சிலம்பின் கதை/கால்கோள் காதை

26. கல்லைக் கொணர்தல்
(கால்கோள் காதை)

பறை அறைந்தனர்; சிம்மாசனத்தில் செங்குட்டுவன் ஏறி அமர்ந்தனன்; ஆசான்; நிமித்திகன்; அமைச்சர்; படைத்தலைவர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் சேர்ந்து 'மன்னர் மன்னன் வாழ்க' என்று ஏத்தினர்; அரசன் கூறுவதை முன்னிருந்து கேட்டனர்.

படைத் தலைவரை விளித்து வீரமொழி பேசினான்: “இமயத்திலிருந்து வந்த தவசிகள் எமக்கு ஈங்கு உணர்த்திய அவச்சொல் கேட்டு அடங்கிவிட்டால் சோழரும் பாண்டி யரும் என்னை இகழவும் கூடும்; பழிச்சொல் நிலைத்து நிற்கும்; அதைப் போக்க வடக்கே சென்று கல்லை அங்கு ஆரிய அரசர்கள் தலைமீது சுமத்திக் கொண்டு வராமல் என் வாள் வறிது மீளும் என்றால் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை நடுங்க வைக்காமல் குடிமக்களை அவதிக்குள் ஆக்கும் கடையன் என்ற பழிச்சொல்லை யான் அடைவதாக” என்று வஞ்சினம் கூறினான்.

அதனைக் கேட்ட அவையில் இருந்த கல்வி ஆசான் அரசனை நோக்கி “அவர்கள் இகழ்ந்தது உன்னை அன்று: சோழ பாண்டியரை; நீ சினம் ஆறுக” என்று அறிவித்தனன். “வஞ்சின மொழி கேட்டு அவர் அஞ்சி அடங்குவர் நின் வஞ்சினத்துக்கு எதிராக நின்று போர் செய்யும் மன்னர்கள் யாரும் இல்லை” என்றனன். அவர்களுள் நிமித்திகன் எழுந்து நின்று, “காலம் கூடி உள்ளது. செல்லுதற்கு உரிய நற்பொழுது இது; நீ குறித்த திசைமேல் எழுக! படை எழுச்சி பெறுக” என்று கூறினான்.

அரசன் உடனே, “வாளையும், குடையையும் வடதிசை நோக்கிப் பெயர்க்க” என ஆணை இட்டனன்.

சேனைகள் ஆரவாரித்தன; முரசு எழுந்து ஒலித்தது; இரவு இருட்டை விலக்கிய ஒளி விளக்குகளின் வெளிச் சத்தில் கொடிகள் வரிசையாக அசைந்தன. பகைவரை வாட்டும் சேனை வீரர்களும், ஐம்பெருங்குழுவினரும், எண் பேராயத்தினரும், யானை வீரர்களும், கணித்துக் கூறும் காலக் கணிதரும், அறம் கூறும் சான்றோரும், படைத்தலைவர்களும், “நில உலகை ஆளும் மன்னன் வாழ்க” என்று வாழ்த்துக் கூறினர்.

பெருங்களிறு ஒன்றின் மீது வாளையும், வெண் கொற்றக் குடையையும் வைத்து அதனை மதிற்புறத்து இருந்த கொற்றவை கோயில் முன் நிறுத்தினர்; வஞ்சிப் பூவுடன் பனம்பூவையும் அவ் யானைக்கு அணிவித்துச் சேரனின் அவைக்குச் சென்றனர்.

போரை விரும்பிப் படைக்குத் தலைமை தாங்கிய படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். வஞ்சி மாநகரில் சேரன் வஞ்சிப் பூவைச் சூடிக் கொண் டான் பிறநாட்டு அரசர்கள் திறை கொண்டு வந்து செலுத்த அவர்களை அழைக்கும் முரசு காலையில் ஒலித்தது. சிவனின் திருவடிகளை வணங்கிப் பின் யானை மீது ஏறினான். அதனை அடுத்துச் “செங்குட்டுவன் வெற்றி கொள்க” என்று வாழ்த்தி தெய்வப் பூ மாலை கொண்டு வந்து தந்தனர். அது திருவனந்தபுரத்து ஆடகமாடம் என்னும் திருமால் கோயிலினின்று கொண்டுவரப்பட்டது. சிவனை வணங்கிய தன் சிரசில் அதை ஏற்றுக் கொள்ளாமல் தோளில் தாங்கினான். அவன் போர்ப் பயணம் தொடங்கியது.

