தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/சங்கம் மருவிய காலம்

3. சங்கம் மருவிய காலம்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு மேல்கணக்கு நூல்கள் எனப்படும். தாலடி முதலாகக் கைந்நிலை ஈறாகப் பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு எனப்படும். சங்க காலம் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலமாகும். அதனை அடுத்துத் தோன்றிய இலக்கியங்கள் புதியதொரு மரபினைக் கொண்டுள்ளன. அவ்விலக்கியங்களைச் சங்கம் மருவிய நூல்கள் என்பர். நீதி நூல்கள் சிலவும். அகப்பொருள் புறப்பொருள் பற்றிய நூல்கள் சிலவும், இக்காலத்தில் தோன்றின. இவையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி கால் கொண்டது. அக்காலத்தில் சங்க இலக்கியம் போன்ற குறிக்கோள் இலக்கியங்கள் வளரவில்லை. பெரும்பாலும் நீதி நூல்களே எழுந்தன. வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, மருட்பா என்னும் பா வகையால் 50 முதல் 500 அடி வரையுள்ள செய்யுள்களை மேல் கணக்கு என்பர்.

கணக்கென்பது இலக்கியம். என்னும் பொருளது; அறம், பொருள், இன்பம் எனும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத செய்யுள்களால் அடுக்கிச் சொல்லுதல் கீழ்க்கணக்காகும், இவை பெரும்பாலும் வெண்பா வகையினவே.

அடிநிமிர் பில்லாச் செய்யுள தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்.

பன்னிருபடலம்

1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இனியவை நாற்பது, 4. இன்னா நாற்பது, 5. கார் நாற்பது, 9. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது. 10. திணைமாலை நூற்றைம்பது 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக்காஞ்சி, 17. ஏலாதி. 18. கைந்நிலை என்பன கீழ்க்கணக்கு நூல்களாகும்.

1. நாலடியார்

இது நான்கு அடிகளைக் கொண்ட நூல் என்ற பொருளில் நாலடியார் என வழங்குகிறது; சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். தொகுத்தவர் பதுமனார், பாடல்கள் வெண்பா யாப்பால் அமைந்தவை. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பகுப்புகள் இந்நூலில் உள்ளன.

'நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி'
'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்'

போன்ற தொடர்கள் நாலடியாரின் சிறப்பினைக் கூறுவன' ஜி.யு. போப் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இளமை நிலையாமையை முற்றியிருந்த கனியொழியத் தீவளியால், நற்காய் உதிர்தலும் உண்டு' எனவும், செல்வத்தைச் 'சகடக்கால்போல வரும்' எனவும், கல்லாதவர் ஆரவாரம் செய்தலை வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி' எனவும். நெல்லுக்கு உமியுண்டு; நீருக்கு நுரையுண்டு; புல்லிதழ் பூவிற்கும். உண்டு, அதனால், நண்பர் குறையைப் பொறுத்தல் வேண்டும்' எனவும் நாலடியார் கூறுகிறது.

முத்திரையர் என்னும் குறுநில மன்னரைப் பற்றிய குறிப்பு இதன்கண் வருவதால் இந்நூல் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

2. நான்மணிக்கடிகை

இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்; இது 104 பாடல்களைக் கொண்ட அறநூலாகும். ஒவ்வொரு பாடலும் நன்னான்கு மணியான கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றது. நல்லவர் பிறக்கும் குடி இதுவென்று அறிய முடியாது என்பதனைப் பின்வரும் பாடல் அழகாக விளக்குகிறது.

‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான்வயிற்றில்
ஒள்ளரி தாரம். பிறக்கும்; பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்
நல்லாள் பிறக்கும் குடி'

3. இனியவை நாற்பது

இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார். கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்களை இது கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் இனியவற்றையே' விதந் தோதுவதால் இஃது இனியவை நாற்பது எனப்பட்டது. இளமையை மூப்பென்று கருதிக் கடமையை உடன் ஆற்றல் இனிது, சுற்றத்தார் அச்சமில்லாது வாழ்தலுக்கு உதவுதல் இனிது; அழகிய விலை மகளிரை நஞ்சென்று ஒதுக்குதல் இனிது' என இது கூறுகிறது.

