சிலம்பின் கதை/அடைக்கலக் காதை

15. மாதரியிடம் ஒப்புவித்தல்
(அடைக்கலக் காதை)

பாண்டியன் ஆட்சி பண்பட்ட ஆட்சி; அதுமக்கள் வாழ்வுக்கு நிழலாக இருந்தது; அது அவர்கள் வாழ்வை வளப்படுத்தியது. அவன் செங்கோல் சீர்மையும், தண்மையும், வெற்றிச்சிறப்பும் மதுரை மாநகருக்கு உயர்வு தந்தன. மக்கள் நாட்டை விட்டு நகர்ந்தது இல்லை; வேற்று நாட்டை விரும்பிச் சென்றது இல்லை; தம்நாட்டை நேசித்தனர்; இது அவர்கள் நற்பண்பாகத் திகழ்ந்தது. இந்த மதுரை மூதுார் மாநகரைக் கண்டு திரும்பியவன் அறவோர் பள்ளி இருந்த புறஞ்சிறைப் பொழிலில் புகுந்து தீதுதிர் மதுரை பற்றியும், தென்னவன் மாட்சியைப் பற்றியும் மாதவத்தாட்டியாகிய கவுந்தி அடிகட்குக் கூறினான்.

மாடலன் வருகை

கவுந்தி அடிகளிடம் இவன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தலைச்செங்கானம் சார்ந்த மறையவன் மாடலன் என்பான் அங்கு வந்து சேர்ந்தான். பொதிகையை வணங்கிவிட்டுக் குமரியில் நீராடித் தீர்த்த யாத்திரை செய்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் கவுந்தியடிகள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு அங்குக் கோவலனையும். கண்ணகியையும் கண்டது வியப்பைத் தந்தது. அவர்கள் அப்பொழுதைய நிலையையும் அறிந்தவன் ஆயினான். கோவலனை அவன் நன்கு உணர்ந்தவன். “நன்மைக்கு இருப்பிடமாகத் திகழ்ந்தவன்; அவனுக்கு இக்கேடுகள் வந்தது ஏன்?” என்று வினாவைத் தனக்குள் எழுப்பிக் கொண்டான்.

கோவலன் சிறப்புகள்

கோவலன் கடந்த கால வாழ்வின் ஒளிச் சிகரங்கள் அவன் கண்முன் வந்து நின்றன. அவற்றைக் கவுந்தி அடிகள் அறிய அவன் அறிவித்தான்.

பழைய வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினான்; மாதவி ஆடற் செல்வி. எத்தகையவள்? அரசனால் பாராட்டப் பெற்றவள்; பரிசுகள் பெற்றவள்: மாந்தளிர் மேனி மாதவி அவளுடன் அவன் வாழ்க்கை இன்பமாக நடத்தினான். கலையும் காதலும் அவனைக் கவ்வி இழுத்து வைத்தன; இன்ப விழைவில் திளைத்து மகிழ்ந்தான்.

காதலின் கனியாக மாதவி குழந்தைப் பேறு பெற்றாள். தீண்டாமை கழிந்ததும் அக்குழந்தைக்குப் பெயர் இடுதலை ஒரு சடங்காகத் கொண்டனர். ஆயிரம் கணிகையர் கூடினர். அக்குழந்தைக்குப் பெயர் இடுவது பற்றிப் பேச்சு எழுந்தது. அப்பொழுது கோவலன் ஒரு பழைய நிகழ்ச்சியை எடுத்துக் கூறினான். அவன் முன்னோர்களுள் ஒருவன் கடல் அலையில் அகப்பட்டுக் கரைசேர முடியாமல் தவித்தான். தெய்வம் ஒன்று அவன் செய்த புண்ணியத்தால் அவனுக்கு உதவியது. மந்திரம் சொல்லி அவனைக் கரை சேர்ப்பித்தது. அத்தெய்வத்தைப் போற்றி மதிக்கும் வகையில் மணிமேகலா தெய்வம் அதன் பெயரை இடுக என்று அவன் கூறினான். 'மணிமேகலை' என்ற பெயர் அக்குழந்தைக்கு இடப்பட்டது. மணிமேகலா

தெய்வம் அவன் மதித்த குலதெய்வமாக அமைந்தது; அந்நிகழ்ச்சியை மாடலன் விவரித்தான்.

