிழ்மக்களின் உள்ளங்களில் நீங்காது நிலைபெற்றுள்ள திலகவதியார் தம் கண்ணே போல் போற்றிக் காத்துவந்த மலர்வனத்தை இன்றும் திருவதிகையில் காணலாம். அஃதாவது, அந்த இடத்தில் வாழையடி வாழையாகத் தொடர்ந்து செடிகொடிகள் இருந்து வருவதைச் சிதைந்த நிலையில் இன்று காணலாம்.

திலகவதியாரின் பெருமைக்கு அழியாச் சான்றாக, திருவதிகைச் சிவன் கோயிலுக்குள் அவருக்கும் ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தெய்வங்களொடு தெய்வமாய்ச் சேர்ந்து வழிபடும் அளவிற்கு அம்மையாரின் புகழ் வானளாவ உயர்ந்துவிட்டது. உயர்ந்த உழைப்பின் பயன் வீண்போகாது போலும்! பெண்ணுலகிற்கு ஒரு பெருந் திலகமாய் வதிந்த திலகவதியார் புகழ் ஓங்குக! அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கோயில்கொண்டுள்ள கெடிலக்கரை வாழ்க!

திருநாவுக்கரசர்

வரலாறு

திலகவதியாரின் தம்பி திருநாவுக்கரசரின் வரலாறு, முன்னேயுள்ள திலகவதியாரின் வரலாற்றுப் பகுதியில் ஒருசிறிது சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசரின் இயற்பெயர் - இளமைப் பெயர் மருள்நீக்கியார் என்பது. அறியாமையாம் மயக்கம் நீக்கியவர் என்பது அதன் பொருள். எவ்வளவு அழகிய இனிய பொருள் பொதிந்த தமிழ்ப் பெயர்! இப்பெயரை இலங்கைத் தமிழரிடையே இன்றும் காணலாம். இவ்வளவு நல்ல பெயரைச் சூட்டிய பெற்றோரை யிழந்து, தமக்கையின் ஆதரவில் வளர்ந்து வந்த மருள் நீக்கியார் சமண சமயம் புக்கு, தருமசேனர் என்னும் பெயருடன் பாடலிபுத்திரத்தில் ஒருபெரிய சமணத் தலைவராய் விளங்கினமை, அவருடைய இயற்கைத் திறமைக்கு ஒரு பெரிய சான்றாகும். குறுகிய கால அளவில் ஒரு தலைவராய் விளங்குவது என்பது எல்லோர்க்கும் இயலக் கூடியதன்று. தருமசேனர் திறமை மிக்க தலைவராய் விளங்கியதனால் தான், அவர் சைவத்திற்கு மீண்டதும் சமணர்கள் மிகுந்த பரபரப்பு அடைந்தனர். அவர் சோற்றுக்குக் கேடான ஓர் எளிய சமணத் தொண்டனாய் இருந்திருந்தால், அவர் சைவத்திற்கு மீண்டதற்காகச் சமணர்கள் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். தலைசிறந்த தலைவனை இழந்துவிட்ட ஏமாற்றத்தால் ஏக்கத்தால், சமணர்கள் பல்லவ மன்னனின் துணைகொண்டு நாவுக்கரசரைச் சுண்ணாம்பு நீற்றறையில் இட்டனர்; நஞ்சூட்டினர்; யானையைக் கொண்டு தலையை இடறச்செய்ய முயன்றனர்; கல்லிலே கட்டிக் கடலிலே எறிந்தனர்; இன்னும் என்னென்னவோ தொல்லைகள் தந்தனர். எல்லாக் கொடுமைகளினின்றும் நாவுக்கரசர் தப்பினார்; நாட்டு மன்னனையும் மக்களையும் மீட்டு நாட்டில் சைவத்தை நிலைநாட்டினார்.

இவர் திருவதிகைச் சிவன் திருமுன்பு, ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்னும் திருப்பதிகம் பாடிச் சூலைநோய் நீங்கப்பெற்றதும், இவரது நாவன்மையை சொல்வன்மையைப் பாராட்டி இறைவன் இவரை ‘நாவுக்கரசு என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் சீர்கழி சென்று திருஞான சம்பந்தரைக் கண்டபோது, அவர் இவரை அப்பரே வருக என அழைத்தாராம். பிற்காலத்தில் இவர்க்குத் திருநாவுக்கரசர், அப்பர் என்னும் இருபெயர்களும் நின்று நிலைத்து விட்டன. வாகீசர், ஆளுடைய அரசு எனவும் இவர் அழைக்கப்படுவதுண்டு.

நாவுக்கரசர் நடுநாடு, சோழநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு ஆகிய இடங்கட்கெல்லாம் முறையே சென்று, ஆங்காங்குள்ள திருப்பதிகள் தோறும் இறைவனை வணங்கித் திருப்பதிகங்கள் பல பாடியருளினார்; பல வியத்தகு நிகழ்ச்சிகளும் புரிந்தார். கைலை கண்டு வணங்க வேண்டும் என வடநாடு நோக்கிக் காசிவரையும் சென்றார். கைலை செல்வது அரிது என உணர்த்தப்பட்டு, தென்னாட்டிலுள்ள திருவையாறு அடைந்து அங்கே கைலைக் கோலத்தைக் கண்டு வழிபட்டாராம். இந்தக் காலத்தைப் போல் போக்கு வரவு வசதியில்லாத அந்தக் காலத்தில் காலே துணையாக அவ்வளவு தொலைவு பயணம் செய்ததை எண்ணும்போது, அடுத்த தெருவிற்கு வண்டியில் செல்லும் இருபதாம் நூற்றாண்டினர்க்குத் தலை சுற்றத்தான் செய்யும். அப்பர் பெருமான் பற்பல ஊர்கட்கும் சென்று பண்ணோடு தேவாரப் பாமாலை பல புனைந்து தமிழ் மொழியையும் தமிழ் நாட்டையும் ஒருசேர வளப்படுத்தி இறுதியில் திருப்புகலூரில் எண்பத்தோராவது வயதில் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். அப்பர் காலம்

அப்பர் பெருமானின் காலத்தை அறுதியிட்டுக் கூறத் திட்டவட்டமான சான்று எதுவுமில்லை. அவரது காலத்தைச் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். அவரது தேவாரத்திலோ, அவர் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்திலோ, அவர் காலத்தில் ஆண்ட பல்லவ மன்னன் இன்னான் என்று குறிப்பிடப்படவில்லை. பல்லவன் எனப் பொதுப்படையாகவே பெரியபுராணம் கூறுகிறது. அந்தப் பல்வன் மகேந்திரவர்மப் பல்லவனாகத்தான் இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றனர். அப்பரது முயற்சியால் பல்லவ மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதும், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக்கோயிலை இடித்துக் கொண்டுவந்து, திருவதிகையில் ‘குணபரேச்சரம்’ என்னும் பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. [1]

“வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண்கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்

கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்"

என்பது பெரியபுராணப் பாடல். பாடலிலுள்ள ‘குண்பர வீச்சரம்’ என்னும் கோயில் பெயர்தான் இங்கே உயிர்நாடி இது, குணபரேச்சரம், குணபரேசுரம், குணதரேச்சுரம் என்றெல்லாங் கூட அழைக்கப்படுகிறது. ஈச்சரம் அல்லது ஈசுரம் என்றால், ஈசுவரன் (சிவன்) எழுந்தருளியுள்ள இடம் (கோயில்) என்று பொருளாம். குணபர ஈச்சரம் என்றால், குணபரன் என்பவனால் கட்டப்பட்ட கோயில் என்று பொருளாம். தஞ்சையில், முதலாம் இராசராச சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில் ‘இராச ராசேச்சுரம்’ என அழைக்கப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, ஈண்டு, குணபரன் என்னும் பெயர் கோயில் கட்டிய பல்லவ மன்னனைக் குறிக்கின்றது என்பது தெளிவு. இந்தப் பெயர் எந்தப் பல்லவ மன்னனுடையது?

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பெரும் புகழுடன் அரசாண்ட மகேந்திரவர்ம பல்லவனுக்குக் குணபரன் என்னும் பெயர் ஒன்று வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுக்களி லிருந்துதெரிகிறது. செங்கற்பட்டு சில்லா வல்லத்திலிருக்கும் குகைக்கோயில் கல்வெட்டில் மகேந்திரவர்மனைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு சிறு பகுதி வருமாறு:

“பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன்

குணபரன் மயேந்திரப் போத்தரசரு......."

இக் கல்வெட்டுப் பகுதியிலுள்ள மயேந்திரன் என்பது மகேந்திரனாகும். அவனைக் குறிக்கும் வேறுபெயர்கள்: பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்துரு மல்லன், குணபரன் என்பனவாம். இதிலிருந்து குணபரன் எனப்படுபவன் மகேந்திரனே என்பது நன்கு தெளிவாகும். இதற்கு இன்னும் ஒரு சான்று வருமாறு:

திருச்சி மலைக்கோயிலில் மலைக்குகை மண்டபத்தைக் குடைந்து உருவாக்கியவன் மகேந்திரனாவான். அம் மண்டபத்தின் தூண்களில் இவனைப் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வருமாறு: [2]

இந்த வடமொழிக் கல்வெட்டுப் பகுதியின் கருத்தாவது: “குணபரன் என்னும் பெயருடைய அரசன், சமணத்திலிருந்து மாறிப் பெற்ற மெய்யறிவு உலகில் நெடிது நிலைப்பதாகுக!” என்பதாம். அப்பரால் பல்லவ மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதையே இக் கல்வெட்டுப் பகுதி குறிக்கிறது.

