கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்

7. நாட்டு நிலை-பல நினைவுகள்
(கடிதம் 7. காஞ்சி— 1-11-64)


தம்பி,

2—3—64

'நலிவுற்றுக்கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புதுவலிவு ஊட்டும் மருத்துவர்' என்று கொண்டாடப்படும் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர், எல்லா அரசியல் பிரச்சினைகளையும், சிக்கல்களையும், ஒதுக்கி வைத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மன்றத்திலிருந்து தி.மு.கழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன், என் புகழை நிலைநாட்டுகிறேன், என்று சூளுரைத்துவிட்டவர்போல, பம்பரம்போலச் சுழன்று, ஒருவார காலம், தேர்தல் காரியத்தைத் தாமே கவனித்தார்; மேடைகளிலே பேசுவது மட்டுமின்றி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கண்டு பேசினார், அவருடைய மிகப்பலமான முயற்சியை எதிர்த்து நின்று. தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெற்றுக் காட்டிற்று; முசுலீம் லீகும் சுதத்திரக் கட்சியும் துணை நின்று, மக்களாட்சி முறைக்குப் புதிய தெம்பு ஏற்படச் செய்துள்ளனர்; இந்த மகத்தான நிகழ்ச்சியையும், இதிலிருந்து பெறத்தக்க அரசியல் கருத்துக்களையும் எடுத்துக்கூற, திராவிட முன்னேற்றக்கழக அவைத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் பேசுகிறார்; அகில இந்திய முசுலீம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் கருத்துரை வழங்குகிறார்; சுதந்திரக் கட்சிச் செயலாளர் மாரிசாமி சொற்பொழிவாற்றுகிறார். கழகச் செயலாளர் நடராசன், சிற்றரசு, சத்தியவாணி ஆகியோருடன், கழகப் பொருளாளர் கருணாநிதியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லுரையாற்றுகிறார்கள். சென்னைக் கடற்கரையில், மிகப் பெரிய கூட்டத்தில். இதுபற்றிய செய்தியை, இந்நாட்டு இதழ்கள் எந்த முறையில் வெளியிட்டன என்பதை இன்று பார்த்த போது, உள்ளபடி மனம் நொந்துபோயிற்று. அரசியல் பண்பு இந்த அளவுக்கா பட்டுப் போய்விட வேண்டும். கழகம் வளருவதற்குத் துணைபுரியத்தான் மனமில்லை என்றாலும், வளர்ந்துவிட்ட கழகத்தை, அதன் வளர்ச்சியின் அளவுக்கு ஏற்ற விதத்திலாகிலும் மதிப்பளித்து, பண்புள்ள அரசியலை, இந்த இதழ்கள் உருவாக்க வேண்டாமா? என்பதை எண்ணி மிக்க வேதனைப்பட்டேன். தமிழகத்தில் தனிப்பெரும் எதிர்க் கட்சியாக வளர்ந்துவிட்டிருக்கிறோம், மாநகராட்சி தேர்தலில் வெற்றி ஈட்டிக் காட்டினோம் என்றால், அந்த அளவுக்குப் பொதுமக்களின் நல்லாதரவு தொடர்ந்து தி.மு. கழகத்துக்குக் கிடைத்துக்கொண்டு வருகிறது என்பதல்லவா பொருள்? இந்த நிலை அடைந்துள்ள கழகத்தை, இன்னமும் தங்கள் கோபப் பார்வையாலும், அலட்சியப் போக்கினாலும் புருவத்தை நெரிப்பதாலும், பொசுக்கிவிடலாம் என்று எண்ணுவது எத்துணை பேதைமை ! கழகத்தை இழிவுபடுத்துவதாக எண்ணிக்கொண்டு சில இதழ்கள் மேற்கொள்ளும் போக்கு, உள்ளபடி மக்களாட்சி முறையை, மக்களை, இழிவு படுத்துவது தானே! கழகத்துக்கு ஆதரவு தரும் பல இலட்சக் கணக்கான மக்களை, கேவலம் என்று கருதும் போக்குத் தானே இது? இதனை மக்கள் எண்ணிப் பார்க்கமாட்டார்களா? என்பது பற்றி எல்லாம், நாங்கள் இங்கு பேசிக்கொண்டோம்.

மொழிகாத்திடும் தூயநோக்குடன், தன்னைத்தானே தீயிலிட்டுக்கொண்ட தியாகச் செம்மல் சின்னசாமி பற்றி, நாலு நல்லவார்த்தை எழுதக்கூட மனம் வர வில்லையே இந்த இதழ்களுக்கு! தியாகத்தைக்கூட அல்லவா, பழிக்கிறார்கள் என்று எண்ணி, மிக்க வேதனையுற்றோம். நான் சொன்னேன், "இதழ்களில் சின்னச்சாமி இடம் பெறாமலிருக்கலாம்; ஆனால் தமிழ்உணர்வு உள்ளோர் இதயங்களிலெல்லாம் இடம்பெற்று விட்டான்—சின்னச்சாமி உயிருடன் இருந்த நாட்களில் கழகத்திலுள்ள பல இலட்சம் இளைஞர்களில் ஒருவன்—குறிப்பிடத்தக்க நிலையைக் கழகத்தில் பெற்றவனாகக் கூட இருந்ததில்லை—ஆனால் தியாகத்தீயில் குளித்த அந்தத் தீரன் இன்று கழக வரலாற்றிலே மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலேயே ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்டான்—இதழ்கள் அந்த இணையற்றவனைப் பற்றி எழுதாவிட்டால் என்ன, அவன் தன் பெயரை வரலாற்றிலே பொறித்துவிட்டான்" என்று கூறினேன்.

