தமிழவேள் திருஅம்மானை

தமிழவேள் திருஅம்மானை தொகு

ஆசிரியர்: முல்லைவாணன் தொகு

ஆரூரன் அங்கழலே பாடுதுங்காண்!
சீரூரூஞ் செந்தமிழின் சீர்த்தி வளங்குநிலைத்
தேரூரும் பேரூரில் மூவறுநூ றும்மூன்றில்
ஏரூரும் ஐந்திங்கள் ஈரைந்தோர் நாளின்கண்
காரூரும் வானக் கதிரெனவே தான்தோன்றி
ஊரூரும் மக்கள் உவக்கப் பணிபுரிந்த
ஆரூரன் அங்கழலே பாடுதுங்காண் அம்மானாய் (1)--


காவிரி நீங்கிச் சிங்கைநகர் சேர்ந்தான்
கங்குலாம் மாலைக் கலைநிலவு போற்றமிழிற்
தங்குலாக் கொள்ளும் தகவால்ஈ ரைம்வகுப்புப்
பொங்குபுக ழாற்குப் பொலியகலை மூவேழில்
செங்குமுதப் பூச்சிங்கைச் சீராள் தமிழணிய
கொங்கலரும் காவிரியாள் கொஞ்சும் துறைநீங்கிச்
சிங்கைநகர் சேர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (2)


3.தமிழர் ஒற்றுமைக் குரலுயர்த்திய உத்தமன்
கணக்காய ராய்நின்று கன்னித்தமிழ்மாந்தர்
பிணக்காய மாக்கள்போல் பேணா தொழியொருமை
குணக்கேடா மென்று குரலுயர்த்தி ஒற்றுமைப்பண்
உணர்ந்தேற்கச் செய்தும் உவந்துளஞ்சீர் உற்றுநலம்
இணர்க்காயாய்ப் பெற்றிடவே ஏற்றங்கொள் பெற்றிமிகு
மணக்காவைத் தாங்குசிங்கை பாடுதுங்காண் அம்மானாய் (3)


4. தமிழர் முன்னேற்றம் கொள்ள முனைந்தவன்
பின்னேற்றம் தன்னில் பெருவிருப்பு கொண்டஇனம்
முன்னேற்றங் கொள்ள முனைந்ததினால் "முன்னேற்றம்"
மின்னேற்ற மாக மிளிர்ந்தது "சீர்திருத்தம்"
தன்னேற்றங் கொள்ளத் "தமிழர்சீர் திருத்தமன்றம்"
"என்னேற்றம்" என்றே எல்லவரும் சேர்ந்திணைந்தார்
பொன்னேற்ற வாழ்வினனைப் பாடுதுங்காண் அம்மானாய் (4)


5.முரசறைந்த மூலவன்
அரசறைந்த செந்தமிழ்த்தாய் ஆற்றல் புரந்திருக்கும்
முரசறைந்த நற்பெருமை மூலவனாய் நின்றிலங்கித்
திருவுறையும் நூலகமும் தேர்ந்தளித்துச் செந்தமிழில்
உருவரையும் ஏட்டாளர் பேரவையைத் தாம்தொடங்கிக்
கருவுறையும் ஆற்றல் கலைவளர்த்து வாழ்வித்த
பெருவரையாம் சீர்தலைமை பாடுதுங்காண் அம்மானாய் (5)


6.தமிழிசை சீர்பெருகத் தாழாது உழைத்தவன்
உமிழிசையை ஊர்பரவ உண்மை நலங்குவிக்கும்
தமிழிசையின் சீர்பெருகத் தாழா துழைத்திருந்தும்
"அ.ம.த.க."த் தொண்டும் அதன்மாநாட் டுச்செயலும்
நமதினத்தை இந்நாளும் நட்பாகக் காத்திருக்கும்
கமழ்"சேவி கா"ப்புரந்தான் பாடுதுங்காண் அம்மானாய் (6)

(இப்பாடலில் ஓர் அடி விடுபட்டுள்ளது)


7.ஒப்பரிய தொண்டுக்கு ஒரு தேசதூதன்
நிப்பானியர் காலம் நீளடிமை இந்தியத்தைத்
தப்பாமற் காக்கத் தலைமைப் பரந்துரைசெய்
செப்பரிய ஆக்கச் செயல்"விடுத லைக்கழகம்"
முப்பொழுதும் செய்தபணி மூட்டும் உரிமையனல்
ஒப்பரிய தொண்டிற் கொரு"தேசத் தூதனு"டன்
தப்பறியா வாழ்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் (7)