மேற்காட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் மகேந்திர னுடையவை; எனவே, குணபரன் எனப்படுபவன் அவனே என்பதும், திருவதிகையில் குணபரேச்சரம் கட்டியவன் அவனே என்பதும், அப்பர் காலத்தில் வாழ்ந்தவன் அவனே என்பதும் முறையே ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாய்த் தெளிவுபடுகின்றன.

அப்பர் காலத்தில் ஆண்ட பல்லவன் மகேந்திரவர்மனே என்பது உறுதியாய் விட்டதால் அப்பர் காலத்தைக் கணிப்பது இனி எளிது. மகேந்திரவர்மன் கி.பி. 600ஆம் ஆண்டிலிருந்து 630ஆம் ஆண்டுவரை ஆண்டதாகப் பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கால அட்டவணையிலிருந்து தெரியவருகிறது. அப்பர் இந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். மற்றும், அப்பருக்கு எண்பத்தொன்று’ என்று தொடங்கும் பாடலினால், அப்பர் எண்பத்தோ ராண்டுகள் உயிர்வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவர் மகேந்திர மன்னனது ஆட்சிக் காலத்துக்கு முன்னும் இருந்திருக்கவேண்டும்; பின்னும் இருந்திருக்கவேண்டும். எனவே, அவர் ஆறாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வாழ்ந்திருக்க வேண்டும்.

அப்பர் கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்து கெடிலக் கரையில் கல்வி - கலைகளைக் கற்று, கெடிலக்கரையில் திருநாவுக்கரசராக உருவானவர்; அவரால் கெடிலக்கரை பெற்ற பெருமை மிகுதி. எனவேதான் இந்நூலில், அப்பரின் கால ஆராய்ச்சி இன்றியமையாததாயிற்று.

அப்பர் பிறந்த மனை

திருவாமூரில் அப்பர் பிறந்த மனை மிகவும் பொலிவுற்றுத் திகழ்கிறது. இதுதான் அப்பர் பிறந்த மனை என அவ்வூரார்

வாழையடி வாழையாக அறிந்து வைத்து வந்துள்ளனர். அந்த மனை வெள்ளாழர் மனை என ஊர் மக்களால்

வழங்கப்படுகிறது. வெள்ளாழர் என்பது வேளாளர் என்பதன் கொச்சை உருவம். அப்பர் வேளாள மரபைச் சேர்ந்தவராதலின், அவர் பிறந்த மனை வேளாளர் மனை’ என வழங்கப் படுவதில் தக்க பொருத்தம் உள்ளது. இதுதான் அப்பர் பிறந்த மனை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று அவ்வூராரைக் கேட்டதற்கு, வெள்ளாழர் மனை என்ற பெயரே போதிய ஆதாரமாயிற்றே” என்ற பதில் கிடைத்தது. அந்த மனையில் அப்பர் நினைவாக அவருக்கு அழகிய திருக்கோயில் கட்டப்பட்டு 14-7-1963இல் குட முழுக்கும் நடத்தப்பட்டுள்ளது. மேலுள்ள படத்தில் அந்தக் கோயிலின் தோற்றத்தில் ஒரு பகுதியைக் காணலாம்.

படத்தில், கோயிலுக்குச் செல்லும் முகப்பு வாயிலில், ‘திருநாவுக்கரசு நாயனார் திருக்கோயில்’ என்னும் தொடர் பொறிக்கப்பட்ட வளைவினைக் காணலாம். கோயிலின்


கருவறையில் திருநாவுக்கரசரின் அழகிய திருவுருவம் பொலிவுடன் திகழ்கிறது. திருநாவுக்கரசரின் திருமுன் (சந்நிதி) கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலின் வாயில் வடக்கு நோக்கியுள்ளது.

திருநாவுக்கரசர் பிறந்த திருமனையின் பெருமையை அறிவிக்கும் அறிகுறியாகவும், அவர் பிறந்த மனை இதுதான் என்பதை நிலைநாட்டும் தெய்வச் சான்றாகவும், திருநாவுக்கரசர் திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் களரிவாகை என்னும் ஒருவகை மரம் காணப்படுகிறது. அந்த மரத்தின் தோற்றத்தை மேலுள்ள படத்தில் காணலாம்:

களரிவாகை என்னும் பெயருடைய அம்மரம், ஐந்நூறு அறுநூறு ஆண்டுகளாக அந்த இடத்தில் இருப்பதாகத் திருவாமூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் கேட்டால், அம் மரத்தின் வயது என்ன - எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அம் மரம் தோன்றியது என்று எவரும் திட்டவட்டமாகக் கூறமுடியாதபடி மிகப் பழங்காலந்தொட்டு அம்மரம் இருந்துவருவதாக, வாழையடி வாழையாகப் பெரியவர்கள் சொல்லி வருவதாகச் சிலர் கூறுகின்றனர். மரம் நன்கு தழைத்து அகன்று பரந்துள்ளது. அம்மரத்தின் இலையும் கனியும் பட்டையும் பல்வகை நோய்களைப் போக்கக் கூடியவை என்றும், நச்சுக் கடிகட்கு நல்லவை என்றும் சொல்கின்றனர். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மக்கள் மரத்தின் பட்டையை உரித்துக்கொண்டுபோய் விடுவதாகக் கூறிச் சிலர் வருத்தம் தெரிவித்தனர். திருநாவுக்கரசரின் பெருமைக்கு ஒரு தெய்வச்சான்றாக உள்ள அக் களரி வாகை மரம், இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நின்று நிலைத்துச் செழித்து வாழ்க!

விழாக்கள்

பல ஊர்ச் சிவன் கோயில்களில், திருநாவுக்கரசர் வீடுபேறடைந்த சித்திரைச் சதயநாளில் மட்டும் திருநாவுக்கரசருக்குத் திருவிழா நடத்துவது வழக்கம். திருவாமூரில் உள்ள திருநாவுக்கரசர் திருக்கோயிலிலோ, அவர் வீடுபேறடைந்த சித்திரைச் சதயத்திலும் திங்கள் தோறும் வரும் சதயத்திலும் விழா நடத்துவதல்லாமல், அவர் பிறந்த பங்குனி உரோகிணி நாளிலும் அவருக்குச் சிறப்பாகத் திருவிழா நடத்தப் பெறுவது குறிப்பிடத்தக்கது. பிறந்த இடத்தில் பிறந்தநாள் விழா நடத்துவது மிகவும் பொருத்தம் அல்லவா?

சுந்தரர்

வரலாறு

சைவ சமய குரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரர் கெடிலத்தின் வடகரையிலுள்ள திருநாவலூர் என்னும் ஊரில் தோன்றினார். தந்தையார் சடையனார் என்னும் பெயரினர்; தாயார் இசை ஞானியார் என்பவர். இவ்விருவரும் சைவ நாயன்மார் அறுபத்து மூவர் வரிசையில் வைத்துப் போற்றப் படுகின்றனர். திருக்கோயிலில் பூசனை புரியும் குருக்கள் மரபில் தோன்றிய சுந்தரரை, அவ்வூர் அரசர் நரசிங்கமுனையரையர் எடுத்து வளர்த்து ஆளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது இளமைப் பெயர் நம்பியாரூரர் என்பது.

புத்துரர் என்னும் ஊரில் சுந்தரர்க்குத் திருமண ஏற்பாடு நடந்தது. சிவ பூசையில் கரடி விட்டாற்போல், திருமண வேளையில் கிழ அந்தணர் ஒருவர் வந்து, சுந்தரரை நோக்கி, ‘நீ என் அடிமை’ என வாதிட்டார். சுந்தரர், ‘நீ ஒரு பித்தன்; நான் உன் அடிமை அல்லன்’ என மறுத்தார். மணம் தடைப்பட்டது. இருவரும் வழக்கிட்டுக் கொண்டு திருவெண்ணெய் நல்லூரிலிருந்த அறமன்றம் போந்தனர். வந்த அந்தணரே வழக்கில் வென்றார்.

இந் நிகழ்ச்சிக்குக் காரணமாக முன்பிறவி நிகழ்ச்சியொன்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பிறவி நிலையில் சுந்தரர் கைலாயத்தில் ஆலால சுந்தரர் என்னும் பெயருடன் சிவனுக்குத் தொண்டுபுரிந்து வந்தாராம். ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனத்திற்குச் சென்றிருந்தார். அங்கே, பார்வதி தேவியின் தொண்டர்களாகிய அநிந்திதை, கமலினி என்னும் மகளிர் இருவரையும் கண்டு காதல் கொண்டார். அக் குற்றத்திற்காக மூவரும் மண்ணுலகில் சென்று பிறக்கும்படி பணிக்கப்பட்டனர். ஆலால சுந்தரர் அஞ்சித் தம்மை ஆட்கொள்ளும்படி இறைவனை வேண்டினார். அவ்வாறே செய்வதாக இறைவன் அருள் புரிந்தார். பின்னர், ஆலாலசுந்தரர் திருநாவலூரில் நம்பியாரூராய்த் தோன்றினார். கமலினி திருவாரூரில் பரவையார் என்னும் பெண்மணியாகவும், அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும் பெண்மணியாகவும் பிறந்தனர். இது புராணக்கதை.

