கேரக்டர்/‘சிக்கனம்’ சின்னசாமி

‘சிக்கனம்’ சின்னசாமி

சைக்கிள் என்ற நாமதேயத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஜங்கமப் பொருளுக்குப் பச்சை வர்ணம் ஒரு கேடு!

பெடலின் வலது பாதம் தேய்ந்து மாய்ந்து கழன்று விட்டதால், அந்த நஷ்டம் மரக்கட்டையால் ஈடு செய்யப்பட்டிருந்தது. 'லொடக் லொடக்' என்று சத்தம் போடும் பல், ஆடிப் போன பெல். காயலான் கடை 'வா வா' என்று அழைக்கும் கிழடு தட்டிப்போன தோற்றம்.

'கர்க்க்... சர்க்க்... கிறீங்...சர்ர்ர்...!'-அந்தச் சைக்கிள் ஒரு தபாலாபீஸ் முன்னால் போய் நிற்கிறது.

அதோ, அந்த அபூர்வ வாகனத்திலிருந்து கீழே இறங்கிச் செல்கிறானே அவன் வேறு யாருமில்லை, 'சிக்கனம்' சின்னசாமி தான்! வெளியே போகும்போது வரும்போதெல்லாம் போஸ்டாபீசுக்குள் நுழைந்து அங்கே சும்மா கொடுக்கப்படும் மணியார்டர் பாரத்தை வாங்கி வருவது அவன் வழக்கம்.

மணியார்டர் பாரத்துக்கு விலை கிடையாதல்லவா? இனாமாக எது கிடைத்தபோதிலும் சின்னசாமி அதை விட மாட்டான். அது மட்டுமல்ல; மலிவாக எந்தப் பொருள் எங்கே கிடைத்தாலும் வாங்கத் தவற மாட்டான். அந்தப் பொருள் தேவைதானா அவசியந்தானா என்பதைப்பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை கிடையாது. எப்போதாவது

உபயோகப்படாமலா போய்விடும்? காயலான் கடையிலும், மூர் மார்க்கெட்டிலும் அவன் வாங்கி வாங்கிச் சேகரித்து வைத்துள்ள பொருள்களைக்கொண்டே ஒரு பொருட்காட்சி நடத்திவிடலாம். அந்தச் சைக்கிள்கூட, பல பாகங்களைத் தனித் தனியாக வாங்கி, ரிப்பேர் ஷாப்பில் கொடுத்து உருவாக்கப்பட்டதுதான்.

காலையில் எழுந்ததும் சின்னசாமி டி.யு.சி.எஸ். வாசலில் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கு வரும் தினப்பத்திரிகையை இலவசமாகப் படித்துவிட்டு, அப்படியே கறிகாய் மார்க் கெட்டுக்குப் போய் ஒவ்வொரு கடையாக, காய்களின் விலையை விசாரித்து வாங்கி வருவான். அன்று மார்க்கெட்டில் எந்தெந்தக் காய்கள் மலிவு என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சின்னசாமி வாங்கும் கறிகாய்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

சின்னசாமி துணிகளைச் சலவைக்குப் போடமாட்டான். தானே துவைத்துத் தானே இஸ்திரி போட்டுக் கொள்வான். அந்த இஸ்திரிப் பெட்டிகூட அவனுடைய சொந்த 'மேக்' தான்!

மளிகைக் கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வந்தால் சாமான்கள் கட்டப்பட்டு வரும் காகிதங்களைக் கிழியாமல் மடித்து வைப்பதோடு சணல் கயிற்றையும் பத்திரமாகச் சுற்றி வைப்பான்.

தனக்கு வரும் தபால் கவர்களைக்கூட அவன் வீணாக்குவதில்லை. உறைகளைப் பிரித்து அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பின்பக்கத்தை குறிப்பு எழுத உபயோகப்படுத்திக் கொள்வான்.

ஞாயிற்றுக்கிழமை வந்தால் சின்னசாமியை ஏலக்கம்பெனி ஏதாவது ஒன்றில்தான் பார்க்கமுடியும். நூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருளை மிகத் துணிந்து ஐந்து ரூபாய்க்குக் கேட்பாள். சில சமயம் அவன் கேட்கும் விலைக்கே அவை சல்லிசாகக் கிடைத்து விடுவதும் உண்டு.



