சிலம்பின் கதை/வரந்தரு காதை

30. வரம் தருதல்
(வரந்தரு காதை)

செங்குட்டுவன் வினவுதல்

வடதிசை மன்னர்களை வணங்கச் செய்த சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் தெய்வக் காட்சியைக் கண்டு களி மகிழ்வு கொண்டான். அதன்பின் தேவந்தியை நோக்கி மணிமேகலை பற்றிய செய்திகளைக் கூறுமாறு பணித்தான். அடித்தோழி, “மணிமேகலை துறவு பூண்டாள்” என்ற செய்தியை அவள் அரறறி வாய்விட்டுக் கூறியிருந்தாள்; அதை மனத்தில் கொண்டு சேரன் தேவந்தியை நோக்கி அவள் கூறியதாகவே கொண்டு விளக்கத்தைக் கேட்டான். அதனை அங்குள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் நோக்கமாக இருந்தது.

மணிமேகலை துறவு

தேவந்தி இச்செய்தியைக் கூறலுற்றாள். “மாதவி மனநிலை மாறிவிட்டது; அவள் துறவு நிலையை ஏற்று விட்டாள். அந்த நிலையில் அவள் தன் மகளைப் பற்றி என்ன கருதுகின்றாள் என்பதைத் தெரிந்து கொள்ள அவள் தாய் சித்திராபதி விரும்பினாள். பருவம் அடைந்த மங்கை உருவத்தில் கவர்ச்சி மிக்கவள் ஆயினாள். இளைஞர்கள் அவள் பேரழகில் மயங்கிக் கிடந்தனர். அவளைக் கலை உலகில் காண நாடே எதிர்பார்த்து நின்றது. சித்திராபதி அவளை மேடையில் ஆடவைக்க விரும்பினாள். இந்திர விழாவில் கற்றுத் துறை போகிய அந்நங்கை வந்து ஆடுவாள் என்று எதிர்பார்த்தனர்; நாட்டிய ஆசான் காத்துக் கிடந்தான். மணிமேகல்ையின் அடுத்த நிலை யாது? அவள் கோட்பாடு யாது? என்று சித்திராபதி தொடுத்த வினாவுக்கு அவள் தந்த விடை யாருமே எதிர் பார்க்கவில்லை. தன்மகளை “வருக” என்று அழைத்தாள். 'தருக' என்று கூறி அவள் கூந்தலைக் களைந்தாள். அவளை அழகு குறைந்தவளாக ஆக்கிப் புத்த மடத்தில் சேர்த்தாள். அழகு அவளை விட்டு அகன்றது. கலைவாழ்வு கலைக்கப் பட்டது. இது அவள் நிலை” என்று தேவந்தி கூறி விவரித்தாள்.

“இது நாட்டுக்கே பேரிழப்பு ஆகியது; அரசனும் நகரத்து மக்களும் மாணிக்க மணியைக் கடலில் வீழ்த்தி விட்டவர் போன்று கலக்கம் அடைந்தனர். மாணிக்க ஒளி மங்கிவிட்டது. க்லைச்செல்வத்தை இழந்த நிலையில் நாடே துன்பத்துள் ஆழ்ந்துவிட்டது” என்று மேலும் விளக்கினாள்.

“இளமங்கை அவள் தன் எதிர்காலத்தை இழந்தாள். அது பேரிடி யாகியது. அதனால்தான் அடித்தோழி அரற்றினாள். நானும் வருந்தினேன்” என்று கூறித் தன் நிலையையும் எடுத்து உரைத்தாள்.

தேவந்தி வரலாறு

அவ்வாறு கூறிய பின் தேவந்தி தன்பே உணர்வு முத்து தெய்வம் உற்றவளர்கி ஆவேசம் கொண்டு உரை யாடினாள். அவள் மேல் பாசாண்டச் சாத்தன் குடிகொண்டு அவளை ஆட்டுவித்தான். அவன் தேவந்தி மூலமாக வந்து பேசினான்.

அங்கே குழுமி இருந்தவர்களுள் அரட்டன் செட்டி என்பானின் இரட்டைப் பெண்கள் இருவரைச் சுட்டிக் காட்டினாள்; மற்றும் ஆடக மாடத்தில் அறிதுயில் அமர்ந்த திருமாலின் திருக்கோயில் அர்ச்சகன் மகள் ஒருத்தி இருந் தாள். அவளையும் தேவந்தி சுட்டிக்காட்டி இவர்கள் மீது மாடலன் கைக் கமண்டத்தில் உள்ள சுனை நீரைத் தெளித்தால் அவர்கள் தம் பண்டைப் பிறப்பு மன நிலையைப் பெறுவர் என்று அறிவித்தாள்.