இந்தக் கதைக்கு ஏற்ப, சிவபெருமான் கிழ அந்தணராக வந்து, சுந்தரரின் திருமணத்தைக் கலைத்து வழக்கில் வென்று, உலகப் பற்றிலிருந்து அவரை ஆட்கொண்டதாகச் சொல்லப் படுகிறது. அந்தணராக வந்து வழக்குவென்ற இறைவன் கடவுட் கோலத்துடன் காட்சி தந்து, “பித்தன்” என்று வைத சுந்தரரை அவ்வாறே சொல்லிப் பாடும்படி பணிக்க, பித்தா பிறை சூடி’ என்று தொடங்கிப் பாடினாராம். இதுதான் சுந்தரரின் முதல் தேவாரப் பாடல்.

பின்னர்ச் சுந்தரர் பல திருப்பதிகட்கும் சென்று இறைவனை வணங்கித் தேவாரப் பதிகங்கள் பல பாடினார். திருவாரூர் சென்றபோது அங்கே பரவையாரை மணந்து கொண்டார். திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து கொண்டார். இந்த இரண்டு திருமணங்கட்கும் பழைய கைலாய நிகழ்ச்சி காரணம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சுந்தரர்க்குச் சேர மன்னராகிய சேரமான் பெருமாள் நாயனார் சிறந்த நண்பரானார். சுந்தரர் திருவஞ்சைக்களம் என்னும் திருப்பதி போந்து திருக்கோயில் வழிபாடுசெய்து கொண்டிருந்தபோது, சிவனது கட்டளைப்படி தேவர்கள் வெள்ளையானை கொண்டுவந்து அதில் இவரை அமர்த்திக் கைலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அஃதறிந்த சேரமானும் குதிரைe திவர்ந்து சுந்தரருடன் கைலை சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. சுந்தரர் காலம்

சுந்தரர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று சிலரும், எட்டாம் நூற்றாண்டு என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று சிலரும் கூறுகின்றனர். திருநாவுக்கரசரின் காலத்தைக் கணிக்க அவர் காலத்தில் ஆண்ட மகேந்திரவர்ம பல்லவன் உதவியாய் இருந்தது போல சுந்தரர் காலத்தைக் கணிக்க உதவக்கூடிய அரசர் யார் என்று ஆறாயவேண்டும். சுந்தரர் காலத்தில் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னனும், சேரமான் பெருமாள் என்னும் சேர மன்னனும், நரசிங்க முனையரையர், ஏயர்கோன், பெருமிழலைக் குறும்பர் முதலிய சிற்றரசர்களும் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இம் மன்னர்களுள் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னவன் சுந்தரர் காலத்திலேயே வாழ்ந்தான் என்பதற்கு, சுந்தரர் தேவாரத்தில் வெளிப்படையான அகச்சான்று கிடைத்துளது. அது [3]

★"கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்”

என்பதாகும். காடவர் கோன் என்பது, பல்லவரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். எனவே, கழற்சிங்கன் ஒரு பல்லவ மன்னன் என்பது புலனாகும். சுந்தரர் அவனை, ‘உலகெலாங் காக்கின்ற பெருமான் என நிகழ்காலத்தில் வைத்துப் புகழ்ந்துள்ளதால், அவர் காலத்தில் அவன் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது தெளிவு. எனவே, கழற்சிங்கனது காலம் தெரிந்தால் சுந்தரர் காலம் தெரிந்துவிடும். ஆனால், இந்தக் கழற்சிங்கன் என்பவன் எந்தப் பல்லவப் பேரரசன் என்பது தெரியவேண்டுமே!

கழற்சிங்கன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தான் (கி.பி. 630 -668) என்று சிலரும், இரண்டாம் நரசிம்மவர்மன் தான் (680 -729) என்று சிலரும், இரண்டாம் நந்திவர்ம பல்லவன்தான் (731 - 795) என்று சிலரும், மூன்றாம் நந்திவர்மன்தான் (844 - 866) என்று சிலருமாகப் பல்வேறு விதமாகச் சொல்கின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் கொள்கையை உறுதி செய்ய என்னென்னவோ சான்றுகள் தருகின்றனர். இந் நிலையில் எவர் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வது?

சுந்தரர் ஏழாம் நூற்றாண்டினராக இருக்க முடியாது. திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் என்பதும், திருநாவுக்கரசர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்பதும் முன்னர் பக்கம் - 170) அறிவிக்கப் பட்டுள்ளன. திருநாவுக்கரசரையும் திருஞான சம்பந்தரையும் மிகவும் புகழ்ந்து பாடி, அவர்கள் வாழ்ந்த திருவதிகையையும் சீர்காழியையும் காலால் மிதிக்க அஞ்சிய சுந்தரர் அவர்கள் காலத்திற்கு அடுத்த அடுத்த நூற்றாண்டினராகத்தான் இருந்திருக்க முடியும். எனவே, சுந்தரர் எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனப் பொதுப் படையாகக் கூறுவதோடு அமைதி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

சுந்தரர் பதினெட்டு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. இது பொருத்த முடையதாகத் தெரியவில்லை. அவர் இன்னும் பல ஆண்டுகள் உலகில் வாழ்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது.

சுந்தரர் பிறந்த மனை

சுந்தரர், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சிறப்புப் பெயராலும் நம்பி ஆரூரர் என்னும் பிள்ளைமைப் பெயராலும் அழைக்கப்படுவதல்லாமல், திருநாவலூரில் பிறந்து வளர்ந்தவரானதால், திருநாவலூரார் என ஊர்ப் பெயராலும் அழைக்கப்படுகிறார். இவர் பிறந்த மனை இது என இன்றும் திருநாவலூரில் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்த மனை, திருநாவலூர்க் கோயிலுக்கு வடபுறமாகப் பக்கத்திலேயே உள்ளது. கோயில் பூசனை புரியும் குருக்கள் மரபினர் கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடு அமைத்துக் கொண்டு இருப்பது வழக்கம். சுந்தரர் குருக்கள் மரபினராதலால், கோயிலுக்குப் பக்கத்தில் சுட்டிக் காட்டப்படும் அந்த மனையை, சுந்தரர் பிறந்த மனையாகத் துணிந்து நம்பலாம். அந்த மனையில் சுந்தரர் நினைவாக இப்போது ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அக் கட்டடத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்.

இந்தப் புகைப்படம் 4-1-1967 ஆம் நாள் எடுக்கப்பட்டது. கட்டடம் இன்னும் முடியவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கிறது. இயற்கைச் சூழ்நிலையில் அமைக்கப்படும் இந்தக் கட்டடம், சுந்தரர் நினைவை என்றென்றும் உலகிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும். சுந்தரர்க்குத் திருநாவலூரில் இந்த நினைவு மாளிகை எழுப்பப்படுவதல்லாமல், பெரிய திருக் கோயிலுக்குள் அவருக்கென்று தனியாகச் சிறிய திருக்கோயில் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள சுந்தரரின் வார்ப்படச் சிலை, சுந்தரர் என்னும் பெயருக்கு ஏற்ப மிகவும் அழகாகக் கவர்ச்சியாக உள்ளது. கெடிலக் கரையில் பிறந்து வளர்ந்து தேவாரப் பாடல்கள் பல பாடித் தமிழையும் சமயத்தையும் வளப்படுத்திய சுந்தரர் புகழ் நீடு வாழ்க!

‘திருநாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்ததால் திருமுனைப்பாடி நாடு நாடுகளுக்குள் மிகச் சிறந்ததாகும்; இதற்கு மேல் இந்நாட்டிற்கு இன்னும் என்ன பெருமை வேண்டும்? இஃதொன்றே போதும் எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியுள்ள கருத்து ஈண்டு நினைவு கூரத்தக்கது.


மெய்கண்ட தேவர்

சந்தான குரவர்

சைவ மதத்தில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்க வாசகர் ஆகிய நால்வரையும் ‘சமய குரவர் நால்வர்’ அல்லது ‘சமயாசாரியர் நால்வர்’ என அழைப்பது மரபு. அதுபோலவே, மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் நால்வரையும் ‘சந்தான குரவர் நால்வர்’ அல்லது ‘சந்தானாசாரியர் நால்வர்’ எனச் சைவர்கள் அழைப்பர். இந்தச் சந்தான குரவர் நால்வருமே தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பின் இருவரும் சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்; முன் இருவருமோ, முறையே கெடிலம் பாயும் திருக்கோவலூர் வட்டத்தையும் கடலூர் வட்டத்தையும் சேர்ந்தவர்கள். இந் நால்வர்க்குள்ளும் முதல் ஆசான் மெய்கண்ட தேவர். மெய்கண்டார் எனவும் இவர் அழைக்கப்படுவார்.

பிறப்பு

மெய்கண்டார், நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பெண்ணாகடம் என்னும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றினார். தந்தை பெயர் அச்சுத களப்பாளர். இவரை இவர் தாய் மாமன் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூருக்குக் குழந்தைப் பருவத்திலேயே அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். இவரது இளமைப் பெயர் ‘சுவேதவனன்’ என்பது.

மெய்யறிவு

சுவேதவனன் இளமையிலேயே மெய்யுணர்வு உடையவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள் இவர் தெருவில் விளையாடிக்கொண் டிருந்தபொழுது பரஞ்சோதி முனிவர் என்பார் இவருக்கு மெய்யறிவு கொளுத்தி ‘மெய்கண்டார்’ என்னும் சிறப்புப் பெயர் ஈந்து சென்றார். மெய்கண்டார் சைவசித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகளை ஆய்ந்துணர்ந்து ‘சிவஞான போதம் ‘என்னும் சிறந்த நூல் ஒன்று இயற்றினார்.