தெருவில் போகும்போது அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு போக மாட்டான். கீழே ஏதாவது கிடக்கிறதா என்றுதான் பார்த்துக்கொண்டு செல்வான். ஆணி, குடைக் கம்பி, இரும்புத் துண்டு எது கிடைத்தபோதிலும் அவற்றைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டுவந்து சேர்ப்பான்.

சின்னசாமி குற்றாலத்துக்குப் போகும் போதுதான் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். காரணம், குற்றாலம் அருவியில் எண்ணெய் ஸ்நானம் செய்வதென்றால் சீயக்காய்த் தூளுக்குச் செலவு கிடையாதல்லவா?

சின்னசாமியிடம் வெகு காலமாக ஒரு பழைய டைம்பீஸ் இருந்தது. ரயில் தண்டவாளத்தில் வைத்து நசுக்கி மோட்சம் கொடுக்கவேண்டிய அந்த வஸ்துவை அவன் தானாகவே ரிப்பேர் செய்து எப்படியோ ஓட வைத்துவிட்டான்.

கடிகாரம் பழுது பார்ப்பதற்கு வேண்டிய உபகரணங்களையும், கடியாரத்துக்கு வேண்டிய ஸ்பிரிங் முதலிய கருவிகளையும் எங்கெங்கோ அலைந்து கடை கடையாகத் தேடி, பேரம் பேசி விலைக்கு வாங்கி வந்தான்.

ஒரு சனிக்கிழமை அந்தக் கடியாரத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து எதிரில் பரப்பிக்கொண்டான். ஏதோ ஒரு ஸ்பிரிங்கை எடுத்து மாட்டினான். அதிலிருந்த பல் சக்கரங்களை கழற்றினான். வேறு இரண்டைப் பொருத்தினான், கடைசியில் பழையபடியே கடியாரத்தை மூடிச் சாவி கொடுத்து ஓட்டினான். சுடியாரம் ஓடத் தொடங்கிவிட்டது! ஆனால், என்ன ஆச்சரியம்! சாமான்களில் நாலு மிஞ்சிவிட்டன. அப்படியும் கடியாரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது! சின்னசாமிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சாமான்களிலும் நாலு மிஞ்சி, கடியாரமும் ஓடினால் மகிழ்ச்சி இருக்காதா?"

ஜெர்மன் டைம்பீஸ்; இப்போதெல்லாம் இந்த மாடல் வருவது கிடையாது, விலை கொடுத்தாலும் கிடைக்காது என்று பெருமையோடு சொல்லி மகிழ்ந்துகொண்டான் அவன்.

ஆனால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டைம்பீஸைப் பார்த்தபோது பெரிய முள் அப்பிரதட்சணமாகச் சுற்றிக் கொண்டிருந்தது!

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இப்போது சாமான்கள் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறான். பழைய ஹாரன், பல்பு ஒன்று மூர்மார்க்கெட்டில் மலிவான விலைக்குக் கிடைத்து விட்டது. விடுவானா? இனி மற்ற பாகங்கள் கிடைக்கவேண்டியதுதான் பாக்கி!

சிக்கனம் சின்னசாமிக்குச் சிக்கனமாக இரண்டே குழந்தைகள்தாம். தீபாவளி வந்தால் அந்தக் குழந்தைகளுக்குப் பட்டாசு, மத்தாப்பு எதுவும் வாங்கித் தரமாட்டான். அடுத்த வீட்டுச் சிறுவர்கள் வெடிக்கும்போது தன் குழந்தைகளை அங்கே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிவிட்டு வந்து விடுவான்!

அஸ்ஸாம் காடுகளில் மலிவாக யானை கிடைக்கிறது என்று யாரோ கூறினார்களாம். அஸ்ஸாமுக்குச் சைக்கிளிலேயே போய் யானையைத் தன் சைக்கிளின் பின்சீட்டில் உட்கார வைத்துக்கொண்டு வந்துவிடலாமா என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறான்!