சிலம்பின் கதை/கொலைக்களக் காதை

16. கோவலன் கொலை யுண்ணல்
(கொலைக் களக் காதை)

மனை வகுத்துத் தருதல்

கண்ணகியை அடைக்கலம் பெற்ற இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் மனையில் அவளை வைக்காமல் தனி வீடு அமைத்து அவளுக்குத் துணையாக ஆய்ச்சியர் சிலரை உடன் அனுப்பி வைத்தாள். அவர்களைக் கொண்டு அவளை நீராட்டினாள். மதுரை உயர் குலத்து மகளிரைப் போல் அவளுக்குப் பொன் நகைகள் பூட்டிப் பொலிவு பெறச் செய்தாள். அதன்பின் அவளுக்குத் தன் மகள் ஐயையை அறிமுகம் செய்தாள். “இவள் இட்ட வேலையைச் செய்து தருவாள்; அடித்தொழில் ஆட்டியாக உன்னுடன் இருப்பாள்” என்று கூறினாள்.

“மற்றும் உன்னைப் பொன்னைப் போலப் பாதுகாப்பேன்; கவுந்தி அடிகள் பாதுகாப்பான இடத்தில் உன்னைச் சேர்த்து இருக்கிறார். இனி உன் கணவனுக்கு எந்தக் குறையும் இருக்காது” என்று சாற்றினாள்.

அடுத்து மாதரி ஆய்ச்சியரை நோக்கி அறிவுறுத்தி னாள்; “இவள் கணவன் சாவக நோன்பி ஆதலின் புதிய பாத்திரங்கள் தருக; ஐயை உடன் இருந்து உதவுவாள்” என்று கூறினாள்; அவர்களும் தக்க பாத்திரங்களை மிக்க அளவில் தந்து சேர்த்தனர். மற்றும் பலாக்காய், வெள்ளரிக் காய் மாதுளங்காய், மாவின்கனி, வாழைக்காய், நெல் அரிசி, பால், தயிர், நெய் முதலியன கொண்டுவந்து தந்தனர். அவற்றைக் கொண்டு அவள் சமைக்கத் தொடங்கினாள்.

கண்ணகி உணவு படைத்தல்

மெய்விரல் சிவக்கப் பல்வேறு பசுங்காய்களை அரிவாளில் வைத்துக் கொய்தாள்; அவள் திருமுகம் வியர்த்தது; கண்கள் சிவந்தன; ஐயை அடுப்புப்பற்ற வைக்க உதவினாள். தன் கைத்திறன் அமையக் கணவனுக் காகச் சமைத்து முடித்தாள்.

பனை ஒலை கொண்டு அழகாகப் பின்னப் பட்ட தடுக்கை அதனை இட்டாள்; அதில் செல்வமகனாகிய கோவலன் அமர்ந்தான். அவன் கால் அடிகளைக் கழுவித் துடைத்தாள், தரையில் நீர் தெளித்தாள், குமரிவாழையை விரித்து உணவு பரிமாறினாள். “அமுதம் உண்க அடிகளே” என்று அன்புடன் கூறினாள். அவனும் தன்குல மரபுக்கு என விதிக்கப்பட்ட சடங்குகளின்படி கைகால் கழுவிக்கொண்டு உண்ண அமர்ந்தான்.

அவள் உணவு இட அவன் உண்ணும் காட்சி ஆயர் மகளிரை மகிழச் செய்தது. அவர்களுக்குக் கண்ணன் நப்பின்னை காட்சி நினைவில் நின்றது. “ஆயர் பாடியில் யசோதை பெற்றெடுத்த காயாம் பூ நிறத்தவனாகிய கண்ணன் இவன்” என்றும், “அவன் துயர் தீர்த்த கன்னி நப்பின்னை இவள்” என்றும் கூறிப் பாராட்டினர். ஐயையும் அவள் தாயும் விம்மிதம் எய்தினர். “கண்