'இளமையை மூப்பென்று உணர் தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சமின்மை கேட்டல் இனிதே;
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்றுணர்தல் இனிது.

4. இன்னா நாற்பது

இது கடவுள் வாழ்த்தோடு 41 வெண்பாக்களைக் கொண்டது; பாடியவர் கபிலர். இன்னாமை பயப்பன இவை எனக் கூறலின் இஃது இப்பெயர் பெற்றது; துன்பத்திற்குக் காரணமாகியவற்றைத் தொகுத்துரைப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

பார்ப்பார் வீட்டில் கோழியும் நாயும் புகுவதும், மனைவி அடங்காதிருப்பதும், கரையில்லாத புடவை உடுத்துவதும், உலகைக் காப்பாற்றாத வேந்தனும் இன்னாதவையாம்.

'பார்ப்பாரில் கோழியும் நாயும் புகலின்னா;
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா;
பாத்தில் புடவை யுடையின்னா;
ஆங்கின்னா காப்பாற்றா வேந்தன் உலகு .

5. கார் நாற்பது

இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணனார். காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு. இது முல்லைத் திணையைச் சார்ந்த அகப்பொருள் பற்றியதாகும். கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் அதன்படி வாராமையால் தலைவி வருந்தும் வருத்தத்தை இந்நூல் நன்கு விளக்குகிறது.

சென்ற நங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசின் இரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு

கார்ப் பருவத்தைச் சிறப்பித்துக் கூறுவதால் இது கார்நாற்பது எனப் பெயர் பெற்றது.

6. களவழி நாற்பது

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் போர்பற்றிய புறப்பொருள் நூல் இஃதொன்றே யாகும். இதன் ஆசிரியர் பொய்கையார் சங்க காலத்தவர். சோழன் செங்கணான் கழுமலம் என்னுமிடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு மாறுபட்டுப் போர் புரிந்து வெற்றியடைந்தான். சோழனின் வெற்றியைப் புகழ்ந்து பாடிப்பொய்கையார் சேரனைச் சிறையினின்றும் மீட்க முனைந்தார். அதற்குள் சேரன், சிறையில் தண்ணீர் பெறாது தடுமாறிப் பின்பெற்று, மானம் கருதி அதனை நிலத்தில் உகுத்து உயிர் நீத்தாள். சோழனது கழுமல வெற்றியை இந்நூல் விரிவாகப் பாராட்டுகிறது. இதன் நாற்பது வெண்பாக்களும் 'களத்து' என்ற சொல்லால் முடிகின்றன.

'அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கும்
இங்குலிகக் குன்றே போற்றோன்றும் -செங்கண்
வரிவரால் மீன்பிறழும் காவிரி நாடன்
பொருநரை யட்ட களத்து'

7. ஐந்திணை ஐம்பது

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார், இது முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்கும் முறையே பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்களைக் கொண்டு விளங்கும் அகப்பொருள் நூலாகும். பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர் என்று இந்நூலினைப் புகழ்கிறது இதன் பாயிரம். காதலர் செல்லும் சுரநெறியில் உள்ள மான்களின் அன்புக் காட்சியை ஒரு பாடல் அழகாகக் காட்டுகிறது.

'சுனைவாய்ச் சிறு நீரை எய்யா தென் (று) எண்ணிப்
பிணைமான் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி'

8. ஐந்திணை எழுபது

இதன் ஆசிரியர் மூவாதியார், இது திணைக்கு 14 பாடல்களாக ஐந்திணைக்கும் எழுபது பாடல்களைக் கொண்ட ஓர் அகப்பொருள் நூலாகும். காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு; கார் காலத்துத் தலைவனை நினைத்து நெஞ்சு உருகும் தலைவியின் நிலை ஒருபாடலில் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது.

‘இனத்த அருங்கலை பொங்கப் புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமா லை
தானும் புயலும் வரும்'


9. திணைமொழி ஐம்பது

இதன் ஆசிரியர் கண்ணன் சேந்தனார். காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு, 'யாழும் குழலும் இயைந்தென வீழும் அருவி' என அருவி பாராட்டப்படுகிறது.

