தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/சோழர் காலம்

5. சோழர் காலம்
கி.பி. (800-1200)

காப்பியங்கள்

பல்லவர் காலம் சைவ, வைணவ இலக்கியங்களுக்கு வழிகோலியது; சோழர் காலத்தில் திருத்தக்க தேவர். சேக்கிழார், கம்பர் முதலிய மாபெருங் கவிஞர்கள் தோன்றி அழியா இலக்கியங்களைப் படைத்தனர்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சோழர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் காலத்தில் கலையும், இலக்கியமும் புத்தொளி பெற்றன. சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் தஞ்சைப் பெரிய கோயிலைக் குறிப்பிடலாம். இக்காலத்தில் பெளத்த சமண, வைணவ, சைவ சமயங்கள் வளர்ந்தன.

காப்பியத்தின் அமைப்பு

காப்பியம் என்பது அறம், பொருள் இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களைக் கூறும். மலை, கடல், நாடு, நகர், பொழுது, ஞாயிறு, திங்கள் இவற்றின் வருணனையைக் கொண்டு விளங்கும், தன்னிகரில்லாத தலைவன் இடம் பெறுவான். நீர் விளையாட்டு, சோலை விளையாட்டு, மணவாழ்வு, மக்கட்பேறு முதலியனவும் அமையும். அரசியல், அமைச்சியல், போர், தூது, பயணம் வென்றி முதலிய இடம் பெறும். சருக்கம், இலம்பகம், படலம் முதலிய பிரிவுகளைப் பெறும், அணிநலன் மிக்கும், சந்த நயம் பெற்றும் இதன் பாடல்கள் இயங்குகின்றன.

ஐம்பெரும் காப்பியங்கள்

தமிழில் தோன்றிய காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள் எனவும், ஐஞ்சிறு காப்பியங்கள் எனவும் வகைப்படுத்திக் காண்பர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பவை ஐம்பெருங்காப்பியங்களாகும். இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றின.

3. சீவக சிந்தாமணி

திருத்தக்க தேவர் இதன் ஆசிரியர் இவர் சமண துறவி; நிலையாமையையும் அறத்தையும் வற்புறுத்தும் நோக்கத்தோடு இந்நூல் அமைந்துள்ளது.

இது நாமகள் இலம்பகல் முதல் முத்தியிலம்பகம் முடியப் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டது; 3145 செய்யுட்கள் இதன்கண் உள்ளன . இதற்கு நச்சினார்க்கினியர் சிறந்ததோர் உரை எழுதியுள்ளார். இதன் காலம் கி. பி பத்தாம் நூற்றாண்டு

இக்காப்பியத் தலைவன் சீவகன், ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் விசயமா தேவியை மணந்தான்; நாடாளும் பொறுப்பினை அமைச்சனாக இருந்த கட்டியங்காரனிடம் ஒப்படைத்துவிட்டுப் புதுமண வாழ்வின் இன்பத்தில் மூழ்கினான். கட்டியங்காரன் ஆட்சியைத் தானே கைப்பற்றிக் கொள்ள விரும்பினான்: சூழ்ச்சியால் மன்னனை வீழ்த்தக் காலம் கருதி இருந்தான். வேந்தனும் விசயமா தேவியை மயிற் பொறியில் அமர்த்தித் தப்பு வித்தான்; பின்பு கட்டியங்காரனை எதிர்த்து மடிந்தான், அவன் மகன் சீவகன் மணம் பல பூண்டான்; கட்டியங்காரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இறுதியில் நிலையாமையை உணர்ந்து துறவினை மேற்கொண்டான். இது சீவக சிந்தாமணியின் சுருக்கமாகும்.

4. வளையாபதி

இதுவும் ஒரு சமண காப்பியம் ஆகும்; இஃது இன்று முழுமையாக்க் கிடைக்கவில்லை; 72 பாடல்களே கிடைத்துள்ளன. நூலாசிரியர் பெயரும் அவர் வாழ்ந்த காலமும் அறியக்கூடவில்லை. இதன் பாடல்கள் யாக்கை நிலையாமை, கற்புடைய மகளிர், கற்பில் மகளிர்; விரதத்தின் வகை, அருளுடைமை, புலால் மறுத்தல் முதலியவை பற்றிக் கூறுகின்றன.