காங்கிரஸ், இயக்கம் நடத்திய நாட்களில், இதழ்கள் கொடுத்துவந்த சிறப்பிடத்தை விளக்கும் சம்பவங்களில், எனக்குத் தெரிந்த சிலவற்றை எடுத்துச் சொன்னேன். நம்முடைய இயக்கம் நடத்தும் அறப்போர்பற்றி, இதழ்கள் காட்டும் இருட்டடிப்பு மனப்பான்மை, நமது கழகத்துக்கு ஊறு உண்டாக்காது; ஏனெனில் நமது தோழர்கள் பலப்பல ஆண்டுகளாக இந்த இருட்டடிப்பைக் கண்டு, முதலில் வெகுண்டு, பிறகு அந்தப் போக்கைப் புரிந்துகொண்டு, இப்போது அதனைப்பொருட்படுத்தாத நிலையைப் பெற்றுவிட்டனர். நம்முடைய செய்திகள், நம்முடைய இதழ்களிலேதான், செம்மையான முறையிலே வெளியிடப்படும் என்ற பொது உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்; ஆகவே பத்திரிகைகளின் இருட்டடிப்பினால், கழகத்துக்கு எந்தக் கேடும் வந்து விடாது; ஆனால், இந்த இதழ்களிலே பல, இந்தி ஆதிக்கம் கூடாது என்ற கருத்துக்கொண்டுள்ளன; அந்தக்கருத்துக்கு மதிப்பு அளிப்பதானால், இந்தி எதிர்ப்பு உணர்ச்சி தமிழகத்திலே எவ்விதம் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை, இந்தி ஆதிக்கக்காரர்கள் உணரும்படியாக, செய்திகளை வெளியிடவேண்டாமா? அவ்விதம் செய்திகள் வெளிவந்தால்தானே டில்லி அரசு, மொழி விஷயமாகக் கொண்டுள்ள போக்கிலே மாறுதல் ஏற்படும்? ஏனோ இந்த இதழ்கள், இதனைக்கூட, உணர மறுக்கின்றன. விளக்கமளிக்கும், வாதத்தன்மை மிக்க ஆயிரம் தலையங்கங்கள் தீட்டி டில்லியின் போக்கை மாற்ற முயற்சித்தாலும் அடைய முடியாத வெற்றியை, இந்த இதழ்கள் தீக்குளித்த சின்னசாமியின் படத்தைத்தமது இதழ்களில் வெளியிட்டு, அந்தச் சம்பவம் காட்டும் பாடத்தை பண்டித நேரு உணரும்படி செய்திருந்தால், மொழிப் பிரச்சினையிலே மகத்தான வெற்றி ஏற்பட்டிருக்குமே! கழகத்தின் மீது உள்ள கசப்பினால்—காரணமற்ற கசப்பினால்—இதழ்கள் பெறவேண்டிய வெற்றியையுமல்லவா இழந்துவிட்டன—நாட்டுக்கே பெரிய நட்டமல்லவா இது, என்று பேசிக் கொண்டோம்.

இதிலிருந்து, எங்கள் பேச்சு, பொதுவாக இந்தி எதிர்ப்புப் பிரச்சினை பற்றித் தொடர்ந்தது. தமிழகத்திலே, ஆச்சாரியார் அமைச்சர் அவையின்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பின்போது, தமிழ்ப் புலவர்கள் பலரும் சீரிய பங்கெடுத்துக் கொண்டனர், இம்முறை அந்த அளவுக்கு இல்லையே. ஏன்? என்பதுபற்றி யோசித்தோம். அப்போது, உண்மைக்காகப் பரிந்து பேசுபவருக்கு உத்யோகம் போய்விடாது என்ற நிலைமை இருந்தது, இப்போது 'வணக்கம்' என்று கூறிடும் தமிழ் ஆசிரியர்களுக்கே, வந்தது ஆபத்து என்ற நிலை இருக்கிறதே, அதனால்தான், அவர்கள் மனம் எவ்வளவு துடித்தாலும், இந்தி எதிர்ப்பிலே ஈடுபட முடியாது இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிவிட்டு, இந்த நிலையிலும், ஒளவை, துரைசாமி போன்ற அருந்தமிழ்ப் புலவர்கள், தீக்குளித்த சின்னசாமி குறித்து எழுச்சியுடன் பாடல் புனைந்து வெளியிட்டுள்ளனர். அந்தப் பாடல்களைப் பன்முறையும் படிக்கலாம், படிக்கப், படிக்க, பட்ட மரம் துளிர்ப்பது போல, மொழிப் பற்று அற்ற நிலை பெற்றவர்கட்கும் மொழி ஆர்வம் ஏற்படும் என்று சொன்னேன்.