தலைவியின் உறவினர் கடுஞ்சொல்லினர். வில்வினர்; வேலினர்; அம்பினர்; கல்லிடை வாழ்நர் என்று கூறி மலை விடை வாராதவாறு தலைவனைத் தடுக்கின்றாள் தோழி ஒருத்தி.

'விரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார்
வரையிடை வாரன்மின் ஐயா-உரைகடியர்
வில்வினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர்'

10. திணைமாலை நூற்றைம்பது

இதன் ஆசிரியர் கணிமேதாவியார், இது திணைக்கு முப்பது பாடல்களாக நூற்றைம்பது பாடல்கள் கொண்டுள்ளது. காலம் கி பி. ஐந்தாம் நூற்றாண்டு; நெய்தல் நிலக் காட்சியும், தலைவன் வருகையும் கீழ்வரும் பாடலில் சித்திரிக்கப்படுகின்றன,

'ஈங்கு வருதி யிருங்கழித் தண்சேர்ப்ப!
பொங்கு திரையுதைப்பப் போந்தொழிந்த - சங்கு
நான்றுயிர்த்த நித்தில நள்ளிருள்கால் சீக்கும்
வரன் றுயிர்த்த பாக்கத்து வந்து'

11. திருக்குறள்

இதன் ஆசிரியர் திருவள்ளுவர், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுப்புகளைக் கொண்டது. 1330 குறள்களையும், 133 அதிகாரங்களையும் உடையது; குறள் வெண்பாவால் இயன்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது இதன் தனிப் பண்பாகும். குறிக்கோள் மிக்க வாழ்க்கையை இது வலியுறுத்துகிறது.

அறத்துப்பால்

அறத்தில் திருவள்ளுவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தாய் பசித்தாலும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக்கூடாது என்பது அவர் கோட்பாடு.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை'

அன்பே அறத்தின் இயக்கம் என்பது அவர் கொள்கையாகும்.

‘ அன்பின் வழியது உயிர் நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

ஈந்து இசைபட வாழ்தலே வாழ்க்கையின் குறிக்கோள்: என்பர்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு'

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருட்பால்

இதன்கண் அரசர்க்கென அறிவுறுத்தும் நீதிகள் அனை வருக்குமே பொருந்துவனவாகும். அறிவு என்பதற்கு வள்ளுவர் தரும் விளக்கம் போற்றத் தக்கது.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப (து) அறிவு'

மருந்து என்னும் அதிகாரத்தில் மருத்துவம்பற்றி அவர் கூறும் கருத்துப் போற்றத்தக்க தாகும்.

‘நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்"

காமத்துப்பால்

இது கற்பனை நயம் மிக்கது. சங்க இலக்கிய மரபினின்று மாறுபட்டது. ஊடல் நுணுக்கங்கள் வள்ளுவரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

‘இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
கண்ணிறை நீர் கொண்டனள்'

உரைகள்

தருமர், தாமத்தர், நச்சர், மல்லர், பரிதி, பரிப்பொருமாள், காளிங்கர், பரிமேலழகர், மணக்குடவர், திருமலையர் எனும் பதின்மர் திருக்குறளுக்கு உரைகண்டனர். பரிமேலழகர் உரையே தலை சிறந்ததாகும். திருக்குறளை வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜீ. யு. போப் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்துள்ளனர். மேலும் பலர் பலமொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். இன்று இந்து உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது.

12. திரிகடுகம்

இதன் ஆசிரியர் நல்லாதனார். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று பொருள்களால் ஆன மருந்து உடல் நோயினைப் போக்கல் போல இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகள் உளநோயைப் போக்குதலின், இந்நூல் இப்பெயரைப் பெற்றது. மனிதன் மேற்கொள்ள் வேண்டிய நன்னெறிகளை இந்நூல் அழகுபடக் கூறுகிறது.