பெயரிடுதலைத் தொடர்ந்து தானம் செய்ய முற்பட்ட போது நரைமுதுயாக்கை உடைய மறையவன் ஒருவன் தண்டு கால் ஊன்றி நடந்து வந்தான். பாகனைத் தூக்கி எறிந்து விட்டு வேகமாக வந்த யானை ஒன்று இந்த முதியவனைத் துதிக்கையில் கொண்டு துயரத்தில் ஆழ்த்தியது.

உயிருக்குப் போராடிய உயர்ந்தோனைக் காப்பாற்றத் தன் உயிரைப் பொருட்படுத்தாது கோவலன் அதன் கையகத்தில் பாய்ந்து அவனை மீட்டான். அவ் யானையின் பிடரியில் இருந்து விஞ்சையன் என விளங்கினான். அவனைக் “கருணை மறவன்” என்று அருகில் இருந்தவர்கள் பாராட்டினர்.

மற்றொரு நிகழ்ச்சி. படுத்துக் கிடந்த குழந்தையை அடுத்துக் கடிக்கவந்த பாம்பினைக் கொன்று வீழ்த்திய கீரிப்பிள்ளை அதன் வாயில் செங்குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்து விட்டது என்று தவறாகக் கருதி அதனை அடித்தாள் ஒருத்தி; அது துடித்துச் செத்தது.

பாவச் செயல் செய்த அவளைக் கணவன் மன்னிக் காமல் அது தீரும் வரை அவளைச் சேர்வது இல்லை என்று ஊரைவிட்டு நீங்கினான். பாவம்தீரப் பவித்திரம் செய்ய அவனுக்குப் பொருள் தேவைப்பட்டது. வடமொழியில் எழுதிய வாசகம் ஒன்று: “கருமம் தொலைத்துப் பலன் அடைவீர்” என்று எழுதித் தந்தான்.

ஏட்டை நீட்டினாள்; காசு கொடுத்து மாசு நீக்க யாரும் முன் வரவில்லை. கேட்டனன் கோவலன்; பொருள்

கொடுத்து உதவினான்; பிரிந்தவன் வந்து ஒன்று சேர்ந்தான். சிதைந்த வாழ்க்கை சீர்பெறச் செய்த செம்மலாக விளங்கி னான். 'செல்லாச் செல்வன்' என்று அவனை அனைவரும் அழைத்துச் சிறப்புச் செய்தனர்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி பத்தினி ஒருத்திமேல் பழிச்சொல் கூறி அவள் வாழ்க்கையைக் கெடுத்தான் ஒரு கயவன். அறம் அவனை ஒறுத்தது. பூதம் பாசம் கொண்டு அவனைக் கட்டி இழுத்துச் சென்றது.

நாசம் வந்து அவனை அணுகியபோது பாசத்தால் பிணிப்புண்ட அவன் தாய் அப்பூதத்திடம் முறையிட்டாள். “என் உயிர் கொண்டு அவன் உயிர் தருக” என்று வேண்டினாள். “இழிமகன் ஒருவன் உயிர்க்கு ஈடாக நல் உயிரைக் கொள்ளும் நயப்பாடு இங்கு இல்லை” என்று கூறி அவனை அவள்கண்முன் அடித்துக் கொன்றது. மனம் ஒடிந்து போனதால் நொடிந்து போனாள்; திக்கற்ற அவளுக்குத் திசை காட்டும் ஒளிக் கதிராகக் கோவலன் இருந்து அத் தாய்க்கும் மற்றும் அவனைச் சார்ந்து கிடந்த சுற்றத்தவர்க்கும் உறுபொருள் கொடுத்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் காத்து ஒம்பினான். அதனால் 'இல்லோர் செம்மல்' என்று நல்லோர் அவனைப் பாராட்டிக் கூறினர்.

ஈகையும் வீரமும் உடைய அவன் வாழ்வு நசிந்து போனது கண்டு கசிந்து வருந்தினான் மாடலன். “இம்மை யில் எந்தத் தீமையும் நீ செய்தது யான் கண்டது இல்லை; சென்ற பிறவியில் செய்த தீ வினைதான் ஏதோ ஒன்று பாழினை நல்கியது” என்று ஆறுதல் கூறினான். “கண்ணகியும் கடுங்கான் வந்து உழந்தது வருந்தத் தக்கது” என்றான்.

