சிலம்பின் கதை/நீர்ப்படைக் காதை

27. கங்கையில் நீராட்டுதல்
(நீர்ப்படைக் காதை)

வட பேர் இமயத்தில் கடவுள் பத்தினிக்குக் கல்லைக் கொண்டு வந்த பின்பு கனக விசயர்தம் கதிர்முடிமேல் ஏற்றிக் கொண்டு வந்தான். தென் தமிழ் ஆற்றல் அறியாது வந்து மலைந்த ஆரிய மன்னரையும், அவனுடன் வந்த படை வீரர்களையும் கொன்று குவித்தான். இந்த வெற்றிச் செய்தி எட்டுத் திசையும் பேசப்பட்டது.

இதற்கு முற்பட்ட போர்கள் யாண்டுகளில் நடந்தன; மாதங்களில் நிகழ்ந்தன; நாட்களில் நடைபெற்றன; அவற்றிற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் ஒவ் வொன்றுக்கும் பதினெட்டு எனக் கூறப்பட்டது. ஆண்டு களிலும், மாதங்களிலும், நாட்களிலும் நிகழ்ந்த போர்கள் அவற்றை நோக்க இது நாழிகைகளில் முடிவு பெற்றது. பதினெட்டே நாழிகையில் இப்போர் தொடங்கி முடிவும் பெற்றது. சாதனைகளில் இது மற்றவற்றை விட விஞ்சி விட்ட செய்தி, வரலாற்று நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றது. ஒரே பகலில் முடித்த போர் இது என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட செய்தி இது.

செங்குட்டுவன் தன் மாபெருஞ் சேனையுடன் கங்கைப் பேர் யாற்றுக் கரையை அடைந்தான். பத்தினிக் கடவுளுக்கு வேதியர்களைக் கொண்டு நீர்ப் படுத்தித் தூய்மை செய்து விழா எடுத்தான். மஞ்சனநீர் ஆட்டி வெஞ்சின வேந்தன் வெற்றி விழா எடுத்தான். அவன் அமர்ந்து வீரர்களுக்குப் பரிசு தர மண்டபம் அமைத்துக் கொடுத்தனர். அவன் தங்குதற்கு ஏற்ற வகையில் அரண் மனைகளையும், மணி மண்டபங்களையும், பொன்னால் புனையப்பட்ட மேடை அரங்குகளையும், அழகிய பந்தர்களையும், பள்ளி அறைகளையும், பூஞ்சோலைகளை யும், மலர்ப் பொய்கைகளையும், இசைப் பாடல்கள் இருந்து கேட்பதற்குத் தக்க அரங்கங்களையும், பேரிசை மன்னர்க்கு வேண்டுவன பிறவும் ஆரிய அரசர்கள் ஆகிய நூற்றுவர் கன்னர் அமைத்துத் தந்தனர்.

அங்கே வேந்தன் அமர்ந்திருந்து களத்தில் உயிர்விட்ட விரர்களை உளமாரப் பாராட்டினான், அவர்கள் வாரிசுகள் ஆகிய அவர்தம் மக்களுக்கும் சுற்றத்தினருக்கும் பரிசுகள் தந்தான்; உயிருடன் வெற்றி விளைவித்துத் திரும்பிய வீரர்களுக்குப் பரிசுகள் தந்து பாராட்டினான்.

திருவோலக்கத்தில் பெருமிதத்துடன் வீற்றிருந்த அரசனைக் காண அங்கு மாடலன் என்னும் மறையவன் வந்து சேர்ந்தான். “வாழ்க எம் மன்னன்” என்று முதற்கண் சேரனை வாழ்த்தி அவன் பெற்ற வெற்றியைத் தொகுத்துக் கூறினான். “மாதவி மடந்தை கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று எள்ளல் சுவைபடத் தொகுத்துக் கூறினான். “எங்கோ எழுந்த சிறு பொறி அது கொழுந்துவிட்டுப் பெரிதாகிப் போரில் முடிந்தது; வடவரை அடிமைப்படுத்தியது” என்று சொல்திறன் படக் கூறினான்.