‘ தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்"
கோளாளன் என்பான் மறவாதான்; இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது'

இப்பாடல் சுற்றமாகத் தழுவிக் கொள்ளத் தக்கவரை அறிவுறுத்துகிறது,

13. ஆசாரக் கோவை

இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார், காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இந்நூலில் உணவு கொள்ளும் முறை, உறங்கும் முறை, உடையணியும் முறை, நீராடும் முறை முதலான நடைமுறைச் செய்திகளைக் கூறுவதால் இஃது -ஆசாரக் கோவை எனப் பெயர் பெற்றது.

‘வைகறை யாமம் துயிலெழுந்து, தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை'

14. பழமொழி

இதன் ஆசிரியர் முன்றுரையரையனார். ஒவ்வொருபாட்டின் இறுதியில் ஒவ்வொரு பழமொழி இடம் பெறுவதால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதன்கண் 400 வெண்பாக்கள் உள்ளன.

'உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப- நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

15. சிறுபஞ்ச மூலம்

இதன் ஆசிரியர் காரியாசான். கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி எனும் ஐந்து வேர்கள் உடல் நோயைப் போக்குவது போல, இதன் செய்யுள்கள் ஒவ்வொன்றிலும் தரப்படும் ஐந்து செய்திகள் மக்களது மனநோயைப் போக்குதலின், இஃது இப்பெயரைப் பெற்றது.

'மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
பல்லின் வனப்பும் வனப்பல்ல: நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு'

16. முதுமொழிக் காஞ்சி

இதன் ஆசிரியர் கூடலூர் கிழார். செய்யுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முதுமொழி இடம் பெற்றுள்ளமையால் இஃது இப்பெயர் பெற்றது.

"'ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை'

17. ஏலாதி

இதன் ஆசிரியர் கணிமேதாவியார், இது கடவுள் வாழ்த்துடன் சேர்த்து எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டது. ஏலம், இலவங்கப்பட்டை , சிறு நாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆறும் உடலுக்கு நன்மை தருவது போல, இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் ஆறு உறுதிப் பொருள்களும் உயிர்க்கு நன்மை செய்தலின் இஃது இப்பெயர் பெற்றது.

"கொல்லான்; கொலைபுரியான்; பொய்யான்; பிறர்மனைமேல்
செல்லான்; சிறியார் இனம்சேரான்;-சொல்லும்
மறையிற் செவியிலன்; தீச்சொற்கண் மூங்கை;
இறையிற் பெரியாற் கிவை”

18. கைந்நிலை

இதன் ஆசிரியர் புல்லங்காடனார். இதன்கண் நாற்பத்தைந்து பாடல்கள் உள்ளன. அவை திணை அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.

காந்தள் பூவினைப் புகை என்று கருதிக் களிறு ஒன்று. தன் கூட்டத்தை நோக்கி ஓடுகிறதாம். '

'காந்தள் அரும்புகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனன் நோக்கிப்
பாய்ந்தெழுந் தோடும் பயமலை நன்னாடன்'

பொருள் பாகுபாடு

இவற்றுள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது எனும் ஆறும் அகப்பொருள் பற்றியன. களவழி நாற்பது மட்டும் புறப்பொருள் பற்றியது. ஏனைய பதினொன்றும் நீதி பற்றியன.

பிற நூல்கள்

சிலப்பதிகாரம்

கண்ணகியின் காற்சிலம்பைக் கதைக்குக் கருவாகக் கொண்டிருத்தலின் இது சிலப்பதிகாரம் எனப்பட்டது.

சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குக் கோயில் கட்டிச் சிலையமைத்து வழிபாடு செய்த விழாவிற்குக் கயவாகு மன்னன் வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இலங்கை வரலாற்று நூல்களான 'மகாவமிசம்', 'இராஜா வளி' என்பவை அவன் காலம் கி பி. 114-136 என அறிவிக்கின்றன. அதனால், இவன் காலமாகிய இரண்டாம் நூற்றாண்டே சிலப்பதிகார காலம் எனக் கணிக்கப்படுகிறது.