8.திருவள்ளுவர் பாவேந்தர் விழா
சீர்மலைய நாடு விடுதலையைச் சேராமுன்
நார்மலிந்த தார்போல் நலிந்தகல்விக் கொள்கையினை
ஊர்பொலியச் செய்த வயவர்துரை சிங்கப்பல்
கூர்ஒடியச் செய்து"குறள்பாவேந் தர்விழா"வில்
தார்மலிந்த நல்மணம்போல் தண்டமிழ்பே சச்செய்த
ஆர்வலிந்த ஆரூரன் பாடுதுங்காண் அம்மானாய் (8)


9.மணிமன்றம் கண்டவன்
அணிதமிழ்க்குத் தொண்டுசெய அச்சகங்கள் தாம்கண்டு
பணிவலிக்கு மாறுதமிழ்ப் பண்பாடு தானோம்பி
"மணி"யொலிக்கும் தார்கண்டு மற்றவரை ஊக்குவித்துத்
துணிவெளுக்கும் போக்கில் துயரறுத்துச் செந்தமிழே
பிணிநலிக்கும் மாமருந்தாய்ப் பேணிவிட அவ்வினமும்
துணிந்திருக்கும் வாழுமென்றான் பாடுதுங்காண் அம்மானாய் (9)


10.குறள்வழி நடந்தவன்
ஓடுங் குருதியொன்று உட்கலந்த ஆவியொன்று
பாடும் தமிழென்னும் பாதையுண்டு காலத்தால்
நாடும் வழிபலவே நாம்கொண்டோ மென்றாலும்
கேடின்றி நாம்வாழக் கேளிரென நாம்ஒன்ற
பீடொன்றே செய்த பெரும்புலவன் செந்தமிழைக்
கேடொன்றே கொண்டானைப் பாடுதுங்காண் அம்மானாய் (10)


11.இந்து திருமணச்சட்டத் திருத்தம்
'ஐயையோ ராமசாமி' என்னுமலாய்ப் பாத்தட்டு
மெய்யாகச் செந்தமிழர் மேன்மை குடித்துவிட்டுத்
'தைதைபோ டுதல்'என்னும் தாங்கொணாத் தன்மையினைப்
பொய்பொய்என் றேயுடைப்பி்ல் போடச்செய்தும் நல்மணங்கள்
கைந்நெகிழாப் போக்கில் கலந்ததீத் திட்டங்கள்
மெய்நலியச் செய்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (11)


12.மொழியால் இனஒருமை, முன்னேற்றம் கண்டவன்
மொழியால் இனஒருமை முன்னேற்றம் ஆம்என்னும்
வழியால் நிலப்பெருமை வாய்க்கும் தொழில்வளங்கள்
விழிபோல் விளங்குமென வீறார்ந்தும் சட்டமன்றில்
பழிபோல் தனிஇருக்கை பார்த்திட்டார் கொள்கைத்தீக்
கழிவே எனத்தடு்த்தும் கன்னல் தமிழ்த்தொண்டே
பழியாய்க் கிடந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (12)


13. தமிழர் திருநாள் தழைக்கக் கண்டவன்
தமிழே யுயிராகத் தாங்கோண்ட கொள்கைவழி
அமிழா துயர்ந்திருந்தும் ஆராத ஒற்றுமையால்
உமிபோ லிருந்தார் ஒருங்கிணையக் கண்டுவந்த
தமிழர்திரு நாளில் தழைத்த ஒருமைவளம்
கமழும் நெறிகளினைக் கட்டுவித்த நல்லறிஞர்
குமிழ உழைத்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (13)


14.செந்தமிழே பல்கலைக்கழகத்தில் வரவேண்டிப் போராடிய பெருந்தகை
உழைப்பிற் குரியாரை உட்சுரண்டும் போக்கொழித்தும்
அழைப்புக்கும் வேண்டா அயன்மொழியுள் இந்தியினை
நுழைப்பிற்கு உருதுமொழி நூற்பிற்குச் சாவடத்தை
எழுப்பற்கு முன்வந்தார் என்பொடித்துச் செந்தமிழே
தழைப்பிற்குப் பல்கலையில் தக்கஇடம் பெற்றுவந்த
விழைவுக் குரியானைப் பாடுதுங்காண் அம்மானாய் (14)


