கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 20

20


யசுப் பெண்ணைத் தனியாகப் பஸ்ஸில் அனுப்புவது, ஆண் பிள்ளைகள் பழக இடமுள்ள கல்லூரியில் படிக்க வைப்பது என்பதை நினைத்தும் பாராத ஒரு குடும்பத்தில் செவந்தி துணிந்து தன் மகளை அனுப்பி இருக்கிறாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவள் எத்தனை பழிகள், மனதோடு எத்தனை நெருப்புக் கண்டங்கள், கவலைகளுக்கு மனசைக் கொடுத்திருக்கிறாள்?

அடுப்படியில் இருந்தாலும் கொட்டிலில், கழனியில், களத்து மேட்டில் எங்கிருந்தாலும் சரோ அடிமனசில் ஒரு சக்தியாக வியாபித்திருக்கிறாள் என்றால் தவறில்லை.

சில நாட்களில் ஐந்து மணியுடன் வந்து விடுவாள். அவள் சைக்கிள் வந்து நிற்கும் ஓசை, அவள் வேக நடை, அம்மா என்று நடையிலேயே கொடுக்கும் குரல், ஆகியவற்றில் நெஞ்சுக்கனம் எப்படி உருகும்!

சரோ இப்படி ஒரு சக்தியாக உருவாவாள் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. ஒரு காசு அவளறியாமல் செலவழிக்கவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்; முட்டல்கள், மோதல்கள்! ஆனால் முன் இருந்திராத நம்பிக்கையல்லவோ அவர்கள் மாற்றி மாற்றிப் பயிர் விளைவிக்கச் செய்கிறது?

சென்ற ஆண்டில் சுவர்ணவளி நெல்லைப்போட்டு அது அறுவடையாகும் சமயத்தில் மழை கொட்டிப் பயிர் நஷ்டமாகிவிட்டது. வீட்டைச்சுமாராகச் செப்பனிட்டிருக்கிறாள். ஆனால் போக்கியத்துக்கு விட்ட நிலத்தை மீட்பது லட்சியமாகவே இருக்கிறது.

“அம்மா லீவு நாளில் நடவு வைத்துக்கொள். நானும் ஒரு கைக்கு வாரேன்” என்று சரோ நிலத்து வேலையில் ஈடுபடுவது சாதாரணமாகிவிட்டது. சாந்தி சைக்கிளில் வந்து நடவு நடுவதை விட கால் சட்டையைச் சுருட்டி விட்டுக் கொண்டு சேற்றில் இறங்கும் மகள் புதுமையாகிறாளே? முடி, பின்னல் நீண்டு விழும். அதிகாலையில் எழுந்தாலும் சீவிச் சிடுக்கெடுக்க எண்ணெய் முழுக்காடி நேரம் செலவழிக்க முடியவில்லை. மரபுகள், கோடுகள் அழிக்கப்படுகின்றன. அவளே ஒரளவு முடியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு அளவாக அம்மாவையே கத்திரிக்கோலால் வெட்டிவிடச் சொல்லிவிட்டாள்.

"இதென்னடீ அநியாயம்? வாழுற வூட்டுப் பொம்புள இப்படிச் செய்யலாமா” என்று பாட்டி ஆரம்பித்ததுதான் தாமதம். பட்டென்று சென்று வாயைப் பொத்துவாள் சரோ.

“பாட்டி உங்க காலம் அது. இது எங்க காலம் சும்மாருங்க! இங்க நா முடி சிங்காரிச்சிட்டிருந்தேன்னா பஸ் போயிடும்” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள்.

கோடுகள் அழியப்படும் போது கூக்குரல்கள் எழத்தான் எழுகின்றன. ஆனால் மன உறுதிக்கு முன்அந்தக்கூக்குரல்கள் எடுபடாதுதான். செவந்திக்குத்தான் மகள் எது சொன்னாலும் நியாயமாக வேத வாக்காக இருக்கிறது.

