சிலம்பின் கதை/அணிநலன்கள்

5. அணிநலன்கள்
“உணர்வின் வல்லோர்
அணிபெறச் செய்வன செய்யுள்”

என்பர் நன்னூலார்.

சொல்லுகின்ற செய்திகளை நயம்படக் கூறுதல் புலமை என்று கூறப்படும். அந்த நயம் அணிகளாலேயே பெறப்படுகின்றது.

உவமை அணிகளுள் தலைமையானது; அதைக் கற்பனை நயம்பட அமைக்குப் போது அது கருத்தைக் கவர்கின்றது. கவிஞனின் புலமையை வியக்கச் செய்கிறது.

திங்களைப் போற்றுகிறார்; ஞாயிறு, மழை, புகார் இவையும் போற்றப்படுகின்றன. அவை சோழர் நல்லாட்சி, ஆட்சிப் பரப்பு, கொடைச் சிறப்பு: குடித்தொன்மை இவற்றிற்கு உவமிக்கப்படுகின்றன. இவற்றுள் சொல்லவந்த செய்தி யாது? திங்களா சோழர் ஆட்சியா சிந்திக்க வைக்கின்றார்.

ஒரே கல்லில் இரண்டு கனிகளை விழ வைத்திருக் கிறார். வான் சிறப்பும் அரசு வாழ்த்தும் இரண்டையும் சேர்த்துக் கூறி இருப்பது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது.

தெய்வங்களையும் மற்று அவர்கள் உடைமைகள் செய்கைகளையும் உவமைப்படுத்துவது அவர் மரபு என்று தெரிகிறது. கண்ணகி திருமகள் வடிவினள் என்றும், வடமீனின் திறம் இவள் திறம் என்றும் கூறுகிறார். முருகனைப் போன்ற அழகன் கோவலன் என்கிறார்.

பிறை நுதல், வேல் கண், வில் புருவம், மெல்லிடை எனச் சொல்ல வந்தவர் சிவபெருமான் தந்த பிறை, முருகன் ஈந்த வேல், மன்மதன் அளித்த வில், இந்திரன் அளித்த வச்சிராயுதம் என்று உவமைகளைச் சிறப்பித்துக் கூறக் காண்கிறோம்.

மயில் போன்ற சாயல், அன்னம் போன்ற நடை, கிளி போன்ற பேச்சு என்று கூற வந்தவர் அவை தோற்று ஓடின என்று கூறுவது நயம் மிக்கதாகும்.

உருவகங்கள் மறக்க முடியாதவை; உவமைகளைவிட உருவகங்களுக்கு ஆற்றல் மிகுதி. சொற்களைக் குறைக்க முடிகிறது. செய்திகள் கொள்வார் விருப்பத்திற்கு விடப் படுகின்றன.

“மாசறு பொன்னே வலம்புரிமுத்தே
காசறு விரையே கரும்பே தேனே”

என்று கூறுவது அழகிய உருவகங்கள் ஆகும்.

எதிர் மறுத்துக் கூறி உருவகங்களை மேலும் சிறப்புப் பெற வைத்து இருப்பதைக் காணமுடிகிறது.

‘மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ’

என்று கண்ணகிக்கு இவற்றை உவமைப்படுத்தி இருப்பது நயம் மிக்கதாக உள்ளது.

முரண்தொடை நயம்

ஆசிரியர் செய்திகளை முரண்தொடை நயம் தோன்றக் கூறுவதைப் பல இடங்களில் காண்கின்றோம்.

மாதவியை அடைந்து அவளை விட்டுப் பிரியாமல் கோவலன் அங்கேயே தங்கிவிடுகிறான்.

“விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து”

என்று கூறுவார் இரண்டு முரண்பட்ட செய்திகளை ஒரே இடத்தில் வைத்து முரண்தொடை நயம் தோற்றுவித்தலைக் காண்கிறோம்.

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் பிரிந்த நிலையில் மகளிர் துயரத்தையும், கூடிய நிலையில் அவர்கள் மகிழ்வு நிலையையும் அடுத்து அடுத்து வைக்கக் காண்கிறோம்.

சிறப்பாக மாதவி கண்ணகி இவர்களை மாறுபட்ட நிலைகளில் சித்திரித்துக் கூறுகிறார்.

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி”.

இது மாதவியின் மகிழ்வு நிலை.

“அம்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்ப
மை இருங் கூந்தல் நெய்யணி மறப்புக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

என்று கூறுகிறார். இது கண்ணகியின் தனிமை நிலை.