கோவலன் கனவு

மாடலன் பரிவுடன் பேசிய பாங்கு கோவலன் உள்ளத்தை உடைத்து அவன் உணர்வை வெளிப் படுத்தியது. வாழ்க்கை அச்சம் அவனைக் கைக் கொண்டது. தான் கண்ட கனவினை மாடலனிடம் கூறிப் பகிர்ந்து கொண்டான்; “குறுமகன் சூழ்ச்சியால் தான் பெறு துயர் இது” என்று நவின்றான்; கனவின் விளக்கம் இது: “கண்ணகி நடுங்கித் துயர் அடைகிறாள்; அவன் எருமைமீது ஊர்ந்து செல்கிறான்; அவன் ஆடையை மற்றவர்கள் பறித்துக் கொள்கின்றனர்; கண்ணகியும் அவனும் பற்று நீங்கியோர் அடையும் வீட்டு உலகை அடைகின்றனர். மாதவி மணிமேகலையைத் துறவியாக்குகிறாள்; மன்மதன் தன் வில் அம்பினை வெறு நிலத்தில் வீசி எறிகிறான். மணிமேகலை மாபெரும் துறவி ஆகிறாள்” நனவில் காண்பது போல் இக்கனவு அவனுக்கு அமைந்தது. அதனை மாடலனிடம் எடுத்து உரைத்தான்.

இனி அடுத்து அவர்கள் அங்கு அவ் அறப்பள்ளியில் தங்க இயலாது என்று இருவரும் எடுத்து உரைத்தனர். “வணிகப் பெருமக்கள் உங்களை ஏற்று உபசரிப்பர்; அதனால் இப்புறநகர் விட்டுக் கதிரவன் மறைவதற்கு முன் அக நகர் செல்வதுதான் தக்கது” என்று கூறினர்.

மாதரி வருகை

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அங்கு இடைக் குலமடந்தையாகிய மாதரி என்பாள் வந்து சேர்ந்தாள்; அந்த மதிலின் பக்கத்து ஊரில் இயக்கியாகிய தெய்வத்துக்குப் பால்சோறு படைத்து விட்டுத் திரும்பினாள். அவள் கவுந்தியடிகளை மதிப்பின் காரணமாக வணங்கி எழுந்தாள் “இவள் பசுவைக்கொண்டு பால் விற்று வாழ்க்கை நடத்து பவள் எந்தக் கொடுமையும் அறியாதவள்; தீமை அறியாதவள்; சாதாரண இரக்கத் தன்மையள், செவ்வியள்; இவளே அடைக்கலம் தருதற்குத் தக்கவள்” என்று முடிவு செய்தார்.

“செல்வமகள் அவள்; இவள் கனவனின் தந்தையின் பெயர் கேட்ட அளவில் நகரத்து வணிகர் நயந்து வர வேற்பர். செல்வர் தம் மனையில் அவர் சேர்வர்; அதுவரை அவளை உன்பால் அடைக்கலம் தந்தேன்” என்று கூறி மாதரியிடம் கண்ணகியை ஒப்படைத்தார் கவுந்திஅடிகள்.

“இவளை நீராட்டிக் கண்ணுக்கு மை தீட்டிக் கூந்தலுக்குப் பூ சூட்டித் துாய ஆடை உடுப்பித்து இவளை நன்கு போற்றிக் காப்பாயாக ஆயமும் காவலும் நீயேயாகுக; அவளை ஏற்க” என்று கூறினார்.

“இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள். இன்னும் இவளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறுவது என்றால் மகளிர்க்கு இன்றியமையாத கற்பினைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவள். இவளைத் தெய்வம் என்று மதிக்கிறேன்; இவள் கற்புக்கடம் பூண்ட தெய்வம்; இவளுக்கு நிகராக வேறு தெய்வத்தை நான் கண்டது இல்லை. இவர்களைப் போலக் கற்புடை மகளிர் வாழ் வதால்தான் நாட்டில் மழை பெய்கிறது; வளம் சிறக்கிறது. ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது; பத்தினிப் பெண்டிர் வாழும் நாடு இத்தகைய சிறப்புகள் அடைகின்றன: அதனால் இவளை ஏற்று உதவுக” என்று கூறினார்.

பழங்கதை கூறல்

“மற்றும் ஒரு தவசியாகிய யான் தரும் அடைக்கலப் பொருள் இது; இது சிறு உதவியாயினும் அதனால் விளையும் நன்மை உனக்குப் பெரிது ஆகும்; இது உனக்குப் பெருவாழ்வு தரும் என்பது உறுதி; இதற்கு எடுத்துக் காட்டாகக் கூற வேண்டுமானால் இந்நிகழ்ச்சியைக் கூறலாம் :

“இது பழங்கதை; படிப்பினையைத் தரும் விதை; செவிமடுத்துக் கேட்பாயாக” என்று கூறினார்.