கொள்ளாக் காட்சி இங்கு நமக்கு இவர்” என்று கூறிப் பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவலன் கழிவிரக்கம்

அவன் உணவு உண்டு இனிது இருந்தான். அவனுக்கு வெற்றிலையும் பாக்கும் தந்தனள். அவற்றைத் தந்த கண்ணகியை அருகில் அழைத்தான். “உன் மெல்லடிகள் கற்கள் பொருந்திய வழியை எவ்வாறு கடக்க முடிந்தன?” என்று கூறிக் கொடிய காட்டுவழியில் அவளை அழைத்து வந்ததற்காக வருந்தினான். “எம் பெற்றோர்கள் இதற்காக வருந்தியிருப்பார்கள்; எல்லாம் புதிராக இருக் கிறது, இது வினையின் விளைவோ அறியாமல் திகைக் கின்றேன். வறுமொழியாளருடனும், புதிய பரத்தை யருடனும் திரிந்து கெட்டேன். அவர்கள் நகைச்சிரிப்பு என்னைப் பாழ்படுத்தியது; அறிஞர் பெருமக்கள் அறிவுரை களை மறந்தேன். எனக்கு நன்னெறியே அமையாது; தீமை செய்து உழன்றேன்; எனக்கு நன்மையே வாய்க்காது”.

“என் பெற்றோர்கள் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்யவேண்டும்; அதை மறந்து விட்டேன்; பிழைபல செய்துவிட்டேன்; பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்து விட்டேன்; எண்ணிப்பார்க்க வில்லை; அவசரப்பட்டு உன்னையும் உடன்வருக என்று கூறிவிட்டேன்; இது தவறு என்று எண்ணாமல் செயல்பட்டு விட்டேன்; “மாநகர்க்கு இங்கு வருக” என்று கூறினேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுது உணர்கிறேன்; “எழுக” என்றேன்; உடன் மறுப்புக் கூறாமல் உடன் வந்துவிட்டாய்; நீ செய்தது அதை நினைத்துப் பார்க்கிறேன்; நீயாவது தடுத்து இருக்கலாம்; அதைச் செய்யாது விட்டாய்” என்று கழிவிரக்கம் காட்டி மனம் நெகிழப் பேசினான்.

கண்ணகி மாற்றம்

“இதுவரை எதிர்த்துப் பேசியது இல்லை. “ஏன் நீ தடுத்து இருக்கக் கூடாது?” என்று அவன் கேட்டதற்கு அவள் தன் மனத்தைத் திறந்து காட்டினாள். அவன் பிரிவில் தனக்கு ஏற்பட்ட துயரை அவள் எடுத்துக் கூறவில்லை. பெற்றோர்கள் அடைந்த வருத்தத்தை மட்டும் குறிப் பிட்டாள். “இல்வாழ்க்கையின் மையக் கூறு அறம் செய்தல்; அறவோரை எதிர்கொள்ள முடியாமல் ஆகி விட்டது; விருந்தினரை அருந்தச் செய்யவில்லை; இது தான் பேரிழப்பு” என்று பேசினாள்.

“மற்றும் உன் பெற்றோர்கள் வந்து விசாரித்த போது விசனத்தைக் காட்டாமல் வியர்த்தமாகச் சிரித்தேன். அது வலிய வரவழைத்துக் கொண்ட பொய்ச் சிரிப்பு என்பதை அவர்கள் அறிந்தார்கள். அது அவர்கள் உள்ளத்தை உறுத்தியது. நீர் போற்றா ஒழுக்கம் விரும்பினர்; அது உங்கள் உரிமை; அதனை மறுத்து உரைப்பது எனக்கு உகந்தது அன்று. எப்பொழுதும் மறுத்துப் பேசியது இல்லை; அதனால் ஏற்று எழுந்தேன்” என்று அவள் பதில் கூறினாள். அன்பும் அருளும் கொண்டு அவன் பெற் றோர்கள் தனக்கு ஆறுதல் கூறி வந்தனர் என்பதையும் தெரிவித்தாள். பெண்டிர்க்கு அழகு எதிர்பேசாதிருத்தல் என்பதை அவள் கூற்றுக் காட்டியது. மாறுபடத் தான் என்றுமே நடந்து கொண்டது இல்லை என்று நவின்றாள்.