“ஆம்புளப் புள்ளங்க கூட படிகிறதுன்னா, தொட்டுப் பழகாமலா இருக்கும் 2 சதா சினிமா டி.வி.ல காட்டுறாங்களே? செவந்தி புத்தி கெட்டு இந்தப் பொண்ண வுட்டு போட்டா. என்னகொண்ட்டு வரப்போகுதோ...” என்று அம்சுவின் அத்தை பிரலாபித்தது அவள் செவிகளில் விழுந்து விட்டது. விடுவிடென்று போகிறாள். “ஏ, பெரியம்மா? உங்களுக்கு வேற வேல இல்ல? நீங்க வயலுக்குப் போகலே? கடைக்குப் போகல? பொம்புளயும் பொம்புளயும் நாலு முருங்கைக்காக முடி புடிச்சி இழுத்திட்டுக் கேவலமா ஊரக்கூட்டல கழுநீருக்கும் கருமாதிக்கும் வித்தியாசம் இல்லாம தொண்டத் தண்ணிவத்த கத்தல? அத்தவுட நான் காலேஜுக்குப் போய் படிப்பது கேவலமின்னா இருக்கட்டும். இன்னொரு தடவ என் காதுல இப்படி இங்கயாருன்னாலும் அடுத்த வூட்டுச்சங்கதியக் காது மூக்கு வச்சிப் பேசட்டும். போலீசக் கூட்டியாந்துடுவே! இப்பல்லாம் பொம்புள போலீசு இருக்கு. ஜாக்கிரதை" வாயடைத்துப்போயிற்று.

கல்வியறிவு, வெளி உலகத்தின் அன்றாடத் தொடர்புகள் இரண்டும் பெண்ணுக்கு நிமிர்ந்து நிற்கும்.உறுதியை மட்டும் கொடுக்கவில்லை. கசடுகளை ஒதுக்கிக் கொண்டு முன்னேறவும் துணிவைக் கொடுப்பதுமாகச் செவந்தி புரிந்து கொள்கிறாள்.

ரங்கன் சைகிள்கடை இருந்தாலும், முழுமனசுடன் அவள் ஊன்றிய விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறான்.

"செவந்தி பூச்சி இருக்குது. அதோட அதைச் சாப்பிடும் நன்மை செய்யும் இனமும் இருக்கு. இப்ப மருந்து வாணாம். விளக்குப் பொறி வச்சிப்பாக்கலாமா?” என்று அவளிடத்தில் யோசனை கேட்கிறான்.

“ஆமாங்க மருந்தடிச்சா நல்ல பூச்சியும் அழிஞ்சிடும்... ப்யூட்ரான் போட்டிருக்கு பார்ப்போம்..” என்று அவள் சொன்னால் ஒத்துக் கொள்கிறான்.

பொம்புள சொல்லிக் கேட்பது கேவலம் என்று ஊன்றியிருந்த மனப்பான்மை தகர்ந்து விட்டது.

படிப்பு, படித்து ஏற நல்லது கெட்டது பிரித்தறியும் விவேகமும் விரிவாவதைச் செவந்தி உணருகிறாள்.

செயல் முறை அறிவுக்காகச் சென்னையின் எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு சக மாணவர்களுடன் செல்ல வேண்டி இருக்கும். தனி வகுப்புகள் ஆலோசனை விவாதங்கள் என்று நேரம் கழித்து வீடு திரும்புவதைத் தவிர்க்கவியலாது. இறுதிப் பரிட்சை முடிந்த பின் நேர்முகப் பயிற்சி என்ற அளவில் ஒரு தொழிலகத்தில் சில நாட்கள் அவள் சேர வேண்டும். கிண்டியில் அந்தத் தொழிற்சாலை இருக்கிறதாம்.

அவருடைய தோழி ஒருத்திக்கு சென்னையில் வீடு இருக்கிறதாம். வசதியாகத் தங்கிக் கொள்ள அழைத்திருக்கிறாள். அவளுடன் தந்தையும் சென்றிருக்கிறார்.

சின்னம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற அவா இன்னமும் ஈடேறவில்லை. இரண்டொரு முறை செவந்தியும் சாந்தியும் சென்னைக்குச் சென்றார்கள். தான்வா அலுவலகம் சென்று பெரிய மேடத்தைப் பார்த்தார்கள். திருவள்ளுர், காரணை ஆகிய இடங்களில் நடந்த சிறப்புப் பயிற்சிக்குப் போனார்கள். இப்போது இங்கேயே தான்வா மகளிர் சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். செவந்தி தலைவர். சாந்தி செயலாளர். சுந்தரி, வேனி, எல்லோரும் தான்வா பயிற்சி பெற்று சுயமாகத் தங்கள் நிலங்களில் பயிர் செய்கிறார்கள்.

மொத்தத்தில் திண்ணையில் குந்தி இருந்து ஏதேனும் பேசக்கூடப் பொழுது இல்லை.

