சங்க இலக்கியத் தாவரங்கள்/074-150

 

தளவம்-செம்முல்லை
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் ‘தளவம்’ என்பதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர் மேலும் அவர் இதனை முல்லை விசேடம் என்று கூறி, இது முல்லை வகையினதென்னும் தாவரவியலுண்மையையும் புலப்படுத்தியுள்ளார். இதற்குத் தாவரவியலில் ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்று பெயர். தொல்காப்பியத்தில் இது ‘தளா’ என்று குறிப்பிடப்படுகிறது. இது பல்லாண்டுகள் வாழும் புதர்க் கொடியாகும்.

மேலும், கபிலர் கூறும் ‘பித்திகம்’ என்பதற்குப் ‘பிச்சிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். ஆதலின், தளவம் என்பதும் பித்திகம் என்பதும் ஒன்றுதானா அல்லது வேறு பட்டவையா? என்பது பற்றிய இதன் விரிவைப் ‘பித்திகம்’ என்ற தலைப்பில் காணலாம்.

சங்க இலக்கியப் பெயர் : தளவம்
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : தளா, தளவு, பித்திகம்
உலக வழக்குப் பெயர் : பிச்சிப்பூ
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)

தளவம்-செம்முல்லை இலக்கியம்

‘தாழை தளவம் முட்டாள் தாமரை’ என வரும் குறிஞ்சிப் பாட்டில் (குறிஞ். 80) உள்ள தளவம் என்பதற்கு நச்சினார்க்

 

தளவம்
(Jasminum grandiflorum)

கினியர், ‘செம்முல்லை’ என்று உரை கூறியுள்ளார். அவரே, பொருநராற்றுப் படையில் வரும் (199) ‘அவிழ் தளவின்’ என்றவிடத்து, தளவு என்பது முல்லை விசேடம் என்பராயினர். தளவ மலரைப் பிச்சிப்பூ என்று வழங்குவர் உலகியலார்.

மேலும், குறிஞ்சிப்பாட்டில், ‘வஞ்சி பித்திகம் சிந்து வாரம்’ (குறிஞ். 89) என்று குறிப்பிடப்படும் ‘பித்திகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பிச்சிப்பூ’ என்று உரை கண்டுள்ளார்.

“அவிழ் தளவின் அகன் தோன்றி
 நகு முல்லை உகு தேறுவீ”
-பொருந.199-200

என முடத்தாமக்கண்ணியாரும்,

“தளவின் பைங்கொடி தழீஇப் பையென
 நிலவின் அன்ன நேர்அரும்பு பேணி
 கார் நயந்து எய்தும் முல்லை”
-ஐங். 454

எனப் பேயனாரும், தளவத்தையும், முல்லையையும் வேறுபடுத்தி உரைக்குமாப் போலக் கபிலரும் இவற்றைத் தனித் தனியாகப் பாடுவர். ஆதலின், தளவம் வேறு, முல்லை வேறு என்பதும், தளவம் முல்லையின் விசேடமாகச் செம்முல்லை எனப்படும் என்பதும் அறிதல் கூடும். தளவ மலரின் அகவிதழ்கள் அடிப்புறம் சிவந்து இருப்பதாலும், இதன் கொடியும், அரும்பும், மலரும், மணமும் முல்லையை ஒத்திருப்பதாலும் இது செம்முல்லை எனப்பட்டது போலும்.

‘தளவின் பசிய கொடியைத் தழுவி முல்லை படரும்’ (ஐங். 454) எனவும், ‘தவழ் கொடித் தளவம்’ (கலி. 102 : 2) எனவும் கூறுபவாதலின், தளவம் ஒரு படர் கொடி என்பதும் பெற்றோம்.

இக்கொடி புதர்களின் மேலேறிப் படரும் என்று பலருங் கூறுவர்.

“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை”
-அகநா. 23:3
“புதல் தளவின் பூச்சூடி”ーபுறநா. 395 : 5

“புதல்இவர் தளவம் பூங்கொடி அவிழ”-நற். 242 : 2

“. . . . . . . . புதல் மிசைப்
 பூ அமல் தளவமொடு”
-குறுந் 382 : 2-3

மேலும் ‘தளவ மலர் ததைந்தது ஓர் கானற் சிற்றாற்றயல்’-கலி. 108 : 27 என்றமையின், தளவம் முல்லை நிலத்தைச் சார்ந்தது என்பதும்,

“பூஅமல் தளவமொடு தேங்கமழ்பு கஞல
 வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று”

-குறுந் 382:3-4
“பிடவம் மலர, தளவம் நனைய
 கார்கவின் கொண்ட கானம் காணின்”
-ஐங். 499 : 1-2

என்றமையால், தளவம் கார்காலத்தில் பூக்கும் என்பதும், இதன் கொடியில் மலர்கள் நிரம்ப உண்டாகும் என்பதும், தளவ மலர் இனிய நறுமணம் உள்ளது என்பதும் அறியக் கூடும்.

தளவின் செம்முனையானது சிரல் பறவையின் வாயைப் போலச் சிவப்பாக இருக்குமென்றும், இம்முகை வண்டவிழ்ப்ப மலரும் என்றும் பேயனார் கூறுவர்.

“பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
 ஆடுசிறை வண்டவிழ்ப்ப
 பாடுசான்ற காண்கம் வாணுதலே”
-ஐங்: 447 : 2-4

ஆகவே தளவம் என்பது செம்முல்லை என்ற கூற்று ஒக்கும்.

முல்லை முகையைப் போன்று தளவத்தின் முகை அத்துணை எளிதில் விரிவதில்லை. இதன் அரும்பு போதாகிப் பிணி அவிழ்வதைக் கண்டு புலவர்கள் அங்ஙனமே கூறுவர்.

