சிலம்பின் கதை/துன்ப மாலை

18. துன்பச் செய்தி
(துன்ப மாலை)

குரவை பாடி முடிந்தது. பின் மாதரிவையை ஆற்றின் நீர்த்துறைக்குச் சென்று நீராடித் திருமாலுக்குப் பூவும், சந்தனமும், நறும் புகையும், மாலையும் சாத்தச் சென்றிருந்தாள். அந்த நேரத்தில் அவள் ஆயர் சேரியில் இருக்கவில்லை.

குரவைக்கூத்து முடிந்ததும் அலறிஅடித்துக் கொண்டு ஊரில் இருந்து ஒருத்தி அங்கு வந்து செய்தி கூறத் தொடங்கினாள். அவள் அச்செய்தியைச் சொல்ல முடி யாமல் தயங்கினாள். அவள் வாயில் சொற்கள் வெளிவர வில்லை.

கண்ணகிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ துயரச் செய்தி அவள் சொல்ல வந்திருக்கிறாள் என்பதை மட்டும் அவளால் அறிந்து கொள்ள முடிந்தது. இவள் பதறினாள்; கதறினாள்; அதிர்ச்சியுற்றாள். ஐயையை நோக்கி ஐயத்தை எழுப்பினாள்; “நடந்தது யாது?” என்று வினவினாள்.

“ஊருக்குச் சென்ற காதலன் என்ன ஆயினான்? அவன் வந்திலன்; என் நெஞ்சம் கவல்கின்றது; யாரோ ஏதோ கூறினார்கள்; அவர்கள் சொல்ல வந்த செய்தி யாது?" என்று ஐயையை வினவினாள்.

“நண்பகல் பொழுதே எனக்கு ஐயம் தோன்றியது; நடுங்கினேன்; என்ன? ஏது? அவர்கள் கூறியது யாது? விரைவில் கூறுக” என்று மேலும் பதறினாள்.

“யாரோ எவரோ வஞ்சம் இழைத்துவிட்டார்கள்; சூழ்ச்சிக்கு அவர் இரையாகி விட்டாரா? ஒன்றும் விளங்க வில்லை. அந்த ஊரவர் பேசிய உரை யாது? விளம்புக; ஐயையை நோக்கித் தொடர்ந்து கேட்டாள்; அதற்குமேல் ஐயையால் அடங்கி இருக்க இயலவில்லை. தனக்குத் தெரிந்ததைக் கண்ணகிக்குத் தெரியப்படுத்தினாள்.

“அரசிக்கு உரிய அணி ஒன்றை அபகரித்தான் ஒரு கள்வன்; அவனை அரசனின் ஆட்கள் கொலைசெய்து விட்டனர்” என்று தெரிவித்தாள்.

அவளுக்கு விளங்கியது; 'அணி' அதை ஏந்திச் சென்றது தன் கணவன்; அவனைத்தான் அவர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து சீற்றம் கொண்டாள். எழுந்தாள்; செய்வது அறியாது மயங்கி விழுந்தாள். விரித்த கூந்தலோடு அத் திங்கள் முகத்தினள் நிலத்தில் விழுந்து அலறினாள். செங்கண்சிவக்க அழுதாள்; “எங்கே இருக்கின்றாய்?” என்று கூறி இணைந்து ஏங்கி மயங்கினாள்.

நெஞ்சில் நினைவுகள் அலைமோதின, உணர்வுகள் பொங்கி நெருப்பு எனச் சொற்களாக வெளிப்பட்டன. அநியாயம் அது என்பதை அலறி அறிவித்தாள். விதவைக் கோலம் கொண்டு ஒடுங்கிக் கிடப்பது இது பழையது; எரியில் விழுந்து கரிவது இதுவும் பழகியது; இவற்றை எதிர்த்தாள், பிழை செய்தது அரசன்; கொடுமை இழைத்தது அவன்; இதனைத் தாங்கித் தணிந்து இருப்பது இயலாது என்று கூறிக் கொதித்து எழுந்தாள். அதனை எதிர்க்காமல் இருப்பது தனக்கு வசை என்பதை உணர்ந்தாள்.

பழிச்சொல்லைப் போக்குவது தன் கடமை என்பதை அறிந்தாள். இது அவள் உள்ளத்தில் எழுந்தபோராட்டம்.

இதைப் பலரும் அறிய வெளியிட்டாள்; “கள்வனோ என் கணவன்?” என்று ஆயர் மகளிரை நோக்கி வினவினாள். காய்கதிர்ச் செல்வனை நோக்கிக் கதறினாள். “அநியாயம் இழைத்த இந்த ஊர் அழியும். எரி எழுந்து ஊரை எரிக்கும்” என்று ஒரு தெய்வக்குரல் எதிர் ஒலித்தது. அது அவளுக்கு ஊக்கத்தைத் தந்தது; செயல்படுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பின்_கதை/துன்ப_மாலை&oldid=937553" இலிருந்து மீள்விக்கப்பட்டது