இந்த நவரைப் பட்டம் கொல்லை மேட்டில் இவர்கள் கடலையும் மிளகாயும் பயிரிட்டிருக்கிறார்கள்.

கத்திரி வெய்யில் சுட்டெரிக்கக் காலையிலேயே சென்ற கணவனை எதிர்பார்த்து செவந்தி நிற்கிறாள். கோயில் தோப்பு புளிதான் வாங்கி உடைத்து, கொட்டை எடுக்கிறார்கள்.

"ராவிக்கு சரோ வராதா?”

அம்மா சும்மா இருக்கமாட்டாளே?

"நீ சும்மாதுணப்பாத அது பத்து நா ட்ரெய்னிங் இருக்கப் போகுது. அதா அப்பா போயிருக்காரில்ல? எங்களுக்கு இல்லாத கவல உனக்கென்ன...”

இரவு ஒன்பது மணிக்கு ரங்கன் வரும்போது அம்மா வீட்டில் இல்லை. நீலவேணி டி.வி. வாங்கிவிட்டாள். அம்மா மட்டுமில்லை. சரவணனும் அங்கே போய்விடுகிறான். சரோ இருந்தால்தான் கண்டிப்பு அவனுக்கு.

வாசல் திண்ணையில் ஒரு விசிறியை வைத்து விசிறியபடி அப்பனுடன் அவள் இருக்கிறாள்.

அவன் விர்ரென்று சைகிளில் வந்து இறங்குகிறான். உள்ளே வருகிறாள். கையில் இருக்கும் பையை அவளிடம் கொடுக்கிறான்.

மாம்பழங்கள்... ஏதோ புத்தகம்...

“சரவணன் எங்கத் தூங்கிட்டனா? அவனுக்குத்தா சரோ மாடல் பேப்பர் வாங்கிக் குடுத்திச்சி!”

“சரோ... எங்க அவங்க பிரண்ட் வீட்டிலா இருக்கு?

“அங்கதாம் போன. இவங்க... பாக்டரிக்குக் காலம எட்டு மணிக்குள்ள வரணும். அவங்க வூடு, திருவான்மியூர் பக்கத்தில இருக்கு. ரெண்டு பேரும் வர்றதுன்னா பரவாயில்லை. அது எலக்ட்ரானிக்ஸ் எடுத்திருக்கு. இது மெக்கானிக்கல். அம்பத்துரில் இல்ல. இங்க கிண்டி எஸ்டேட்டுக்குள்ள நிறைய சின்ன சின்ன தொழிலகங்கள் இருக்கு. இவங்க பாக்டரில டிரெயின்ங் எடுக்கலாம்னு லெட்டருக் குடுத்துச் சொல்லிருக்காரு. தான்வா அம்மா, அம்பத்துரில் பவர் டிரில்லர்... பாக்டரிக்கு சரோ மின்னியே பாத்து பேசிருக்குப் போல... திருவான்மியூரிலிருந்து இது பல்லாவரத்து தங்கிக்கிறதுன்னு முடிவு பண்ணி சேத்துட்டே கிண்டி கிட்டக்க. நிறைய பஸ் இருக்குது.”

இவளுக்கு ஆவல் துடிக்கிறது.

"பல்லாவரம்ன்னா.... அங்க எங்கே?”

“சின்னம்மா இருக்காங்கல்ல, அவங்க இருக்கிற ஆஸ்டல்தா.”