அங்குக் கூடியிருந்த மன்னர்களுக்கு இது புதிராக அமைந்திருந்தது; விடுகதை போல விளக்கமற்றுக் கிடந்தது. அரசன் மாடலனை நோக்கி, “பகைப்புலத்து அரசர் பலர் இதை அறியமாட்டார்கள். நகைத்திறம் படக் கூறிவிட்டாய். மறைகற்ற பெரியோய்! நீ கூறிய உரையின் கருத்து யாது? அதனை விரித்துக் கூறுக” என்று கேட்டுக் கொண்டான்.

செய்திகள் கூறுதல்

மாடலன் ஆகிய மறையவன் மன்னனுக்கு அச்செய்தி களை விவரித்துக் கூறினான்.

“கடற்கரைப் பாட்டில் மாதவி கூற்றில் கண்ட குறை அது ஊடலாக அமைய ஊழ்வினை காதலர் இருவரைப் பிரித்தது; அதன் தொடர் நிகழ்ச்சியாகக் கோவலன். தன் துணைவியுடன் மதுரை சென்றான். அங்கே காவலனால் பழிசுமத்தப்பட்டுக் கொலைக் களத்தில் வெட்டுண்டான்; பட்ட மரமாகிய கண்ணகி சீற்றம் கொண்டு நீதிக்குப் போராடி வழக்கில் வென்று பாண்டியனைத் துயரில் ஆழ்த்தினாள். அவன் உயிர்விட்டான் மதுரை எரிந்தது. நின்னாடு புகுந்த அப்பத்தினித் தெய்வம் இன்று கல்லாக அமைந்து இவர்கள் முடிமீது எறினாள்” என்று கதையைக் கூறினான்.

இது கடந்த செய்தி, அதனைக் கூறிமுடித்து அதன் பின் தான் கங்கைக் கரைக்கு வந்தது ஏன் என்ற சங்கையைத் தீர்க்கத் தொடங்கினான்.

அகத்தியன் வாழ் பொதிகை மலையை வலங் கொண்டு குமரியில் நீராடி வந்தான். வழியில் பாண்டிய நாட்டை அடைந்து அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கேள்வி யுற்றான். அங்குச் சென்றதற்காகத் தன் ஊழ்வினையை அவன் நொந்து கொண்டான்.

தென்னவனை வழக்காடி வென்று கோவலன் பிழை யற்றவன் என்பதைக் கண்ணகி நிறுவினாள். அடைக்கலமாகக் கண்ணகியை இடைக்குல மகள் பெற்றிருந்தாள். அவர்களைத் தான் காக்க முடியவில்லை; அவர்களுக்குக் கேடு நிகழ்ந்தது தன்னால்தான் என்று வருந்திய மாதரி எரியகம் புகுந்து உயிர் நீத்தாள். அதிர்ச்சி மிக்க செய்தியாக இது மாடலனுக்கு அமைந்தது.

தீயது செய்த வேந்தன் தன் உயிரைவிட்டுப் பாவ மன்னிப்புப் பெற்றுவிட்டான். தன் உடன் வந்த உத்தமர்களுக்கு அழிவு வரத் தானும் உடந்தை என்று கருதிய கவுந்தி அடிகள் அதற்கு ஈடாகத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டார். உண்ணாநோன்பு ஏற்று உயிரை விட்டார். இது அடுத்த அதிர்ச்சி மிக்க செய்தியாகிவிட்டது.

அடுத்து மாடலன் தன் சொந்த நாடாகிய சோழ நாட்டை அடைந்தான். புகார் நகரில் புகுந்தவன் இதுவரை நடந்த இந்தச் செய்திகளைத் தகுந்தவர்க்கு எல்லாம் எடுத்துச் சொல்ல அவ் அறிவிப்புகள் பலரை உயிர் விடச் செய்தன; சிலரைத் துறவிகள் ஆக்கின; துயரத்தைப் பெருக்கின. கோவலன் தந்தை தம்பால் உள்ள பொருளை உலகினர்க்கு அளித்து வாழ்க்கையை வெறுத்துப் புத்த பள்ளியை அடைந்து துறவியாயினான். அவன் மனைவி உறவுக்கு என ஒருவரும் இல்லாமையால் உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அறியாதவள் ஆயினாள். மாநாய்கன் தானம் பல செய்து அருக தானத்தை அடைந்து அறங்கள் செய்வதை வாழ்வாகக் கொண்டான். அவன் மனைவி, மகளையும், மருமகனையும் இழந்த துக்கம் தாங்க இயலாமல் ஏங்கி உயிர்விட்டு மறைந்தாள்.

