சங்க இலக்கியத் தாவரங்கள்/068-150

எறுழம்
ரோடோடென்ட்ரான் நீலகிரிகம்
(Rhododendron nilagirícum, Zenk.)

இதனைக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் (66) ‘எரிபுரை எறுழம்’ என்று குறிப்பிடுகின்றார். ‘எரிபுரை’ என்றதனால் இதன் மலர் நெருப்பை ஒத்தது என்பதாகும். ஐங்குறுநூற்றில் (308) ‘விரியினர்க்கால் எறுழ் ஒள்வீதாஅய்’ என இது குறிப்பிடப்படுகின்றது. இவ்வடியில் ‘ஒள்வீ’ என்பதற்கு ‘ஒளி பொருந்திய மலர்’ என்று பொருள் கோடல் பொருந்தும். இதனைப் பற்றிய வேறு குறிப்புகள் வேறு யாண்டும் காணப்படவில்லை. எனினும், இதன் மலர் நெருப்பை ஒத்தது; மலர்க் காம்புடையது; மலர்கள் கொத்தாகப் பூக்கும்; விரிந்த இதன் மலர் ஒளி வீசுவது என்ற குறிப்புகளைக் கொண்டு பார்த்தால் நீலகிரி மலையின் உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் நெருப்பை ஒத்த விரிந்த மலர்களை உடைய ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் எனப்படும் ஒரு சிறு மரம் இந்த எறுழமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால், இதுதான் எறுழம் என வலியுறுத்துமாறில்லை.

சங்க இலக்கியப் பெயர் : எறுழம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : எறுழ்
தாவரப் பெயர் : ரோடோடென்ட்ரான் நீலகிரிகம்
(Rhododendron nilagirícum, Zenk.)

எறுழம் இலக்கியம்

இதனைக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் ‘எரிபுரை எறுழம் சுள்ளிகூவிரம்’ (66) என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டார்.

எறுழம்
(Rhododendron nilagiricum)

ஐங்குறுநூற்றில் (308)

“விரியிணர்க் கால்எறுழ் ஒள்வீதாஅய”

என்று ஓதலாந்தையர் இதனைக் கூறுவர். இதனால் எறுழம்பூ காம்புடையதென்றும், கொத்தாகப் பூக்குமென்றும், விரிந்த இதன் மலர் ஒள்ளியதென்றும் அறியலாம்.

இவையன்றி. சைலியா டோலாரிமிபார்மிஸ் (Xylia dolarimiformis) என்னும் இலையுதிர் மரத்தை ‘எருள்’ (Erul) என்று லஷிங்டனும், இருள் (Irul) என்று காம்பிளும் கூறுப. இதன் பூக்கள் வெண்மை நிறத்தவை. ஆதலின். இது எறுழமன்று. உயரமான பெரிய மலைப் புறத்தே நெருப்பை ஒத்த செந்நிறப் பூக்களைக் கொத்துக் கொத்தாக உமிழும் ஓர் அழகிய மரமுண்டு. நீலகிரி மலையில் தொட்டபெட்டா என்னும் மலையுச்சிக்குப் போகும் பாதையில் ரோடோடென்ட்ரான் என்று ஒரு சிறு மரம் காணப்படுகிறது. இதனை ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் (Rhododendron nilagiricum)என்பர் காம்பிள் (Gamble) . இதனை அழிஞ்சில் என வழங்குவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். அழிஞ்சில் மரம் இதனினும் முற்றிலும் மாறுபட்டது.

சங்க இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்த்தால், எறுழம் என்பது ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் என்னும் மரமாக இருக்கலாம் என்று தமிழறிஞரும் தாவர விற்பன்னரும் கூறுவர். இதற்குக் காரணம், கபிலர் இதனை ‘நெருப்பை ஒத்த எறுழம்’ என்று குறிப்பிடுதலின் என்க.

எறுழம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெடீரோமீரி (Heteromerae)
தாவரக் குடும்பம் : எரிகேசி (Ericaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரோடோடென்ட்ரான் (Rhododendron)
தாவரச் சிற்றினப் பெயர் : நீலகிரிகம் (nilagiricum)
தாவர இயல்பு : சிறு மரம் 4 முதல் 5 மீட்டர் உயரமாக வளரும்.

எறுழம்
(Rhododendron nilagiricum)

தாவர வளரியல்பு : மீசோபைட் (mesophyte) இரண்டாயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் உதகையின் பெருமலைப் பாங்கில் குளிர்ந்தவிடத்தில் மட்டும் வளரும்.
இலை : தனியிலை. தோல் போன்றது. தடிப்பானது. மாற்றடுக்கில் பெரிதும் கிளை நுனியில் காணப்படும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. இலைக்கோணத்தில் கொத்தாக வளரும்.
மலர் : பெரிய, விரிந்த மலர்கள். குருதிச் செந்நிறமானவை மடல் மேலே விரிந்தவை. சிவந்த பூவடிச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 சிறு, பசிய புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5-10 இதழ்கள், புனல் வடிவம்.
மகரந்த வட்டம் : 5-10 வரை மகரந்தத் தாள்கள் உள்ளன. மகரந்தத் தாள்கள் இழை போன்றவை; தாதுப்பை சற்று நீளமானது. நுனியில் உள்ள துளை வழியாகத் தாது உகும்.
சூலக வட்டம் : 5-20 சூலறைகளும், ஒவ்வொன்றிலும் எண்ணற்ற சூல்களும் உள்ளன. சூல் தண்டு மென்மையானது. சூல்முடி குல்லாய் வடிவானது.
கனி : 5-20 அறைகளுடைய வலிய காப்சூல். சுவர் வழி வெடிக்கும் கனி
விதை : பல முளை சூழ் தசையுள்ள விதைகள். விதையின் வெளியுறை வால் போல் நீண்டிருக்கும். இச்சிறு மரங்கள் ஒரு சேரப் பூத்த நிலையில் நெருப்பு அகைந்தன்ன அழகுடன் காட்சி தரும்.