"திருவான்மியூர்ன்னு இடம் வச்சிட்டு கிண்டி பாக்டரில வந்து பார்த்துக்கிட்டோம். பால் பேரிங் எல்லாம் செய்யற பாக்டரியாம். அங்கேந்து சின்னம்மாவப் பார்க்க ஹோமுக்கு வந்தோம். அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். உடனே வெளியே ஆளனுப்பி காபி மிக்சர் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்திச்சி. சின்னம்மா பேருல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு. அங்கே சமையல் வேலை செய்யிது. கூட ரெண்டு எடுபிடி பொம்பிளங்களாம். எல்லாம் பொம்புளங்க. திருவான்மியூர்லேந்து ஏவாரணும். என் ரூமில தங்கிக்கட்டும் பாப்பா. இங்க ஆஸ்டல்ல எல்லாம் வேலை செஞ்சிட்டுத் தனியா இருக்கிற லேடீஸ்தா. ஸ்ட்டுடண்ட்ஸ் கூட போன வருசம் ரெண்டு பேர் இருந்தாங்க. பிறகு இப்ப வேலைக்குப் போறவங்களுக்கு மட்டும்ன்னு வச்சிருக்காங்க. ரொம்பப் பாதுகாப்பு. கிறித்தவங்கதான் நடத்திட்டிருந்தாங்க. ஆனா இங்க இதுக்கு தலைவியாக இப்ப இருக்ற அம்மா சொர்ண லலிதா பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க மின்ன எம்பியா இருந்தவங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. ரொம்ப நல்ல மாதிரி. இவங்களுக்கு ரெண்டு பையன்க அமெரிக்காவுல டாக்டராக இருக்காங்க. இங்க இந்த ஹாஸ்டல் தவிர, நீலாங்கரையில் பெரிய முதியோர் இல்லம் நடத்தறாங்க. பார்வையில்லாதவங்ளுக்காக ஒரு சங்கம் கூட அவங்க தலைமையில் நடக்குது... எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. எப்படியோ ஆடிக்காத்துல பறந்து வந்து இப்படி ஒரு பத்திரமான எடத்துல விழுந்திட்ட... ன்னு சொல்லிச்சு. நமக்கு அது குத்தாறப்பில இருந்தாலும் பெரிசா எடுத்துக்கறதுக்கில்ல.

"பத்து நாட்களுக்கு எங்கூடத் தங்க அம்மா பர்மிசன் குடுப்பாங்க. இல்லாட்டி இப்ப ஒரு ரூமில மூணு பேர் இருக்கிற இடத்துல ஒன்னு காலி இருக்கு. பத்து நாளைக்கு நூறு ரூபா கேட்பாங்க. குடுத்திடலாம். பிரச்சன இல்லன்னிச்சி. காலம ஏழரைக்குள்ள உனக்கு நாஷ்டா குடுத்திடறேன். பகலுக்கு அங்க காண்டின்ல எதானும் சாப்பிட்டுக்க. இங்க எட்டரைக்கு நாஷ்டா சாப்பிட்டு கையில் ஒரு சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் லஞ்ச் கட்டிட்டு போறவங்க இருக்காங்க. அது ஏழரைக்குள்ள ஆவாது. ராத்திரிக்கு எட்டுக்குள்ள டின்னர் ரெடியாயிடும்னிச்சு. இதவிட பத்தரமா வசதியாக நம்ம குழந்தையைப் பாத்துக்கப்போறவங்க யாரு? அதுதா சொல்லச் சொல்லக் கேக்காம இந்த மாம்பழம் வாங்கிக் கொடுத்திச்சி.” இவர்கள் சமையலறையில் தணிந்த குரலில் பேசுவது அப்பனுக்கு எப்படி எட்டியதோ?

“ஏம்பா ராசாத்திய பாத்தியா? ஒரு நட இங்க வரச் சொன்னியா?”

"பாத்த மாமா. அவங்க கூடத்தா இப்ப சரோவ வுட்டிருக்க...”

"எப்பிடி மக கூட இருக்காளா? மக நல்லபடியா வச்சிக்கிதா?”

“மக அவங்ககூட இல்ல. இவங்க ஒரு ஆஸ்ட்ல்ல இருக்காங்க. சமையல் வேலதா. ஆனா நல்லபடியா இருக்கேன். பிரச்னை எதும் இல்லைன்னு சொல்லிச்சி...”

செவந்தி மாம்பழத்தைக் கழுவி நறுக்குகிறாள்.

மெல்லியதோல்.உருண்டையான ருமானி. ஒரு துண்டை அப்பனுக்குக் கொடுக்கிறாள். அப்பன் அதை வாயில் போட்டுக் கொள்கிறான். கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் பெருகிறது.

“ஏம்ப்பா... இப்ப இஸ்கூல் லீவுதான. ராசாத்தி மகளையும் பிள்ளைகளையும் மருமவனையும் ஒருவாட்டி கூட்டிட்டு வரச் சொல்லலாமில்ல. மக ருக்கு நல்லபடியாக இருக்கிறதா ருக்குமணி அவ ஆத்தா பேரை அதுக்கு வச்சிது. அதுக்கு ஒரு நெல்லது செய்யல பாவி நாங்க..” உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அறைந்து கொள்கிறார்.

“அப்பா.... என்ன இது? உங்ககிட்ட எதும் சொல்ல முடியல. அவங்கள நினைச்சா ஒடம்புக்கு ஆவறதில்ல இல்ல.”