மற்று இச்செய்திகளைக் கேட்ட மாதவி, “என் மகள் இனி நல்வாழ்க்கையை நாடிச் செல்லட்டும்; என்னோடு இந்தப் பழைய வாழ்க்கை மாறுவதாக; என் மகளைக் கணிகையாகக் கணமும் இசையேன். கணிகை வாழ்க்கை அவளைவிட்டு ஒழிக” என்று கூறி அவளைப் புதிய நெறிக்குத் திருப்பிவிட்டாள். தானும் துறவியாவதற்கு உறுதி கொண்டு தலைமுடியை அடியோடு களைந்து புத்த பள்ளியை அவள் அடைந்து துறவறம் மேற்கொண்டு விட்டாள். இந்தச் செய்திகளை எல்லாம் எடுத்துக் கூறிய மாடலன் இப் பின் நிகழ்வுகளுக்கு எல்லாம் தானும் ஒரு காரணமாக இருந்ததற்கு வருத்தம் தெரிவித்தான். இப்

பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கே கங்கையில் நீராடத் தான் அங்கு வந்ததாகத் தெரிவித்தான்.

பாண்டிய நாடு

“செழியன் மறைந்தபின் பாண்டிய நாடு அதன் நிலை யாது?” என்று சேரன் கேட்டான்.

“கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்பான் கொல்லர் ஆயிரவரைக் கண்ணகி கோயில் முன் தலை கொய்து பலியிட்டுக் கொன்று தென்னவன் செய்த குற்றத்திற்கு ஈடு செய்தான். இச்செய்தி ஊர் எங்கும் பரவியது; மெல்ல மெல்ல நாட்டில் அமைதி திரும்பியது. செழியன் அரியாசனம் ஏறினான். நாடு சீர்பெற்றது” என்ற செய்தியை அறிவித்தான்.

அந்தி நேரம் அணுகியது; வானத்தில் பிறை தோன்றி இரவு வருதலைக் காட்டியது; அதன் வண்ண அழகில் அரசன் எண்ணம் செலுத்தினான். அவன் மனம் அமைதி பெற்று இருந்தது. அருகில் இருந்த காலக் கணிதன் ஞாலம் ஆள்வோனை நோக்கி “நாள் கணக்கிட்டுப் பார்த்து இதுவரை வஞ்சியை விட்டு அங்கு வந்து திங்கள் முப்பதும் இரண்டும் ஆயின; இனி நாடு திரும்புதல் தக்கது” என்று ஏடு கூறுவதாகத் தெரிவித்தான். மாளிகை சென்று தனியே ஒய்வு எடுத்தான்.

சோழ நாடு

அதற்குள் சோழ நாட்டின் சேதிகளை அறியச் செங் குட்டுவன் விரும்பினான்; மாடலனை மறுபடியும் அழைத்து வினாவினான். “சோழ மன்னன் கிள்ளிவள வனை எதிர்த்த குறுநில மன்னர் ஒன்பதின்மரை நீ ஒரு காலத்தில் போரிட்டு வென்றாய்; அவர்கள் மறைந்தனர்; அதன்பின் எதிர்ப்புகள் இன்றி நாட்டை எழிலுறச் சோழன் ஆட்சி செய்து வருகிறான்” என்று அரசனுக்கு மாடலன் அறிவித்தான்.

மாடலன் சோழர் தம் முன்னோர்களின் பெருமை யைக் கூறி “அத்தகைய மரபில் வந்தவன் சோழன் கிள்ளிவளவன்; அவன் நாட்டில் எந்தக் குறையும் இல்லை” என்று அறிவித்தான்.