மாலையில், கழக உறுப்பினர்கள் சேர்ப்பது, அமைப்புகளில் புது முறுக்கு ஏற்படுத்த வழி காண்பது, மாநாடுகள் நடத்துவது ஆகியவைபற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கழகம் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் ஒருவர் செயலாளராகப் பணியாற்றுவது, அனேகமாக இயலாததாகிவிடுகிறது, இனி வட்டச் செயலாளர்கள் அதிக பொறுப்புகள் அளிக்கப்பட்டு, பணியாற்ற நமது கழக விதி முறைகளில் வழி செய்யவேண்டும் போலத் தோன்றுகிறது என்று நான் கூறி, இதுபற்றி நன்றாக யோசித்து, நல்ல கருத்துகளைத் தாருங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக் கொண்டேன். கிளைக் கழகங்களுக்கும் துணை மன்றங்களுக்கும் உள்ள தொடர்புகள் சில இடங்களில் அந்தத் தொடர்பு பலனைத் தரும் முறையில் இருப்பது, சில இடங்களில் வெறும் போட்டிக்குக் களமாக இருப்பது, ஆகியவை பற்றிப் பேசினோம். இரண்டு நிலைகளுக்கும் எடுத்துக் காட்டுகள் உள்ளன என்பது, பேசும்போது நன்றாகப் புரிந்தது.

இன்று மாலை, பரிமளம் என்னைக் காணவரக் கூடும் என்று எதிர்பார்த்தபடி இருந்தேன். வரவில்லை.

வெங்காவைக் காண அவர்கள் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பரிமளம் வராமற் போனதுபற்றிய வருத்தம், வெங்கா, தன் வீட்டாரைக் காணச் சென்றபோது, அதிகமாயிற்று, ஒரு கணம். பிறகு நானே வெட்கப் பட்டுக்கொண்டேன். என்னைவிட எவ்வளவோ இளமைப் பருவத்தில் உள்ளவர் வெங்கா. அவருக்கு ஆவல் எழுவதை விட, எனக்கு எழுவது கூடாதல்லவா! ஆகவே, சரி, இன்று இல்லாவிட்டாலும், நாளை பரிமளம் வரக்கூடும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

நாளையத்தினமிருந்து.நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வது என்று ஏற்பாடாகி இருக்கிறது. அதற்கான பாத்திரங்கள் தரப்பட்டுள்ளன.

நாளைக் காலையில் 'பைல்'—அதாவது கைதிகளை அதிகாரிகள் வரிசையாக நிற்கவைத்துப் பார்வையிடும் நாள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தத் 'திருநாள்'.

நான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, இன்று, உறவினரைக் காணச் சென்ற, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியைக் கண்டேன். சிரித்த முகத்துடன் தான் காணப்பட்டார்—ஆனால் மனதுக்குள் என்னை நிச்சயமாகத் திட்டிக்கொண்டிருந்திருப்பார்!

மெத்தவும் ஒதுங்கிப்போகும் ஆசாமி! இந்தத் தேர்தலிலேயே, நான் வலுக்கட்டாயப்படுத்தி, அவரை நிற்கச் செய்தேன்; நமக்கு எதற்கு, நமக்கு வேண்டாம், என்று ஒதுங்கிவிடுபவரை, தேர்தல் களத்திலே இறக்கிவிட நான் வெகுபாடுபட்டவன். அத்தகைய ஆசாமி, சிறையில்? அவரோ, அவருடைய குடும்பத்தினரோ, கனவிலேகூட இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்தே இருக்கமாட்டார்கள். அவருடைய மைத்துனர், ஏ! அப்பா! பெரிய காங்கிரஸ்காரர்!! அமைச்சர் பக்தவத்சலத்தின் பல வலது கரங்களில் ஒருவர். ராமசாமி சிறைபுகும் அளவுக்கு நான் அவரைக் கெடுத்துவிட்டேன் என்றுதான் அவர்களெல்லாம் எண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையைச் சொல்லுகிறேன், சிறைக்குச் செல்லும்படி நான் ராமசாமியிடம் கூறினதே இல்லை. மொழி ஆர்வத்தால் எழுந்துள்ள சூழ்நிலை வேகம், அவரை, இங்குக்கொண்டு வந்து தள்ளிவிட்டது—அவ்வளவே.

மாநகராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற லோகநாதன், இங்கு இருக்கிறார், அல்லவா! அவரை இன்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அதிகாரியிடம், அதற்கான அனுமதியை அவர் எப்படியோ பெற்றிருக்கிறார். அவரைக்காண, இன்று என்னை, வேறோர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். 'சி' வகுப்பு உடையில் லோகநாதன் இருந்தார்—நானும் கைதி உடையில் தான்—அவர் அரைக் கை, அரைக் கால்—எனக்கு முழுக் கை: முழுக் கால் சட்டை! என்னைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டு, காலைத்தொட்டு வணக்கம் செய்தார்—என் மனம் மெத்தவும் உருகிவிட்டது. சில விநாடிகள் பேசிக் கொண்டிருந்தோம். 'கார்ப்பரேஷன் கவுன்சிலர்' ஆகிவிட்டதால், ஒரு சமயம் இன்னும் ஒரு வாரத்தில், 'பி' வகுப்பு தரப்படக்கூடும் என்று நான் சொன்னேன் —"பரவாயில்லை அண்ணா! இன்னும் சில மாதங்கள்தானே—'சி' வகுப்பிலேயே இருந்துவிடுகிறேன்" என்று லோகநாதன் சொன்னபோது, எத்துணை எழுச்சியும் கடமையுணர்ச்சியும் கொண்ட பண்பாளர்கள் இந்தக் கழகத்திலே இருக்கிறார்கள் என்பது பற்றி எண்ணிப் பெருமிதமடைந்தேன். அந்த மகிழ்ச்சியுடன், இன்று துயிலச் செல்கிறேன்—காலையிலே எழுந்து ஒழுங்காகக் கைதி உடை உடுத்திக்கொண்டு, அடக்கமாக, வரிசையில் நிற்கவேண்டுமே—கைதி என்பதற்கான பில்லையுடன்.

3—3—64

இன்று ‘கைதிகளை’ சிறை அதிகாரிகள் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்பு நான் சிறைப்பட்டிருந்தபோது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நினைவு வந்தது. இம்முறைதான், சிறையில் புதிய நிர்ப்பந்தங்களாயிற்றே—ஆகவே, நானும் மற்றக் கைதிகளுடன் வரிசையில் நின்றேன். சிறை அதிகாரிகள் நடத்தும் இந்தப் பார்வையிடும் நிகழ்ச்சி, ஓரளவு 'ராணுவ' முறைபோலவே அமைந்திருக்கிறது. கைதிகளின் உடைகள், பயன்படுத்தும் தட்டுகள் குவளைகள் இவைகள் ஒழுங்காக்கப்பட்டு, கைதிகளும் 'சுத்தமாக' இருக்கும் நிலை ஏற்படுகிறது. மிக முக்கியமாக, கைதிகள் தங்களுக்குத் தரப்பட்டுள்ள எண் குறிக்கப்பட்டுள்ள பில்லைகளை பளபளப்பாக்கிக் கொள்கிறார்கள். எனக்குத் தரப்பட்டுள்ள 'பில்லை'யின்படி நான் கைதி எண் 6342, சுந்தரம் 6343, பொன்னுவேல் 6344, வெங்கா 6345, பார்த்தசாரதி 6346—ஐவரல்லவா அறப்போரின் முதல் அணி! இன்று சுந்தரம் 'முகக்ஷவரம்' செய்து, கொள்ளாதிருந்தது கண்டு சிறை மேலதிகாரி, வேடிக்கையாக, "என்ன திருப்பதி போகப் போகிறீரா?" என்று கேட்டுவிட்டுச் சென்றார்.

வழக்கமான நிகழ்ச்சிகள் பிறகு தொடங்கின.

அன்பழகன், முன்னாள் இரவு திருக்குறள் ஆராய்ச்சி நடத்தியதில் சில பற்றி எடுத்துரைத்தார். 'பலர் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்கள் என்றாலும், நுண்ணறிவுடன் மேலும் பல உரைகள் எழுதுவதற்கான வாய்ப்பும் தேவையும் இருக்கிறது' என்பது, அன்பழகன் பேசும் போது தெரிகிறது. பொதுவான 'உரை'யில், ஒருவர் எழுதுவதற்கும் மற்றவர் எழுதுவதற்கும் அதிகமான அளவு மாறுபாடு இல்லை—இருக்க முடியாது—என்றாலும், சில இடங்களில், சிறப்புரையும் புதுமை உரையும் பெற வழி இருக்கிறது. ஏனோதானோ வென்றோ, எடுத்தேன் கவிழ்தேன் என்றோ, வலிந்து பொருளையும் கருத்தையும் திணித்தோ உரை எழுதக்கூடாது. புதுமைக் கருத்து கூறுவதாயினும், பொருத்தம் பார்த்து, கற்றோர் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என்று கூறத்தக்க முறையில் அமைய வேண்டும் என்பதிலே, அன்பழகன் மிகுந்த அக்கறை காட்டுகிறார்.

குறளில் வரும் "தென்புலத்தார்' எனும் கருத்து குறித்துப் பேசத் தொடங்கிய நாங்கள், தமிழர்கள் பிறநெறியை எப்போது, ஏன், எவ்வகையில் கொண்டனர் என்பதுபற்றி ஆராயலானோம். தமிழக வரலாற்றுத் துணுக்குகள் பற்றிய பேச்சு சுவை அளிப்பனவாக இருந்தன.