அது அவன் உள்ளத்தைத் தொட்டது; அவள் எத்தகைய தியாகத்தை மேற்கொண்டாள்? அவளால் எப்படிச் செல்வ வாழ்க்கையைத் துறக்க முடிந்தது? என்று எண்ணிப் பார்த்தான்; “குடிமுதல்சுற்றமும், குற்றிளை யரும், அடியோர் பாங்கும், ஆயமும் சூழ்ந்த பாதுகாப்பான

வாழ்க்கையை விட்டு எப்படி அவளால் வர முடிந்தது? நினைத்திருந்தால் அவள் இந்த வசதிகளோடு வீட்டிலேயே தங்கிவிட்டு இருக்கலாம். அவளுக்குத் துணையாக இருந்தவை யாவை?

நாணமும், மடனும், நல்லோர் பாராட்டும் கற்புத் திறனும் இவைதாம் துணையாயின என்பதை உணர்கிறான். புறச்சுற்றம் அவளை அணைக்க வில்லை. அகச்சுற்றம் அவள் மனக் கோட்பாடு. அது அவளுக்குத் துணை செய்தது. உள்ளப்பாங்கு அவளை இயக்கியது என்பதை உணர்ந்து பேசினான்.

கோவலன் பாராட்டுரை

“மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று பாராட்டிய அவன் இப்பொழுது அவள் குணநலன்களை வியந்தான். “பொன்னே! கொடியே! புனை பூங்கோதாய்! நாணின் பாவாய்! நீள்நில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின்செல்வி” என்று கூறிப் பாராட்டினான். அவளை நன்கு உணர்ந்த நிலைமையில் பெண்மைக்குரிய நல்லியல்புகளை அறிந்தவனாய் அவளை உருக்கமாக விளித்தான்; அவள் காலடிகளைக் காண்கின்றான். சீறடிகளை அழகுபடுத்திய சிலம்பு அதைக்கேட்டுப் பெற்றான். “சீறடிச்சிலம்பில் ஒன்று கொண்டு செல்கிறேன்; அதை விற்று முதல் பொருள் ஆக்குவேன். அதனை மாற்றி வருகிறேன்; கலங்காது இருப்பாயாக” என்று கூறினான். அதனைப் பெற்றுக் கொண்டு காதலியாகிய அவளை உளமாரத் தழுவிக் கொண்டு விடைபெற்றான். பக்கத்தில் தக்க உறவினர் இல்லாமல் விட்டுச் செல்வதை நினைத்துப் பார்க்கிறான் அவன். அவள் தனி மகள்; மனம் வெதும்பினான்; கண்களில் நீர் வெளிப்பட அதை மறைத்துக் கொண்டு அவளை விட்டு நீங்கினான்.

கொல்லனைச் சந்தித்தல்

பசுக்கள் நின்ற அந்த ஆயர்கள் வீட்டை விட்டு விலகினான். தளர்ந்த நடையோடு பெருந்தெருவை அடைந்தான். முசுப்பினை உடைய எருது எதிரே வந்தது. ஆயர்களாக இருந்தால் அது தீயநிமித்தம் என்று நின்று இருப்பார். இவன் அதை அறியாதவன். அதனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அது இழுக்கு என்பதை அவன் அறிந்திலன். அவனுக்கு அதை அறிய வாய்ப்பும் இல்லை; இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான்.