நாடக மடந்தையர் ஆடரங்கு எங்கும் அரசனுக்கு வாழ்த்துக் கூறினர்; “கொற்ற வேந்தே! நீ வெற்றி கொள்க! வாகைப் பூவும், தும்பைப் பூவும் சூடிப் பொலிவு பெறுக” என்று வாழ்த்தினர்.

“எங்கள் கண்களைக் கவரும் பேரழகு பெற் றிருக்கிறாய்! உன்னைக் கண்டு காதல் கொண்டு எம் வளையல்களை இழக்கின்றோம். இந்த நிலை என்றும் தொடர்க” என்றும் சிறப்பித்து அவர்கள் வாழ்த்துதல் தெரிவித்தனர்.

மற்றும் மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதர் எனப்பட்டவரும், “வெற்றி பெறுக” எனக் கூறி வாழ்த்தினர்.

யானை வீரரும், குதிரைத் தலைவரும், வாள் வீரரும் இவன் வாளாற்றலை ஏத்திப் புகழ்ந்தனர். அசுரரை அழிக்கச் சென்ற இந்திரனைப் போல் வஞ்சி நகரை விட்டு நீங்கித் தம் படைகளுடன் நீலகிரி மலையைச் சேர்ந்தான். அங்கே பாடி வீடு அமைத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

நீலகிரியில் சேர மன்னன்

படை இயங்கு அரவம் விண்ணையும் முட்டியது; அதனைக் கண்டு வானத்து முனிவர்கள் விசும்பினின்று இறங்கி வந்து இவனைக் காண விழைந்தனர். மின்னல் ஒளிபோல் அவர்கள் காட்சி அளித்தனர். அவர்களை வணங்கி வேண்டுவது யாது என்று கேட்டனன். அவர்கள் “யாம் பொதிகை மலை செல்கின்றோம்; வழியில் உன்னைக் காணும் வாய்ப்பு நேர்ந்தது; நீ இமயம் ஏகுகின்றாய் என்பதை அறிகிறோம். அங்கே மறைகற்ற அந்தணர் உள்ளனர்; அவர்களுக்கு எந்தக் குறையும் நேராமல் காப்பது நின் கடமை” என்று கூறினர்; அவனை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

அதன் பின் கொங்கணக் கூத்தரும், கருநாடகக் கலைஞர்களும் தத்தம் துணைவியருடன் வந்து இருந்து பாடல் பாடினர். “வேனில் காலம் வந்தது; ஆனால் காதலன் வந்திலன்” என்ற கருத்துடைய பாடல்களைப் பாடினர். மற்றும் “கார்காலம் வந்தது. காதலன் தேரும் வந்தது; மகளிர் கோலம் கொள்க” என்றும் குடகர்கள் கார்க்குரவை என்னும் வரிப்பாடலைப் பாடினர்; “வாள்வினை முடித்து வெற்றியுடன் வருக” என்று ஒவர் எனப்பட்டவர் வாழ்த் தினர். அவர்களுக்கு மிக்க பரிசிலை நல்கினான். அதன்பின் சஞ்சயன் என்பான் நாடக மகளிருடனும், ஏனைய இசைக் கலைஞருடனும் அரசனைக் காண அங்கு வந்து சேர்ந்தான். அச்செய்தியை அறிவித்தனர். “அவனை வரவிடுக” என்று கூறி அழைப்பித்தான்.