நான்கு நாட்களாக, படித்துக் கொண்டிருக்கும் சட்டம் பற்றிய வரலாற்று ஏடு பற்றிக் குறிப்பிட்டு, மனுதர்ம சாஸ்திரம் சட்ட திட்டங்களைக் குறிப்பிடுவதுபற்றியும், அதிலே உள்ளவைகள் சாதி ஆதிக்கத்துக்குத் துணை செய்வதாக இருந்தபோதிலும், சட்டம் அந்த நாட்களில் எந்த முறையில் இருந்தது என்பதை அறிய வாய்ப்பளிக்கிறது என்பதையும் எடுத்துக்கூறி, தமிழகத்தில், சட்ட திட்டம் இவ்வாறு இவ்வாறு இருந்தது என்பது தெரியத்தக்க விதத்தில் ஒரு தனிநூல் இல்லையே என்று கூறினேன். சங்க காலத்தில், நீதி, சட்டம், இவை எங்ஙனம் இருந்தன என்பதுபற்றி, சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பழனிச்சாமி எனும் நண்பர் ஆராய்ந்து கொண்டிருப்பதாக மதியழகன் சொன்னார். மிகத் தேவையான ஆராய்ச்சி! பழனிச்சாமி அதற்கான நூல் வெளியிட்டால், மிக்க பயன் அளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

'மனுநீதிகண்ட சோழன், மனு தர்ம சாஸ்திரத்தை மேற்கொண்டு நடந்தானென்று தெரிகிறதே, அப்படியாயின் மனு தர்மத்தைத் தமிழ் அரசு ஏற்றுக்கொண்டு விட்டதாகத்தானே பொருள்படுகிறது' என்று மதியழகன் கேட்டார். அன்பழகன் "உள்ளபடி ஆராய்ந்து பார்த்தால் அந்தச் சோழன். மனு தர்மத்தின்படி நடக்க வில்லை என்பது தெரியும். கன்று, தேர்க்காலில் சிக்கி இறந்ததற்கு, மனு போன்றார் கூறிடும் 'தர்மம்', பொன்னாலே கன்று செய்வித்து, அதனைப் 'பிராமணர்களுக்கு' தானமாகத் தருவதுதான்; ஆனால் மன்னன் அதைச் செய்ய வில்லை; மகனையே தேர்க்காலின் கீழ் இருந்து இறந்திடக் செய்தான்" என்றார். மனுநீதி கண்ட சோழன் என்று கூறுவதைவிட, மனுநீதி கொன்ற சோழன் என்பதே பொருந்தும் என்றார். எனக்கு இது சாமர்த்தியமான சமாதானமாகப் பட்டதேயன்றிச் சரியான விளக்கமாகப் படவில்லை. நான் சொன்னேன், "நமது முன்னோர்கள், பழந் தமிழர்கள், பிறநெறியாளரின் முறைகளை, ஆரிய சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆகவே அவை நமக்கு இப்போதும் வேண்டாம் என்று வாதாடி, எவரேனும் ஒருவர், ஏதேனும் ஓர் ஏட்டிலே ஒரு இடத்தை விளக்கிக்காட்டி, நீங்கள் கண்டிக்கும் முறைகளைத் தமிழர்கள் முன்பு கொண்டிருந்தனர் காணீர் என்று இடித்துரைத்து, நாம் அதற்கு ஒரு சமாதானம் தேடிக்கொண்டு இருப்பதைவிட, தேவையற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, நெறிமுறை, சட்டதிட்டம் முன்பே தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருந்தாலும், அவை நமக்கு வேண்டுவதில்லை என்று கூறுவது தான், வீணான சிக்கலுக்குள் நம்மைச் சிக்கவைத்துக் கொள்ளாத முறை. நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சில முறைகள் முன்பே இருந்தனவா இடையிலே நுழைந்தனவா என்பதுபற்றி அல்ல; அவை தேவையா வேண்டாமா என்பதுதான்" என்று கூறினேன்.

பிறகு, வழக்கம் போல், இதழ்கள் தரப்பட்டன; அவைகளைப் படித்து, செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

சின்னச்சாமியின் தியாகம்பற்றி, நமது கழகத்தோழர் ராமசாமி சட்டசபையில் பேசியிருந்ததைப் படித்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது. மற்றோர் இளைஞன் இதுபோலச் செய்யப்போவதாக அறிவித்திருந்ததாகச் செய்தி கண்டேன்; திடுக்கிட்டுப் போனேன். இருந்து அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்; இறந்து விடுதல் தேவையற்ற முறை; அத்தகைய எண்ணம் ஏற்பட விடக்கூடாது" என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன்.

வேறோர் இளைஞன் சட்டமன்ற நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, என்னை விடுதலை செய்யவேண்டும் என முழக்கமிட்டதாகவும், அதற்காகக் கைது செய்யப்பட்ட தாகவும் பத்திரிகையில் கண்டேன். இதுவும் தேவையற்ற செயல். நானும் நண்பர்களும், சிறையில் அடைபட்டுக் கிடப்பதன் மூலம், தமிழர்களின் சிந்தனையைக் கிளறி, மொழி ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியை எழச் செய்யலாம் என்று நம்பி, கம்பிகளுக்குப் பின்னால் கிடக்கிறோம். மொழி ஆதிக்கத்தின் கேடுகளை மற்றவர்கள் உணரும்படியாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுவது முறையேயன்றி, எங்களை 'விடுதலை' செய்யச் சொல்லி முழக்கமிடுவதும், கிளர்ச்சி செய்வதும் முறையுமல்ல, தேவையுமில்லை.

