கொள்கையில் குழப்பமேன்?/கட்டுரை 3

3

கொளுத்தும் வெயில்
கொட்டும் மழை
கடுங்குளிர்
கருக்கல்
பேய்க்காற்று

இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசை கேட்டு இன்புற்றனர்; களிப்புத்தரவல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர், மற்றவர்கள்; அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை, வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகிவிட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப் பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு, அழகியதாய், வசாதியாய், குளிரைப் போக்கிக்கொள்வோம். பேய்க்காற்றும் பெருமழையும் குடிசைகளைப் பிய்த்தெறியும் மண் சுவரினைக் கீழே சாய்த்திடும், நம்முடைய கோட்டை மீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்துபோகுமேயன்றி வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடைய வேண்டியதை எல்லாம் அடைந்து விட்டோம் என்று அகம் மிக மகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிடவேண்டும்; எனவே கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல், பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர், "ஏடா மூடா; ஏன் இந்த வீண் வேலை! நான் தான், நீயும் மனித இனம் தானே என்றெண்ணி மனம் இளகி, எண்ணற்றவர்கள் இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில், ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய்தொழிலைக் காட்டிடுவாய், நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து நாலாறும் பெற்று காலத்தைக் கடத்திடுவாய்! உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அதுபோதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதைபட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!" என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை, வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர்.

வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்!—இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு! செடி கொடியும் வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம், என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டிவரும் வேளையிலே பாறை இருந்திடுமே—பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளந்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே, ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரை மேல் ஏறியதும்! கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஓய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல் கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும் காணார் காண்!!—என்று, 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த 'எழிலிடம்' அமைத்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெலாம் செலவிட்டார்.

பாறை கண்டபோது பதறினார் இல்லை, அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகைபெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார், தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம், இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்; படை நடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பல நூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம், இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே, கவிஞர்பிரான். நமக்கும் நற்பாடம், அக்கவிதைதாராதோ!! 'நாமிக்கும் நாடு நமது' என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை—எடுப்போம் புதுமுயற்சி-கட்டி முடிப்போம் எமதிடம்- என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, "கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்து செண்டு ஆக்கப் போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார், தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல் எவர்க்குண்டு; கண்டுரைமின்!" — என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ நீராடி நீந்துகையில், நீர் புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இது பற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே; அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டி தாவிடுமாம் மந்தியுந்தான்; மந்தி நடத்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து இன்பன் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின், நின்று என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்புக்கொள்கின்றாள். இவரோ 'இருப்பவர்கள்'—இருப்பதுவோ பறித்தவைகள்—நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்தபின்னர், திருத்த, புதுப்பிக்க, திறம்பெற்றுப் பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல், நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவைதமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்த பணியதனில், பாழ் வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்ட வெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ்சிறு கூடம்—கேணி ஆங்கொன்று—அதன் பக்கம் பூச்செடிகள்—மாடியும் அமைத்திடலாம், அடித்தளம் வலிவுற்ற தென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம்.

அழகுண்டு அளவறிந்து; வசதியுண்டு, வசை அளவு! இந்த முறையில் நல்லில்லம் அமைத்து அவரும் இன்புற்று, நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும் என்று முன்னம், என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம். குரலெழுப்பி, கல் வீசிக்குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர் தன்னைக் கைத்தடியால் சாடி "ஏடா பயலே! இஃது இரு நாட்கள் நின்றிடுமோ?" என்று கூறி, அச்சம் எழச்செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் எவர் அப்பா? கல் உடைக்கும் சொல்லரசா ? அன்றி, மண் பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச் சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன் எனும் உங்கள் தோழன் செப்பினனாம், மற்றவர் மரப் பொம்மை, நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம், அறிவீரா? ஏன் அந்த ஆணவம், என்று கேட்டுக் கொதித்தானாம், இரும்பொறையன், உண்மையா? என்னவோ, பிள்ளைகளா! எப்படியோ ஒரு வழியாய், இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான் இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்!! இடம் பிடிக்க முனைவோர்கள், இடித்துக் கொள்வரன்றோ! என்னால் இது என்பதனால், எனக்கே எல்லாமென்று, எவனேனும் எக்காளம் எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர்—இதை நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான் கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி அடித்தான் இலாபம் இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்திடுவான் கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்! கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு—கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ? எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர் என்று இன்று கூறுகின்றீர்; கேட்கின்றேன்; ஆயின் குமுறும் உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்; ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க!—என்று பெரியவர்கள் சில பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும் கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம் இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை, இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும் நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம்—அனைவரும் அமைத்த இல்லம்—அவர்க்கு எது இவர்க்கு எது என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை இல்லை. இகல் வெல்ல வேண்டுமெனில் நம் இதயங்கள் ஒன்றாகி, வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான், என்று எவரும் எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும் இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி, இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக, தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய, திட்டமிட! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால், இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித் தண்ணீர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட, கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம் அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ? நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர். அவ்வேளை, திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன் முன் வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள், கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு ஒரு முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை அழைத்திட்டால், கேணி வேலை வேணு பார்ப்பான், என் வேலை அஃதல்ல, என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம்—நமது இல்லம் இக்கூடம்—இங்கு, நான் மேல் நீ அல்ல, என்ற பேச்சுக்கே இடமில்லை, என்றெல்லாம் எண்ணி அவர் இதயம் களித்திருந்தார்.

ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை. சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக் கொள்கின்றார். கலகம் மூட்டுகிறோம், கைகொட்டிச் சிரிக்கின்றார். கண்காட்டி அழைக்கின்றோம், கைவீசிப் போகின்றார். ஏதேது இந்த இல்லத்தார், ஏற்றம் மேல் ஏற்றம் பெற்று, எடுத்த காரியம் முடித்து, இன்பத் திராவிடம் அமைத்து எளியோர் எனினும் வலியோர் பெற்றிடா வெற்றிதனையும், கூடிப்பணியாற்றி, கொள்கை காத்து நின்றால், பெற்றிடுவார் என்ற பேருண்மைதனை நிலைநாட்டிவிடுவார் போலும். எங்ஙனம் கண்டிடுவோம். இவர் வெற்றி பெறுமதனை! என்னாகும் நமது முன்னைய பேச்செல்லாம்! மண்ணாகிப் போச்சுது பார், மற்றவர் பேச்செல்லாம், கண்ணீர்த் துளிகளன்றோ, காரியத்தை முடித்துவிட்டார், என்றெல்லாமன்றோ ஏசுவர், மற்றவர்கள். நாம் இதற்கு என் செய்வோம், அணிவகுப்புதனைப் பிளக்க ஆயிரத்தெட்டும் செய்தோம்; அத்தனையும் ஆடிக் காற்றிடைப்பட்ட பஞ்சாகிப் பறந்தனவே! பேதம் வருமென்று, பேராவல் கொண்டிருந்தோம்—அண்ணன் தம்பி என்று அவர்கள் குலவுகின்றார்! ஐயயோ! ஆபத்து! நாம் அழிந்திடுவோம், இது வளர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும், எப்பாடு பட்டேனும், சின்னத்தனமான செயலெல்லாம் செய்தேனும், பொன்னைத்தான் இழந்தேனும், கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும், உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக வேண்டும் இந்தப் பெரும் படையை, அணிவகுப்பை; என்று எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள்—கன்னிப் பெண் கண்ணுக்கு மையிட்டு, கார் கூந்தல் தன்னிலே மணமல்லிதனைச் சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல் போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன் நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே, கண்ணாடி அதன் மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச் செய்துவிட்டது. சென்ற திங்கள் ஒன்பதாம் நாள்—அந்நாள் துந்துபி முழக்கினர் மாற்றார். துடியாய்த் துடித்தனர், இல்லம் கண்டோர்—இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர்—திராவிட முன்னேற்றக் கழகத்தினர்—நீயும் நானும்—நமது பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான திராவிடரும்.

ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு விடவில்லை, என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத்தெளியத் தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சிதரத் தக்கதாகத் தெரிவதற்குக் காரணம் அதன் அளவு அல்ல; நமது குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர். இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர் விலகுவதும். வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!! இதற்கும் பிறகு இருக்கத்தக்கதுதானே, கட்சி என்ற பெயருக்கே பொருத்தமுள்ளதாகக் கருதப்படும்—என்று கூறுகின்றனர்—கேட்கின்றனர், எனக்கே கூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா, சிலர், உன்னை மிரட்டுகிறார்கள், என்றுகூடத் தம்பியரில் சிலர் கூறுகின்றனர்.

தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார். "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக! உம்மை அண்ணனாக ஏற்றுக்கொண்டவர்கள்; அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள். தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு—ஆனால் ஒரு கணம் தான்—மீண்டும் அந்தப் பழைய நினைப்பு—பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்; "எட்டுக் குழைந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழாக் காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை, எட்டில் ஒன்று போனால் என்ன, ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள். இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அது போல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர்—ஆயினும் அதனால், பிரிந்தவர்கள் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா! எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டு பிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், விலகிய, வழி தவறிய, அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!"

தம்பி! நான் சொன்னது சுவைக்காக அல்ல—என் மனம் அப்படி.

விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது—அவசியம் கூடத்தான் இருக்கிறது.

நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில், இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக, அனைவரும், தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும், தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத்தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி, களம்செல்ல வேண்டிய வேளையில் களத்தில் பயிற்சி பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும்?

தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி—வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத் துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி. அந்தக் கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர் வீரன்—கையில் வேல் கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள் அந்த அபலை, தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப் பார்க்கிறாள்-திகில் கொள்கிறாள்—ஆனால் எதிர்ப்புறம் பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான்—அப்பா! காப்பாற்று? என்று கூறியபடி, கீழே வீழ்கிறாள். ஓநாயைக் கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன்படுத்த வேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி! மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!

அதுபோலல்லவா, செய்துவிட்டனர்.

எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி.

என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ!

ஒன்று சொல்லுவேன் தம்பி ! எனக்கென்னவோ, பேசத் தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும். எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே எழுதவேண்டும். ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப் பயன்படுத்த வேண்டும், என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு அவ்வளவும், நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது போன்ற பேதை நெஞ்சம் ; என் செய்வது !

எனினும், என் மனநிலை அறிந்து, பலர், முன்னிலும் அதிக மும்முரமாகப் பணியாற்றி என் மனச்சோர்வினைப் போக்கி வருகின்றனர், அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன செய்வோம் என்றும் களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர்.

விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தை விட்டும் விலகினாரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்துவரும் கொள்கையை விட்டுமன்றே விலகிச் சென்றுவிட்டனர். இனி அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு ! நாம் அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை என்று கூறுகின்றார்.

திராவிடநாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமைமட்டும் சட்டப்படி கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன் ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமுமல்ல; வடவர் யமகிங்கரருமல்லவென்றும் இத்துணை வேகமாக அவர்தம் இந்திய பக்தி முற்றி வருகிற நிலை காணும்போது, இனி ஒரு புதிய சட்டமே செய்து நாட்டுப் பிரிவினை கேட்போரைக் கடுஞ்சிறையில் தள்ள வேண்டும், அப்போதுதான் இந்திய ஒற்றுமை நிலைக்கும் என்று, நேரு பண்டிதருக்கே யோசனை கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது.

தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிடநாடு கூடாது என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன் ஏற்கனவே நேரு போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும் கவர்ந்து தம்மை இந்நிலைக்குக் கொண்டு வந்தது என்றும் கூறாமல், நேருபண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும், இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர், என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல் வேண்டும், அப்படி எண்ணிட !

"நான்" சொல்கிறேன் கேளுங்கள்!—என்று கூறும் போது, அந்த 'நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான், நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேரு காட்ட இயலாத காரணம் காட்டவல்லோன் ; நேருவுக்கு இல்லை உமது மனம் மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ—செச்சே ! இப்போது அப்படிச் சொல்லமாட்டார்கள்—நவஇந்தியாவும்—சக்தியும் விளக்கை அணைத்துவிடுவார்களே ! இருட்டிலா உழல்வது !

நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர் ! எனவே தான், அவர் பேச்சை ஏற்க மறுத்து வந்தீர் ! இப்போதோ, சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டும். திராவிடநாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர் ; நேருவும் பேசுகிறார் ; எனினும் இவர்கள் இனம் வேறு—நேரு இனம் வேறு.

இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்பட வேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வு தான் உண்மையானது, தேவையானது; கொள்ள வேண்டியது என்று கூறும் நாணயமாவது இருக்க வேண்டும் ; இரண்டும் இன்றி, நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள் ; நேரு இதனைச் சொன்னபோது ஏற்கமறுத்தீர்கள்—மறுத்தோம், தவறில்லை, ஏனெனில், நேரு எவ்வளவு பெரியவராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல ! நானோ திராவிடன் ! எனவே, என் சொல் கேண்மின் !! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும்.