“புதல்மிசைத் தளவின் . . . . .
 ஒருங்கு பிணி அவிழ”
-அகநா. 23 : 3-4

“தளவுப் பிணி அவிழ்ந்த”-அகநா. 64 : 4

“போதவிழ் தளவமொடு”-ஐங். 412 : 2

“தளவம் பூங்கொடி அவிழ”-நற். 242 : 2

“அவிழ் தளவின் அகன் தோன்றி”-பொருந. 199

தளவ மலர்க்கொடி திருக்கடவூர் சிவன் கோயிலில் தலவிருட்சமாக வளர்க்கப்படுகிறது. இதனைப் பிச்சிப்பூங்கொடி என்று கூறுவர். இச்கொடி ஆண்டு முழுவதும் தவறாது மலர் தருகிறது என்பர்.

ஆசிரியர் தொல்காப்பியர், ‘யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்’ -தொல். எழுத்து. (280 : 7 : 27) என்று இதனைத் ‘தளா’ என்று குறிப்பிடுகின்றார். தளவம் பிடவத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது.

இந்நாளில் பிச்சிப் பூங்கொடி என வழங்கும் இத்தளவத்தில் இரு வகை உண்டு. ஒரு வகையில் செம்முல்லை மலர்கள் உண்டாகின்றன. மற்றொரு வகைக் கொடியில் வெண்ணிற மலர்கள் உண்டாகின்றன. ஏனைய இயல்புகள் எல்லாம் இரு வகைக் கொடிகளிலும் ஒரே மாதிரியானவை. இவற்றுள் முன்னையது தளவம் போலும், பின்னையது பித்திகம் போலும் எனக் கொள்ளுதல் கூடும். இதன் விரிவைப் ‘பித்திகம்’ என்ற தலைப்பிலும் கூறுதும்.

தளவம்—செம்முல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Оleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : கிராண்டிஃபுளோரம் (grandiflorum)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் புதர்க் கொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 30 முதல் 50 மீட்டர் நீளம் ஏறிப் படர்ந்து வளரும் படர் கொடி.
கிளைத்தல் : இலைக் கோணத்தின் குருத்து, கிளைத்து நீண்டு வளரும்.
வேர்த் தொகுதி : வலிய ஆணி வேர், பக்க வேர்களும் உள.
தண்டுத் தொகுதி : மெல்லிய கம்பி போன்றது. வன் தண்டின் அமைப்புடையது.
அடித்தண்டு பருமன். 3-4 செ.மீ. கிளைகள் பருமன். 2-5 மி. மீ.
இலை : கூட்டிலை; எதிரடுக்கில் 5-7 சிற்றிலைகள் சிறகு அமைப்பு.
சிற்றிலை : 3-4 இணைகள்
அடியில் : 10-12 மி. மீ. 6-9 மி. மீ.
நுனிச் சிற்றிலை : 20-25 மி. மீ. 10-12 மி. மீ.
மஞ்சரி : கிளை நுனியிலும், இலைக்கோணத்திலும் நுனி வளராப் பூந்துணர் மும்முறை கிளைத்தது. ‘காரிம் போஸ் பானிக்கில்’ பூவடிச் செதில் முட்டை வடிவானது.
மலர் : 4-5 அடுக்கமுள்ள ஒழுங்கான மலர். அரும்பு மெல்லிய, நீளமான, இளஞ்சிவப்பு நிறமானது.
புல்லி வட்டம் : 4-5 நீளமானவை, மெல்லியவை, பசிய நிறம்.
அல்லி வட்டம் : 4-5 இதழ்கள் அடிப்புறம் இளஞ்சிவப்பு நிறமானவை, அடியில் இணைந்து குழல் வடிவாகவும் மேலே விரிந்தும் இருக்கும். அகவிதழ்கள் வெண்மை நிறமாகவும் இருக்கும்.
மகரந்த வட்டம் : 2 மகரந்தத் தாள்கள். அல்லிக் குழலுள் அடங்கியும், அல்லி ஒட்டியும் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 தலைகீழ் சூல்கள்.
சூல் தண்டு : குட்டையானது. சூல்முடி இரு பிளவுடையது. சூலிலை நீள் வட்டமானது.
காய் கனி : காணவில்லை.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால்.
பயன் : நறுமணம் மிக்குள்ளது. கண்ணியாகத் தொடுத்து அணியப்படும். ஜாஸ்மின் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
வளர்ப்பு : கிளைகளை நட்டு வளர்க்கலாம்.

மேலே கூறியாங்கு, பிச்சிப் பூங்கொடி என வழங்கும் தளவம் அல்லது பித்திகத்தில் செவ்விய அரும்புகளையுடைய கொடியைத் தளவம் என்றும், வெண்மையான அரும்புகளையுடைய கொடியைப் பித்திகம் என்றும் கொள்ளுதல் கூடும். தாவரவியல் இவ்விரு கொடிகளையும் ஒரே சிற்றினமாகவே கருதி, ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்று பெயரிடுகின்றது. இவற்றை இதுகாறும், யாரும் வேறுபடுத்தி ஆய்வு செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என்று பவ்டன் (1940 a), கிருஷ்ணசாமி இராமன் (1948 а), டட்டா. எம் (1960) என்போர் கணக்கிட்டனர். மேலும்,

முல்லைக்கு 2n = 26 எனவும்,

செம்மலுக்கு 2n = 26 எனவும்,

கொகுடிக்கு 2n = 26, 39 எனவும்,

மல்லிகைக்கு 2n = 26, 39 எனவும்,

அதிரலுக்கு 2n = 26 எனவும்

பல்வேறு அறிஞர்கள் ஆய்ந்து கண்டுள்ளனர்.