சீறடியில் தொடங்கித் தலைமுடி வரை கூறுகிறார். இதனைப் பாதாதி கேசவருணனை என்பர். மற்றும் இதே முறைவைப்பினைக் கடலாடு காதையில் அம்ைத்திருப்பது காண முடிகிறது. மாதவி கால்விரல் தொடங்கித் தலை முடி வரை அணியும் அணிவகைகளை விவரிக்கிறார். இதிலும் இம் முறைவைப்பைக் காண முடிகிறது. இதுவும் முறை வைப்பு அணி எனக் கொள்ளலாம்.

இந்திர விழாவில் கண்ணகி கருங்கண்ணும் மாதவி செங்கண்ணும் இடம் வலம் துடித்தன என்பர். கருமை செம்மை என்பன முரண் தொடையாகும். இடம் துடித்தல் வலம் துடித்தல் இவையும் முரண் நயம் ஆகும்.

கோவலன் கொலை உண்டான்; புண்ணுமிழ் குருதி யோடு மண் மீது கிடக்கிறான் அவன்; கண்ணகி படுகளம் வந்து விடும் கண்ணிர் நம் நெஞ்சைத் தொடுகிறது.

அன்று காலையில் அவள் அவன் தலைமுடியில் இருந்த மலர்க் கொத்தைத் தன் தலையில் சூடிக் கொண்டாள். மாலை தவழும் மார்பினனாகத் திகழ்ந்தவன் மாலைப் பொழுதில் மாறுபட்டுக் காணப்படுகிறான். குருதி படிந்து அவன் மார்பினைச் சிவக்க வைத்துள்ளது. பூ இதழ் படிந்த மார்பில் குருதிக் கறை படிந்து கிடக்கிறது. இதனை அவள் சுட்டிக் காட்டுகிறாள்.

“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற்
கொண்டாள் தழிஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ், குருதி புறம் சோர மாலைவாய்க்
கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்”

இரு வேறு காட்சிகள். காலையில் அவன் அவளைத் தழுவினாள்; மாலையில் இவள் அவனைத் தழுவுகிறாள். பூவுடன் கண்ட மார்பு பொலிவு பெற்றிருந்தது; வடுக் கொண்ட மார்பு நலிவு பெற்றுக் கிடக்கிறது. இந்த இருவேறு காட்சிகள் முரண்பாட்டைக் காட்டுகின்றன.

எல்லாம் முடிந்துவிட்டது. மதுரையை எரித்து விட்டாள். அடுத்துச் செய்வது யாது? எங்கே போவது? திக்குத் தெரியாத திடரில் அவள் நிலை குலைந்து நிற்கிறாள்.

மீண்டும் பிறந்த நாட்டுக்குச் செல்வதா? எப்படிப் போக முடியும்? கணவன் இன்றித் தனித்து எப்படிப் போக முடியும்? போய் என்ன செய்வது?

“கீழ்த்திசைவாயில் கணவனோடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு”

என்று கூறிக்கொண்டு சேரநாடு நோக்கிச் செல்கிறாள்.

இரு வேறு காட்சிகள் அவள் கண் முன் வந்து நிற்கின்றன. இம்முரண்தொடை அவள் அடைந்த அவலத்தின் எல்லையைக் காட்டுகின்றது. முரண் தொடை இங்குத் தலைமை பெற்று விளங்குகிறது.

துன்பத்தையும் இன்பத்தையும் இணைத்து வைத்துக் காட்டும்போது காவியத்தில் அவலம் மிகுதிப்படுகிறது. ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறுகள் தலைதெறிக்கக் காணப்படுகின்றன.

இல்பொருள் உவமையணி

திங்களையும் ஞாயிற்றையும் உடன் வைத்துப் போற்றிய கவிஞர் அவை ஒருங்கு உடனிருப்பதாகக் கூறி அக்காட்சியை உவமையாக்கி உள்ளார்.

கோவலனும் கண்ணகியும் நெடுநிலை மாடத்தில் நிலவு வீசும் ஒளியில் களித்து மகிழ்வு கொள்கின்றனர். இருவரும் உடன் இருக்கும் காட்சியை ஞாயிறும் திங்களும் ஒருங்கு இருக்கும் காட்சிக்கு உவமைப்படுத்தி உள்ளார். கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோலக் கண்ணகியும் கோவலனும் உடன் இருந்தனர் என்று கூறக் காண்கிறோம்.