"ஐயன் அழைக்கின்றார் ; அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார் ! மேதினி கொண்டுள்ள மெய்யெல்லாம் உணர்ந்தவர் காண் ! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர் ! அவர் காணா நாடில்லை ! அவர் உரை கேளாமாந்தரில்லை ! அவர் அழைக்கின்றார் ! திராவிடம் தனிநாடு என்றெல்லாம் பேசுகிறீர் ! பித்துப் பிள்ளைகள் போல் பேதம் பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன் கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய், ஆகிவரும் நாட்கள் இவை. இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல் ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதவற்றை எவர் அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர், சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும், காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும் இந்த மணித்திரு நாடதனில் ! இந்த உண்மையினை ஏற்றிடுவீர், வாழ்ந்திடுவீர் ! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர், தொல்லை வளர்க்காதீர்." என்றெல்லாம் பேசி அழைத்தனரே காங்கிரசார் அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்?

எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்!

இவர் எடுத்துக்கூறும் வகையால் எவர் மனமும் மாறிடுமோ ! என்னே பெருந்துணிவு ! ஏன் கொண்டார் இப்போக்கு ?

"இல்லையாமே, அண்ணா ! இவர் கேட்பது தமிழ் நாடாம்; இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்" என்று கேட்டிடுவாய்! என் தம்பி, இதனைக் கேள் நீ கூறும் முறையில் அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது; பிரிவினை தேவையில்லை—பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம் தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம் என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு.

தம்பி! தமிழ்நாடு மட்டும்போதும்; அதுமட்டுமாகிலும் பிரிந்து தனிநாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை, ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம், வாத முறைக்காக, என்ன பலன் அதனால் ? எவ்வகையில் உதவி செய்யும் ?

திராவிடநாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ்நாடு கேட்டால், வாரி வழங்குவரோ ? கேள் கொடுக்கப்படும். தமிழ்நாடு—திராவிடநாடு அல்ல என்று நேரு பெருமகனார் செப்பினரோ, என்றேனும். அவருக்கு ஒரே நோக்கம்—பாரதம் ஒன்று என்பதே அவர் திட்டம். இந்நிலையில், திராவிடநாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு என்று மாற்றிக்கொள்வதனால், வந்திடும் வசதி என்ன? காரியம் எளிதாகும் என்பரேல், காட்டட்டும் காரணம்!

இதனைத்தான் எழுதிக் கேட்கின்றார் ஏற்காடுதனில் இருந்து, தன்மான இயக்கம் கண்ட நாள் முதலாய் நம்மோடு இருந்துவரும் தகைமையாளர்—திருவொற்றியூர் சண்முகனார்.

மற்றொன்றும் கேட்கின்றார் நம் நண்பர்.

