சிலம்பின் கதை/காட்சிக் காதை

25. மலைவளம் காணுதல்
(காட்சிக் காதை)

மலைவளம் காணச் செல்லுதல்

சேரன் செங்குட்டுவன் இலவந்திகை என்னும் வெள்ளி மாடத்தில் தன் தம்பி இளங்கோவுடனும் துணைவி வேண்மாளுடனும் இருந்தான். முழவு என அருவிகள் ஒலித்தன. மேகங்கள் சோலைகளைக் கவித்தன. “அருவிகளும் சோலைகளும் உடைய மலை வளத்தைக் காண்போம்” என்று முடிவு செய்தனர்.

வஞ்சி மாநகர் சேரர் ஆண்ட தலைநகர்; அதனை விட்டு நீங்கிச் சென்றான். இந்திரன் தன் பரிவாரத்தோடு செல்வதுபோல் சேரன் யானை மீது ஏறி அவன் தன் ஈற்றமும் ஆயமும் சூழ்ந்துவர அங்குச் சென்றான். திருமால் மார்பில் அணிந்திருந்த மாலைபோல் மலையை அறுத்துச் செல்லும் பேரியாற்றங் கரையின் மணல் மேட்டின் மீது தங்கினான்.

பல்வகை ஒசைகள்

அங்கே குறவர்கள் பாடிய குரவைப் பாடல் ஒசை, குறமகளிர் பாடிய பாடல் ஒசை, முருகனை ஏத்திப் பாடிய வேலன்பாணி, தினை காப்போர் எழுப்பிய ஒசை, தினைப்புனத்தில் ஒருவரை ஒருவர் விளித்து அழைக்கும் ஒசை, தேன் உடைப்பால் எழுப்பிய ஒசை, புலியொடு மோதும் யானைகளின் ஒசை, பரண்மீது ஏறிப் பறவை களை விரட்டுவார் எழுப்பிய ஒசை, குழிகளில் விழுந்த யானைகளைக் கட்டி இழுப்பவர் எழுப்பும் ஒசை, சேரன் படைகள் இயக்கத்தால் ஏற்பட்ட ஒசை எல்லாம் சேர்ந்து பேரொலி செய்தன.

காணிக்கைப் பொருள்கள்

சேர அரசனின் அரண்மனை முற்றத்தில் பிறநாட்டுப் பகை மன்னர் கொண்டு வந்து திறைப் பொருள் குவிப்பர்; அதைப்போல இம்மலைக் குறவர்கள் தம் தலைகளில் சுமந்து வந்த பல்வகைப் பொருள்களையும் கொண்டு வந்து முன்வைத்துக் காணிக்கை யாக்கினர். மலைப் பொருள்கள் அவுை: யானைத் தந்தம், அகில் கட்டை, மான்கவரி, சந்தனக் கட்டை, சிந்தூக்கட்டி, அஞ்சனத்திரள், அரிதாரம், ஏலக்கொடி, மிளகுக் கொடி, கவலைக்கொடி, கிழங்குகள், வெள்ளுள்ளி எனப்படும் காயம், தேங்காய், மா, பலா முதலியன, கரும்பு, பூங்கொத்துகள், கமுகத் தாறு, வாழைத் தாறு, யானை, சிங்கம், புலிக்குட்டிகள், யானைக்குட்டிகள், குரங்குக் குட்டிகள், கரடிக்குட்டிகள், மலையாட்டுக் குட்டி கள், மான்குட்டிகள், கீரிப்பிள்ளைகள், மயில்கள், பூனைக்குட்டிகள், காட்டுக்கோழி, கிளிகள் இவற்றை யெல்லாம் சுமந்து வந்து குவித்தனர். “ஏழ் பிறப்பும் உமக்கு அடிமை செய்வோம்” என்று கூறியவராய்த் தொழுதனர். “நறு வேங்கை மரத்தின் நிழலில் காரிகையாள் ஒருத்தி முலை இழந்தவளாய்த் தனித்துயர் அடைந்து வானவர் வரவேற்கத் தன் கணவனோடு சேர்ந்து வானகம் சேர்ந்தாள். அவள் எந்நாட்டாள்? யார் மகள்? அறிய இயலவில்லை. அவள் இந்நாட்டில் பிறந்த நங்கை என்று கூற இயலாது; புதியவளாக இருக்கின்றாள்” என்று நவின்றனர். மன்னனைப் “பல்லாண்டுகள் வாழ்க” என்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

சாத்தனார் உரை

அரசன் அருகில் இருந்த சாத்தனார் என்னும் தமிழ்ப் புலவர் இவற்றைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்திருந்தார். “அவள் யார்? எந்நாட்டவள்” என்று அரசன் கேட்டதற்கு அவர் விளக்கம் கூறினார்.