திங்களும் ஞாயிறும் உடன் இருத்தல் என்பது இல்லாத செய்தி, அதனை உவமமாகக் கூறியிருப்பது இல் பொருள் உவமைஅணி ஆகும்.

சிலேடை அணி

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் மாலைக் காட்சியை வருணிக்கிறார் கவிஞர்.

“குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத”

என்பர்.

குழல்-மூங்கில் குழல்; குழல் - குழைவு, முல்லைப் பண்ணைக் கோவலர் பாட என்பது ஒரு பொருள். முல்லை முகையில் வாய் வைத்து ஊதுவது வண்டின் தொழில்.

ஊது குழலில் முல்லைப் பண்ணைக் கோவலர் வாய் வைத்து ஊதுகின்றனர்; குழைந்து வளரும் முல்லை முகையில் வண்டுகள் தேன் உண்ண வாய் வைத்து

ஊதுகின்றன. இரு பொருள்பட இத்தொடர்கள் அமைந் திருத்தல் காண்க. இதனைச் சிலேடை அணி என்பர்.

நிரல் நிறை உவமை அணி

ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை உவமமாக வைத்து அவ்வாறு அவற்றிற்கு இணையாகப் பொருளை வைத்துக் கூறுதல் நிரல் நிறை அணி என்பர்.

இளவேனில் பருவத்தோடும், இளி என்னும் இசையைப் பாடும் வாயை உடைய வண்டினொடும் தென்றல் வீசுகிறது; இதற்கு உவமை பாணரோடும் நகரப் பரத்தரோடும் திரிதிரு கோவலன் கூறப்படுகிறான்.

“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன் இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகு”

என்பார் கவிஞர்.

தற்குறிப்பேற்ற அணி

இயற்கை வேறு; மனிதன் வேறு உணர்வு அற்றது இயற்கை உணர்வு படைத்தவன் மனிதன். இன்ப துன்பங்கள் மனிதனை வாட்டும்; மலரச் செய்யும். இவை அஃறிணைப் பொருள்களுக்கு இல்லை.

கவிஞன் கற்பனை மிக்கவன். சுற்றியிருக்கும் சூழல் இவனுக்காக இரங்குவதுபோலக் கூறுவது கவிமரபு; இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

தான் கருதும் குறிப்பைத் தான் வருணிக்கும் செய்திகளில் ஏற்றிக் கூறுவது இவ் அணி என்பர்.

கோவலனும் கண்ணகியும் மதுரையை அடை கின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது என்று கூறுவார் கவிஞர்.

“வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிச்”

செல்கிறது என்பர்.

மற்றும் அகழியில் மலர்ந்து இருந்த குவளையும், ஆம்பலும், தாமரையும் கண்ணகியும் கோவலனும் அடையப் போகும் துயரத்தை அறிந்தன போலக் கள் நீர் (கண்ணிர்) கொண்டு காற்று (கால்) உற நடுங்கின என்பர்.

அவற்றோடு பண்பாடும் வண்டும் பரிந்து இனைந்து

ஏங்கின என்பர்.

“கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்து இணைந்து ஏங்கக்
கண்ணிர் கொண்டு கால்உற நடுங்க” - புறஞ்சேரி

கொடிகள் மதில் மீது அசைந்து ஆடுகின்றன. அவை இவர்களைப் பார்த்து, “வராதீர்; திரும்பிப் போகவும்” என்று கூறி மறித்துக் கைகாட்டுவது போல அசைந்தன என்பார் கவிஞர்.

“போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங் கொடி
வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட”

என்பார் கவிஞர்.

சொல்லாட்சிகள்

கவிஞர் ஆளும் சொற்கள் புதுப்புதுப் பொருள்களைத் தருவன; சில தொடர்கள் கவிஞனுக்கே உரியன. அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்தாள்வதில் அவர் சொல்லாட்சித் திறன் வெளிப்படுகிறது. அவற்றுள் சில பின்வருமாறு:

'கவவுக்கை நெகிழாமல் தீது அறுக' என்ற சொல் லாட்சியை மீண்டும் மாதவியை விட்டுக் கோவலன் பிரிவில் எடுத்தாளும் அழகைக் காண முடிகிறது.

'திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தவனாய்ப் போன பின்னர்' எனக் கூறுவார்.

கண்ணகியைக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் கூறுவார். அதே தொடரை மாதவிக்கு எடுத்தாளுதல் காண முடிகிறது.

