சங்க இலக்கியத் தாவரங்கள்/084-150

 

சேடல்–பவழக்கால் மல்லிகை)
நிக்டாந்தெஸ் ஆர்போர்-டிரிஸ்டிஸ்
(Nyctanthes arbor-tristis,Linn.)

‘சேடல் செம்மல் சிறு செங்குரலி’ எனக் குறிஞ்சிப் பாட்டில் (82) பயிலப்படும் சேடல் என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பவழக்கால் மல்லிகை’ என்று விளக்கியுள்ளார். பதிப்பாசிரியர் உ. வே. சா. அவர்கள் ‘இது பவழமல்லிகை எனவும். பாரிசாதம் எனவும் வழங்கும்’ என்றார். இவ்வோரிடத்தில் இன்றி. சங்க இலக்கியங்களில் சேடல் காணப்படவில்லை.இச்சிறுமரம் முல்லைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இதனைப் ‘பவள மல்லிகை சண்பகம் ஞாழல் கோட்டுப் பூவகையே’ என்று கோட்டுப் பூவாகக் கூறும் புட்ப விதி[1]. இது கார்காலத்தில் பூக்கும் முன்னிரவில் பூத்து நல்ல மணம் பெருக்கும். 4 முதல் 8 வரையிலான இதனுடைய அகவிதழ்கள் அடியில் இணைந்து குழல் வடிவாகவும், ஆரஞ்சு செம்மை நிறம் உடையதாகவும் இருக்கும். இதனால் இதனைப் பவழக்கால் மல்லிகை என்று கூறுவது பொருந்தும். இவ்வக இதழ்கள் மேலே 4-8 வெள்ளிய மடல்களாக விரிந்து மிக அழகாக விளங்கும். இதன் தண்டில் முறையில்லாத இரண்டாம் வளர்ச்சி (Anomalous secondary growth) காணப்படுகிறது. ஆதலின், இதன் தண்டு மிகவும் வலிமையாக இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : சேடல்
பிற்கால இலக்கியப் பெயர் : பவழக்கால் மல்லிகை, பாரிசாதம்
உலக வழக்குப் பெயர் : பவள மல்லிகை, பவழ மல்லிகை (மஞ்சள் பூ என்பார் காம்பிள்)
தாவரப் பெயர் : நிக்டாந்தெஸ் ஆர்போர்-டிரிஸ்டிஸ்
(Nyctanthes arbor-tristis,Linn.)
 

சேடல்
(Nyctanthes arbor-tritis)

சேடல் (பவள மல்லிகை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பேரினப் பெயர் : நிக்டாந்தெஸ் (Nyctanthes)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆர்போர்-டிரிஸ்டிஸ் (arbor-tristis)
தாவர இயல்பு : சிறுமரம். 2-2.5 மீட்டர் உயரமானது. 1 மீட்டர் உயரத்துக்கு மேல் நன்கு வளர்ந்து, கிளைத்து, அடர்ந்திருக்கும்.
தண்டு : அடிமரம் வன்மையானது. 8-12 செ. மீ. வட்டமாக, அகன்று காணப்படும். கட்டை வெளிறிய சிவப்பு அல்லது மஞ்சள் பழுப்பு நிறமானது.
கிளை நுனி : 4 பட்டையாக இருக்கும்.
இலை : தனியிலை. 10-11 X 5-6 செ. மீ. நீள, அகலம். எதிர் அடுக்கில் அமைந்தவை. சற்று நீண்ட முட்டை வடிவம்.
விளிம்பு : கூரிய பற்கள் உடையது.
நுனி : நீண்டு கூர்மையானது.
நரம்பு : நடு நரம்பு தடித்தது. இலை அடியில் உள்ள நரம்புகள் இருமருங்கும் நீண்டு, இலை முழுதும் பரவி இருக்கும். இலைப் பரப்பெல்லாம் கூரிய சிறு முட்கள் உள்ளதால், சொரசொரப்பாக இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில முப்பிரிவாக உண்டாகும் சைம்கள் 4-6 மலர்கள் காணப்படும்.
மஞ்சரிக் காம்பு : சிறியது. மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமுமுள்ள அகவிதழ்க் குழலும்,
6 வெண்மையான இதழ்கள் விரிந்தும் காணப்படும். அழகும், நறுமணமும் உளள, ஒழுங்கானது. காம்பற்ற மலரடிச் செதில்களின் கட்கத்தில் உண்டாகும்.
மலரடிச் செதில் : சிறியது. 20-25 X 5-6 மி.மீ. நீள, அகலமுடையது.
புல்லி வட்டம் : முட்டை–உருளை வடிவான 6-7 மி.மீ. நீளமானது. நேர்த்தியானது. 6 பிளவாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. ஆரஞ்சு நிறமானது. மடல்கள் 4-6 விரிந்து வெண்மை நிறமாக இருக்கும்.
மகரந்த வட்டம் : 2 தாள்கள் அல்லிக் குழல் உச்சியில் காம்பில்லாமல் இருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை 2 சூலறை கொண்டது. ஒவ்வோர் அறையிலும் ஒரு நேரான சூல் அடித்தளத்தில் அமைந்திருக்கும்.
சூல் தண்டு : சூல் தண்டு உருளை போனறது. சூல்முடி குறுகியது. இரு பிளவானது.
கனி : ஒரு வட்ட வடிவக் காப்சூல் (Capsule) இருபுறமும் அமுங்கித் தடுப்புச் சுவருக்கு இணையாக இருக்கும். முற்றியவுடன் இரு ஒற்றை விதை கொண்ட அறைகளாகப் பிரியும்.
விதை : நேரானவை. தட்டையானவை. புற உறை மெல்லியது. முளைசூழ் தசையில்லை. வித்திலைகள் தட்டையானவை. முளைவேர் கீழ் மட்டமானது.

இச்சிறுமரம் பெரிதும் இலையுதிர் காடுகளில் 3000 அடி உயரமான இடங்களில் வளர்கின்றது. இந்தியா முழுவதிலும் வளர்ககப்படுகிறது. இதன் மஞ்சள் நிற அல்லிக் குழல்கள் ஆரஞ்சு நிற சாயத்தைக் கொடுக்கும். இதன் மலர்கள் மாலையில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும். இதனைப் பாரிசாதம் என்றழைப்பர்.

ஓலியேசி என்ற இத்தாவரக் குடும்பத்தை ஒலியாய்டியே (Oleoideae), ஜாஸ்மினாய்டியே (Jasminoideae) என்ற இரு சிறு துணைக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். ஜாஸ்மினம், மெனடோரே, நிக்டாந்தெஸ் என்ற மூன்று பேரினங்களும், ஜாஸ்மினாய்டியே என்ற சிறு குடும்பத்தைச் சார்ந்தவை. ஜாஸ்மினம், நிக்டாந்தெஸ் என்ற இரு பேரினங்கள் நறுமலர்களுக்காகவே இந்திய நாடெங்கும் வளர்க்கப்படுகின்றன.


  1. புட்பவிதி