தூத்துக்குடியில் அரசியல் சட்டத்தைக் கொளுத்திய இளமுருகுபொற்செல்வி குழுவினரின் வழக்கு, மிகத் துரிதமாக முடிவுற்றது, மகிழ்ச்சிகரமானசெய்தி. ஆறுமாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இளமுருகு ஆசிரியராகப் பணியாற்றியவர்; பொதுத்தொண்டில் நீண்டகாலமாக உள்ளவர். அவருக்கு 'சி' வகுப்புதான் என்று விதித்திருப்பது, நாம் காங்கிரசாட்சியில் இருக்கிறோம் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

இன்று பிற்பகல், நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டின்படி சமையலுக்குத் தேவையான பண்டங்கள் எவ்வளவு அளிக்கப்படும் என்பதற்கான் 'பட்டியல்' பார்த்தசாரதியிடம் தரப்பட்டது. பட்டியலைக் காண்பதற்காகத் தந்திருக்கிறேன். எங்கள் எழுவருக்கு இரண்டு வேளை சாப்பாட்டிற்கும் காலை சிற்றுண்டிக்கும் சேர்த்து,

கிலோ கிராம்

அரிசி

1—610

கோதுமை

0—805

பருப்பு

1—190

புளி

0—210

மிளகாய்த் தூள்

0—140

உப்பு

0—280

வெங்காயம்

0—210

காய்கறி

1—610

உருளைக்கிழங்கு

0—420

கடுகு

0—070

மிளகு

0—070

நல்லெண்ணெய்

0—210

சர்க்கரை

0—210

காபிதூள்

0—105

பால்

லிட்,2—094

நிலக்கடலை

0—420

நெய்

0—210

விறகு

0—370

இன்று மாலை சிறை மேலதிகாரி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாளையத் தினம், சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியை எங்களோடு கொண்டுவந்து சேர்த்து விடப்போவதாகக் தெரிவித்தார். நமது கழகத் தோழர்களின் எண்ணிக்கை செங்கற்பட்டு மாவட்ட அறப்போர் வீரர்களின் வருகையால் வளருகிறது. இப்போது நாங்கள் இருக்கும் 'பகுதி' இனிப் போதாது என்று தெரிகிறது. இன்னும் சில நாட்களில் வேறு பகுதிக்கு மாற்றுவதாக மேலதிகாரி தெரிவித்தார்.

இன்று மாலையும் பரிமளம் வரவில்லை; எதிர்பார்த்திருந்து, ஏமாற்றமடைந்தேன்.

சட்டப் புத்தகம் படித்துக் குறிப்பெடுத்தேன்—'வரவு—செலவு' என்ற சிறுகதை ஒன்றும் எழுதினேன்.

நிரம்பப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன; கிடைக்கும் வழிதான் தெரியவில்லை!

வெளியிலேயே, நான் இரவு நீண்ட நேரம் தூக்கம் பிடிக்காமல் விழித்திருப்பது வாடிக்கை. சிறையில் சொல்ல வேண்டுமா? இரவு இரண்டு மணி வரையில் படித்துக் கொண்டிருக்க ஏடு தேவை! கிடைப்பதில்லை! கிடைக்கும் ஏடுகளை, பண்டங்களைச் சிறுகச்சிறுக உபயோகப்படுத்துவது போல, ஒரேயடியாகப் படித்து முடித்துவிடாமல், விட்டு விட்டுத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறையில்—குறிப்பாக நான் இருக்கும் பகுதியில், எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் —நானோ துயிலலாம் என்று படுக்கையில் படுத்தாலும், தூக்கம் பிடிக்காமல், புரண்டபடி இருக்கிறேன். விளக்கு எப்போதும் எரிந்தபடி இருப்பதால், பக்கத்திலேயே புத்தகமும் மூக்குக்கண்ணாடியும் வைத்துக் கொண்டிருக்கிறேன், தூக்கம்வர மறுக்கிறது என்றால் படித்திட. படிக்காமல், படுத்திருக்கும் நேரத்திலெல்லாம், வெளியே உள்ள நமது தோழர்களைப்பற்றி எண்ணியபடி இருக்கிறேன்.

4—3—64

சட்டசபை உறுப்பினர் ராமசாமி இங்கு கொண்டு வரப்பட்டதால், இன்று என் அறையில் தோழர்கள் பொன்னுவேல், வெங்கா இருவரும் தங்கியுள்ளனர். இருவருமே, அதிகமாகப் பேசும் பழக்கம் உள்ளவர்கள் அல்ல. வேலூர் சிறையில் பொன்னுவேல் என்னுடன் ஒரே அறையில் இருந்திருக்கிறார். நாங்கள் வேலூரில் இருந்த போது, பிரிவினைக் கொள்கையை ஒடுக்க, சர்க்கார் மேற் கொள்ளப்போகும் திட்டம்பற்றிய செய்திகள் இதழ்களில் வந்திருந்தன. பல இரவுகள் அதுகுறித்து நான் பேசி வந்தேன். மாணவர்கள், கொள்கைத் துடிப்புள்ள இளைஞர்கள் ஆகியோருடைய நோக்கம், கருத்து குறித்து பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசுவார். பல இரவுகள் இந்தப் பிரச்சினைபற்றி வேலூர் சிறையில் பேசிப் பேசி, தெளிவும் நடைமுறைக்கு ஏற்றவை எவை என்பது பற்றிய வேலைத்திட்ட விளக்கமும் கிடைக்கப்பெற்றோம். பொன்னுவேல்—வெங்கா போன்றவர்கள் இளைஞர்கள். மணவாழ்க்கையின் பொலிவுகளையும் பொறுப்புகளையும் மேற்கொள்வதிலே ஆர்வம்கொள்ளவேண்டிய வயதினர். ஆனால் மொழிப்பற்றும், ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியும் அத்தகையவர்களைச் சிறைபுகச் செய்திருக்கிறது. நல்ல ஆர்வத்துடன், தூய்மையான எண்ணத்துடனும், அழுத்தமான நம்பிக்கையுடனும், இந்தத் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