அறிவாசான்

மெய்கண்டார் குடும்பத்தாருக்கு, திருத்துறையூர்ச் சகலாகம பண்டிதர் என்பவர் குருவாவர். இவர் ஆதிசைவ அந்தணர் மரபைச் சேர்ந்தவர். குருவாகிய இவரிடம் அறிவுபெற மெய்கண்டார் செல்லவில்லை. அதனால் இவரே மெய்கண்டாரிடம் வராத காரணம் வினவச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவத்தைப் பற்றி மாணாக்கர் கட்கு விளக்கிக்கொண்டிருந்தார். ‘ஆணவம் எப்படியிருக்கும்’ என்று சகலாகம பண்டிதர் மெய்கண்டாரைக் கேட்டார். ‘இதோ இப்படித்தான் இருக்கும், என்று மெய்கண்டார் பண்டிதரையே சுட்டிக்காட்டினார். பின்னர்ப் பண்டிதர் உண்மை தெளிந்து மெய்கண்டார்க்கு மாணாக்கரானார். மாணவர் குருவாகவும் குரு மாணவராகவும் மாறியது வியப்பே. மற்றும், வேளாள மரபினர் ஒருவர், ஆதிசைவ அந்தணக் குருக்கள் மரபினருக்கு அறிவாசானாக (ஞானகுருவாக) விளங்கியது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மெய்கண்டார் சகலாகம பண்டிதர்க்கு மெய்யறிவு நல்கி அருள்நந்தி’ (அருணந்தி) என்னும் திருப்பெயரையும் சூட்டினார். இத்தகு சிறப்பிற்குரியவர் மெய்கண்டார். இவருக்கு அருணந்தி உட்பட மாணக்கர் நாற்பத்தொன்பதின்மர் இருந்தனர்.

மெய்கண்டார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி எனச் சொல்லப்படுகிறது.

அருணந்தி சிவாசாரியார்

இவர் கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டிக்கு வடமேற்கே 10கி.மீ. தொலைவிலுள்ள திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவ அந்தண மரபில் தோன்றினார். இவரது இயற்பெயர் சதாசிவம். இவர் பல்வகைக் கலைநூல்களையும் கற்றுப் பெரும் புலவராய் விளங்கியதால் ‘சகலாகம பண்டிதர்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

சகலாகம பண்டிதர், குலமரபுப்படி தம் மாணாக்கரான திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவரால் மெய்யறிவு கொளுத்தப்பட்டு அருள்நந்தி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் சந்தானாசாரியர் நால்வர் வரிசையில், மெய்கண்டாருக்கு அடுத்தபடி இரண்டாம் தகுதி உடையவர். இவர் இயற்றிய நூல்கள்: சிவஞானசித்தியார், இருபா இருபஃது என்பன. காலம் : பதின்மூன்றாம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது.

மனவாசகம் கடந்தார்

இவர் கடலூர் வட்டத்தில் கெடிலத்தின் வடகரையிலுள்ள திருவதிகையில் பிறந்தவர். இதனால், இவர் ‘திருவதிகை மனவாசகம் கடந்தார்’ என அழைக்கப்படுவார். முதல் சந்தான குரவராகிய மெய்கண்டாரின் மாணவருள் இவரும் ஒருவர். இவர் 1255ஆம் ஆண்டளவில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் ‘உண்மை விளக்கம்’ என்னும் உயரிய நூல் ஒன்று இயற்றியுள்ளார்.

வேதாந்த தேசிகர்

கெடிலம் ஆற்றின் கரையிலுள்ள ஒரே வைணவத் திருப்பதி திருவயிந்திரபுரமாகும். இங்கேதான் வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியார் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இயற்றினார். இவர் கெடிலக்கரையில் வாழ்ந்து பெருமையுற்றிருப்பினும், இவர் பிறந்தது பாலாற்றங்கரை. இவர் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாகிய துப்புல் என்னுமிடத்தில் அனந்த சூரி என்னும் பெரியாருக்கும் தோதாரம்பையார் என்னும் அம்மையாருக்கும் 1269ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இளமைப் பெயர், வேங்கடநாதன் என்பதாகும். இருபது வயதிற்குள் பல்கலை நூல்களும் பயின்று பெரிய அறிஞரானார். காஞ்சியினின்றும் வந்து திருவயிந்திரபுரத்தில் நிலையாகத் தங்கிப் பல்லாண்டுகள் இருந்தார். தமிழிலும் வடமொழியிலும் கைதேர்ந்த வேங்கடநாதர் அவ்விரு மொழிகளிலும் நூற்றுக்கும் மிக்க தரமான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய தமிழ்ப் படைப்புக்கள் ஆழ்வார்களின் உருட்பாடல்களுக்கு ஒப்பான பெருமையுடையவை எனவும், வடமொழிப் படைப்புக்களிற் பல காளிதாசன், வால்மீகி போன்ற மாபெரு வடமொழி அறிஞர்களின் படைப்புக்களோடு ஒத்த தகுதி உடையவை எனவும் போற்றப்படுகின்றன.

வேங்கட நாதர் தமிழ்மொழிக்காக ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரிய பெறுமானம் உடையது. தமிழில் பல நூல்கள் இயற்றியிருப்பதோடு இவரது தமிழ்த் தொண்டு அமைந்துவிட வில்லை; அதனினும் மிக்கது இவரது தமிழ்த் தொண்டு. இவர் செய்திருப்பது போன்ற செயல்களை இக் காலத்தினர் சிலர் ‘தமிழ் வெறி’ என்று கூட சொல்லக் கூடும். ‘வடமொழியே உயர்ந்தது - தமிழ் தாழ்ந்தது’ என்று பலர் எண்ணியும் பேசியும் எழுதியும் வந்த சூழ்நிலையில், “வடமொழிக்குத் தமிழ்மொழி எவ்வகையிலும் குறைந்ததில்லை; வடமொழி போன்றே தமிழ் மொழியும் மிகவும் உயர்ந்த மொழி; தமிழில் ஆழ்வார்கள் அருளியுள்ள பாடல்கள், வடமொழியிலுள்ள வேதங்களுக்கு ஒப்பான பெருமை உடையவை; அவை தமிழ் வேதங்கள் எனப்படும்” என்றெல்லாம் அடித்துப் பேசியும் எழுதியும் தமிழின் பெருமையை நிலைநாட்டினவர் வேங்கடநாதர். திருவரங்கப் பெருமான், இவரது தமிழ் அன்பையும் அறிவையும் அறிந்து வியந்து இவருக்கு ‘உபய வேதாந்தாசாரியர்’ என்ற விருதுப் பெயரை ஈந்ததாகக் கூறுவர். உபயம் என்றால் இரண்டு. அஃதாவது, ‘இருமொழிகளிலும் வல்ல வேதாந்த ஆசிரியன் என்பது அதன் பொருள். அதிலிருந்து இவர் வேதாந்த ஆசாரியர் எனவும் வேதாந்த தேசிகர் எனவும் அழைக்கப்படலானார். தேசிகர் என்றால் ஆசாரியர். தேசிகர் என்னும் பெயர் பொதுவாக ஆசாரியார்கள் அனைவர்க்கும் உரித்தான பெயர் என்றாலும், இவர் பிறந்தபின் இவரையே குறிக்கும் சிறப்புப்பெயராக மிளிர்கிறது. இஃதொன்றே இவர் பெருமைக்குப் போதிய சான்று பகரும்.

வேதாந்த தேசிகரின் தமிழ்த்தொண்டு இம்மட்டோடும் நின்று விடவில்லை. பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களைப் பூசனையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பலர் செய்த எதிர்ப்புகளுக்கிடையே, அவற்றைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என வாதிட்டு வெற்றியும் பெற்றார் வேதாந்த தேசிகர். இப்போது கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களும் நடமாடுவதைக் காணலாம். இவர் இன்னொரு புரட்சியும் செய்துள்ளார். தேவியைவிட்டுத் திருமாலை மட்டும் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தவர்களிடையே “திருமகளும் திருமால் போலவே வழிபடற்கு உரியவள், திருமகளும் சேர்ந்தே திருமால் தெய்வமாவார்; திருமகள் இல்லாத திருமால் வழிபாடு தெய்வ வழிபாடாகாது” என்ற உண்மையையும் (தத்துவத்தையும்) நிலைநாட்டினார். தேசிகர் பெண்ணின் பெருமையை மிகவும் உணர்ந்தவர் போலும்.

வடகலை வைணவர்கள் தேசிகரின் எல்லாக் கொள்கைகளையும் பின்பற்றுகின்றனர்; தென்கலை வைணவர்கள் ஒரளவு ஒப்புக் கொள்கின்றனர். நூறாண்டு வாழ்ந்த தேசிகர் இறுதி வரையும் இல்லறத்தாராகவே திகழ்ந்தார். இறையன்புக்குத் துறவறம் ஒன்றே ஏற்ற வழி என்பது இல்லை என இவரது வாழ்க்கையால் அறியலாம். வரதாசாரியர் என்னும் மைந்தர் ஒருவர் இவருக்கு இருந்தார். தேசிகர் பாரத நாடு முழுதும் பயணம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் 1369ஆம் ஆண்டு இறையடி எய்தினார். இவரைப் பற்றிய சிறப்புக்களை, குருபரம்பரை என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.

