சேதுபதி மன்னர் வரலாறு/iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி

III விஜயரகுநாத இராமசாமி சேதுபதி
(கி.பி. 1814-30)

இராமநாதபுரம் ஜமீன்தார் ஆட்சியில் மூன்றாவது ஜமீன்தாராகப் பொறுப்பேற்றவர் அண்ணாசாமி சேதுபதியின் சுவீகாரப் புத்திரனான இராமசாமித் தேவர் என்பவர். இவரது ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் சமஸ்தானம் நடுவர் மன்ற நிர்வாகத்தில் இருந்தது. தொடர்ந்து 14 ஆண்டுகள் நீடித்த வாரிசு உரிமை வழக்கின் காரணமாக இராமநாதபுரம் சமஸ்தானம் முதன் முறையாக அதுவரை இல்லாத அளவிற்கு வறுமையில் இருந்து வந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் இருந்து மாதந்தோறும் அவர் பெற்று வந்த பராமரிப்புத் தொகையான ரூபாய் 100 எந்த வகையிலும் பொருத்தமற்றதாக இல்லை. யானையின் பசிக்கு கடலைப் பொரி ஈடாகாதல்லவா! பல தனவந்தர்களிடம் இவர் கடன் பெற்று வாழ்க்கை நடத்தியதில் ரூ. 96,000 வரையான கடனுக்குக் கடன்காரர்கள் அவர் மீது வழக்கு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே இவர் இராமநாதபுரம் சமஸ்தானத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்னொரு புறம் இதற்கிடையில் அவர் மரணமடைவதற்கு முன்னால் தமது மனைவி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரர் இராமசாமித் தேவரைத் தமது வாரிசாக நியமித்திருந்தார். இவருக்கு மங்களேஸ்வரி நாச்சியார், துரைராஜ நாச்சியார் என்ற இரு பெண் மக்கள் இருந்தனர். இவர் கி.பி. 1830-ல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான முத்து வீராயி நாச்சியாரைத் தமது வாரிசாக நியமித்தார். மைனர்களாக இருந்த அந்த இரண்டு பெண்களுக்குக் கார்டியனாகத் தனது தம்பி முத்துச்செல்லத் தேவரையும் நியமனம் செய்திருந்தார். இந்தச் சாசனத்தில் இராமநாதபுரம் ஜமீன்தாரியில், நிர்வாகப் பொறுப்பாளரான செய்யது இஸ்மாயில் சாகிப் என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.