அரக்கோணம் ராமசாமி, சிறைக்குப் புதியவர்—சிறையிலே காணப்படும் முறைகளையும், நிலைமைகளையும் பார்த்துத் திடுக்கிட்டுப் போயிருக்கிறார். "முதலிலே பயமாக இருந்ததா?" என்று கேட்டதற்கு, சற்று தயக்கத்துடன், "ஆமாம்! முதல்நாள் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது" என்று கூறினார். நம்மிலே பலர் கருதுவதுபோலவே நண்பர் ராமசாமியும், அரசியல் கைதிகளை, மற்றக் கைதிகளைப் போல அல்லாமல், தனிவிதமாக நடத்தவேண்டும் என்று எண்ணுகிறார்—அவருக்கு இந்தச் சிறை அனுபவம், பல புதிய கருத்துகளைத் தரும் என்பதில் ஐயமில்லை.

இன்று மாலை, அவருடைய தம்பி வந்திருந்தார்—ராமசாமியைக் கண்டதும் அழுதேவிட்டாராம். இதை ராமசாமி என்னிடம் சொன்னபோது, அவரே ஓரளவு கலங்கித்தான் போயிருந்தார். பொன்னுவேலுவைக் காண அவருடைய தம்பி வந்திருந்தார். பரிமளத்துக்கு இப்போது பரீட்சை நேரமென்றும், அதனால்தான் என்னைக் காண வரமுடியவில்லை என்றும், எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இன்று எங்கள் பகுதியில் நாங்களே சமைத்துக் கொண்டோம். நீண்ட பல நாட்களுக்குப்பிறகு, சில்லிட்டுப் போகாத சோறும் சாறும் உண்டு மகிழ்ந்தோம். சமையல் வேலையில் கிறிதுநேரம் பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன்.

சட்ட வரலாறு பற்றிய புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். அதன் தொடர்பாகப் படித்தாக வேண்டிய புத்தகங்களைத் தருவித்துக் கொடுக்கும்படி பொன்னுவேலிடம் சொன்னேன். அவர், தன் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

நான் படித்து முடித்த புத்தகம், ஒருமுறை படித்தால் போதும் என்ற முறையில் உள்ளதல்ல, மறுமுறையும் படிக்க எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

'அடக்குமுறை' பற்றிய புத்தகம், காணாமற் போய் விட்டதாக, சிறை அதிகாரிகள் சொல்லி இருந்தார்களல்லலா? திடீரென்று, இன்று மாலை, அந்தப் புத்தகத்தை அவர்களே கொடுத்தனுப்பினார்கள். ஏதாவது ஒரு புத்தகம், எங்களிடம் கொடுக்கப்படக்கூடியதா அல்லவா என்ற ஐயம் இங்குள்ள அதிகாரிகளுக்கு ஏற்பட்டு விட்டால், அவர்கள் அந்தப் புத்தகத்தை, சர்க்காருக்கு அனுப்பி, அவர்களுடைய அபிப்பிராயாத்தைக் கேட்டறிந்து அதன்படி நடக்கிறார்களாம். இப்படி ஒரு விளக்கம் அதிகாரிகளால் அல்ல—எனக்கு அளிக்கப்பட்டது. சிறை அதிகாரிகளுக்கு, ஏடுகளைப்படிக்க நேரமும் கிடைக்காது; நினைப்பும் எழாது—மற்ற எந்த ஏடுகளாக இருப்பினும், உடனே கொடுத்துவிடலாம். புத்தகங்கள் தருவதிலே இத்தனை கண்டிப்பும், தடைகளும் இருக்கத் தேவையில்லை—அதிலே பொருளும் இல்லை.

சிறையிலே புத்தகங்கள் தருவதிலே இவ்விதமான முறையும் தடையும் இருக்கிறது, ஆனால் இன்று பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்தேன்—அறிவுக்குத் தடை விதிக்கும் அக்ரமத்தை எவரெவரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதற்கான சான்று, அந்தச் செய்திமூலம் கிடைத்தது.