வேதாந்த தேசிகராலும் கெடிலக்கரை மிகுந்த பெருமை பெற்றுள்ளதன்றோ? இவர் வாழந்து வந்த இருப்பிடம், ‘வேதாந்த தேசிகர் மண்டபம்’ என்னும் பெயருடன் இவர் நினைவுக் குறியாகத் திருவயிந்திரபுரத்தில் திகழ்வதை இன்றும் காணலாம்.

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருவண்ணாமலையில் பிறந்தார். இப்போது வடார்க்காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருவண்ணா மலையும் திருவண்ணாமலை வட்டமும் (தாலுகாவும்) முதலில் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே அமைந்திருந்தன. மற்றும் தொன்று தொட்டு திருவண்ணாமலை நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்ததாகவே புலவர் பெருமக்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில், அருணகிரிநாதரும் இந்த நாட்டுப் பெருமக்கள் வரிசையில் இடம் பெற்று இந் நாட்டிற்கு மிக்க பெருமையளிக்கிறார்.

திருப்புகழ் என்னும் இயல் - இசைத் தமிழ்ச் செல்வத்தை நாட்டிற்கு வழங்கிய பெருமகனாரான அருணகிரிநாதர், வாழ்க்கையில் பட்டுத் தேறியவராகக் கருதப்படுகிறார். இளமையில் கூடாவொழுக்கம் கொண்டதால் குட்ட நோயுற்று வருந்தினார் எனச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலைக் கோயிலின் வடகோபுரத் தருகில் தவங்கிடந்ததாகவும் இறையருள் விரைவில் கிட்டாததால் கோபுரத்தின்மேல் ஏறிக் குதித்ததாகவும் முருகப்பெருமான் தாங்கி அருள்புரிந்ததாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

அருணகிரியார் ஆறுமுகக் கடவுளால் ‘முத்தைத்தரு’ என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுப் பாடத் தொடங்கினாராம். அவர் ஊர்தோறும் சென்று முருகன் மேல் பாடிய திருப்புகழ்ப் பாடல்களேயன்றி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய பாடல் நூல்களும் இயற்றியுள்ளார். பழைய காலப் படிப்பாளிகட்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தண்ணிர்பட்டபாடு. அருணகிரியார் சந்தப் பாடலுக்குப் பெயர் பெற்றவர். [4] ‘வாக்கிற்கு அருணகிரி’ என்பது ஆன்றோர் மொழி.

வில்லிபுத்தூரர்

பாரத இராமாயணக் கதைகள் இந்திய மக்கள் அனைவரும் அறிந்தவை. பாரதக் கதையைத் தமிழில் விருத்தப் பாவால் பாடியவர் வில்லிபுத்துரார் என்னும் பெருமகனாவார். கம்பர் பாடிய இராமாயணம் ‘கம்பராமாயணம்’ என அழைக்கப்படுதல்போல, வில்லிபுத்துரார் பாடிய பாரதம் ‘வில்லி பாரதம் என அழைக்கப்படுகிறது.

தமிழில் கம்பர் இராமாயணம் பாடியதுபோல் பாரதம் பாடிய பெருமைக்குரிய வில்லிபுத்துரார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூர் என்னும் ஊரில் வைணவ அந்தண குலத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் வீரராகவன். வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவராகிய பெரியாழ்வாருக்கு வில்லிபுத்துரார்’ என்னும் பெயரும் உண்டு, அவர்மேல் உள்ள அன்பினால் வில்லிபுத்துரார் என்னும் பெயர் இவருக்கும் சூட்டப்பட்டது. சுருக்கமாக இவரை ‘வில்லி’ எனக் குறிப்பிடுவதும் உண்டு.

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள வக்கபாகை என்னும் ஊரில் தோன்றிய கொங்கர்குலத் தலைவனாகிய வரபதியாட் கொண்டான் என்னும் குறுநில மன்னன் வில்லிபுத்துராரை ஆதரித்து வந்தான். அவனது வேண்டுகோளின்படி இவர் தமிழில் பாரதக் கதையைப் பாடினார். தம்மிடம் தோற்ற புலவரின் காதைக் குடைந்து அறுப்பது வில்லியின் வழக்கமாம். ‘குறும்பி யளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை’ என்னும் பாடற்பகுதி ஈண்டு நினைவு கூறத்தக்கது. ஆனால், இந்த வரலாறு எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இவர் திருவண்ணாமலை சென்றபோது அருணகிரி நாதரிடம் தோற்றுப்போனதாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

வில்லிபுத்துாராரைப் பற்றிய செய்திகள் சில, அவர் பாடிய பாரதத்தின் முற்பகுதியில் அவர் மகன் வரந்தருவார் என்பவரால் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ள சிறப்புப்பாயிரச் செய்யுட்களால் அறியப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு:

“நீர்வளம் நிலவளம் மிக்க திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் வீரராகவன் என்பார்க்கு மைந்தராக வில்லிபுத்துரார் பிறந்தார். இவர் பெரும் புலவராய் எங்கும் புகழ் பரப்பி வந்தார். இதே திருமுனைப்பாடி நாட்டில் வரபதியாட் கொண்டான் என்னும் வள்ளல் தோன்றியிருந்தான்; கொங்கர் குலக் குறுநில மன்னனாகிய இவன் வில்லிபுத்துராரை ஆதரித்து வந்தான். ஒருநாள் இவன் வில்லியாரை நோக்கி, ‘நீங்களும் நானும் பிறந்த திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெரும்புகழ் நிலைத்து நிற்கும் படியாகப் பாரதம் என்னும் பெரிய கதையைத் தமிழில் விருத்தப் பாவால் பாடியளிக்கவேண்டும்’ என வேண்டினான். வில்லியார் அவ்வாறே பாடியருளினார்.” இந்தச் செய்திகள் அடங்கிய பாரதச் சிறப்புப்பாயிரச் செய்யுட் பகுதிகள் வருமாறு :


"தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாடு’ (8)

“பண்ணை நீள்வளம் பல்குசீர்ப்
பழையநன் னாட்டில்

வண்ண நான்கினும் உயர்ந்துளோன்
ஒருமுனி வந்தான்” (14)

“தார காயண வண்டலை தண்டலைச் சனியூர்
வீர ராகவன் அருள்பெறு வில்லிபுத் தூரன்’ (17)

“எங்குமிவன் இசைபரப்பி வருநாளில்
யாமுரைத்த இந்த நாட்டில்

கொங்கர்குல வரபதியாட் கொண்டானென்
றொருவண்மைக் குரிசில் தோன்றி’’ (18)

“பிறந்துய்யக் கொண்டவனிப் பேருலகம்
பெருவாழ்வு கூரு நாளில்

நிறைந்தபுகழ்ச் சனிநகர்வாழ் வில்லிபுத்து
ரனைநோக்கி நீயு நானும்

பிறந்ததிசைக்கு இசைநிற்பப் பாரதமாம்
பெருங்கதையைப் பெரியோர் தங்கள்

சிறந்தசெவிக் கமுதமெனத் தமிழ்மொழியின்
விருத்தத்தாற் செய்க வென்றான்" (22)

வில்லிபுத்துாரார் பாரதம் செய்வதால், தாம் இருவரும் பிறந்த திருமுனைப்பாடி நாட்டிற்கு அழியாப் புகழ் நின்று நிலைக்கும் என வரபதியாட் கொண்டான் கூறியிருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வரபதியாட் கொண்டான் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. எனவே, வில்லியாரின் காலமும் அஃதே!

நல்லாற்றுர் சிவப்பிரகாச சுவாமிகள்

கோயில் பெருமை

நல்லாற்றுார் கெடிலம் பாயும் கடலூர் வட்டத்தில் கடலூருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் கடலூர்த் தொகுதியில் - கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இங்கே சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் அடிகளார் தங்கி அருட்பணி புரிந்து வீடுபேறடைந்துள்ளார். அடிகளாரின் திருவுடல் அடக்கம் (சமாதி) இங்கே உள்ளது. அடக்கத்தின்மேல் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். அதற்குச் சிவப்பிரகாச சுவாமி கோயில்’ என்று பெயர். ஆண்டுதோறும், அடிகளார் வீடுபேறுற்ற புரட்டாசி முழுநிலா (பருவம்) நாளில் திருவிழா நடைபெறும்.

சிவப்பிரகாச அடிகளார் ஒரு பெரிய கல்விக் கடல் எண்ணற்ற கற்பனைகள் மிக்க நூல்கள் பல இயற்றியுள்ளார்; அதனால், ‘கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இத்தகைய அருட்கலைச் செல்வரின் திருக்கோயிலை வலம்வந்து வழிபட்டால் அறிவிலிகள் நல்லறிவு பெறுவர். கல்வியில் பின் தங்கியுள்ளவர்கள் நல்ல திறமை பெறுவர் - பேசாத பிறவி ஊமையரும் பேசுவர் - என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடத்தில் பரவலாக உள்ளது. அதனால், தொலைவிலுள்ள வெளியூர்களிலிருந்தும் மக்கள் பேசாத ஊமைப் பிள்ளைகளை அழைத்து வந்து நல்லாற்றுாரில் திங்கள் கணக்கில் தங்கிச் சிவப்பிரகாசர் கோயிலைப் பல சுற்றுக்கள் வலம்வந்து வழிபடச் செய்து அழைத்துப் போகின்றனர். இந்த வழிபாட்டால் தக்க பயன் கிடைப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்தில் உள்ளவர்களும் - இந்த விவரம் அறிந்தவர்களும் எங்கேனும் ஒர் ஊமைப் பிள்ளையைக் கண்டு விட்டால், அந்தப் பிள்ளையின் பெற்றோரைப் பார்த்து, ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமி கோயிலுக்கு அழைத்துப் போகக் கூடாதா?’ என்று கேட்டுச் சிவப் பிரகாச சுவாமி கோயிலை அறிமுகம் செய்து வைப்பது இன்றும் வழக்கத்திலுள்ளது. நம்பிக்கை ஒரு பெரிய மருத்துவம் அன்றோ?