சஞ்சயன் வருகை

சஞ்சயன் என்பவன் நூற்றுவர் கன்னர் அனுப்பிய தூதுவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடன் தான் அழைத்து வந்த நாடகக் கலைஞர் களையும், இசை வல்லுநரையும், ஆடல் மகளிரையும் அறிமுகம் செய்து வைத்தான். பின்பு நூற்றுவர் கன்னர் சொல்லி அனுப்பிய செய்தியை முறைப்படி கூறினான். கடவுள் எழுத ஒரு கல் கொணரச் செல்வது ஆயின் அதனைத் தன் தலைவர்களாகிய நூற்றுவர் கன்னரே செய்து முடிப்பர் என்று அவர்கள் சொல்லி அனுப்பியதாகத் தெரிவித்தான்.

“தான் வடநாடு செல்வது கல்லைக் கொணர்வதற்கு மட்டுமன்று; கடுஞ் சொல்லைக் கூறிய கனகனையும் விசயனையும் களத்தில் சந்திப்பதற்கே” என்று கூறினான். பாலகுமரன் என்பானின் மக்கள் கனகன், விசயன் என்பார் இருவர் தம் நாவைக் காவாதவராகித் தமிழர்களின் ஆற்றலைக் குறைவுபடுத்திப் பேசினர். விருந்தினர் மத்தியில் இழிவுடன் பேசித் தம் வீரத்தை மிகைப்படுத்திக் கூறினர். “இமயத்தில் தமிழரசர்கள் புலியையும், கயலையும் பொறித்த நாட்களில் தாம் அங்கு இல்லை” என்றும், “இருந்திருந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்” என்றும் நா காக்காமல் நகையாடிப் பேசினர். இச்செய்தியைச் சேரன் எடுத்துச் சொல்லி அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கவே தான் செல்வதாகக் கூறினான்.

கங்கையைக் கடக்க வங்கங்கள் தேவை என்ற செய்தியைச் செப்பி அனுப்பினான். கன்னரைக் கொண்டு படகுகளை அனுப்பச் சொல்லி அறிவிப்புச் செய்தான். அரசன் இட்ட ஆணையைத் தாங்கி நூற்றுவர் கன்னரிடம் அதை நுவலச் சஞ்சயன் சென்றான்; அதன்பின் தென்னவர் இட்ட திறை என்று சொல்லிச் சந்தனக் குப்பையும், முத்துக் குவியலும் சட்டை அணிந்த நாவன்மை படைத்தவர் ஆயிரவர் கொண்டு வந்து அளந்து தந்தனர். தென்னவன் தந்தவை எனச் சாற்றினர். அவற்றைப் பெற்றதற்கு ஒப்புதல் தெரிவித்துச் சேரன் தன் அரசு முத்திரை இட்ட முடங்கல்களை அவருக்கு ஆட்கள் வழி அனுப்பினான். கணக்கு எழுதுவோர் இவற்றைக் குறித்துக் கொண்டு ஒப்புதல் எழுதி அனுப்பினர்.

வட நாடு அடைதல்

அதன் பின் நீலகிரியை விட்டு நீங்கி வடநாடு செல்லக் கங்கையைக் கடந்தான்; நூற்றுவர் கன்னர் இவனுக்குக் கரையைக் கடக்கப் படகுகளை அனுப்பி வைத்தனர். அடுத்த கரையில் அவர்கள் இவன் வரவுக்காகக் காத்து நின்றனர். அவர்களையும் துணையாக அழைத்துக் கொண்டு வடநாட்டை அடைந்து அங்குப் பாடி வீடு அமைத்துக் கொண்டு அங்குத் தங்கினான்.