நூற்றுவர் பின்வரக் கள்ளச் சிந்தையன், சட்டை யிட்டவன் விலகி ஒதுங்கி நடந்து வந்தான்; ஒரு பொற் கொல்லன்; அவன் தோற்றம் அவனைத் தனிப்படுத்திக் காட்டியது. கையில் கோல் ஒன்று அவன் வைத்திருந்தான். அதனால் அவனுக்குத் தலைமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. பாண்டியன் மதித்த கொல்லன் இவன் என அனுமானித்தான். அதனால் அவனை அணுகி “அரசிக்கு ஏற்றது ஒர் அணி அதற்கு நீ விலை இட்டுக் கூறமுடியுமா?” என்று கேட்டான்.

அவன் அடக்கமாக அணுகிப் பதில் உரைத்தான். “அறியேன்; எனினும் அரசனது முடிக்கலன் சமைப்பேன் யான்” என்றான். பொதித்து வைத்த காற்சிலம்பை அவன் முன் அவிழ்த்தான். காலன் இதை எதிர்நோக்கிக் காத்திருந்தது போல் அந் நிகழ்ச்சி அமைந்தது, வயிரமும் மணியும் பொதித்த அந்தச் சித்திரச் சிலம்பின் செய்கை எல்லாம் விரும்பிப் பார்ப்பதைப் போல் நடித்தான். “கோப்பெருந்தேவிக்கே இது அமையும்” என்று சிறப் பித்துக் கூறி அரசனுக்கு இதனை அறிமுகப்படுத்துவதாகக் கூறினான்.

திரும்பி வரும்வரை அவனைத் தன் சிறுகுடிசையிலே இருக்குமாறு கூறினான். கொல்லன் கூறியதை நம்பினான். சிலம்பு கோவலன் கையிலேயே விட்டுச் சென்றான். அவன் அந்தக் கொல்லன் இல்லத்துக்கு அருகில் இருந்த கோயிலின் ஒரு புறம் ஒதுங்கிக் காத்து இருந்தான்.

அரசியின் காலணியை ஏற்கனவே களவாடி இருந் தான். அதனின்று இப் புதிய மனிதனைக் கொண்டு தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டான். அதனை அவன் வெளிக்காட்டாமல் அரசனைச் சந்திக்கச் சென்றான்.

கொல்லன் சூழ்ச்சி

அவனுக்குத் தக்க சூழல் அங்கு உருவாகி இருந்தது. அந்தப்புரம் நோக்கி நாட்டு அரசன் அடியெடுத்து வைத்தான். அமைச்சர்கள் உடன் செல்லவில்லை. ஏவல் சிலதியர் காவல் மன்னனைத் தொடர்ந்து சென்றனர்.

அரசி இவனிடம் ஊடல் கொண்டிருந்தாள். ஆடல் மகளிர் பாடிய மதுர இசையும், மகிழ்வு ஆடலும் மன்னவன் மனத்தைக் கவர்ந்தன. அருகிருந்த அரசி அதனைக் கண்ணுற்றாள். அதனால் நெஞ்சு புண்ணுற்றாள்; புலவி கொண்டாள். தலைவலி தனக்கு என்று அவனிடம் முரண்கொண்டு கூடுதல் தவிர்த்தாள். அவளை ஆற்று விக்கும் ஆவலில் அவன் அணுகினான். வேகமாகச் சென்ற அவன் தன் விவேகத்தை இழந்தான். அதனால் கோப் பெருந்தேவியின் அந்தப்புரம் நோக்கி அவன் சென்றான்.

அவ்வேளை பார்த்து அரசனை வணங்கிக் கொல்லன் தொடர்ந்தான். ஏத்திப் புகழ்ந்தான். கீழே விழுந்து தவழ்ந்

தான். “கள்வன் ஒருவன்; அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்தவன்; அவனை என் சிறுகுடிலகத்து நிறுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். “அவன் கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையாகக் கொண்டு மன்னிய காவலரை ஏய்த்துக் கவர்ந்தான்” என்று விளக்கினான்.