“சிலம்பு விற்கச் சென்றவன் கோவலன் என்பான் தீவினை காரணமாக வாழ்வினை இழந்தான்; அவன் மனைவி கண்ணகி அவள் சிலம்பு ஒன்று கையில் ஏந்தி மன்னன் அவைக்களம் புகுந்தாள்; வழக்கில் வென்றாள்; பாண்டியன் சாய்ந்தான்; வீழ்ச்சியுற்ற பாண்டி மாதேவியின் முன் “அரசையும் நகரையும் அழிப்பேன்” என்று சூள் உரைத்து மதுரையைச் சுட்டாள். பாண்டி மாதேவி கணவனோடு தானும் சேர்ந்து உயிர்விட்டாள். அவள் உயிர்விட்டது தன் உயிரைக் கொண்டு அவன் உயிரைத் தேடிச் சென்றது போல இருந்தது. வெற்றி வேந்தன் பாண்டியன் அவன் கொற்றம் இத்தகையது என்று சாற்றுவதற்கு வந்தவள்போல் நின்னாட்டு அகம் இவள் வந்து சேர்ந்தாள். தன் நாட்டுக்கு அவள் சென்றிலள் வாழ்க நின் கொற்றம்” என்று அவர் விளக்கம் தந்தார்.

சேரன் கருத்துரை

தென்னவன் அரசன் அவன்தன் பழி மிக்க வாழ் வினைக் கேட்ட சேர மன்னன், “செம்மை நீங்கிய சொற்கள் எம்மைப் போன்ற அரசர்கள் செவியில் விழுந்து வெம்மை ஊட்டாமல் இருக்கப் பாண்டியன் தன் உயிர்விட்டான் என்று நினைக்கவும் தோன்றுகிறது. வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கிவிட்டது,” என்று கூறினான். மற்றும் அரசர்க்கு உள்ள துன்பங்கள் இவை. என்று வரிசைப்படுத்திக் கூறி னான்.

“மழை பொய்த்துவிட்டால் அது மிகப்பெரிய கவலையைத் தருகிறது; அதுபேரச்சத்தை உண்டாக்கு கிறது. நாட்டு மக்கள் தவறு இழைத்தால் அது மன்னனைத் தாக்குகிறது; அவ்வாறு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சம் எப்பொழுதும் நச்சரிக்கிறது. மக்களைக் காக்கும் அரச குடியில் பிறத்தல் துன்பம்தான் அன்றி மதிக்கத் தக்கது அல்ல; பாராட்டித் தொழத் தக்கதும் அல்ல.” இவ்வாறு சாத்தனார்க்குச் சேரன் தன் கருத்துகளைக் கூறினான்.

பின்பு தன் மனைவியை நோக்கி, “உயிர்விட்டுப் புகழ்பெற்ற ஒருமகள் பாண்டியன் மனைவி ஆவாள்; உயிருடன் இங்கு வந்து வழக்கினை உலகறியச் செய்ய வந்திருக்கிறாள் மற்று ஒரு மகள்; அவள் இந்நாடு அடைந்திருக்கிறாள். இவ்விருவருள் வியக்கும் நலத்தை உடையவர் யார்?” என்று வினவினான்; இருவரில் யார் உயர்ந்தவர் என்று கேட்டு வைத்தான். சேரமாதேவி நாகரிகமாக அதற்கு விடை நல்கினாள்.

“பாண்டிமா தேவிக்கு வானவர் சிறப்புச் செய்வர்; பாவை கண்ணகிக்கு நாம் சிறப்புச் செய்வோம். நம் நாட்டை அடைந்த பத்தினித் தெய்வத்துக்குக் கல் எடுத்துப் பரவுதல் செய்வோம்” என்றாள்.