வரலாறு

இத்தகு சிறப்பிற்குரிய சிவப்பிரகாசர் காஞ்சிபுரத்தில் வீரசைவ மரபில் தோன்றினார். தந்தையார் குமாரசாமி தேசிகர். தம்பியர் வேலையர், கருணைப் பிரகாசர் என்னும் இருவர். தங்கை ஞானாம்பிகை. தம்பியர் இருவரும் தமையனைப் போலவே புலவர்கள். சிவப்பிரகாசர் திருவண்ணாமலை போந்து குருதேவர் என்னும் ஆசானிடம் கல்வி பயின்றார். பின்னர்த் துறைமங்கலம் என்னும் ஊரடைந்து அண்ணாமலை ரெட்டியார் என்பார் அமைத்துத் தந்த அறப்பள்ளியில் (மடத்தில்) தங்கி அறிவுப்பணி புரிந்து வந்தார். பின் திருநெல்வேலி சென்று வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் ஆசானிடம் இலக்கணம் பயின்று தேர்ந்த புலவரானார்; தம் ஆசானை எதிர்த்த புலவரொருவருடன் திருச்செந்தூரில் போட்டியிட்டு, ‘செந்தில் நிரோட்டக யமக அந்தாதி’ என்னும் நூல் பாடி வெற்றி பெற்றார்.

பின் சிவப்பிரகாசர் ஆசானிடம் விடைபெற்றுக் கொண்டு வெங்கனூர் வந்தடைந்தார். அங்கே சில காலம் தங்கிப் பின் தில்லை போந்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சியை வழிபடப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். வழியில் சாந்தலிங்க சுவாமிகள் என்பவர் வாயிலாக, புதுச்சேரிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள பொம்மபுரம் எனப்படும் பொம்மைய பாளையம் என்னும் அழகிய ஊரில் எழுந்தருளி யிருந்த சிவஞான பாலைய தேசிகர் என்னும் அருளாசிரியரைப் பற்றி அறிந்து அவரையடைந்து வழிபட்டு அவரது அருளாதரவைப் பெற்றார்.

நல்லாற்றுார்

பொம்மபுர ஆதீன அடிகளார்க்கு மயிலத்திலும் நல்லாற்றுாரிலும் அறப்பள்ளிகள் உண்டு. சிவப்பிரகாசர் நல்லாற்றுாரில் வந்து தங்கினார். அவரது வாணாள் முடிவுற்றதும் இங்கேயே. சிவப்பிரகாசர் எங்கோ பிறந்து இடையில் எங்கெங்கோ தங்கியிருப்பினும், இறுதியில் நிலையாக வந்து தங்கி வாழ்ந்து முடிந்தது கெடில நாட்டு நல்லாற்றுார் ஆதலின், இவர் ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள்’ எனப் பெயர் வழங்கப் பெற்றார். ‘துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்’ என்னும் பெயர் மறைய, நல்லாற்றுருக்கு அந்தப் பெருமை கிடைத்தது. எத்தனையோ ஊர்கள் இவரது திருமேனியைத் தாங்கியிருப்பினும், அதனை நிலையாகத் தன்னிடத்தே அடக்கம் செய்துகொண்டு கோயில் கொண்டுள்ள பெருமையும் இந்த நல்லாற்றுாருக்கே கிடைத்தது.

சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்

பெரும் புலமைச் சிவப்பிரகாச அடிகளார் பல நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:

சோண சைலமாலை, செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்க பரிபாடை, நால்வர் நான்மணிமாலை, சத மணிமாலை, சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதுது, சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு, சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம், சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி, கூவப் புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பழமலை யந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பெரிய நாயகியம்மை நெடுவிருத்தம், இயேசு மத நிராகரணம், நன்னெறி, சிவநாம மகிமை, தலவெண்பா, இட்ட லிங்க அபிடேக மாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சீகாளத்திப் புராணம் - இடைப்பகுதி முதலியனவாம்.

காலம்

சிவப்பிரகாச அடிகளாரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு எனச் சிலரால் கூறப்பட்டுள்ளது. இவர்தம் வாழ்நாளில், இத்தாலிநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து கிறித்துவம் பரப்பிய பெஸ்கி (Father Beschi) என்னும் வீரமாமுனிவருடன் சமயப் பிணக்குற்று ‘இயேசு மத நிராகரணம்’ என்னும் நூல் இயற்றி யிருப்பதாகத் தெரிகிறது. அந்த வீரமாமுனிவர் என்னும் வெள்ளைப் பாதிரியார் தமிழ் நாட்டில் கி.பி. 1710 முதல் 1747 வரை வாழ்ந்தார். எனவே, சிவப்பிரகாசரின் காலம், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்பது தெளிவு. இத்தனை பெரு நூல்கள் இயற்றிய கற்பனைக் களஞ்சியம் மொத்தம் வாழ்ந்தது முப்பத்திரண்டு ஆண்டுகள் தாம் என்பதை எண்ணும்போது உள்ளம் மிகவும் வேதனையுறுகிறது. இன்னும் பல்லாண்டுகள் இவர் வாழ்ந்திருப்பின், இன்னும் எத்தனையோ உயரிய நூல்கள் இயற்றியிருப்பாரே!
வடலூர் வள்ளலார்

உலகில் கோடிக்கணக்கான மக்கள் தோன்றுகின்றனர் வாழ்கின்றனர் - மறைகின்றனர். அவர்களுள் தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாய்மொழிப்படி புகழோடு தோன்றி வாழ்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் மிகச் சிலரேயாவர். அனைத்துலகையும் ஆட்டிப் படைத்த அரசர்கள், மாமல்லர்கள், மாபெருஞ் செல்வர்கள், இன்ன பிறரும் வரலாற்று நூல்களில் பொறிக்கப்பட்ட்தோடு நின்று மறைந்து விடுகின்றனர். ஆனால், வள்ளல்கள், சமய குரவர்கள், புலவர்கள், புரட்சி எழுத்தாளர்கள் ஆகியோர் மட்டும் என்றும் மறைவதில்லை.

பாரி, குமணன், நோபெல், ராக்பெல்லர் முதலிய வள்ளல்கள் தாம் செய்த அறங்களாலும், புத்தர், ஏசு, முகமது நபி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமய குரவர்கள் தாம் நிறுவிய திருநெறிகளாலும், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், காளிதாசர், சேக்சுபியர், விக்தோரிகோ முதலிய புலவர்கள் தாம் படைத்த இலக்கியங்களாலும், சுப்பிரமணிய பாரதியார், ரூசோ போன்ற புரட்சி எழுத்தாளர்கள் தம் புரட்சிக் கருத்துக்களாலும் மக்கள் உள்ளங்களில் என்றும் நின்று நிலைத்துள்ளனர். மாபெரும் புகழ்ச்சிக்கும் வணக்கத்திற்கும் உரிய இத்தனை தரத்தாரின் இயல்புகளும் சிறப்புக்களும் ஒரு சேரப் பெற்றுத் திகழ்ந்தவர் வடலூர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளாராவார். ஆம்! இவர் ஒரு வள்ளலாகவும் சமய குரவராகவும் புலவராகவும் - புரட்சியாளராகவும் மிளிர்ந்தார்.

இத்தகு மாபெரும் பெரியார் இராமலிங்கர், தென்னார்க்காடு மாவட்டத்தில் தில்லைக்கு வடமேற்கே உள்ள மருதூர் என்னும் ஊரில், இராமையா பிள்ளை - சின்னம்மை என்பார்க்கு 5-10-1823ஆம் நாள் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த இவர் தமையனார் ஆதரவில் இருந்து வந்தார். இவர் பள்ளிப் படிப்பில் போதிய திறமை காட்டாததால் தமையனார் கடிந்து கொண்டதுமுண்டு. இவர் தமையனாருடன் சென்னையில் இருந்தபோது, சென்னை முத்தியாலுப் பேட்டையில் தமையனார் ஆற்றவிருந்த சொற்பொழிவிற்கு அவர் வரமுடியாமற் போகவே, அவருக்குப்பதில் இவர் சென்று சிறந்த முறையில் சொற்பொழிவாற்றினார். அதிலிருந்து இராமலிங்கர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது. பின்னர், இவர் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்து தங்கினார்.

இராமலிங்கர் பலரது வேண்டுகோளின்படி தனக்கோட்டி யம்மையார் என்பவரை மணந்து கொள்ளினும் புளியம் பழமும் ஒடும்போல் இல்லறத் துறவியாகவே இருந்து வந்தார்.