அரசன் ஆணை

அரசன் சிந்தித்துப் பார்க்கவில்லை. எல்லாம் விதிதான்; அவன் அறிவு மயங்கிவிட்டது. உடனே காவலர்களை அழைத்தான். தன் மனைவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக் கொன்று அச்சிலம்பினைக் கொண்டு வருக என்று கட்டளை இட்டான். ஆராயாது அவன் கட்டளை இட்டது ஏன்? சிலம்பு காட்டினால் அரசி சிந்தை மாறுவாள் என்று நினைத்தான். அது மட்டு மன்று; உடன் அமைச்சர்கள் இல்லை அறிவுரைகூற, தீர்ப்புக்கூற வேண்டிய இடம் அது அன்று; எல்லாம் கொல்லனுக்குச் சாதகமாக முடிந்தன.

காவல் ஆணை அதனைச் செயல் படுத்தக் கொலை யாட்களைக் கொல்லன் உடன் அழைத்துச் சென்றான். வினை அங்கு வலைவிரித்துக் காத்து இருந்தது. அதில் அவன் அகப்பட்டு இருந்தான். அவன் மதி அப்பொழுது செயல்படவில்லை. சிலம்பு காண வந்தவர்கள் இவர்கள் என்று கொல்லன் கோவலனுக்கு அவர்களைக் காட்டினான்; கோவலன் அதை நம்பிவிட்டான்.

வாதங்கன்

அந்தக் கொலையாளிகள் உடனே செயல்பட வில்லை. அவன் சலனமற்ற தோற்றத்தைக் கண்டு “இவன் கொலைப்படும் மகன் அல்லன்” என்று அவர்களுள் ஒருசிலர் மறுப்புத் தெரிவித்தனர். அவர்கள் உண்மை ஒளி காண்பதற்குமுன் கொல்லன் அவர்களைத் தனியே அழைத்துப் பேசினான்; அவர்கள் கூற்றை எள்ளி நகையாடினான். “கள்வர் என்பவர் கடுமையான தோற்றம் கொண்டிருக்கத் தேவையில்லை; அவர்கள் மற்றவர்களை எளிதில் மயக்கும் ஆற்றல் உடையவர்கள்; அந்த மயக்கத்தில் இவர்கள் ஆட்படுதல் கூடும்” என்று விளக்கினான்.

“களவாடுபவர்கள் மந்திரம் கற்றவர்கள்; தெய்வத்தை வேண்டி ஆற்றல் பெற்றவர்கள், மருந்திட்டு மற்றவர்களை மயக்குபவர்கள்; நிமித்தம் அறிந்து செயல்படுவார்கள்; தந்திரமாகச் செயல்படுவர்; இடம், காலம், கருவி ஆராய்ந்து சிந்திப்பவர்கள்; அதனால் அவர்களை அடையாளம் காண்பது அரிது ஆகும்” என்றான்.

“மருந்திட்டு அதனால் மயங்குவீர் என்றால் மன்னவன் ஆணைக்கு நீர் ஆட்படுவீர்; உங்கள் தலைகள் உருள்வது உறுதி; அவர்கள் மந்திரத்தைச் சொன்னால் தேவகுமாரர்கள் போல் மறைந்துவிடுவர். தெய்வத்தை நினைப்பவர் ஆயின் தம் கையகத்து உள்ள பொருளை அவர்களால் மறைக்க இயலும்; அவர்கள் மந்திரம் போட்டால் நாம் மறைந்து இருந்த இடத்தை விட்டுப் பெயரவே இயலாது. நிமித்தம் பார்த்தே திருடுவதை அவர்கள் நியமித்துச் செயல் படுவர். களவு நூல் காட்டும் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் இந்திரன் ஆரமும் அவர்கள் கைக்குச் சென்று போய்ச் சேரும். இடம், காலம் கருதி அவர்கள் செயல்பட்டால் யாரும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்குப் பகல் இரவு என்ற நேரப்பாகுபாடு இல்லை”.