வழுக்கி விழுந்தவளைப்பற்றிய ஏடொன்று, ஆபாசமானதாக இருக்கிறது என்று அமெரிக்க நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆனால், இப்படி ஒரு ஏடு, ஆபாசமானது என்று கருதி தடை விதிப்பது முறையாகாது என்ற கருத்துக் கொண்ட கிருத்தவ தேவாலய அதிபர் ஒருவர், அந்த ஏட்டினைத் தமது தேவலாயம் வருபவர்களுக்குத் தந்து படிக்கச் சொல்லப்போவதாகவும், அதிலே உள்ளதுபோன்ற கருத்தோவியங்கள் பல பைபிள் புத்தகத்திலேயே இருப்பது பற்றிப் பேசப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இங்குச் சிறையிலோ, தடை செய்யப்பட்ட புத்தகங்கள் அல்ல, வரலாறுகூட அய்யப்படத்தக்க புத்தகமாகத் தெரிகிறது. அவர்கள்மீது குற்றம் இல்லை—அவர்களுக்கு இவ்விதமான 'கண்டிப்புடன்' நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற சர்க்காரின் போக்கிலேதான் குற்றமிருக்கிறது. பண்டித ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தபோது—அகமத்நகர் கோட்டைச் சிறையில்—இலண்டனில் உள்ள அவருடைய நண்பர்கள் பல புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார்களாம்—அந்த ஏடுகள் சிறையில் நேருவிடம் தரப்பட்டன. இலண்டனிலிருந்து அந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வந்து, சிறையில் இருந்த நேருவிடம் அனுப்பிவைத்தவர் யார் என்றால், வைசிராய் வேலை பார்க்கவந்த வேவல் பிரபு. வெள்ளைக்காரனுக்கு அந்தத் தாராளத்தன்மை இருந்தது என்பதை, துரைத்தனத்தில் பெரிய பதவி வகித்திருந்த எச்.ஆர். வி. அய்யங்கார். என்பவர் இந்த வாரம் ஒரு கட்டுரையில் விளக்கி இருந்தார். அதனையும் சிறையிலே படித்தேன். சிறையில் புத்தகங்கள் தருவதிலே மேற்கொள்ளப்படும் 'கெடுபிடி'யையும் காண்கிறேன். 'சுயராஜ்ய' சர்க்காரிடம் பரிவா ஏற்பட முடியும்!!

இன்று பிற்பகல், "அவை அறிதல்" பற்றியுள்ள குறள் பற்றி, அன்பழகன் தனக்குத் தோன்றிய சில கருத்துக்கள் குறித்து, என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
இன்று மாலை, வழக்கம்போல் எங்கள் பகுதி நுழைவு வாயிலருகே, உட்கார்ந்துகொண்டிருந்தேன்; மூன்று புறாக்கள் ஒயிலாக உலவிக்கொண்டிருக்கக் கண்டேன். புறாக்களை வளர்ப்பதிலும் அவைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதிலும் எனக்கு மிகுந்த விருப்பம் என்பது பலருக்குத் தெரியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, புறாக்களைக் கண்டபோது ஓடிச் சென்று அவைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விளையாடலாமா என்று கூடத் தோன்றிற்று. சிறை அதிகாரிகளிலே ஒருவருடைய புறாக்கள் அவை என்று கூறினார்கள். எங்களிடம் அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையும், அதற்கான காரணமும்தான் எனக்குத் தெரிந்திருக்கிறதே! இந்நிலையில் புறாக்களைக் கேட்டால் கொடுக்கவா சம்மதிப்பார்கள். கொடுத்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் வெளியே வளர்க்கும் புறாக்கள் என்னிடம் மிக அன்பு காட்டும்: என் கரத்திலும் தோட்களிலும் தொத்திக் கொண்டு தீனி தின்பதிலே அவைகளுக்கு மிகுந்த விருப்பம். இங்கு, புறாக்கள் வளர்த்திட அனுமதி கிடைத்தால், மிக மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் இருக்கும் பகுதியில், பூனைகளும் அதிகமாக இல்லை; ஒரே ஒரு பூனைதான் உலவிக்கொண்டிருக்கிறது, அழகான பூனை, சாமான்கள் கிடங்கிலே இருக்கும் பூனை, மிகச் செல்லமாக வளர்க்கப்படுகிறது. ஆகவே அது வேட்டையாடும் போக்கைக்கூட மறந்துவிட்டது. காலையும் மாலையும், அசைந்து அசைந்து நடந்து வரும், புல்வெளிப்பக்கம் சில விநாடிகள் உலவி விட்டு, பொறுப்புள்ள அதிகாரி தமது அலுவலைக் கவனிக்கச் செல்வதுபோல, கிடங்குக்குச் சென்றுவிடும். ஆகவே புறாக்களுக்குப் பூனையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கூட இருக்காது; ஒரே ஒரு ஆபத்து—பெரிய ஆபத்து—இருக்கிறது! இங்குதான் பொன்னுவேல் இருக்கிறார். நான் சிறிது ஏமாந்திருந்தால் புறா, ஏப்பமாக மாறிவிடக்கூடும். அந்த ஒரு பயம்தான். வீணான எண்ணங்கள்!! சிறை அதிகாரிகளாவது எங்களுக்கு மனநிம்மதிக்கான உதவிகளைச் செய்வதாவது!!