சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/7.கானல் வரி

7.கானல் வரி தொகு

(கட்டுரை)

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன். 1
வேறு (ஆற்று வரி)
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.

2

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.

3

உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி.

4

வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)


கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்றுஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல் பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.

5

காதலர் ஆகிக் கழிக்கானல் கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச லாடும் புகாரே எம்மூர்.

6

மோது முதுதிரையால் மொத்துண்டு போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால் கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர்.

7

வேறு (முகம் இல் வரி)
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுததோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாதுபோர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்.

8

(கானல் வரி)
நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ.

9

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம் கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ.

10

வேறு (நிலைவரி)
கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே.

11

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.

12

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.

13

வேறு (முரிவரி)
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே.

14

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே.

15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே.

16

வேறு (திணை நிலைவரி)
கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.

17

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.

18

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.

19

வேறு
பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய

20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.

21

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.

22

வேறு
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.

23

(கட்டுரை)
ஆங்கு,
கானல்வரிப் பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்.

24

வேறு (ஆற்று வரி)
மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி.

25

பூவார் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி.

26

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.

27

வேறு (சார்த்து வரி)
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.

28

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் து஡ற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.

29

உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்து஡ர்க்கும் புகாரே எம்மூர்.

30

வேறு (திணை நிலைவரி)
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.

31

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.

32

புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?

33

புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ?

34

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.

35

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.

36

வேறு (மயங்கு திணை நிலைவரி)
நன்நித் திலத்தின் பூண்அணிந்து நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால் அன்னை காணின் என்செய்கோ?

37

வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று அன்னை அறியின் என்செய்கோ?

38

புலவுற்று இரங்கி அதுநீங்கப் பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ?

39

வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?

40

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?

41

பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?

42

வேறு (சாயல் வரி)
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.

43

கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.

44

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.

45

வேறு (முகம் இல் வரி)
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.

46

வேறு (காடுரை)
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.

47

வேறு (முகம் இல் வரி)
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.

48

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.

49

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.

50

வேறு
தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.

51

வேறு (கட்டுரை)
எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே.

52


பதிகம்
புகார்க் காண்டம்
[[]] :[[]]