“கையற்ற நெஞ்சினளாய் வையத்தினுள் புக்குத்
தன்மனை புக்காள்”

என்பர்.

“மண் தேய்த்த புகழினான்” என்று கோவலனைக் கூறும் கவிஞர் “பண் தேய்த்த மொழியினார்” என்று மகளிரைக் கூறுவது சுவை பயப்பதாக உள்ளது. 'தேய்த்த' என்ற சொல்லாட்சி நயமுடையதாக உள்ளது.

அதே போல மற்றும் ஒரு தொடரினைக் காட்ட முடிகிறது.

“பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப”

'இழப்ப' என்பது புதுப்புதுப் பொருளில் வருதல் காண முடிகிறது.

'ஈகைவான் கொடி அன்னாள்' என்று அவளைப் பொன்னுக்கு உவமிக்கின்றார். கண்ணகியைப் பாராட்டும் போது இருமுறையும் 'பொன்னே' என்று கோவலன் மறவாமல் கூறுகின்றான். மாதரி கண்ணகியைப் பற்றிக் கூறும்போது 'பொன்னிற் பொதிந்தேன்' என்று கூறுகிறாள். தெய்வக் காட்சியில் சேரன் செங்குட்டுவன் பொன் கொடியாக அவளைக் காண்கிறான். “பொன்” என்று அறிமுகப்படுத்திய அவளை மறவாமல் அதே சொல்லில் பல இடங்களில் கூறுவது சிறப்புப் பெறுகிறது.

கண்ணகி அவள் நகைமுகம் ஒருமுறை அறிமுகப் படுத்தியவர் மறவாது அவளை அதே சொற்றொடரில் காட்டுவது அவர் தீட்டும் சித்திரம்; மறவாமல் போற்றுவது ஆகிறது.

“பேதுறவு மொழிந்தனள், அரும்பினள் நிற்ப” என்பார் கவிஞர் சாலினி கூற்றுக் கேட்டபோது.

நலங்கேழ்முறுவல் நகைமுகம் காட்டிச்
‘சிலம்புள கொள்ளும்’

என்று மகிழ்வுடன் தருகிறாள்.

காதம் நடந்து களைத்துவிட்ட நிலையில் மதுரை மூதூர் எங்கே எவ்வளவு தூரம் என்று கேட்கும்போதும் அவள் நகைமுகத்தை மறவாமல் சித்திரிக்கிறார்.

‘முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க’

என்று கூறுவார்.

பிரிவின்கண் கோவலன் பெற்றோர்கள் விசாரிக் கிறார்கள். விருந்தினரைப் போற்ற முடியாமைக்கு வருந்தும் நிலையில் வலியச் சிரிக்க விரும்புகிறாள். 'வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தினர்' என்று கூறுவர்.

கண்ணகி கோவலனைப் பிரிந்த நிலையில் அவள் நகைச் சிரிப்பைக் கோவலன் இழந்துவிட்டான் என்று கூறுவது பொருள் பொதிந்ததாக உள்ளது. அந்த முறுவலுக்கு மாதவி தரும் இன்பம் ஈடாகாது என்று கூறுவது போல் 'தவள வாள் நகை கோவலன் இழப்ப' என்ற அத்தொடர் அமைந்துள்ளது.

ஒரே கருத்து மூன்று இடங்களில் வற்புறுத்தக் காண்கிறோம்.

“தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி” என்று கவுந்தி அடிகள் உணர்த்துவார்.

“தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்” என்று மாதரி இதே கருத்தைக் கூறுவாள்.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே”

என்று கோவலன் கூறுவான்.

“நீணில விளக்கே” என்ற தொடரைக் கோவலன் எடுத்தாள்கிறான்.

மாதரியின் கூற்றிலும் விளக்கு என்ற இதே சொல் லாட்சியைக் காணமுடிகிறது.

“விழுமம் தீர்த்த விளக்குக் கொல்”

என்பாள் அவள்.

'உலகு', 'நிலம்', 'பார்' என்பன ஒரே பொருள் குறிப்பன.

“உலகிற்கு ஓங்கிய திருமாமணி”

என்கிறாள் சாலினி,

“நீள் நில விளக்கு”

என்கிறான் கோவலன்.

“பார் தொழும் பத்தினி”

என்கிறான் சேரன் செங்குட்டுவன்.

கவிஞர் எடுத்தாளும் சொற்கள் பொருள் பொதிந்தன வாக உள்ளன. அணிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.