சேரன் அருகிருந்த நூல்கள் கற்ற புலவர்களை நோக்கினான். அதற்கு அவர்கள், “இமயத்தில் இருந்து கல்லைக் கொணரலாம் அல்லது பொதிகை மலையில் இருந்தும் கொண்டு வரலாம். முன்னதைக் கங்கையில் நீர்ப்படுத்தலாம்; பின்னதைக் காவிரியில் நீர்ப்படுத்தலாம்” என்று அவர் தம் கருத்தினைத் தந்தனர்.

அதற்குச் சேரன் தன் பெருமை தோன்றக் கண்ணகிக்கு எங்கிருந்து கல் எடுப்பது தகுதி வாய்ந்தது என்பதைத் தக்க காரணம் தந்து கூறினான்.

“பொதிகையில் கல் எடுத்துக் காவிரியில் நீர்ப்படுத்தல் போதுமானது தான்; ஆனால் அது எளியவர் செய்வது; வலிமைமிக்கவர், புகழ்மிக்கவர், ஆற்றல் மிக்கவர் அதனை ஏற்று நடத்துவது தக்கது அன்று. வீர மன்னன் செய்யும் விவேகமான செயல் ஆகாது. இமயத்தினின்று கல் கொணர்தலே தக்கது ஆகும். வடநாட்டு வேந்தர் இடக்கு ஏதாவது செய்தால் அவரை ஒடுக்குவது தவிர வேறு வழியே இல்லை; தவம் மிக்க அந்தணர் முன் சடங்கின்படி கல்லைக் கண்ணியமாகத் தரவேண்டும்; மறுத்தால் அவர்களை ஒறுப்பது தவிர வேறு வழியே இல்லை. சரித்திரம் அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்கும்; தமிழ்ப் போர்த்திணைகள் புறத்திணைகள் அவர்கள் அறியட்டும்; காஞ்சித்திணை என்பது நிலையாமையை உணர்த்துவது ஆகும். வாழ்க்கை சிறந்த குறிக்கோள் கொண்டது. அத்தகைய குறிக்கோள் அற்றவர் வாழ்ந்து என்ன பயன்? முதியவர்கள் பலர் மண்ணில் மறைந்துவிட்டனர். அவர்கள் உணர்த்துவது யாது? வாழ்க்கை நிலையற்றது என்பது அறியத்தக்கது ஆகும்; அந் நிலையாமை அறத்தை நூல்கள் காட்டத் தேவை இல்லை. என் வாள் அவர்களுக்குக் காட்டும்; வாழ்க்கை நிலையற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள்.”

“அவர்களை உணர வைப்பது உறுதி; மகளை மறுத்தவன் இமய அரசன் பார்வதி அவளைப் பரமசிவன் வீரம் காட்டி மணந்தான். அவனைப் பணிய வைத்தான்; அது மகட்பால் காஞ்சி என்பர் மற்றும் எம்முன்னவர் இமயம் சென்று விற்கொடியைப் பொறித்த நாள் எதிர்த்த மன்னர் எரி சாம்பல் ஆயினர்; இது வரலாறு கற்பித்த பாடம் ஆகும். காஞ்சித் திணையை அவர்கள் உணர்ந்தனர். ஒழிந்தோர் மற்றவர்க்குக் காட்டிய பொதுக்காஞ்சி, மகட் பால் காஞ்சி, நீள்மொழிக் காஞ்சி ஆகிய இம்மூன்று காஞ்சிகளையும் காண நேரிடும்.

“பகைவர்கள் காஞ்சி காண்பர்; யாம் வஞ்சி சூடுவோம்” என்று சேரன் வஞ்சினம் மொழிந்தான். வஞ்சித் துறைகளுள் வெற்றிச் சிறப்பைக் கூறவது 'நெடுமாராய வஞ்சி'; வெற்றி கொண்ட பிறகு பகைவர் நாட்டைக் கொளுத்தி, அழித்தல் 'வென்றோர் வஞ்சி' எனப்பட்டது. வீரர்க்குச் சோறு தருவது 'பெருஞ்சோற்று வஞ்சி'; பகைவர் நாடு அழிவதற்கு மனம் அழிவது 'கொற்ற வள்ளை'; இவற்றைத் தான் விளைவிப்பதாகக் கூறினான். பனை மாலை அவனுக்கு உரிய சிறப்பு மாலை; “அதனையும், வஞ்சி மாலையும் சூடிக் கொண்டு போர் தொடுப்போம்” என்று வஞ்சி நாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன் கூறினான்.