குடிமக்கள் காப்பியம்

காப்பியம் என்பது தன்னிகரில்லாத தலைவனை உடைத்தாய், நாடு நகர், இயற்கை வருணனைகள் பெற்று, அறம், பொருள் இன்பம், வீடு என்னும் உயர்ந்த நோக்கங்களைத் தாங்கி அமைவது. பொதுவாக அரசர்களையே தலைவர்களாகக் கொண்டு காப்பியம் இயற்றல் இயல்பு. ஆனால் இக்காப்பியம் மக்களுள் சிறந்தவனாகிய கோவலனையும் கற்பின் செல்வியாகிய கண்ணகியையும் காப்பியத் தலைவர்களாக வைத்து இயற்றப் பெற்றுள்ளது. இஃது இதன் தனிச் சிறப்பாகும். பெண்மைக்கு உயர்வு தரும் நோக்கில் இது படைக்கப்பட்டுள்ளது. மணிமேகலையும் பெண்மைக்கு உயர்வு தருகிறது.

காப்பியத்தின் நோக்கம்

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்'

என்பன இக்காவியத்தின் குறிக்கோள்களாகும்.

பாண்டியன் முறை தவறியதால் உயிர் விடுகிறான்; அவன் ஆட்சி குலைகிறது. அரசியல் பிழை செய்தவர் அழிவர் என்பது இந்நிகழ்ச்சியால் காட்டப்படுகிறது.

கற்பிற் சிறந்த காரிகை தொழத் தக்க தெய்வம் என்பதனைச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டமை காட்டுகிறது.

'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' - என்பது கதை நிகழ்ச்சிக்கும் பின்னணிக்கும் பயன்படும் உத்தியாகும் கோவலன் கொலைக்குத் தனிப்பட்டவர் எவரும் காரணம் அல்லர்; ஊழ்வினையே என்பது ஆசிரியர் வருத்து. சமண சமயத்தின் கோட்பாடு ஊழ்வினையின் ஆற்றலை வற்புறுத் துவதாகும். அதனை இக்காப்பியத்தில் இளங்கோவடிகள் நன்கு காட்டியுள்ளார்.

நாட்டுக் காவியம்

புகார், மதுரை, வஞ்சி இம்மூன்று தலைநகர்களுக்குத் தலைமை தந்து முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் இக்காப்பியம் நடைபெறுகிறது. மன்னர்களும் பாத்திரங்களாகின்றனர். மாடலன் குமரி முனையிலிருந்து புறப்பட்டு வடவேங்கடம் வரை செல்கிறான்; காவிரிக் கரையில் பள்ளி கொண்ட அரங்கனையும், வேங்கடத்தில் வேங்கடவனையும் காண்கிறான், வேட்டுவர் பாடல்கள் குன்றக்குறவர் கூத்துகள் முதலியன இடம் பெறுகின்றன. கற்புடைய மாந்தர் பெருமை பேசப்படுகிறது. மூவேந்தரையும் ஒருங்கிணைத்துக் காட்டும் சிறப்பு இதில் காணப்படுகிறது. வடநாட்டு வேந்தரை எதிர்த்துத் தமிழகத்தின் பெருமையைச் சேரன் செங்குட்டுவன் நிலை நாட்டுகிறான். இவ்வகையில் சிலப்பதிகாரம் ஒரு தேசிய காவியமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் பெருமையையும், உயர்வுகளையும் காட்டுவதில் இது தலைசிறந்து விளங்குகிறது. காண்டங்களின் தலைப்புகளாகத் தமிழகத்தின் தலைநகர்களே அமைந்திருக்கின்றன.

கலைச் செல்வம்

மாதவியின் படைப்புத் தன்னிகரற்று விளங்குகிறது. அரங்கேற்று காதையில் நடன அரங்கின் அமைப்பும், பல்வகை வாத்தியங்களின் வகையும் இசை நுணுக்கங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. கானல் வரிப் பாடல்களில் மாதவியின் இசைப் புலமையும், வேனிற் காதையில் அவள் ஆடிய கூத்து வகைகளும் விளக்கப்படுகின்றன. இளங்கோ தாம் ஓர் கலைச்செல்வர் என்பதை இக்காவியத்தில் காட்டுகிறார். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் இயல்பையும். தமிழ் நாட்டில் விளங்கிய பழங்கலைகள், தொழில் வகைகள், நாடு, நகர அமைப்புகள் முதலியவற்றையும் இதில் காணமுடிகிறது.

