சங்க இலக்கியத் தாவரங்கள்/081-150

 

குளவி-மலைமல்லிகை
ஜாஸ்மினம் கிரிபித்தியை
(Jasminum griffithii,Clarke.)

‘குளவி’ என்னும் புதர்க்கொடி மல்லிகை வகையைச் சார்ந்தது. இதன் இலைகள் அகன்று பெரியனவாக இருக்கும். இதனை மலைமல்லிகை என்று வழங்குவர். இதனுடைய தாவரப் பெயர் ‘ஜாஸ்மினம் கிரிபித்தியை’ என்பதாம். ஜாஸ்மினம் என்ற இத்தாவரப் பேரினத்தில் மிகப் பெரிய தனி இலையை உடைய சிற்றினம் ‘கிரிபித்தியை’ என்ற ஒன்றுதான். இதன் தாவரச் சிற்றினப் பெயரைக் கண்டு கொள்வதற்குத் துணை செய்த பாடல் குறுந்தொகையுள் உள்ளது (100). ‘பரு இலைக் குளவியோடு’ என இப்பாட்டில் கபிலர் கூறிய துணையானே இதன் தாவரச் சிற்றினப் பெயரை அறுதியிட முடிந்தது.

சங்க இலக்கியப் பெயர் : குளவி
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : அதிரல், மௌவல்., மல்லிகை
பிற்கால இலக்கியப் பெயர் : மலைமல்லிகை, வன மல்லிகை,

காட்டு மல்விகை

உலக வழக்குப் பெயர் : மலை மல்லிகை. மலைப்பச்சை
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிரிபித்தியை
(Jasminum griffithii,Clarke.)

குளவி-மலைமல்லிகை இலக்கியம்

‘கரந்தை குளவி கடிகமழ் கலிமா’ என்ற குறிஞ்சிப்பாட்டு (76) அடியிலும், திருமுருகாற்றுப்படை (191) ‘குளவியொடு’
 

குளவி
(Jasminum griffithii)

என்றவிடத்தும் பயிலப்படும் குளவி என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘காட்டு மல்லிகை’ என்று உரை கூறியுள்ளார். பரிபாடலில் (62) இதற்குத் ‘தாளிப்பூ’ என்று உரை கூறப்பட்டு உள்ளது. குறுந்தொகை (100) உரையில் உ. வே. சா. இதனை ‘மனை மல்லிகை’ என்பர். புறநானூற்று உரைகாரரும் (168) இதற்கு ‘மலை மல்லிகை’ என்று உரை கூறினார். நற்றிணை (346) உரை ஆசிரியர் இதற்கு ‘மலைப்பச்சை’ என்று உரை கண்டார். நற்றிணையுடன், நிகண்டுகளில் திவாகரமும், சூடாமணியும் இதனை ‘மலைப்பச்சை’ என்றே குறித்தன. எனினும், இது மல்லிகை வகையானது. இதன் இலைகள் பெரியனவாக இருக்குமென்பதைப் ‘பரு இலைக் குளவி’ (குறுந். 100) என்றும், இலைகள் அடர்ந்திருக்குமென்பதை ‘அடை மல்கு குளவி’ (புறநா. 90) என்றும் புலவர்கள் கூறுவார்கள். மல்லிகை இனத்தில் 15 செ.மீ. நீளமும் 6 செ. மீ அகலமும் உள்ள மிகப் பெரும் இலைகளை உடைய ஒரு கொடிதான் தாவர இயலில் பேசப்படுகிறது. குளவியின் இவ்வியல்பைக் கொண்டு, இக்கொடியின் தாவர இரட்டைப் பெயரை உறுதி செய்வதற்குக் குறுந்தொகைச் செய்யுள் (100) துணையாக உள்ளது. மேலும் இது ‘பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவி’ (நற். 346 : 9) எனப்படுதலின், தண்ணிய மலைப் பாங்கில் வளரும் பசிய சிறு கொடி என்பதை அறியக் கூடும். ஆகவே, இதனை மலை மல்லிகை எனக் கூறுதல் பொருந்தும். இதற்குத் தாவரவியலில் ஜாஸ்மினம் கிரிபித்தியை (Jasminum griffithii, Clarke) என்றழைப்பார்.

மேலும் இக்கொடி கயம், நீரோட்டம் முதலியவற்றிற்கருகில் வளருமென்று கூறப்படுகின்றது.

“நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற
 குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி”

-அகநா. 272 : 7-8
“குளவித் தண்கயம் குழையத் தீண்டி”一நற். 232 : 2

‘வேட்டைச் செந்நாய் உண்டு எஞ்சிய பகுதி, சிறுநீர் நிலையில் விழுந்து அழுகிக் கிடக்கிறது. அந்நீர் நிலைக்கு மேலே பூத்த குளவி மலர்கள் அதனை மூடியது போல விழுந்துள்ளன’ என்றார் சிறைக்குடி ஆந்தையார்.

“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
 குளவி மொய்த்த அழுகற் சின்னீர்”
-குறுந். 56 : 1-2

இக்கொடி மலையில் வளரும் இற்றி மரத்தின் மேல் ஏறிப் படரும் என்று ஐங்குறுநூறு கூறும்.

