தமிழியக்கம்/பெருஞ்செல்வர்


௨௩. பெருஞ்செல்வர்

கோயில்பல கட்டுகின்றீர்
    குளங்கள்பல வெட்டுகின்றீர் !
        கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல்
    மாடுரிஞ்ச நெடுந்தறிகள்
        வாய்ப்பச் செய்தீர்
தாயினும்பன் மடங்கான
    அன்போடு மக்கள்நலம்
        தாவு கின்றீர்
ஆயினும்நம் தமிழ்நாட்டில்
    செயத்தக்க தின்னதென
        அறிகி லீரே. 11

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
    தானுயரும் அறிவுயரும்
        அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
    ஒருநாடும் தன்மொழியில்
        தாழ்ந்தால் வீழும்
தமிழுக்குப் பொருள்கொடுங்கள்
    தமிழறிஞர் கழகங்கள்
        நிறுவி டுங்கள்,
தமிழ்ப்பள்ளிக் கல்லூரி
    தமிழ்ஏடு பலப்பலவும்
        நிலைப்பச் செய்வீர்! 112

நேர்மையின்றிப் பிறர்பொருளில்
    தம்பெயரால் கல்லூரி
        நிறுவிப் பெண்ணைச்
சீர்கெடுத்தும் மறைவழியாய்ச்
    செல்வத்தை மிகவளைத்தும்
        குடிகெ டுத்தும்
பார்அறியத் தாம்அடைந்த
    பழியனைத்தும் மறைவதற்குப்
        பார்ப்பான் காலில்
வேர் அறுந்த நெடுமரம்போல்
    வீழ்ந்தும் அவன் விட்டதுவே
        வழியாம் என்றும் 113

அறத்துக்கு நிறுவியதை
    வருவாய்க்கென் றாக்குவதில்
        அறிவு பெற்ற
மறப்பார்ப்பான் செந்தமிழ்
    மாணவரைக் கெடுத்தாலும்
        எதற்குமே வாய்
திறக்காமல் தாமிருந்தும்
    செந்தமிழ்க்குப் பாடுபடல்
        போல் நடித்தும்
சிறப்பார்போல் இல்லாது
    செந்தமிழ்க்கு மெய்யுளத்தால்
        செல்வம் ஈக. 114

சிங்கங்கள் வாழ்காட்டில்
    சிறுநரிநாய் குரங்கெண்கு
        சிறுத்தை யாவும்
தங்கிநெடுங் கூச்சலிடும்
    தன்மைபோல் தமிழ்நாட்டில்
        தமிழே யன்றி
அங்கங்கே அவரவர்கள்
    தம் மொழிக்கும் பிறமொழிக்கும்
        ஆக்கம் தேடி
மங்காத செந்தமிழை
    மங்கும் வகை செய்வதற்கு
        வழக்கும் சொல்வார். 115