திராவிடநாடு கேட்கும்போது கொதித்து எழும் காங்கிரசார், தமிழ்நாடு என்று அளவைக் குறைத்துக் கொள்ளும் போது மகிழ்ச்சி கொள்கின்றனரோ ? அங்ஙனமாயின், தமிழ்நாடு தனிநாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ? இசைவதாயின், பெறலாமே. பெற்று, காமராசரே முதலமைச்சராக வீற்றிருக்கலாமே—என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி! காங்கிரசார் என்னவோ, திராவிட நாடுதான் எட்டி, தமிழ்நாடு இனிப்பு என்று எண்ணுவது போலவும், ஆகவே, தமிழ்நாடு என்று நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு கோரிக்கை வலிவு பெற்று வருகிறது; இந்தியத் துணைக் கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப்போய் விட்டது; வெளிநாடுகளிளெல்லாம் 'திராவிடநாடு' கிளர்ச்சி பற்றியும் எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில் அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த ஒரே அடியாக, ஏக இந்தியா—பாரதம்—என்று பேசுவதுமட்டும் போதாது—திராவிடம் என்று எண்ணம் கொண்டோர்களிடத்திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு திராவிடம் வேண்டாம், தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம் பேசும் போதும் தமிழகத்தின் தொன்மை தனித் தன்மை; வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம் பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின் போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவேரைத் தாக்கியும், திராவிடநாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத் திட்டத்துக்குப் பேராதரவு பெற்று அளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து ஏசியும் பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும் படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது என்பது, அவர்கள் திட்டம். எனவேதான், தம்பி! திராவிடம் பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின் கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின் அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு காங்கிரஸ் ஏடுகள் இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம் இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்துவருகின்றனர். புதிய கட்சியினர், "இவ்வளவு எமது அறிவாற்றலைப் பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவுகாட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும் திராவிடநாடு கூடாது என்பதுபற்றியும் பேசுவதை. சிந்தாமல் சிதைக்காமல் மெருகும் மிகக்கொடுத்து வெளியிடுகின்றீர்களே ! அங்ஙனமாயின், ஐயன்மீர் தமிழ்நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவீரோ?" என்று கேட்பரேல், அந்த இதழினர், இடி இடியெனச் சிரித்து, "என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக? உமது நிலை, உயர்வானது என்பதற்கா ? ஐயே! இதனையுமா, அறைந்திடவேண்டும் நாங்கள் ! ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமதை உருக்குலைந்து உடைத்துவிட, உம்மைக் கருவியெனக் கொண்டோம் வேறென்ன? அவர் கேட்கும் திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால் ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம் துரையாம் யார் இந்த அறிஞன் ! எவன் தந்தான் இப்பட்டம். எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன!—என்று முத்துகள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத்தேவை, அவைதமை எடுத்தெடுத்து அழகழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த அரிப்பெல்லாம், அவ்வளவே அறிந்திடுக! திராவிடம் தீது என்று தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம். அதுகண்டு, நீர் புதுச்சரக்கு இது கொள்க என்று, தமிழ்நாடு பிரிவினை என்று பேசுகின்றீர்—பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று சொல்லுதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர்கேட்கும் தமிழ்நாடு தனிநாடு என்பதற்கும்தான் பொருந்தும். திராவிடநாடு பகற்கனவு என்றீர்—உமது 'தமிழ்நாடும்' அஃதேதான் ! ஏனோ இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர், விட்டிடுவீர் வீண்வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம் ! கதராடை, புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர் மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம் போன்ற மதிப்புடையான்; மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச் சேவைசெய்ய!"—என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது.

தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு, ம. பொ. சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்திவந்த காதை ! ஊரூருக்கும்! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க, தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார். கண்டோமே! திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து தொடங்கி, கழகத் தோழர்களுக்கு (விலகியவர்களும் இங்கு இருந்த போதுதான்!) 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப்பட்டம் சூட்டும் வரையில் பேசினர். ஏன் செய்தார் அந்த எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்த போது மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத்தமது கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன் பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்த போது, இவரது கழகத் தொண்டர்கள் எதிர் மறியல் நடத்தினர். இவைகளுக்கு, இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையினும், விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா? ம. பொ. சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம் ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள். அவருடைய அறிவுரை கேட்டாகிலும், திராவிடமாயையிலிருந்து விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே, சென்னையில் ஒரு மாநாட்டில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார், இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு; ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான சான்று, என்ற கொள்வர்; ஏவிவிட, தக்க சமயம்! பயன்படுத்திக்கொள்வோம் என்பதன்றி வேறென்ன!

சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம் தூக்கி எறிந்தாரே, இதே. ம. பொ. சி. அவர்களை. 'நாங்கள் ஒன்றும் இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ் நாடு என்று பெயர் மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்துகொண்டோம்', என்று—மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா, மாநகராட்சி நடாத்திய விழாவென்றில்,; ம. பொ. சி.யைப் பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என் பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக் கூடும்; ஒரே இடத்திலிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதை விடப் புதுப்புது இடமிருந்து வருவது, சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல, நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர் எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு, வேலை வாங்குவது காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை விளக்கத்தான், அந்தமுறைப்படி இப்போது, 'விலகினோர்க்கு' வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன? 'இதைப் பெறுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத் தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள் தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம் கொடுக்கிறார்கள்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனிநாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள் இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும், எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லிவிட்டார்களே,

வடநாடு நரகமுமல்ல, வடநாட்டுக்காரர் யமகிங்கரருமல்ல.
வடநாட்டோடு ஒட்டி வாழலாம்.
வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம்.