“காவிரிப் பூம்பட்டினத்தில் சமணமுனிவர்களுக்காக இட்ட சிலாதலத்தில் முனிவர்கள் சிலர் வந்து வழக்கம் போலத் தங்கினர். அவர்கள் முன் ஒளிபடைத்த தெய்வ மேனியன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டு அதிசயித்தவர்கள், யார் இவன்? அங்கு வருவதற்கு இவன் வரலாறு யாது?” என்று வினவினர்; அதற்கு அச் சாரணர் தந்த விளக்கம் இது :

அவன் கை விரல் கருவிரலாக இருந்தது. அது ஒரு குரங்கின் கையாக இருந்தது. வானவன் வடிவில் வந்திருந்தான். இது வியப்பை அளித்தது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு அமைந்திருந்தது. அதனை முனிவர்கள் விளக்கினார்கள்:

“எட்டிப் பட்டத்தைப் பெற்ற சாயலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி தானம் பல தந்து தரும வழியில் நின்றாள். ஒரு தவ முனிவன் உண்ண வந்திருந்தான். அவனுடன் ஒரு குரங்கு ஒட்டிக் கொண்டு உடன்வந்தது. அவன் தின்றுஉமிழ்ந்த மிச்சிலை உண்டு அது பசி தீர்ந்தது. அதன் முகமலர்ச்சியைக் கண்டு அகம் மலர்ந்த அம் முனிவன் “தொடர்ந்து அக்குரங்கைச் சொந்த மகன் போலப் போற்றி அதற்கு உணவிடுக” என்று கேட்டுக் கொண்டான்.

அக் குரங்கு வாழ்நாள் முழுவதும் அவ் வீட்டில் இருந்து பின் இறந்தது. இறந்தபிறகும் “அது நல் வாழ்வு பெறுக” என்று தானம் செய்தனர். அதன் விளைவால் அக் குரங்கு மத்திம நாட்டில் வாரணாசி என்னும் நகரத்து அரசன் உத்தரகெளத்தன் என்பானின் மகனாகப் பிறந்தது. அங்குப் பல காலம் வாழ்ந்து தானங்கள் பல செய்து பின் தேவர் உலகம் அடைந்தான். அவன்தான் இந்தக் குரங்குக் கையோடு கூடிய வானவன் என்று அங்கு வந்த சாவகர்க்குச் சாரணர் தலைவன் உணர்த்தினான். இந்தச் செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

வானவன் ஆகிய போதும் அந்த எட்டிச் சாயலன் மனைவி இட்ட தானத்தின் பயன் இது என்று காட்டக் குரங்கின் கைவிரலைத் தான் பெறுவதைச் சிறப்பாகக் கொண்டான். அந்த வடிவத்தோடு அங்கு வந்திருந்தான் என்ற செய்தியைச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர் விளக்கினார்.

“சாரணர் கூறிய தகுதி மிக்க கதையைக் கேட்டவர்களும், தானம் இட்ட எட்டிச் சாயலனும், அவன் மனைவியும் விண்ணுலகப் பேரின்ப வாழ்வு பெற்றனர்” என்ற செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

“இந்தக்கதையைக் கேட்டாய்; அதனால் இதன் பயன் அறிகின்றாய். நீ இனி நீட்டித்து இராமல் இவர்களை அழைத்துச் செல்க” என்று கூறினார். அவளும் கண்ணகியை அழைத்துக் கொண்டு பொழுது சாயும் நேரத்தில் தம் வீட்டுக்குச் செல்ல முற்பட்டாள்.

கன்றை நினைத்துக் கொண்டு விடுதிரும்பும் பசுக்கள் உடன் சென்றன. அவற்றைச் செலுத்தும் இடையர் ஆட்டுக் குட்டியைத் தோளில் சுமந்தவராய் உடன் சென்றனர். அவர்கள் கையில் கோடரி வைத்திருந்தனர்; ஆய்ச்சியரும் ஒரு சிலர் அவருடன் சென்றனர்; பொறிகள் பல வைத்துக் காவல் செய்த மதிலின் வாயிலுள் சென்று அக நகரில் மாதரி கண்ணகி கோவலனோடு தம் மனையை அடைந்தாள்.