சங்க இலக்கியத் தாவரங்கள்/069-150

 

செங்கொடுவேரி
பிளம்பாகோ ரோசியா (Plumbago rosea, Linn.)

கபிலர் கூறிய ‘செங்கொடுவேரி’ என்பதற்கு (குறிஞ். 64) ‘செங்கொடுவேரிப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். பிற்கால இலக்கியங்கள் இதனைக் ‘கொடி’யென்றும் ‘மர’மென்றும் குறிப்பிடுகின்றன. இது இக்காலத்தில் ‘கொடிவேலி’ என வழங்கும் ஒரு சிறு செடியே ஆகும்.

சங்க இலக்கியப் பெயர் : செங்கொடுவேரி
பிற்கால இலக்கியப் பெயர் : செங்கொடுவேலி
உலக வழக்குப் பெயர் : கொடிவேலி
தாவரப் பெயர் : பிளம்பாகோ ரோசியா
(Plumbago rosea, Linn.)

செங்கொடுவேரி இலக்கியம்

‘செங்கொடுவேரி தேமா மணிச்சிகை’ என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 64). செங்கொடுவேரி என்பதற்குச் ‘செங்கொடுவேரிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறினார். கார்ப்பருவ ஒப்பனைப் பூக்களைக் கூறும் இளங்கோவடிகள்,

“செங்கொடு வேரிச் செழும் பூம்பிணையல்[1]

என்றார். கொங்குவேளிர்[2] இதனை முல்லை நிலத்து ஆற்றங்கரை மரங்களின் வரிசையில் வைத்துள்ளார்.

இவற்றைக் கொண்டு இதனைக் ‘கோட்டுப் பூ; முல்லை நிலத்தில் கார் காலப் பூவாகச் செம்மை நிறத்தில் விளங்குவது;

செங்கொடுவேரி
(Plumbago rosea)

இதனை ‘மாலையாகக் கட்டி மகளிர் சூடிக் கொள்வர்‘ என்று மட்டும் அறிய முடிகிறதன்றி, வேறு எக்குறிப்பும் காணப்படவில்லை.

எனினும், இது செங்கொடி வேலி என்றிருக்குமாயின், இக்காலத்தில் வழங்கப்படும் செந்நிற மலருள்ள ‘கொடி வேலி’ மலரைக் குறிக்கும். கொடி வேலியில் வெண்ணிற மலருள்ள செடியும் உண்டு. நீல நிறமுள்ள மலருள்ள செடியும் உண்டு. சென்னை-கலைக்களஞ்சியம் இதனைச் செங்கொடி வேரி என்றே குறிப்பிடுகின்றது (Vol. III பக்கம் 1581). மேலும், இதனைப் பிளம்பாகோ ரோசியா (Plumbago rosea) ‘ரோஜா நிறப்பூ உள்ள கொடி வகை’ என்று கூறும். இது கொடியன்று; மரமன்று; செடிதான். வெற்றிடத்தும், வேலிகளிலும் தானே வளரும் செடியாகும். இது பிளம்பாஜினேசி (Plumbaginaceae) என்ற தாவரக் குடும்பத்தின் பாற்படும்.

இச்செடி மருந்துக்குப் பயன்படும்.

செங்கொடுவேரி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : எரிகேலீஸ், அகவிதழ் இணைந்தவை
தாவரக் குடும்பம் : பிளம்பாஜினேசி (Plumbaginaceae)
தாவரப் பேரினப் பெயர் : பிளம்பாகோ (Plumbago)
தாவரச் சிற்றினப் பெயர் : ரோசியா (rosea)
தாவர இயல்பு : செடி
தாவர வளரியல்பு : மீசோபைட், சற்று வறண்ட வெற்றிடத்தும், வேலிகளிலும் வளர்கிறது. 2 முதல் 4 அடி வரையில் வளரும்.
இலை : சற்று அகன்ற தனியிலை, மாற்று அடுக்கில் இருக்கும். மெல்லியது. முட்டை வடிவானது. இலைக்காம்பின் அடி அகன்றிருக்கும்.

செங்கொடுவேரி
(Plumbago rosea)

மஞ்சரி : தனி மலர். காம்பின்றி இணைந்தது.
மலர் : அழகிய இளஞ்சிவப்பு நிறமானது.
புல்லி வட்டம் : குழல் வடிவானது. நீண்ட மயிர்ச் சுரப்பிகள் நிறைந்து இருக்கும். 5 பிளவானது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5 அடியில் இணைந்து, நீண்ட குழல் போன்றது. மடல்கள் விரிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 5 தனியான தாதிழைகள் தாதுப் பைகள் நுனி ஒட்டியவை. சற்று அகன்று நீண்டவை.
சூலக வட்டம் : சூலகம் நுனியில் குறுகியிருக்கும். சூல் தண்டு நுனியின் இரு கிளைகளாகி இருக்கும்.
கனி : காப்சூல், வெடிகனி.
விதை : தனித்துள்ளது. வித்திலைகள் அடியில் குறுகி, நுனியில் அகன்றிருக்கும்.

‘செங்கொடுவேரி’ எனப்படும் கொடிவேலியின் வேர் மருந்துக்குப் பயன்படும். பொதுவாகக் கொடிவேலி எனப்படும். இச்செடியில் வெள்ளை நிறப்பூ உடையதும், நீல நிறப்பூவுடையதுமான செடிகள் உண்டு. இவையனைத்தும் மருந்துச் செடிகளே.


  1. சிலப் : 14 : 91
  2. பெருங்: இலா: 12 : 25