“நினைத்ததைச் சாதிப்பதில் அவர்கள் நிலைபேறு உடையவர்கள் ஆவர். அவர்கள் புகாத இடமே இல்லை. காற்று நுழையாத இடமாயினும் அவர்கள் புகுந்து ஆற்றுவர். துாதர் கோலத்தில் வாயிலின் நுழைந்தான் ஒருவன், மாதர் கோலத்தில் அவன் உள்ளே சென்றான். விளக்கு ஒளியில் இருட்டு நேரத்தில் இளவரசனின் கழுத்துச் சங்கிலி வயிரம் பதித்தது; மின்னலைப்போல் பறித்தான்; மறைந்தான்”.

“வாள் கொண்டு இளவரசன் வீசினான். ஆள் அவனுக்கு அகப்படவில்லை. தோள் கொண்டு அவனைப் பற்ற முயன்றான். தூண் ஒன்றைக் காட்டிவிட்டுச் சேண்துரம் சென்றான். களவு நூல் கற்று உளவு அறிந்து திருடிய அவனை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவே இல்லை. அவன் இடத்தை யாராவது காட்ட முடியுமா என்று பழைய நிகழ்ச்சி ஒன்றைக் கூறி அவர்கள் பிழைகளை எடுத்துக் காட்டினான். அவன் கூறியதை ஒட்டி மற்றொருவன் தன் சொந்த அனுபவத்தைக் கூறி உயிரோட்டம் தந்தான். “அவன் வயது குறைந்த இளைஞன், வேல் தாங்கி இருந்தான். நிலம் தோண்டும் உளி வைத்திருந்தான். நீலநிற உடை உடுத்தி இருந்தான். நகைகளைக் கவரும் வேட்கையில் கடும்புலிபோல் நடு இரவில் ஊரவர் துயின்று கொண்டிருந்த நேரத்தில் வந்திருந்தான். என் கைவாள் எடுத்தேன். அவன் அதைத் தடுத்துப் பற்றிக்கொண்டான். அடுத்து அவனைத் தேடினேன். எங்கும் அவன் எனக்கு அகப்படவே இல்லை. இவர்கள் செயல் அற்புதமானது, அறிய இயலாதது” என்று மிகைப்படுத்திக் கூறினான்.

“இவன் தப்பித்துச் சென்றால் நம் உயிர் தப்புவது அரிது; அரசன் நம்மை மன்னிக்கமாட்டான்; அவனா நாமா யார் உயிர் தப்புவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்; சிந்தித்துச் செயல் படுங்கள்” என்றான் அக் கொலைஞன்.

இறுதி அவலம்

சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை; அச்சம் அவர்களை ஆட் கொண்டது; கோவலன் உயிரைத் துச்சம் என மதித்தனர். கல்லாத குடியன் முரடன் ஒருவன் தன் கைவாள் எடுத்தான்; அவன் வாழ்வை முடித்தான். மார்பில் குருதி கொட்டியது; மாநில மடந்தை துயர் அடைந்தாள்.

பாண்டியன் செங்கோல் வளைந்தது; கோவலன் தரையில் விழுந்தான்; இவற்றிற்கு எல்லாம் காரணம் அவன் பழைய வினைதான்; வேறு என்ன இருக்க முடியும்?

நல்வினையையே நாடிச் செயல் புரிந்தால் கேடு வருவது இல்லை. கண்ணகியின் கணவன் அவன் அவல முடிவு உலகுக்கு ஒரு படிப்பினையாகும்; அவன் பழம்பிறப்பில் செய்த தீவினை இப்பிறப்பில் அவன் வாழ்வினைப் பறித்துக்கொண்டது. அது மட்டுமா? வளையாத செங்கோலும் வளைந்தது; அதற்கு அப் பாண்டியன் செய்த பழவினையே காரணம் ஆகும்.