“விண்ணவர் வியக்க எயில் மூன்றினை அறுத்து எறிந்து வெற்றிச் சிறப்புடையவன் சோழன் செம்பியன்; வீரத்துக்கு அவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புறாவின் உயிரைக் காக்கத் தன் உடம்பினை அறுத்துக் கொடுத்துப் பருந்தின் பசியைத் தீர்த்தவன் சிபிச் சோழன்; அவன் அருளுக்கு ஒர் அடையாளமாக விளங்கியவன். வீரமும் அருளும் மிக்க செங்கோல் வேந்தர்கள் ஆண்ட நாடு சோழநாடு; அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை ஆள்பவன் செங்கோல் வழுவுவது இயலாது; அவன் ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது” என்பதை எடுத்துக் கூறினான்.

பொன்னை அளித்துப் பாராட்டு

காவிரி புரக்கும் நாட்டவன் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று முப்புரி நூலோன் எடுத்துக் கூற அவன் மடுத்துக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். நாடுகள் பல திரிந்து நலம் அனைத்தும் நவின்ற அந்தணாளனை மதித்துச் செங் கோல் வேந்தனாகிய சேரன் செங்குட்டுவன் அவனுக்குப் பொன் அளந்து கொடுத்துச் சிறப்புச் செய்தான். தன் எடைக்கு நிகராக ஐம்பது துலாம் நிறையளவு பொன் கட்டிகளை அவனுக்கு அட்டியின்றித் தந்தான். இதனைத் துலாபாரம் புகுதல் என்று கூறினர்.

கனகவிசயரை அனுப்பி வைத்தல்

ஆடகப் பைம்பொன் மாடலனுக்கு அளித்தபின் உடன் வந்து உதவிய ஆரிய மன்னர் நூற்றுவர் கன்னரைத் தம் நாடுகளுக்குச் செல்க என்று விடை தந்து அனுப்பி வைத்தான். அதன்பின் சிறைப் பிடித்து வந்த அரச குமரர்கள், அடிமைப்படுத்தி அழைத்து வந்த பேடியர்கள், தமிழ் மண்ணை இகழ்ந்து பேசிய கனக விசயர் இவர்களை ஆயிரம் படை வீரர்களிடம் ஒப்புவித்து அவர்களைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு அனுப்பினான்.

இருபெரு வேந்தர்க்கும் அவர்களைக் காட்டிவர ஏவிய பின் அன்று அங்கே பாடி வீட்டில் சற்றுத் துயில் கொண்டான்.

இரவு நீங்கியது; காலைக் கதிரவன் தன் கதிர் ஒளியை வீசத் தொடங்கினான். கங்கை நதி தீரத்தில் வயல் வெளி களில் தாமரைகள் மலர்ந்தன; வண்டுகள் யாழ் ஒலி செய்தன; பொழுது விடிந்தது என்பதை அறிந்த அரசன் தன் நாடு நோக்கிப் புறப்பட்டான். குணதிசையில் சூரியன் தோன்றினான். தென்திசை நோக்கிச் சேரன் பயணமா யினான்.

சேரமா தேவி எதிர்பார்ப்பு

இவன் வருகைக்கு ஏங்கி வஞ்சி மாநகரில் சேரன் மாதேவி துயில் இன்றி வருந்திக் கிடந்தாள். அன்னத் தூவி பரப்பிப் படுக்கையின் மேலே கிடந்து அந்தக் கட்டிலின் விதானத்தை வெறிச்சிட்டு நோக்கிக் கொண்டிருந்தாள்; கதிர் செலவு ஒழிந்த கனக மாளிகையில் முத்துகள் பதித்த ஒவியவிதானம், வயிரமணிக் கட்டில், அன்னத் தூவி பரப்பிய மஞ்சம் அதில் துயிலுதல் இழந்து துயருற்றுக் கிடந்த சேரமாதேவியை அருகிருந்த பாங்கியர் ஆற்று வித்தனர்.

“தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக” எனப் பாட்டுடன் இசைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தினர். குற்றேவல் செய்யும் குறுகிய வடிவுபடைத்த கூனியர் களும், குறளர்களும் சென்று “பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; நறுமலர் கூந்தல் நாள் அணிபெறுக” என நற்செய்தி நவின்றனர்.

பாட்டிசைத்தல்

குன்றக் குறவர் இளம் பெண்கள் குறிஞ்சிப்பண் பாடினர். அவர்கள் சேரனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர். இந்த இன்னிசை கேட்டுத் தினை கவர்ந்து உண்ண வந்த யானைகளும் மயங்கி அசைவற்று நின்றுவிட்டன. சேரன் வருகைக்குக் குறுக்கே நிற்காதீர் என்ற கருத்துப்பட நெஞ்சை உருக்கும் பாடல்களை அவ்வஞ்சி இளம் குறத்தியர் பாடி அரசியை மகிழ்வுறச் செய்தனர்.

“வடதிசை சென்றவன் பகைவர்கள் எயில்களை முருக்கி அவற்றை அழித்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். குடவர் கோமான் வெற்றி கேட்டு மகிழ்க; நாளை அவன் பிறந்த நாள் அணிவிழா நடைபெற இருக்கிறது; எருதுகளே, நுகத்தடி பூண்க! உழவுத் தொழில் சிறக்க, பகை அரசர் கால் விலங்குகள் விலகும் நாள் இது; அவன் வெள்ளணி உடுத்து மகிழும் பிறந்த நாள்” என்று உழவர் பாடினர். இது மருதப் பாடலாகத் திகழ்ந்தது; இம் மருதப் பாடலைக் கேட்டு மன்னன் துணைவி மகிழ்வு கொண்டாள்.

குவளைப் பூவையும், முண்டகப் பூவையும் கோவலர்கள் தலைமுடியில் சூடிக் கொண்டனர்; தாமரை மலர்களை அணிந்து கொண்டனர்; தாழையின் கிளைகளில் அமர்ந்து இருந்து இவர்கள் குழலிசை பாடினர்; “வில்லவன் வந்தான். இமயத்திலிருந்து ஆநிரைகளைக் கொண்டு வந்துள்ளான்; அப்பசுக்களோடு நீவிரும் உடன் சென்று நீர்த்துறை படிவீர்” என்ற கருத்து அமைய அவர்கள் முல்லைப் பண்ணைக் குழலிசையில் தந்தனர். இவ் இசையைக் கேட்டுச் சேரன் மனைவி மகிழ்வு அடைந்தாள்.

இவ்வாறே நெய்தல் நிலத்து இளம் பெண்கள் முத்துகளை வைத்துக் கழங்காடிக் கொண்டு சேரனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர்; “சேரன் வந்தான்; நம் இளமுலைகள் அவன் தோள் நலத்தைத் துய்ப்பது ஆகுக" எனவும் பாடினர். அவன் தும்பை சூடி வெற்றியுடன் வந்ததை விளம்பிப் புகழ்ந்தனர். “அவன் சூடிய பனம் பூவையும், தும்பைப் பூவையும், வஞ்சி மாலையையும் பாடுவோமாக!” என்று ஏத்திச் சிறப்பித்தனர். இந்நிலையில் நெய்தல் பண்ணைப் பாடிய நல்லிள நங்கையர் பாடலைக் கேட்டு அரசி மகிழ்வு பெற்றாள்.

அஞ்சொற் கிளவியர் பாடிய நால் நில இசைப் பாடல்களைக் கேட்டு மன்னவன் வருகையை அறிந்து வஞ்சிநாட்டு அரசி உடல் பூரித்தாள். வளையல்கள் செறிவு பெற்றன. வலம்புரிச் சங்குகள் முழங்கின. மாலைகள் வேயப் பெற்ற குடைக்கீழ் சேரன் யானை மீது அமர்ந்து வந்தான். அவனோடு பல யானைகள் வரிசையாகப் பின் தொடர்ந்தன. அரசனை நகர மாந்தர் எதிர் கொண்டு வரவேற்றனர். வஞ்சி மாநகருள் செங்குட்டுவன் வந்து சேர்ந்தான்.