மணிமேகலை

இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாராவார் சிலம்பின் காலமே மணிமேகலை காலமாகும். சிலம்பைப் போலவே இந்நூலும் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இது முப்பது காதைகளைக் கொண்டு விளங்குகிறது.

மணிமேகலை மாதவியின் மகள். அவள் துறவு பூண்டு உலகத்துக்கு அறிவுரை கூறும் சமயத் தலைமையைப் பெறுகிறாள், கோவலன் இறப்பே இதற்குக்காரணம். சித்திராபதி மணிமேகலையை ஆடல் மகளாகக் காண விரும்புகிறாள். தாய் மாதவியின் அறிவுரைப்படி துறவும், தொண்டுமே வாழ்க்கையின் நெறிகள் என மணிமேகலை கொள்கிறாள். அறவண அடிகள் அவளுக்குச் சமய அறிவினை ஊட்டுகிறார். புத்தமதக் கோட்பாடுகளை அறிந்து புத்ததேவனை வழிபட்டுச் சமயவாதிகளோடு வாதிட்டுப் பிறவித் துன்பம் நீங்கத் தவமியற்றுகிறாள். இதுவே இவள் வாழ்க்கையின் முடிவாக அமைகிறது.

சிறப்பியல்புகள்

1. சிலம்பு சமண கருத்துகளைத் தெரிவித்தாலும் அச்சமயத்திற்கு முதலிடம் கொடுக்கவில்லை. சமயப் பொறையோடு பிற கடவுளரையும், பிற சமய வழிபாடுகளையும் கூறிச் செல்வதோடு அஃது எச்சமயத்தையும் இகழ்ந்து கூறவில்லை. மணிமேகலை முழுக்க முழுக்கப் பௌத்த காவியமாகவே திகழ்கிறது. பௌத்த மதக் கோட்பாடுகளைப் பரப்பவே இக்கதையை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.

2. இது சிலப்பதிகாரத்தைப் போல் முத்தமிழ்க் காப்பியமாகத் திகழாது. இயற்றமிழ்க் காப்பியமாகவே திகழ்கிறது.

3. இஃது இளமை, யாக்கை, செல்வம் இவற்றின் நிலையாமையை வற்புறுத்தி, அறம் செய்ய வேண்டியதன் இன்றியமையாமையை இயம்பி அற நூலாகவே திகழ்கிறது.

4. பசிப் பிணியை ஒழிக்க வேண்டும் என்பது இக்காவியத்தின் குறிக்கோளாகும்.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(காதை-11)

5. உண்மையான தொண்டு செய்வதற்குத் துறவு உள்ளம் வேண்டும் என்பதை வற்புறுத்தவே 'ஆபுத்திரன்' என்ற பாத்திரப் படைப்புச் சேர்க்கப்படுகிறது.

6. 'அட்சய பாத்திரம்' என்ற கற்பனை உலகப் பசியைப் போக்குவதற்குப் பொது நெறி ஒன்று வேண்டும் என்பதை உணர்த்த அமைந்ததாகும்.

திருமந்திரம்

இதனை இயற்றியவர் திருமூலராவார். இது பத்தாம் திருமுறையாகக் கருதப்படுகிறது. 3090 பாடல்களைக் கொண்டது; யாக்கை நிலையாமை முதலானவற்றை விளக்கிக் கூறி வீடுபேற்று நெறியினை விளக்குவது. இதில் இன்று ஒன்பது தந்திரமென 232 அதிகாரங்கள் திகழ்கின்றன பாடல்களின் எண்ணிக்கை 3071.

திருமூலர் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியினர் என்பர். இவர் நெளிவான நடையில் நகைச்சுவையும் ததும்பப் பாடல்களை இயற்றியுள்ளார்.

'மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்'

இப்பாடல்களில் உயர்ந்த கருத்துகள் மிளிர்வதைக் காணலாம்.