15.தமிழ்த்துறைக்கு வடமொழி நூல்கள் பரிசளித்த இந்தியஅரசு
முந்திவந்த செந்தமிழின் முன்னேற்றம் எண்ணாமல்
மந்திமொழி கொண்டுவப்பார் மாண்டமொழி நூ்ல்களதாய்த்
தந்ததொரு ஆயிரத்தைத் தட்டி எறிந்துவிட்டுச்
சொந்தமொழி மேன்மை சுடரும்பத் தாயிரநூல்
தந்து கலைக்கழகத் தன்மைச் சிறப்புயர்த்திச்
செந்தேனாய் நின்றானைப் பாடுதுங்காண் அம்மானாய் (15)


16.மாணவர்க்கு உதவித்தொகை
பல்கலை மன்றில் பதினொருமாண் பாளர்தாம்
எல்கலை யாய்உதவி ஏற்றுவக்கச் செய்திருந்தும்
தொல்நிலை தூய்தமிழின் தூய்மைகெட அம்மாமி
சொல்நிலை வேண்டாவென் சொல்லார்ந்தும் இந்நாட்டு
நல்நிலை வேண்டியிங்கு நாளும் நிலைத்திருக்கச்
சொல்கலை வாணன்தனைப் பாடுதுங்காண் அம்மானாய் (16)


17.உமறு புலவர் உயர்நிலைப்பள்ளி
இனஇழுக்கைக் கண்டித்தும் எந்நாளும் நற்றிருநாள்
மனவழுக்கல் இன்றிக்கொள் மாண்புரைத்தும் நாட்டுநலன்
முனைமழுங்கா மல்விளங்க முன்னுரைத்தும் நாட்டுரிமை
தனைஅழுங்கா மற்கொள்ளத் தாமுழைத்தும் நற்கல்வி
தினையளவு வித்தி உமறுகலை தாம்கண்டு
பனையளவு நின்றானைப் பாடுதுங்காண் அம்மானாய் (17)


18.மணிவிழாச் செலவைக் கல்வி உதவித்தொகைக்குக் கொடு்க்கவேண்டுதல்


அறுபானாட் டைவிழாவின் ஆக்கச் செலவினையே
உறுபான்மைக் கல்வி உதவித்தொகை யாய்வழங்க
செறுஏணி கொண்டானும் செப்பிய ஒப்பில்சொல்
மறுவிலா வானமதிய மாண்பொக்கும் தன்பெயரான்
மறுகொன்றிங் கேக்கமற மாட்சிசெயு மாவரசும்?
நறுகொன்றைச் சூடுவனைப் பாடுதுங்காண் அம்மானாய் (18)


19.தமிழினத்தின் ஊன் உயிராய் விளங்கிய உத்தமன்


தான்தமிழன் என்றுசொலத் தானும் தமிழ்வேண்டும்
தேன்தமிழர் ஒன்றாயின் தேயம் நமக்காகும்
வான்மழைபோல் இக்கருத்தை வாரி வழங்கியவன்
ஊன்உயிராய் நம்மினத்தின் ஊடே விளங்கியவன்
சான்றுமிக்க தொண்டன் நமைப்பிரிந்த நாளெண்ணி
தோன்றுபுக ழாளன்தனைப் பாடுதுங்காண் அம்மானாய் (19)


20.இன்றுவரை எந்தமிழைக் காத்த ஏந்தலவன்!
இன்றுவரை அன்னவனால் எநதமிழைக் காத்திருந்தோம்
என்றுவரை இந்தநிலை என்ற்ற் குறுதியிலோம்
மன்றுவரை சென்றதமிழ் மாணப் பெருமைகொள்ள
நின்றவரை போல நிலைகொண்டான் போற்றிசெய்தோம்
குன்றுயர்ந்த பேரொளியாய் நின்றுபகை தீய்த்தானை
வென்றுயர்ந்த செந்தமிழால் பாடுதுங்காண் அம்மானாய் (20)


சிங்கைக் கவிஞர் முல்லைவாணன் அவர்கள், தமிழவேள் மேற்பாடிய தமிழவேள் திருஅம்மானை முற்றியது
தமிழவேள் திருத்தசாங்கம்
தமிழவேள்
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழவேள்_திருஅம்மானை&oldid=1526467" இலிருந்து மீள்விக்கப்பட்டது