போர் நிகழ்ச்சிகள்

சேரனை எதிர்த்த வட ஆரிய வேந்தர்கள் ஆகிய உத்திரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் ஆகிய இவர்கள் தென்தமிழ் ஆற்றலைக் காண்போம் எனத் திரண்டு எழுந்தனர். அவர்களோடு கனகனும் விசயனும் கனத்த சேனையுடன் சேர்ந்து கொண்டனர். களிற்றைக் காயும் சிங்கத்தைப் போன்று சேரன் சீறி எழுந்தான். பல்வேறு மன்னர்கள் எதிர் ஊன்றித் தடுக்க அவர்களை எதிர்த்துப் போர் செய்து வெற்றி முழக்கம் செய்தான். இவன் தங்கிய பாடி வீடு கொடிகள் பந்தல் இட்டதுபோல் அமைந்தன. இடிபோல இவன் படைகள் எழுப்பிய முழக்கம் எழுந்தது; முரசுகள் அதிர்ந்தன; வில் ஏந்திய வீரரும், வேல் தாங்கிய வீரரும், கிடுகுப்படையாளரும், தேர் ஊர்வோரும், யானையர், குதிரையர் இவர்களும் மண்ணில் எழுப்பிய பெருந்துகள் யானைக்குக் கட்டிய மணிநாவையும், கொடிகளில் கட்டிய சங்குகளின் நாவையும் அசையாதவாறு தடுத்து நிறைத்தது.

முன்னணியில் இருந்த தூசிப் படைகள் ஒன்றோடு ஒன்று முரணித் தாக்கிக் கொண்டன; தோளும் தலையும் துணிபட்டு வேறு வேறாக விழுந்தன; தலை இழந்த முண்டங்கள் பேய்கள் இட்ட தாளத்துக்கு ஏற்பக் கூத்து ஆடின. பிணம் சுமந்து ஒழுகிய குருதிக் குட்டையில் பேய்க் கூட்டம் கூந்தலை விரித்துப் போட்டு நீராடின.

ஆரிய அரசர்தம் படைகளைச் சேரன் கொன்று குவித்தான்; அவர்கள் தேர்கள் களிறுகள் குதிரைகள் சாய்ந்து விழுந்தன. ஒரே பகலில் உயிர்க் கூட்டத்தை இயமன் உண்ண இயலும் என்பதைக் கனகவிசயர் அன்று கண்டறிந் தனர். பகைவர்களைக் கொன்று குவித்த மாவீரனாகச் சேரன் திகழ்ந்தான். பனம்பூ மாலையோடு தும்பையும் அங்கு சூடிச் சிறப்புப் பெற்றான்.

திமிர் பிடித்துத் தமிழரசரை இகழ்ந்த கனகனும் விசயனும் நூற்றுவர் அரசர்களும் இவன் சினத்துக்கு ஆளாயினர்; ஏனையவர்கள் ஆடும் கூத்தரைப் போலவும், நாடும் தவத்தவர் போலவும் பல்வேறு வேடங்கள் தாங்கித் தப்பித்துச் சென்றனர்.

வாள்ஏர் உழவன் ஆகிய செங்குட்டுவன் தன் மறக்களத்தை வாழ்த்திப் பேய்கள் பரணி பாடின. அவை மடிந்த வீரர்களின் கைகளைத் தூக்கிப் பிடித்தும், அவர் முடியுடைய தலைகளைத் தூக்கி எறிந்தும் போர்ப் பாடலைப் பாடின. கடலைக் கலக்கி அமுதம் கடைந்து எடுத்த நாளில் தேவர் அசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடைபெற்றது. இலங்கையில் இராமன் இராவணனோடு நிகழ்த்திய போர் பதினெட்டுத் திங்கள் நடந்தது. கண்ணன் தேர்செலுத்தப் பாண்டவர்கள் நடத்திய போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. அந்தப் போர்களின் சிறப்புகளைச் சீர்வரிசையில் செப்பி இவன் பேரிசையைப் புகழ்ந்து பாடின.

பேய்கள் கூத்து ஆடி மகிழ்ந்தன. இவன் வெற்றிப் புகழைப் பாடிச் சிறப்பித்தன. மறக்கள வேள்வி முடித்த வேந்தன் அங்கு “வேள்விகள் ஒம்பிய மறையவர்க்குத் தக்க வகையில் உதவி அவர்களுக்குச் சிறப்புச் செய்க” என்று ஆட்களை அனுப்பினான். அதன்பின் வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடு வீரர்களை அனுப்பி இமயத்து உச்சியினின்று பத்தினிக் கடவுளுக்குக் கல்லைக் கொண்டுவரச் செய்தான்.