கேரக்டர்/‘துக்ளக்’ துரைசாமி

‘துக்ளக்’ துரைசாமி

அந்தப் பங்களாவுக்குள் ஒரு சமயம் தென்றல் வீசும். ஒரு சமயம் புயல் அடிக்கும். ஒரு நாள் பங்களாவைச் சுற்றிலுமுள்ள தோட்டத்துச் செடிகளெல்லாம் 'குளுகுளுவென்று பசுமையாகப் பூத்துக் குலுங்கும். இன்னொரு நாள் தோட்டம் முழுதுமே ஒரு செடிகூட இல்லாமல் வெட்டப்பட்டுப் படு சூன்யமாகக் காட்சி அளிக்கும்.

மேற்படி பங்களாவுக்குச் சொந்தக்காரரான 'துக்ளக்—துரைசாமி'யின் மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறதோ அப்படியெல்லாம் பங்களாவின் சூழ்நிலையும் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்.

சிலசமயம் அவர் ஆனந்தத்தில் திளைத்திருப்பார். சில சமயம் கோபாவேசம் கொண்டு சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டிருப்பார்.

"யார்மீது கோபம்? எதற்காகக் கோபம்?" என்று ஒரு ஒருவராலும் ஊகிக்க முடியாது. 'எஜமானுக்குக் கோபம்', அவ்வளவுதான் தெரியும் வேலையாட்களுக்கு.

துரைசாமி டெலிபோனை எடுப்பார். "ஹல்லோ கல்கத்தா!" என்று கல்கத்தாவைக் கூப்பிடுவார். கல்கத்தா கிடைத்ததும் ஆங்கிலத்தில் அதைச் சக்கைப்போடாகப் போட்டுக் கதிகலங்க அடிப்பார். அவருக்குக் கோபம் வரும்

போது இங்கிலீஷ் வார்த்தைகள் நீர்வீழ்ச்சிபோல் வந்து விழுகிற அழகு இருகிறதே. அது ஒன்றே போதும்!

டெலிபோனில் பேசி முடித்துவிட்டு அவர் மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கி வரும்போது அந்தக் கட்டடமே கிடுகிடுக்கும்.

அப்புறம் ஒரு மணி நேரம் வரை அந்தப் பங்களாவில் ஒரு வித பயங்கர அமைதி நிலவும்.

எஜமானுடைய கோபம் அடங்கி அவர் சாந்தமாகப் பேசத் தொடங்கியதும், கடும் வெயில் வீசிய வான வெளியில் குளிர் நிலவு வீசத் தொடங்கியதுபோல் சூழ்நிலையோ அடியோடு மாறிவிடும். ஒரு சமயம் எரிமலையாகக் காட்சி அளிக்கும் துரைசாமி, ஒரு சமயம் பச்சை வாழைப்பட்டையாக மாறி விடுவார்.

அவருக்குக் 'குஷி' பிறந்துவிட்டாலோ சொல்லவேண்டியதில்லை. 'எல்லோரும் இன்று இராத்திரி மொட்டை மாடியில் உட்சார்ந்து தமாஷாக 'மூன்லைட் டின்னர்' சாப்பிடலாமா?" என்பார்.

"இன்றைக்கு அமாவாசை, நிலா இருக்காது" என்று யாராவது ஞாபகப்படுத்தினால், "அது எனக்குத் தெரியும்; மூன் இல்லாவிட்டால், மெர்க்குரி லைட்!" என்பார்.

அவரிடம் எதுவும் நிரந்தரம் கிடையாது. சிவன்போக்கு சித்தன் போக்கு என்பார்களே, அப்படித்தான்.

ஒரு சீசனில் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருப்பார். இன்னொரு சீசனில் சிகரெட்டைத் துறந்துவிட்டு வெற்றிலை சீவலாகப் போட்டுத் துப்பிக்கொண்டிருப்பார்.

வைத்தியத்திலும் ஒரேமாதிரி சிகிச்சை இருக்காது. இன்று அல்லோபதி, நாளை ஹோமியோபதி, மறு நாள் வாசஸ்பதி! அதற்கு அடுத்த நாள் சீதாபதி! பேசும் பாஷையும் அப்படித்தான்.