வில்லவன் கோதை என்னும் அமைச்சன் சேரனின் பழைய வெற்றிகளை எடுத்து விளம்பி வாழ்த்துக் கூறினான்; “கொங்கர் களத்தில் சோழரும் பாண்டியரும் தோற்றுத் தம் கொடிகளாகிய மீன் கொடியையும், புலிக்கொடியையும் விட்டுச் சென்றனர். மற்றும் வட வாரியருடன் சிற்றரசராகிய கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர் இவர்கள் போர் செய்து தோற்று ஓடினர். கங்கைப் பேரியாற்றில் உன் தாயின் இறுதிச் சாம்பலைக் கலக்க அதனை நீராட்டிய நாளில் எதிர்த்த ஆரிய மன்னர் ஆயிரவரையும் அஞ்ச வைத்தனை!”

“ஆரிய மன்னர் ஆயிரவர் அன்று தோற்று ஒடினர். இப்போர்களைக் கண்ட யாம் அவற்றை நினைத்துப் பார்க்கிறோம். கூற்றுவனும் வியக்கும் வண்ணம் ஆற்றலோடு போர் புரிந்தாய்! தமிழக மன்னன் நீ இமயத்து அரசர்க்கு இதனைத் தெரிவித்து முடங்கல் ஒன்று நீ எழுதினால் போதும் அவர்கள் அடங்கியவராய்ச் சிலை வடிக்கக் கல் தந்து விடுவர்; அதனால் வில் புலி கயல் பொறித்த முத்திரை இட்டு முடங்கல் அனுப்புக” என்றான்.

வில்லவன் கோதை உரைத்தநல்லுரைகளைக் கேட்ட அழும்பில்வேள் என்னும் மற்றொரு அமைச்சன் அதற்கு ஒரு திருத்தம் கூறினான். “செய்தி அனுப்பத் தேவை இல்லை; இங்கே அம்மன்னர் தம் ஒற்றர் அங்கங்கே தங்கி இருக்கின்றனர். அவர்களே சென்று செய்தி செப்புவர்” என்று அறிவித்தான் அதனைச் சேரன் ஏற்றுக் கொண்டு போர் தொடுக்கத் தன் நகராகிய வஞ்சி மாநகரை அடைந்தான்.

மன்னவன் வெற்றியை விளம்பி வாழ்த்தியபின் “வடஅரசர்க்கு இங்கிருந்து முரசு அறைந்து செய்தி அறிவிக்க” என்று அழும்பில் வேள் ஆணையிட்டான்.

“விற்பொறி பதித்த இமயத்தில் கற்கொண்டு வர எம் காவலன் கருதிட்டான். அவனை எதிர்த்துப் போரிட்டால் அதன் விளைவினைத் தாங்க நேரிடும்; திறை தந்து இறையைப் பணியீர் ஆயின் அவன் வெற்றி விளைவு களைச் சிந்திப்பீராக; அவன் கடலில் சென்று கடம்பு எறிந்த வெற்றி, இமயத்தில் வில் பொறித்த வெற்றி இவற்றைக் கேட்டிருப்பீர் நீர் அடங்கி எதிர் கொண்டு வரவேற்று உதவுவீர் என்றால் உயிர் பிழைப்பீர் எதிர்த்தால் உயிருக்கு அஞ்சித் துறவு கொண்டு ஒடநேரிடும்” என்று செய்தி தெரிவித்தனர்; “வாள் கண்டு வணங்கினால் வாழ முடியும்; இல்லை என்றால் தோள் துணை மறந்து துறவு கொள்ள நேரிடும்” என்று அறிவித்தனர். “அரசன் வாழ்க” என்று யானை மீது இருந்து முரசு அறைவித்தனர்.