சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/13.புறஞ்சேரியிறுத்த காதை

சிலப்பதிகாரம் தொகு

இரண்டாவது மதுரைக்காண்டம் தொகு

13.புறஞ்சேரியிறுத்த காதை தொகு

புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.
பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா 5
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே 10
பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் 15
படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும் 20
தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து 25
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக் 30
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து 35
வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் 40
தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி 45
உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே 50
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக் 55
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் 60
ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 65

பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்

வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்

பசந்த மேனியள் படர்நோ யுற்று

நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்

படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் 70

வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்

தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்

இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்

வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்

கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே 75

மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்

ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து

தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்

வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு

அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி 80

போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை

மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட

உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்

குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்

காட்டிய தாதலிற் கைவிட லீயான் 85

ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்

அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்

வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்

குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ

டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது 90

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி

என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து

தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி

என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங் 95

கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்

பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது

மாசில் குரவர் மலரடி தொழுதேன்

கோசிக மாணி காட்டெனக் கொடுத்து

நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய 100

இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி

மாசில் கற்பின் மனைவியோ டிருந்த

ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு

ஆடியல் கொள்கை அந்தரி கோலம்

பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து 105

செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்

தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து

ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி

உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி

வரன்முறை வந்த மூவகைத் தானத்து 110

பாய்கலைப் பாவை பாடற் பாணி

ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்

பாடற் பாணி அளைஇ அவரொடு

கூடற் காவதம் கூறுமின் நீரெனக்

காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் 115

நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை

மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்

தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்

தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு

மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் 120

போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி

அட்டிற் புகையும் அகலங் காடி

முட்டாக் கூவியர் மோதகப் புகையும்

மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த

அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் 125

பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்

விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்

அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்

கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்

புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் 130

பொதியில் தென்றல் போலா தீங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணீர்

நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்

தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென

முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு 135

பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு

அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்

பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்

பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த

காலை முரசக் கனைகுரல் ஓதையும் 140

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்

மாதவ ரோதி மலிந்த ஓதையும்

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு

வாளோர் எடுத்த நாளணி முழவமும்

போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் 145

வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்

பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும்

கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்

கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்

ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் 150

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்

மரவமும் நாகமும் திலகமும் மருதமும்

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்

பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து

குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் 155

விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்

குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்

பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த

கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்

மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் 160

வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி

பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி

எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை

கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்

அருவி முல்லை அணிநகை யாட்டி 165

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்

விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்

உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்

புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி 170

தையற் குறுவது தானறிந் தனள்போல்

புண்ணிய நறுமல ராடை போர்த்துக்

கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்

புனல்யா றன்றிது பூம்புனல் யாறென

அனநடை மாதரும் ஐயனுந் தொழுது 175

பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்

அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்

பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்

மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்

தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி 180

வானவர் உறையும் மதுரை வலங்கொளத்

தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு

அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்

தையலும் கணவனும் தனித்துறு துயரம் 185

ஐய மின்றி அறிந்தன போலப்

பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக்

கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப் 190

புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி

வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்

காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்

வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை

அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் 195

புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.


பார்க்க
மதுரைக் காண்டம்
புகார்க் காண்டம்
வ்ஞ்சிக் காண்டம்
[[]]