ஒரு சீசனில் தோட்டத்தைப் பார்த்தால் இங்கிலீஷ் குரோட்டன்ஸாயிருக்கும். இன்னொரு சீஸனில் அதெல்லாம் போய்ப் புடலும் வாழையும், அவரையும், கீரையுமாய்க் காணப்படும்.

வேறொரு சீசனில் மறுபடியும் குரோட்டன்ஸாக மாறி அவற்றுக்கு மத்தியில் ஒரு துளசி மாடமும் காட்சி அளிக்கும்.

ஆங்கிலோ இந்தியப் பெண்மணி புடவை கட்டிக் கொண்டதுபோல் இரண்டும் கலந்த விசித்திரக் காட்சி!

உணவு வகையிலும் இத்தகைய கலப்புகள் உண்டு. ரொட்டிக்குச் சாம்பார்! தோசைக்கு ஜாம்! இட்லிக்கு பெப்பர் அண்டு சால்ட் பவுடர்!

ஒருநாள் பால்காரன் லேட்டாக வந்தான் என்பதற்காக அவன் மீது கோபித்துக்கொண்டு சொந்தத்தில் இரண்டு பசு மாடுகளே வாங்கிவிட்டார்.

முளைக்கீரை வளர்த்துப் பசுமாட்டை மேயவிட்டால், பாலில் 'காவ்ஷியம் சத்து' அதிகமாகச் சேரும் என்று அவருக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவர் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்; அன்றே தோட்டத்திலிருந்த செடி கொடிகளையெல்லாம் துளசி மாடம் உள்பட வெட்டி எடுத்துவிட்டு தோட்டம் முழுதும் முளைக்கீரையாக விதைத்துவிட்டார். அந்த வைத்தியரையும் வீட்டோடு அழைத்து வந்து வைத்துக் கொண்டு முளைக்கீரை மேய்ந்த பசுவின் பாலினால் தயாரிக்கப் பட்ட காப்பியை வைத்தியருக்கும் கொடுத்துத் தாமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஒருநாள் சமையல்காரன் தோட்டத்தில் வளர்ந்திருந்த முளைக்கீரையைப் பிடுங்கி வந்து சமையல் செய்து விட்டான். அவ்வளவுதான்; துரைசாமிக்கு வந்து விட்டது கோபம்!

"மாட்டுக்கு வளர்த்த கீரையை என் உத்தரவு இல்லாமல் எப்படி சமையலுக்கு எடுத்து வரலாம்?" என்று ஆவேசம் வந்தவர்போல் பெருங் கூச்சலிட்டார், சமையல்காரன்

'டிஸ்மிஸ்' செய்யப்பட்டான். மூன்று நாள் ஒட்டலிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது. கடைசியில் துரைசாமிக்குக் கோபம் தணிந்ததும், "சமையல்காரனை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வரவேண்டும்?" என்று ஓர் உத்தரவு போட்டார்.

"அவன் பம்பாய்க்கு போய்விட்டானாம்” என்றார்கள்.

"பரவாயில்லை; உடனே யாராவது ப்ளேனில் புறப் பட்டுப்போய் அவனைக் கையோடு அழைத்துக்கொண்டு வரவேண்டும்" என்றார் துரைசாமி.

பாம்பாயில் தேடிப் பார்த்ததில் சமையல்காரன் அங்கு இல்லையென்று தெரிந்தது.

இவர் சமாசாரம் சமையல்காரனுக்குத் தெரியாதா என்ன? கோபம் தீர்ந்ததும் துரைசாமி எப்படியும் தன்னை அழைத்துப் போக ஆள் அனுப்புவார் என்று, அவன் சென்னை ஓட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்தான். கடைசியில், துரைசாமியின் ஆட்கள் சமையல்காரன் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து அவனைக் கையோடு அழைத்து வந்தார்கள்.

"அந்த வைத்தியர் வீட்டை வீட்டுத் தொலைந்தால்தான் நான் வருவேன்" என்று ஒரு நிபந்தனை போட்டான் சமையல்காரன்.

"வைத்தியர் என்ன? மாடு, கீரை, பயிர் எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறேன். நீ வா" என்றார் துரைசாமி.

வைத்தியர் போனதும் சமையல்காரன் திரும்பி வந்தான். தோட்டத்திலிருந்த கீரைப் பாத்திகளையெல்லாம் மாற்றி மறுபடியும் குரோட்டன்ஸ் போட்டாயிற்று!