இராமலிங்கர் எல்லா வகை உயிரினங்களிடத்தும் பேரன்பும் பேரிரக்கமும் கொண்டிருந்தார். உலகத்தை, சாதி - சமய வேறுபாடற்ற ஒன்றிய ஒரே சமுதாயமாக மாற்ற வேண்டுமென்று கனவு கண்டார். தம் கொள்கைகளை நிறைவேற்ற வடலூரில் ‘சத்திய ஞானசபை நிறுவினார்; ‘சத்திய தருமச்சாலை அமைத்தார்; ‘சமரச சன்மார்க்க சங்கம்’ ஒன்றும் உருவாக்கினார்.

வடலூர் கடலூர் வட்டத்தில், கடலூர் - விருத்தாசலம் போகும் வழியில் உள்ளது. அங்கே இராமலிங்க அடிகளாரால் அமைக்கப்பட்டுள்ள ‘சத்திய ஞானசபை’ தாமரை வடிவில் எண்கோணமுடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதிலே, அருளொளி வடிவினனான இறைவனை, ஏழு திரைகள் விலக்கி ஒளிக்காட்சியாயக் காணும் ‘ஒளிவழிபாடு நடைபெறுகிறது. பொதுவாக எல்லாத் திங்களிலும் வரும் பூச நாளிலும் - சிறப்பாகத் தைப்பூச நாளிலும் அங்கே திருவிழா நடைபெறும். தைப்பூசத்தில் நடைபெறுவதோ மிகப் பெரிய விழாவாகும்.

வடலூரில் சத்திய ஞானசபை அமைத்த வள்ளலார், அதற்கு அண்மையில் தெற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள மேட்டுக் குப்பம் என்னும் ஊரிலேயே தங்கியிருந்தார். அங்கே அவர் தங்கியிருந்த மனைக்குச் சித்திவளாகம் என்பது பெயர். அஃது எளிய குடில் வடிவில் இன்றும் திகழ்கிறது. இராமலிங்க அடிகளார் தம் வாணாளின் இறுதியில் (1874ஆம் ஆண்டு) ஒரு நாள் சித்தி வளாகத்தின் ஒர் அறைக்குள் புகுந்து காப்பிட்டுக் கொண்டதாகவும், பின்னர் வெளிவரவேயில்லை என்பதாகவும் சொல்லப்படுகிறது. மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம் கண்டீர் என்று சாகாக் கலையை உலகிற்கு அறிவுறுத்திய அடிகளார் சாகாப் பெருநிலை எய்தினார்.

திருவருட்பா

இராமலிங்க அடிகளாரின் மணாக்கருள் ஒருவராய தொழுவூர் வேலாயுத முதலியார் அடிகளார் அருளியுள்ள பாடல்களையெல்லாம் ‘திருவருட்பா’ என்னும் பெயரில் தொகுத்துள்ளார். திருவருட்பா என்பதற்கு, இறைவன் திருவருளால் எழுந்த பாடல் - இறைவன் திருவருளைப் பற்றிய பாடல் என்றெல்லாம் பொருள் விளக்கம் கூறப்படுகிறது.

திருவருட்பா ஆறு திருமுறைகளாகப் (Volumes) பகுக்கப்பட்டுள்ளது. அருட்பாவில் இயல்தமிழ்ப் பாக்களோடு கீர்த்தனம், கண்ணி, கும்மி முதலிய இசைத்தமிழ்ப் பாக்களும் உள்ளன. பாடல்களேயன்றி, சீவகாருணிய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் முதலிய இனிய உரை நடைகளும் அடிகளார் எழுதியுள்ளார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டுமானால், இராமலிங்க அடிகளாரையும் அவரது அருட்பாவையும் பற்றி அறியாத தமிழர் உலகில் இல்லை எனலாம்.

ஞானியார் சுவாமிகள்

இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் தமிழ் நாட்டில் “ஞானியார் சுவாமிகள்” என்றால், சிறுவர் முதல் முதியோர் வரை - கற்றவர் கல்லாதவர், தொழிலாளர், அரசாங்க உயர் அலுவலர், ஏழையர், செல்வர் முதலிய பலரும் அறிவர். அருள்மிகு சமயத் தலைவராயும், கற்றுத் துறைபோகிய பெரும் புலவராயும் தலைசிறந்த பேச்சாளராயும் திகழ்ந்த திருவருட் செல்வர் ஞானியார் அடிகள். அவர்களிடம் முறையே பாடங் கேட்டுப் பெரும் புலவரானவர்கள் நூற்றுக்கணக்கானவர். அடிகளாரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் புலமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர். அவர்தம் அருளுரைகளைச் செவிமடுத்து நல்லறமும் நல்லொழுக்கமும் உடையவராய்த் திகழ்ந்தவர்கள் நூறாயிரக் கணக்கானவர்கள்.

தமிழிலும் வடமொழியிலும் மிக்க புலமையும் ஆங்கிலத்தில் போதிய திறமையும் பெற்றுத் திகழ்ந்தவர் அடிகளார். கேட்பவர் உள்ளங்களைத் தம்பால் ஈர்த்துப் பிணித்து, நான்கு மணிநேரம் - ஐந்து மணிநேரம் சேர்ந்தாற்போல் தொடர்ந்து சொற்பொழிவாற்றும் பேராற்றல் படைத்தவர் அடிகளார். பெருந் தலைவர்கள் - பெரும்புலவர்கள் பலரும் அடிகளாரின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருநீறு பெற்றுப் பெருமையுறுவர். தமிழ்நாடு முழுவதும் அன்பராயினார் பலர், எங்கள் ஊருக்கு வரவேண்டும் - எங்கள் ஊருக்கு வரவேண்டும் என வேண்டி அன்புடன் அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றச் செய்து கேட்டு மகிழ்வர். அடிகளாரின் தலைமையில் பேசாத பெரும் புலவர்கள் இல்லை எனலாம்; அடிகளார் தலைமை தாங்கிப் பேசாத பெருங் கழகங்களும் இல்லை எனலாம்.

அடிகளார் இட்ட பணிகளை அன்புடன் செய்வதைத் தம் வாழ்நாளில் பெற்ற பெரும் பேறாகக் கருதியோர் பலர். அடிகளார்க்குத் தம் அன்புக் காணிக்கையாகப் பழ வகைகளைக் கூடை கூடையாகக் கொண்டுவந்து குவித்தவர் பலர். ஒருவரோ டொருவர் போட்டி போட்டுக் கொண்டு தாமே வலிந்து சென்று அடிகளார்க்கு விசிறி விசிறுவதைத் தம் பிறவிப் பெரும் பயனாகக் கருதி இறுமாந்தவர் பலர். மணிக் கணக்கில் அடிகளாரின் திருமுன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்து உரையாடி உவகைக் கடலில் திளைத்துச் செம்மாந்தவர் பலர்.

இத்தகு பெருஞ் சிறப்புகட்குரிய பெருமகனார் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே வாழ்ந்தார்?

பிறப்பு வளர்ப்பு

கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருநாகேசுரம் என்னும் திருப்பதியில், சீமுக ஆண்டு வைகாசித் திங்கள் நான்காம் நாள் (17-5-1873), வீரசைவ மரபினரான அண்ணாமலை என்னும் ஐயாவுக்கும் பார்வதி என்னும் அம்மையாருக்கும் திருமகனாராக அடிகளார் தோன்றினார். பெற்றோர் இட்ட பிள்ளைமைப் பெயர் பழநி என்பது. காவிரிக்கரையில் பிறந்த பழநி, பிறந்த ஆறு திங்களுக்குள் கெடிலக்கரைக்கு வந்துவிட்டார்.

கெடிலம் சுற்றி வளைத்துக்கொண்டு ஒடும் திருப்பாதிரிப் புலியூர் நகர் பற்றி முன்பே பேசப்பட்டுள்ளது. அந் நகரில் கோயில் தெருவில் ‘ஞானியார் மடாலயம்’ என்னும் ‘அருள்நெறியகம்’ ஒன்று உள்ளது. அவ் வருள்நெறியகத்தின் தலைவராய் (மடாதிபதியாய்) அப்போது ‘சிவ சண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் அடிகளார் வீற்றிருந்தார். இவர் நான்காம் பட்டத்து அடிகளாராவார். இவருக்கு முன்பு அருள் நெறியகத் தலைவராய் மூவர் வீற்றிருந்தனர். முதல் பட்டத்து அடிகளார் திருக்கோவலூரில் அருள்நெறியகம் அமைத்து அருளாட்சி புரிந்து வந்தார். அவர்கட்கு ‘ஆறுமுக சுவாமிகள்’ என்பது அருள்நெறிப் பட்டப் பெயர். திருக்கோவலூரிலுள்ள தலைமை நிலையத்திற்கு, செஞ்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், ஆரணி, திருப்பாதிரிப் புலியூர் முதலிய ஊர்களில் கிளை நிலையங்கள் ஏற்பட்டிருந்தன. அடிகளார் எல்லா ஊர் நிலையங்கட்கும் சென்று தங்கி வரினும், திருக்கோவலூரிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார். அவர்கள் இறுதி யெய்தியதும் அங்கேயே.