அந்தச் சுனைநீர் பாசாண்டச் சாத்தன் மாடலனுக்குத் தந்திருந்தான். மங்கலா தேவியின் கோயில் அருகில் மலை உச்சியில் ஒரு சுனை உள்ளது. அதில் நீராடுவோர் பண்டைப் பிறப்பு அறிகுவர். அந்தச் சுனை நீரை மாடல மறையவனுக்குத் தந்திருந்தான். அதனை அவன் தன் கமண்டலத்தில் வைத்திருந்தான். அதனைச் சுட்டிக் காட்டி இம்மூவர் மீதும் தெளிக்குமாறு தெய்வ முற்றிருந்த தேவந்தி கூறினாள். அவள் மீது பாசாண்டச் சாத்தன் இருந்து இவ்வாறு கூற அதனை ஏற்று மாடலன் தன் கமண்டல நீரை அம்மூவர் மீதும் தெளித்தான்.

அரசனுக்கு இச்செய்தி வியப்பு அளித்தது. அவனுக்கு விளக்கம் தர மாடலன் தேவந்தியின் வரலாற்றைக் கூறினான். “மாலதி என்பவள் தன் மாற்றாள் குழவிக்குப் பால்தர அது விக்கி இறக்கச் சாத்தன் கோயில் முன் சென்று பாடு கிடப்ப அத்தெய்வச் சாத்தன் அருள் செய்தான்.”

“பாசாண்டச் சாத்தன் ஒரு குழந்தை வடிவாக அத் தாயின் முன் சென்று தவழ, அவள் அதை எடுத்துக்கொண்டு போய்ச் சேர்க்க அவன் வளர்ந்து பின் தேவந்தியை மணந்தான். எட்டு ஆண்டுகள் அவளோடு இருந்து வாழ்க்கை நடத்திய பின் தன் தெய்வ உருவை அவளுக்குக் காட்டிக் கோயிலுள் சென்று மறைந்துவிட்டான்.”

“அந்தச் சாத்தன்தான் மாடலனிடம் மங்கலாதேவி கோயிலின் முன் சென்று இருந்தபோது அந்தண வடிவத்தில் வந்து இந்த நீர்க் கமண்டலத்தைத் தந்து சென்றான்” என்ற செய்தியை விளக்கினான். அந்த நீரின் இயல்பையும் விளக்கிக் கூறிச் சென்றதாகவும் கூறினான். “அவன்தான் இன்று இந்தப் பார்ப்பணியாகிய தேவந்திமேல் தோன்றி இச்செய்தியைக் கூறினான்” என்று மேலும் விளக்கினான்.

பழம் பிறப்பு அறிவித்தல்

நீரைத் தெளித்துக் காண்போம் என்று தெரிவித்து விட்டு அந்த மூன்று பெண்களின் மீதும் கரகத்தில் இருந்த சுனை நீரை மாடலன் தெளித்தான்.

பழம் பிறப்பு உணர்வு பெற்ற அரட்டன் செட்டி மகளிருள் ஒருத்தி கண்ணகியின் தாயாக இருந்து தன்துயரை வெளிப்படுத்தினாள். காதலன் தன்னொடும் சென்று கடுந்துயர் உழந்ததற்கு வருத்தம் தெரிவித்தாள். அடுத்தவள் கோவலனின் தாய் நிலையில் இருந்து தன் துயரை வெளிப்படுத்தினாள். “இலங்கிழை நங்கை தன்னோடு இடையிருளில் தனித்துயர் உழந்து சென்றாய், அதனை நினைத்துப் புலம்புகின்றேன்; என் மகனே வருக!” என்று அழுது புலம்பினாள்.

மாதரி கோயில் அர்ச்சகரின் மகளாகப் பிறந்திருந்தாள். அவள் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள். “வைகை நதியில் நீராடச் சென்றிருந்தேன்; வந்து விசாரித்தேன்; வீட்டில் உன்னைக் காணேன் எங்கு ஒளித்தாய்? அருமை ஐயா! இளையவனே! நீ எங்கே?” என்று கூறி வாய்விட்டு அழுதாள். இளம் சிறுமிகள் முதியவர்களைப் போல் கதறி அழுதது வியப்பைத் தந்தது; அங்கிருந்தவரைக் கலங்கச் செய்தது. இருவர் செட்டி மகளிர் ஆயினர். ஒருத்தி மட்டும் அந்தணன் செல்வியாயினள்; இது ஏன் என்ற ஐயம் அரசனுக்குத் தோன்றியது; அங்கு இருந்த ஏனையவர்க்கும் அது புதிராக இருந்தது.