என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க்கொடுத்து, பாராட்ட போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு, எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில் திராவிடன் தலை தூக்கமுடியாது என்ற முழக்கமிட்டாரோ; அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில்,

வடநாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம்.
என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட; குதூகலம்கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப் படித்து மகிழ்வதைப் போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டி வந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு அதனைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்வார்கள்.

பக்ரா—நங்கல் நிர்வாக ஊழல்.
சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு.
வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.
ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது.
நோட்டுப் பெருக்கத்தால் பண வீக்கம் ஏற்பட்டிருப்பது.
மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது.
வருமான வரி ஏய்க்கும் வன்கணாளரை வீட்டு வைக்கும் கொடுமை.
முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை.
எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது.
கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கன்னெஞ்சப் போக்கு.
சேது சமுத்திர திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்து வரும், உள்ளம் வாட்டிடும், நிலைமை.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும், கொடுமைமிகு சீர்கேடு.
கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு உதவி புரிய முன் வராது நேரு பெருமகனார் உள்ள போக்கு.

திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு.
மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரி பூசப்பட்ட கேவலம்.
எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.

இவைபோல அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசமும் முறிந்துவிடும்; இருட்டடிப்பும் பின் தொடரும்!! எனவே, விலகியோர், இவைபற்றிய பேச்சை, கட்டி வைத்துவிட்டார் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை இழிவு செய்யும் திருவாய் மொழி—அதற்கே இடம் உண்டு, அந்த இதழ்களிலெல்லாம், வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள் அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும், என்று பேசத் தொடங்குவரேல், அவன் போனான்—இவர் வந்தார்! அடைத்திடு கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும்.

மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும் என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று ஒரு திருத்தம் பெறவும் இயலாது; மணல் மேடு ஏறி நின்றார், கால் இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த நிலை? எனவே வேகமாய் இவர்கள் 'இந்தியர்' ஆகியே தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட.

இவர்கள் இதுபோலத்தான், இப்போதே என்று, வடக்கே உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை இப்போது, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம் இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற நிலைகொண்டு, மெள்ள மெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு இனி எதிர்காலம்.

வடக்கே வெளியாகும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' இதழ் நிருபர், பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை, வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்; பதைபதைத்தேன்.

பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி போன்றோ, புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள்.
எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும் போக்கில்லை, எமக்கு!
தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு இல்லை.

என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர். வெளி வந்து இருகிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை. என் சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்! உள்ளம் இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ளமெள்ள இங்கும் அதனை எடுத்தரைக்கப் போகின்றார்; உடன் இருப்போரில் ஏழெட்டும் பேர்கள், இலட்சியம் போற்றிடுவோர்! எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ, என்ற அச்சம். இல்லையெனில் இப்போதே இயம்பிடுவார் ஜெய்இந்தும்! முன்பே இதை உணர்ந்து மொழிந்த 'மெயில்' இதழும், திராவிடப் பிரிவினையை உதறினார்; தக்க செயல்; என்றாலும், இஃதேனோ, தமிழ்நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள் இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும் உதறிட அஞ்சி ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது—என்றெல்லாம் எழுதிற்று, அதற்கும் மறுப்பு இல்லை, அச்சம்!

அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே, என் கருத்து.

தமிழர், தனி இனம்—தாழ்ந்த நிலையில் இன்றுளர்—அதற்குக் காரணம் வடவர்.

வடவர் வாழ்த்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல் சட்டமெனும் பொறி.

இதில் சிக்கி இருக்கு மட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான் தமிழன் எனும் இனத்தான்.

அவன் மானம் அழிக்கிறார், மொழியைப் பழிக்கின்றார்; வாழ்க்கை வழியை அடைக்கின்றார்.

வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதில்லை.

வடநாட்டு ஆதிக்கம், அழித்திடவே, இருக்கின்றேன்; வந்துதிவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!!

என்று இவ்விதமெல்லாம், எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான் அவை இன்று, வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு—ஆயின், வடநாடு எனின், இனிப்பேயன்றோ, காண்கின்றனர்.

எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என் செய்வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றாலும், இவர், நமது இன்னுயிராம் இலட்சியத்தையே, மறந்து, 'இந்தியர்' ஆகின்றார், என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி ஓர்பக்கம் தொலைவாக வைத்து விட்டு, திராவிடநாடு பெற, தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு இருப்பதனைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கின்றேன். எங்கும், நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை; என்னை விட விரைவாக, என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!