“இல்ல செவந்தி. நெஞ்சு ஆறாத புண் இது. உங்கம்மா பழிகாரிதா என்ன அப்படி தடுத்துப் போட்டது. ஒரு பாவமும் அறியாத அவ மேல அபாண்டம் சுமத்தினா. அந்தப் பாவம் இங்க புண்ணா இருக்கு. அவ இங்க வந்து நா மனசில வச்சுக்கல என்று சொல்லுற வரைக்கும் ஆறாது...” ரங்கன் மெளனமாக கலத்தில் போட்ட சோற்றைச் சாப்பிடுகிறான். அப்போது தான் பாட்டியும் பேரனும் டி.வி. பார்த்து விட்டு வருகிறார்கள். “ஏய் இங்க வா! படிக்கிறப்ப இப்படி ராத்திரி பத்து மணிக்கு டி.வி. பாத்திட்டு படிச்சி எப்பிடித் தேருவே? ரெண்டாயிரம் கட்டி சேர்த்திருக்கு. சரோக்கு ஒரு பத்து பைசா அதிகமா செலவு பண்ணல. இன்னி வரையிலும் அவங்க டீச்சர் எல்லாம் பெருமையா பேசும்படி வந்திச்சி. நீ...” இழுத்து வைத்து முதுகில் ஒர் அறை விடுகிறான்.

உடனே சரவணன் பெரிதாக அழத் தொடங்குகிறான். “மூடுமூடு ராஸ்கல். சத்தம் போட்டே பலி வச்சிடுவே. மூடு. அக்கா மாடல் கொஸ்சின் பேப்பர் அவங்க பிரண்ட்கிட்டந்து வாங்கிக் கொடுத்திருக்கு, போயி சோறு துன்னிட்டுப் படுத்துக்க. விடிகாலம நாலு மணிக்கு எழுப்பி விடுவே.. படிக்கணும்! போ..”

பாட்டிக்குப் பொறுக்கவில்லை. “அது வரலன்னுதா சொல்லிச்சி. நாந்தா கூட்டிட்டுப் போன. அங்க அவன் புஸ்தகம் வச்சி படிச்சிட்டுதா இருந்தா.”

“அது சரி கெடுக்கறதே நீங்கதா. நீங்க டி.வி. பார்க்கப் போனா அவ எதுக்கு? போங்க! போங்க!”

வேலை முடிந்து மாட்டுக்கு வைக்கோல் போட்டுவிட்டு செவந்தி சேலையை உதறிக் கொண்டு வாயிலுக்கு வருகிறாள். ஒரே புழுக்கமாக இருக்கிறது. காற்றே வரவில்லை.

தரையில் தலைப்பை உதறிக் கொண்டு தலை சாய்கிறாள்.

"செவந்தி... ஒரு விசயம் சொல்ல வாணாம்னாலும் சொல்லாம முடியல... முருகன் இப்ப பத்து நாள் மின்னக் கூட பட்டணம் வந்திருந்தானாம். வயிற்றுவலி அல்சர்ன்னு வைத்தியம் பண்ணிக்கிறானாம். இளைச்சிப் போயிட்டான். அவங்க மச்சினிச்சி வீட்டில் பார்த்தேன்னு சின்னம்மா சொல்லிச்சி. ருக்கு அங்கதா ஏரிக்கரைப் பக்கம் குடிசையில் இருக்காப்பல. இவங்க ஏரிக்கரைப் பக்கம் ஜீவா நகர்ன்னு புதிசா வீடுகள் கட்டிருக்காங்க. அங்க இருக்காங்க.

எனக்கென்னமோ, ஒரு நடை போயி பாத்துட்டு ஓராயிரம் ரூபான்னாலும் குடுத்திட்டு வரணும்னு. ஏன்னா, அப்ப நான் சரோவக் கூப்பிடப் போனப்ப, அண்ணி குத்தலா பேசிச்சி. நாம ஒண்ணும் அவங்க சொத்த அபகரிக்கலன்னு காட்டணும். அம்மா அப்பாக்கு சோறு போட்டு வைத்தியம் பண்ணி நல்லபடியா வச்சிருக்கிறம்... நீ சொல்லு நாயத்த...”

“நீங்க நினைச்சா சரி. சரோவும் படிப்பு முடிச்சிட்டது. எங்கனாலும் வேலைக்குப் போயிடும். நடவுக்குன்னு பணம் வச்சிருக்கிற. நாளக்கே ஆயிரம் போல எடுத்திட்டு போய் வந்திருங்க. ஆனா இது விசயம் அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”