ஆறுமுக சுவாமிகட்குப் பின், இரண்டாம் முறை பட்டத்து அடிகளார் பெரும்பாலும் திருப்பாதிரிப் புலியூர் அருள் நெறியகத்திலேயே தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரையும் அடுத்தடுத்துப் பட்டத்திற்கு வந்த அடிகளார் அனைவரும் திருப்பாதிரிப் புலியூர் நிலையத்தையே தலைமை நிலையமாகக் கொண்டுவிட்டனர். இருப்பினும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார்மடம், ‘திருக்கோவலூர் ஆதீனம்’ என்றே இன்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

திருப்பாதிரிப் புலியூரில் அருளாட்சி புரிந்து வந்த நான்காம் பட்டத்து அடிகளார்க்கு, திருநாகேசுரத்தில் பிறந்த பழநியின் குடும்பத்தினர் உறவுமுறை உடையவர்கள். எனவே, அடிகளார், பழநியின் தந்தையைக் குடும்பத்துடன் பாதிரிப்புலியூருக்கு வந்து அருள் நெறியகத்தின் செயலாளர் பொறுப்பை ஏற்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவரும் ஆறு திங்களும் நிரம்பாத பச்சிளங் குழந்தை பழநியுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து பாதிரிப்புலியூரில் குடியேறினார்.

பட்டம் சூடுதல்

குழந்தை பழநி வளர்பிறையென வளர்ந்து வந்தது. தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறுவர் பழநிக்குக் கற்பிக்கப்பட்டன. 1889 ஆம் ஆண்டில் இளைஞர் பழநி பிரீ - மெட்ரிகுலேழ்சன் (Pre - Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது நான்காம் பட்டத்து அடிகள், தமக்கு உடல்நிலை மாறுபாடுற்று இறுதிநிலை அணுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்; பள்ளிப் படிப்பை நிறுத்திப் பழநிக்கு, விரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் மூன்றாம் நாள் (20-11-1889) துறவு (சந்நியாசம்) ஈந்தார்; ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் பட்டம் சூட்டினார்; ‘சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் பட்டப் பெயரும் ஈந்தார். நான்காம் பட்டத்து அடிகளார் இறையடி யெய்த, பழநி தமது பதினேழாவது வயதில் ஐந்தாம் பட்டத்து அடிகளாராகப் பதவியேற்றார்.

இளமையிலேயே துறவறமும் அருளாசிரியத் தலைமையும் ஏற்ற ஐந்தாம் முறை அடிகளார், மடத்துச் சோற்றை வளமாக உண்டுகொண்டு வறிதே தசை மூட்டையை வளர்த்துக் கொண்டிருக்கவில்லை; தக்க ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு தமிழ்மொழியையும் வடமொழியையும் பரந்த அளவில் பயின்று பெரும்புலமை பெற்றார்; தமது நேரம் முழுவதையும் நூல் ஆராய்ச்சியிலேயே ஈடுபடுத்தினார்.

அடிகளாரின் அருட்பணிகள்

கடல் நீரை முகந்து கறுத்துத் திரண்ட முகில்கள் பெருமழை பொழிவது போன்று, சிறக்கக் கற்றுத் தெளிந்த அடிகளார் கருத்துச் செறிந்த சொல் மழை பொழியத் தொடங்கினார். ஒரு மணிநேரம் பேசினாலே பெருமூச் செறிந்து மின்விசிறியைவிட்டு அகலாதிருக்கும் பெருமக்கள் நிறைந்த இவ்வுலகில், அடிகளார் ஒரே நாளில் ஒரே மூச்சாக ஐந்து மணிநேரம் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவது வழக்கம். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவார். யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றலாம் - ஆனால், கேட்பதற்கு ஆட்கள் வேண்டுமே! மக்கள் ஐந்து மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்பதென்றால், மிகவும் கவர்ச்சியான, சுவையான பயன்மிக்க கருத்துக்களை வரையாது வாரி வழங்க வேண்டுமல்லவா? அதைத்தான் அடிகளார் செய்து வந்தார்.

ஒரு நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி இரவு பத்து மணி வரையும் சொற்பொழிவாற்றுவதோடு அடிகளாரின் பணி அமைந்துவிட்டதா? இல்லையில்லை. நாடோறும் முற்பகலிலும் பிற்பகலிலும் இடையறாது மாறி மாறி வரும் மாணாக்கர்கட்கு மணிக் கணக்கில் பாடம் கற்பிப்பதில் அடிகளார் பொழுதைச் செலவிடுவார். மாணாக்கர் குழுவில் எளிய இளைஞர்களும் இருப்பர்; அரசாங்க உயர் அலுவலர்களும் இருப்பர். சொற்பொழிவாற்றும் நேரம் போக பாடங் கற்பிக்கும் நேரம் போக - எஞ்சிய நேரங்களிலும் இடையறாது பலர் வந்து அடிகளாருடன் உரையாடிக் கொண்டிருப்பர். ஒவ்வோர் உரையாடலும் ஒரு பாடம் போலவே - ஒரு சொற்பொழிவு போலவே சுவை மிக்கதாய் - பயன் நிரம்பியதாயிருக்கும். தமிழை அடிகளாரின் திருவாயிலிருந்து கேட்க வேண்டும். உரையாடும் போதும், வழுவற்ற கொச்சையில்லாத செவ்விய இலக்கண நடையிலேயே அடிகளார். பேசுவார். இத்தகு பயன் செறிந்த உரையாடல்களும் பாடங்களும் சொற்பொழிவுகளும் திருப்பாதிரிப் புலியூரில் மட்டுமன்று - அடிகளார் செல்லும் ஊர்களில் எல்லாம் நடக்கும். ஒராண்டல்ல - ஈராண்டல்ல - தமது வாணாள் முழுதும் அடிகளார் இந்த அருட்பணியை ஆற்றிவந்தார்கள்.

சைவமும் தமிழும் தழைக்க அடிகளார் பல ஊர்களில் தமது தலைமையில் பல கழகங்கள் தோற்றுவித்துள்ளார்கள். 1900ஆம் ஆண்டு மடத்தில் ‘வாணி விலாசசபை’ அமைத்தார்கள்; பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவர் வாயிலாக மதுரையில் 24-5-1901ஆம் நாள் தமிழ்ச் சங்கம் தோன்றச் செய்தார்கள்; சென்னை சைவசித்தாந்த மகா சமாசம் 7-7-1905ஆம் நாள் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்டது. திருப்பாதிரிப் புலியூர் உட்படப் பல விடங்களில் அடிகளார் மாநாடு நடத்தினார்கள்; பல கழகங்களின் ஆண்டு விழாக்களுக்கும் வெள்ளி விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கினார்கள். இவற்றுள், சென்னை சைவசித்தாந்த சமாசத்தின் மாநாடுகள், திருப்பாதிரிப் புலியூர்ச் சைவப் பெரியார் மாநாடு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளி விழா, புதுவைக் கலைமகள் கழக விழா - கோவல் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்கள் முதலியவை மிகவும் குறிப்பிடத் தக்கவை. புலியூரிலும் பிறவூர்களிலும் அடிகளாரின் தலைமையிலும் திருமுன்பும் சொற்பொழிவாற்றி அடிகளாரோடு தொடர்பு கொண்டு பெருமை பெற்ற பெருமக்கள் பலராவர்.

இப்படியொரு கல்விக் கடல் - அறிவுக் கதிர் - குணக் குன்று தன்னிடத்தே திகழக் கெடிலக்கரை நாடு மிகவும் கொடுத்து வைத்ததுதான்! கெடிலக்கரைக்குப் பெரும் புகழ் ஈட்டித்தந்த ஞானியார் அடிகளார் 1-2-1942இல் 69ஆம் வயதில் இறைவனடி எய்தினார்கள். அடிகளாரின் திருவுருவத் தோற்றத்தை முன் படத்திலும் முருகன் கோயிலுடன் கூடிய அவர்தம் திருமடத்தின் ஒரு பகுதியைப் பின்வரும் படத்திலும் காணலாம்.

பல்வேறு பெருமக்கள்

இதுகாறும் இப் பகுதியில், தன்னிடம் பிறந்தும் - வளர்ந்தும் - வந்து நிலையாகத் தங்கி வாழ்ந்தும் அருட்பணி புரிந்த பெருமக்களால் திருமுனைப்பாடி நாடு பெற்ற பெரும்பேறு விளக்கப்பட்டது. இஃதன்றி, தன்பால் அவ்வப்போது வந்து சென்ற பெருமக்கள் பலரால் திருமுனைப்பாடி நாடு பெற்றுள்ள பெருமைக்கும் குறைவில்லை. திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பட்டினத்தார் முதலிய பெருமக்கள் பலர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பல ஊர்கட்கும் வந்தருளி இறைவனை வழிபட்டுப் பாடல்கள் பல பாடி நாட்டிற்குப் பெருமையளித்துள்ளனர். சமயப் பெரியார்களாகிய இவர்களன்றி, திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்த புலவர் பெருமக்கள் பலரும் அண்டைப் பகுதிகளிலிருந்து வந்த புலவர் பெருமக்கள் பலரும் திருமுனைப்பாடி நாட்டு ஊர்களின் மேல் பல இலக்கியங்கள் இயற்றியருளி நாட்டின் புகழைப் பெருக்கியுள்ளனர். இவர்களேயன்றி, திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெருமை தேடித்தந்ததில் பல்வேறு கலைஞர்கட்கும் பங்கு உண்டு. அனைவருடைய புகழும் திருமுனைப்பாடி நாட்டின் புகழுடன் ஒருசேர வாழ்க!


  1. *பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - 146.
  2. *தென்னிந்தி சாசனங்கள் பக்கம் 29.
  3. *சுந்தரர் தேவாரம் - திருத்தொண்டைத் தொகை - 9.
  4. *தனிப்பாடல் திரட்டு, tதனிப்பாடல் திரட்டு - பொற்களந்தைப் படிக்கா சுத் தம்பிரான் பாடல்.