மாடலன் அதற்குக் காரணமும் விளக்கமும் தந்தான். “கண்ணகி தாயும், கோவலன் தாயும் எந்தத் தனி அறமும் சிறப்பாகச் செய்திலர்; மாதரி தெய்வ வழிபாடு கொண்டவள்; கண்ணனை வழிபட்டாள். கோயில் பூசை களைத் தொடர்ந்து செய்து வந்தாள். அதனால் அவள் உயர் வகுப்பில் பிறந்தாள்” என்று கூறி விளக்கினான். கோயில் அர்ச்சக சாதியில் மாதரி பிறந்தது அவள் செய்த நற்கருமமே என்று விளக்கினான். தாயர் இருவரும் பாசத்தால் பிணிப் புண்டனர். ஆதலின் கண்ணகிக்குக் கோயில் எழுப்பிக்கும் சேர நாட்டில் இவ் இருவரும் வந்து பிறந்தனர்; அதே பாசம்தான் மாதரியும் கோயில் அர்ச்சகன் மகளாகப் பிறந்து அந்த ஊருக்கு வரக் காரணம் ஆகியது; எனினும் அவள் நற்செய்கை செய்தவள் ஆதலின் உயர்குடியில் பிறந்தாள் என்று விளக்கம் கூறினான். அதனால் ஒர் அற உண்மையை அறிவிக்க முற்பட்டான். “நற்செய்கைகளைச் செய்பவர் பொன்னுலகை அடைவர்; பற்றுக் கொண்டவர் அப்பற்றுகளின்படி அவர்கள் வாழ்க்கை அமையும்; நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நன்மைகளும் தீமைகளும் அடைவர். பிறப்புகள் மாறி மாறி வரும். இது உலகநெறி” என்று அறவிளக்கம் அறிவித்தான்.

“செங்குட்டுவன் சிவன் அருளால் மன்னவனாகப் பிறந்தவன், அறம் செழிக்க ஆட்சி செய்தவன்; அதனால் அவன் உயர் நிலைகளைப் பெறுகிறான்; இனியும் பெறுவான்” என்று வாழ்த்துக் கூறினான்.

தெய்வ வாக்கு

அதன்பின் கோயில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கச் சேரன் செங்குட்டுவன் வழிவகைகளை வகுத்துத் தந்தான்; “பூவும், புனைவும், நறுமணப் புகை ஊட்டுதலும் செய்க” என்று தேவந்தியை நியமித்தான். கோயிலை மும்முறை வலம் வந்து வணங்கி வழிபாடு செய்து பிற செயல்களில் மனம் செலுத்தினான்.

சிறையிலிருந்து விடுபட்ட ஆரிய அரசர்கள் ஆகிய கனக விசயரும், ஏனைய சிறைக் கைதிகளும் வந்திருந்து தெய்வ வழிபாடு செய்தனர். கண்ணகித் தெய்வத்தை வணங்கித் தெய்வ அருள் பெற்றவராகி அவரவர்தம் நாடும் நகரும் போய்ச் சேர்ந்தனர்.

இந்த விழாவுக்கு ஏனைய அரசர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் குடகு நாட்டுக் கொங்கர், மாளுவ அரசர், இலங்கை அரசன் கயவாகு ஆவர். அவர்கள் கண்ணகித் தெய்வத்தைத் தம் நாட்டில் இமய வரம்பன் ஆகிய செங்குட்டுவன் நடத்தும் வழிபாட்டு விழாக்களில் வந்து இருந்து அருள் செய்தது போலத் தம் நாட்டில் நடத்த இருக்கும் விழாக்களிலும் வந்திருந்து அருள் செய்யுமாறு தெய்வத்தை வேண்டினர். “தந்தேன் வரம்” என்று வான்குரல் ஒன்று எழுந்தது; கண்ணகியின் வாக்கை அவர்களைக் கேட்க வைத்தது.