“கல்இவர் இற்றி புல்லுவன ஏறிக்
 குளவி மேய்ந்த மந்தி துணையொடு
 வரை மிசை உகளும் நாட”
-ஐங். 279 : 1-3

இது புதராக வளரும். அதிலும், இலைகள் அடர்ந்து, செறிந்த புதராக முள்ளம்பன்றி பதுங்கி இருக்கும் அளவிற்குச் செறிந்த புதராக இருக்கும் என்பர் புலவர்கள்.

“வேட்டம் போகிய குறவன் காட்ட
 குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
 முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட”
-அகநா. 182 : 6-8

இதன் இலை மல்லிகை இனத்திலேயே மிகப் பெரியதாகும். இதனை,

“பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
 காந்தள் அம்சிலம்பில்”
-குறுந். 100 : 2-3

என்றார் கபிலர். இதன் இலைகள் அடர்ந்திருக்கும் என்றும், அதனால் குளவிப் பொதும்பர் குளிர்ச்சியாக இருக்குமென்றும் கூறப்படுகின்றது.

“அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்”-புறநா. 90-2
“இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பர்”-ஐந்.எ. 3 : 1

இதன் மலர் நறுமணமுள்ளது என்பதைப் பல பாக்கள் குறிப்பிடுகின்றன.

“நாறிதழ்க் குளவி”-புறநா. 380 : 7
“கமழுங்குளவி”-பதிற். 12 : 10
“குளவி நாறு நறுநுதல்”-குறுந் . 59 : 3

இவற்றைக் காட்டிலும், இதன் நறுமணத்தைச் சிறப்பாகக் கூறும் பாடல் ஒன்றுண்டு. களிறும் புலியும் போரிட்டன. குருதி வழிந்தோடி, அந்நிலம் செங்களம் ஆயிற்று. குருதியால் புலால் நாறியது. இப்புலால் நாற்றத்தை மாற்றும் அளவிற்கு இதில் மணமுண்டு என்பதைப் பேரிசாத்தனார் புலப்படுத்துகின்றார்:

“அறியாய் வாழிதோழி பொறி வரிப்
 பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த

 

குளவி
(Jasminum griffithii)

“குருதிச் செங்களம் புலவுஅற வேங்கை
 உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
 மாமலை நாடனொடு மறுஇன் றாகிய<”

-அகநா. 268 : 1-5


இனி, குளவியுடன் கூதாளம் இணைத்துப் பாடப்பட்டுள்ளது:

“கூதளம் கவினிய குளவி முன்றில்”-புறதா. 168 : 12
“. . . . . . . . . . . . குளவியொடு
 வெண் கூதாளந் தொடுத்த கண்ணி”
-திருமுரு. 192
“நாறிதழ்க் குளவியொடு கூதளங்குழைய”-புறநா. 380 : 7
“குல்லை குளவி கூதளங் குவளை”-நற். 376 : 5

இங்ஙனமாகக் குளவிக் கொடி பயிலப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை உற்று நோக்கினால், இது பெரிதும் மலையிடத்து வளரும் கொடி என்பதையும், குறிஞ்சித் திணைப் பாக்களில் மிகுதியும் பேசப்படுவதையும் அறியக் கூடும். ஆதலின், இக்குளவியைக் காட்டு மல்லிகை என்பதைக் காட்டிலும் மலை மல்லிகை என்று கூறுவது பொருந்தும்.

குளவி—மலை மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : கிரிபித்தியை (griffithii)
தாவர இயல்பு : சிறு புதர்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20-50 மீட்டர் நீளமாக வளரும் எறு கொடி.
வேர்த் தொகுதி : காணவில்லை.
தண்டுத் தொகுதி : பசுமையானது.
இலை : மிகப் பெரியது. 15 செ. மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் உள்ளது. அடியும், நுனியும் குறுகி, நடுவே அகன்றது. தடிப்பானது.
இலை நுனி
: நீண்டு, கூர்மையானது, இலையடியில் கூரிய நுண் மயிர் அடர்ந்து உள்ளது.
இலை நரம்பு
: தடித்திருக்கும்.
இலைக் காம்பு
: 5-6 மி.மீ. நீளம்.
மஞ்சரி : அடர்ந்து கொத்தாகப் பூக்கும். பல மலர்கள் உண்டாகும். மலரின் அடியில் செதில் உண்டு. நீளமானது. மஞ்சரியின் மேல் இலைகள் 6.5. செ. மீ. நீளமானது. நுனியில் உள்ளவை சற்று வெள்ளியதாக இருக்கும்.
புல்லி வட்டம் : புறவிதழ்கள் 12 மி. மீ நீளம்.
அல்லி வட்டம் : 4-10 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழாய் வடிவினது. 12 மி.மீ. நீளமானது. மேலே இதழ்கள் விரிந்து விடும். 4 மி.மீ. அகலம். வெண்மையானது.
மகரந்த வட்டம் : 2 மகரந்தக் கால்கள் அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். நுண் மயிர் அடர்ந்துள்ளது.

இதில் ஏனையவற்றைக் காணவில்லை என்பர்.