சங்க இலக்கியத் தாவரங்கள்/060-150

 

வானி–ஓமம்
கேரம் காப்டிகம் (Carum copticum,Benth.)

வானி-ஓமம் இலக்கியம்

‘பயினி வானி பல்லிணர்க் குரவம்’ என்றார் கபிலர் (குறிஞ். 68). நச்சினார்க்கினியர் ‘வானி’ என்பதற்கு ‘வானிப்பூ’ என்று உரை கூறினார். வடமொழியில் ஒருவகையான ஓமத்தை, ‘பாசிகாயவானி’ என்பர். அகரமுதலிகள் ‘ஓமம் என்னும் பூண்டு’ என்பதைக் கொண்டால் வானிப்பூவை ஓமம் என்று கொள்ளலாம். இதன் பூ வெண்மையானது. இதன் கனி ஓமம் எனப்படும். இதிலிருந்து ஓம நீர் வடித்தெடுக்கப்படுகிறது. உணவைச் சீரணிக்கச் செய்யும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு.

சங்க இலக்கியத்தில் வானி என்ற சொல் வேறு யாண்டும் காணப்படவில்லை.

வானி–ஓமம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
அம்பலேலீஸ் (umbellales)
அகவிதழ்கள் இணையாதது
தாவரக் குடும்பம் : அம்பெலிபெரே (Umbelliferae)
தாவரப் பேரினப் பெயர் : கேரம் (Carum)
தாவரச்சிற்றினப்பெயர் : காப்டிகம் ( copticum, Benth)
சங்க இலக்கியப் பெயர் : வானி
உலக வழக்குப் பெயர் : ஓமம்
தாவர இயல்பு : செடி; நுண்மயிர் இலைகளிலும், தண்டிலும் அடர்ந்திருக்கும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்; குளிர்ந்த நிலப்பாங்கில் பயரிடப்படுகிறது. செடி 1-3 அடி உயரமானது; தழைத்து நேராக வளரும்.
இலை : 2-3 முறை சிறகன்ன பிளவுபட்டது. சிற்றிலை நீளமானது. இலையடிச் செதிலிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் ‘அம்பெல்’ எனப்படும். ஆயினும் 6-16 கிளைகள் ஒரே மட்டமாகத் தட்டு போலப் பரவியிருக்கும்.
கனி : ஏறத்தாழ முட்டை வடிவானது. புற விளிம்புகளும் ‘விட்டே’யும் காணப்படும்.

இந்திய நாட்டில் பஞ்சாப் முதல் வங்காளம் வரையிலும், தெற்கே டெக்கான் வரையிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது.

மேற்கு ஆசியா, தெற்கு யூரோப், வடக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

சிறந்த மருந்துச் செடி. இதன் கனியே ஓமம் எனப்படும்.