இக்குரல் ஒலியைக் கேட்ட சேர அரசனும், ஏனைய அரசர்களும் தத்தம் படைத்திரளோடு இருந்து கண்ணகித் தெய்வத்தை ஏத்தி வழிபட்டு மன நிறைவோடு தெய்வ விடு கண்டவர் போல் விம்மிதம் எய்தினர். அரசர்கள் சேரனை அரசனை வணங்கிப் போற்றினர்.

சேரனும் முன் மாடலன் தெரிவித்தபடி அவனுடன் சேர்ந்து வேள்விச் சாலை நோக்கிச் சென்றான்; வேள்வி முடித்து அதன் பயனைக் காண்பது என்பது அவன் குறிக் கோள் ஆகியது.

இளங்கோவடிகள் வரலாறு

இதனை அடுத்து இளங்கோவடிகளும் பத்தினிக் கடவுள் முன் சென்று நின்றார். அவர் எதிரே தேவந்தி மேல் கண்ணகி வந்து பேசினாள். கண்ணகி இளங்கோவின் இளமை வரலாற்றை எடுத்து இயம்பினாள்.

வஞ்சி முதுாரில் அரச மண்டபத்திடை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் வீற்றிருக்க அங்கு அவன் தாள் நிழலில் இளங்கோ இருந்தார். அவரைப் பார்த்து அங்கிருந்த நிமித்திகன் ஒருவன், “அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு உனக்கு” என்று விளம்ப அவனைக் கோபித்து நோக்கினார் இளங்கோ. செங்குட்டுவன் முத்தவன். ஆட்சி அவனுக்குத் தான் வரவேண்டும். அதற்கு மாறாக அவன் கூறிவிட்டான். அவன் கூற்றைப் பொய்யாக்குவதற்காக வும், சேரனின் சோர்வைப் போக்குவதற்காகவும் துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் மற்றவர்கள் எண்ணிப் பார்க்க இயலாத அளவற்ற பேரின்ப நிலை அடையும் பாதையில் சென்றுவிட்டார். சிந்தை செல்லாச் சேண் நெடுந்துரத்து அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தன் ஆகிவிட்டதாகக் கூறினாள்; நாட்டுக்கு அரசனாக ஆகாமல் பாட்டுக்கு வேந்தனாக மாறினார். உலகு ஆள் கவி வேந்தனாக ஆயினார். இந்தச் செய்தியையும் அந்தக் கடவுள்பத்தினி எடுத்து உரைக்கக் கண்ணகி கதை முடிவு பெறுகிறது.

அறவுரைகள்

இந்தக் கதையைக் கேட்டவர்கள் அறவழியில் வாழ்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இளங் கோவடிகள் காப்பியத்தை முடிக்கிறார். அந்த நீதிகள் பின் வருமாறு :

“இடுக்கண் வருங்கால் நடுக்கம் அடையாதீர்;
தெய்வத்தைப் போற்றுவிர்; ஞானிகளை மதிப்பீர்;
பொய்பேசுவதைத் தவிர்ப்பீர்; புறம் கூறுதல் ஒழிப்பீர்;
ஊன் உணவு ஒழிப்பீர்; உயிர்க் கொலை செய்யற்க;
தானம்பல செய்க; தவம்பல ஏற்க;
செய்ந் நன்றி மறவாதீர்; தீயார் நட்பு இகழ்க;
பொய்ச்சான்று கூறாதீர்; மெய்ம்மை விட்டு அகலாதீர்;
அறவோரை அணுகுக; பிறவோரை விலக்குக;
பிறன் மனைவியை நயக்காதீர்; உயிர்களுக்கு ஊறு செய்யாதீர்;
இல்லற வாழ்வு இனியது; ஒழுக்கம் ஒம்புக;
கள், காமம், பொய், பயனற்ற சொற்கள்
இவை தீமை பயக்கும்; இவற்றை நீக்கி வாழ்க;
இளமையும், யாக்கையும், செல்வமும் நில்லா;
உள்ள நாட்களில் உறுதிகளைத் தேடுக;
இதுவே வீட்டு நெறி; பயனுள்ள வாழ்க்கை”

“இந்த அறநெறிகளைப் போற்றிக் காத்து உயர்வு அடைவீராக” என்று வாழ்த்துக் கூறி இளங்கோவடிகள் காவியத்தை முடிக்கின்றார். “இக்காவியம் தரும் உயர் அறங்கள் இவை எனக் கொள்க! நலம் பெறுக” என்ற வாழ்த்தோடு இக்காவியம் முடிவு பெறுகிறது.