5. குண்டலகேசி

இது பெளத்த சமய நூல். இதன் பாடல்கள் இனிய ஓசையும் பொருள் நயமும் கொண்டுள்ளன. இவற்றுள் சில பாடல்களே கிடைத்துள்ளன.

பாளையாந் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும், காமுறும்- இளமை செத்தும்
மீளுமிவ் வியல்பும் இன்னே மேவரு மூப்புமாகி
நாளும்நாள் சாகின் றேமால் நமக்குநாம் அழாத தென்னே

இச்செய்யுள் நிலையாமையை அழகுபடக் கூறுதல் காண்க.

ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் எனும் இவ்வைந்தம் ஐஞ்சிறு காப்பியங்களாகும்.

1. சூளமாணி

இதன் ஆசிரியர் தோலாமொழித்தேவர். இஃது ஓசை நயத்தில் சிந்தாமணியையும் வெல்வது என்பர். சங்க காலத்துக்கும், தேவார காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தே இந்நூல் தோன்றி இருக்க வேண்டும்.

2. நீலகேசி

இது ‘நீலகேசித் தெருட்டு' எனவும் வழங்கப்படுகிறது. குண்டலகேசி என்னும் பெளத்த காப்பியத்திற்கு எதிராக இது தோன்றியது. இது 10 சருக்கங்களையும் 1894 பாக்களையும் கொண்ட சமண நூல் எனத் தெரிகிறது.

இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை; சமண முனிவரால் இயற்றப்பட்டது என அறிய முடிகிறது. ஐந்து கருக்கங்களையும், 320 பாடல்களையும், இதுகொண்டுள்ளது. அவந்தி நாட்டு மன்னன் யசேதேரன் என்பவனின் வரலாற்றை நவில்கிறது. இசையை இழித்துக் கூறுகிறது.

4. உதயன குமார காவியம்

இஃது உதயணின் வரலாற்றைக் கூறுகிறது. இஃது பெருங்கதையின் வழி நூலாகும். இதன் பாடல்களின் எண்ணிக்கை 367, இஃது உஞ்சைக் காண்டம் இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவான காண்டம் என ஐந்து காண்டங்களைக் கொண்டது. நூலாசிரியரின் காலமோ, பெயரோ அறியக்கூடவில்லை.

5. நாககுமார காவியம்

இது சமண சமயச் சார்புடையது என்பது தவிர வேறு ஏதும் தெரியவில்லை. யசோதர காவியம் போல் இதுவும் வடமொரு பற்றியதாக இருந்திருக்கலாம்.

பெரிய புராணம்

இதன் ஆசிரியர் சேக்கிழார். இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்; இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தார். இந்நூலுக்குச் சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் முதல் நூல்களாக அமைந்தன.

இஃது சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக விளங்குகிறது; சைவ நாயன்மார்களின் பெரும் பணியை உணர்த்துகிறது. அதனையே செயற்கரிய செயலாகச் சித்திரிக்கிறது; எளிய நடை, தெளிவான சொற்கள், உயர்ந்த கருத்துகள், பண்பாடு நெறிகள், பக்திச்சுவை முதலியவற்றைக் கொண்டுள்ளது.

கம்பராமாயணம்

பாரதமும், இராமாயணமும் இதிகாசங்களாகையால் அவற்றைக் காப்பியங்களில் சேர்க்கவில்லை.

இதன் ஆசிரியர் கம்பர். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார்: வடமொழி இராமாயணத்தைத் தமிழில் கற்பனையழகும் தமிழ் மரபும் தோன்றப் பாடினார். சோழநாட்டு மக்களின் வாழ்வு, ஆட்சித்திறம், பண்பாடு, காதல்நெறி முதலியவற்றைக் காட்டுவதாகவே கம்பனது படைப்பு அமைந்துள்ளது. காடும், நாடும், மாந்தர் இயல்பும், காட்சிப் புனைவுகளும் தமிழகத்தையே நினைவு படுத்துகின்றன.

பாலகாண்டம், அயோத்தியா காண்டம். ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்குக் கம்பர் இட்ட பெயர் இராமவதாரம் என்பது. இது 113 படலங்களையும் 10,500 பாடல்களையும் கொண்டுள்ளது; காவியக் கட்டுக் கோப்பும், நாடக நயமும் கொண்டு விளங்குகிறது. இதனைக் ‘கம்ப நாடகம்' எனவும் அறிஞர் போற்றுவர்.

‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்'

இப்பாடல் கம்பரின் சந்த நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

கந்தபுராணம்

இதன் ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார். இவர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. முருகனுக்கும் சூரபதுமனுக்கும் நடந்த போர் இதில் விரித்துக் கூறப்படுகிறது. முருகன் வள்ளியையும், தெய்வயானையையும் மணந்த வரலாறுகளும் இடம் பெறுகின்றன. இந்நூல் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. வடமொழிஸ்காந்தத்தின் ஒரு பகுதியாகிய சங்கர சங்கிதை இதன் மூல நூலாகும்.

இலக்கண நூல்கள் (சோழர் காலம்)

சோழர் காலத்தில் காப்பியங்களோடு சிறந்த இலக்கண நூல்கள் பலவும் தோன்றின. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத் தக்கனவாகும்.

வீரசோழியம்

இதன் ஆசிரியர் புத்தமித்திரர்; காலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்தனுக்கும் இஃது இலக்கணம் கூறுகிறது: ஆசிரியர் தம்மை ஆதரித்த வீர சோழன் பெயரையே தம் நூலுக்கு வைத்துள்ளார்.

நேமிநாதம்

இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்; காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இஃது எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூறுகிறது. இதில் 96 நூற்பாக்களே உள்ளன. இந்நூல் மிகவும் சுருக்கமாக அமைந்தமையால் இதற்குச் ‘சின்னூல்’ என்ற பெயரும் வழங்குகிறது.

நன்னூல்

இதன் ஆசிரியர் பவணந்தியார்; காலம் பதின் மூன்றாம் நூற்றாண்டு, வீர சோழியத்தையும், தொல்காப்பியத்தையும் முதல் நூலாகக் கொண்டு இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்: தொல்காப்பியனார் விரித்துக் கூறியவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் தந்துள்ளார். இதன் பாயிரம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் அரும்பொருள் ஐந்தனையும் இது ஓதுவதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இன்று எழுத்தும் சொல்லுமே கிடைத்துள்ளன.

நம்பியகப் பொருள்

இதன் ஆசிரியர் நாற்கவிராச நம்பியார்; காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இஃது அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிறது. இதனை இலக்கணமாகக் கொண்டு தஞ்சைவாணன் கோவை எனும் நூலைப் பொய்யாமொழிப் புலவர் இயற்றியுள்ளார். அதனால், அதன் பாடல்கள் இந்நூற்கண் உதாரணச் செய்யுள்களாகந் தரப்பட்டுள்ளன.

யாப்பருங்கலம்

இதன் ஆசிரியர் அமிதசாகரர், காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று பகுதிகளால் இது யாப்பிலக்கணத்தை ஓதுகிறது.

யாப்பருங்கலக்காரிகை

இதன் ஆசிரியரும் அமிதசாகரரே, இது யாப்பருங்கலத்தின் சுருக்கமாகும், கட்டளைக் கலித்துறை யாப்பால் இஃது இயற்றப்பட்டுள்ளது. இதுவும் உறுப்பு, செய்யுள், ஒழிபு எனும் மூன்றியல்களால் யாப்பிலக்கணத்தை ஓதுகிறது.

வச்சணந்திமாலை

இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்; தம் ஆசிரியர் பெயராகிய வச்சணந்தி என்பதையே தம் நூலுக்குப் பெயராக வைத்துள்ளார். இது சிற்றிலக்கியங்களின் அமைப்புப் பற்றியும். செய்யுள் எழுதும் முறைகளைப் பற்றியும் கூறுகிறது. இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.

தண்டியலங்காரம்

காவியதர்சம் என்னும் வடமொழி நூலைத் தழுவி இது தமிழில் எழுதப்பட்டது. இதன் காலம் 12 ஆம்' நூற்றாண்டு. இஃது அணியிலக்கணத்தை அழகு பெறக் கூறுகிறது. காப்பிய இலக்கணமும் இதில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் உவமையணி ஒன்றனையே கூறிச்செல்ல, இஃது ஏனைய அணிகளையும் விளக்கிச் செல்கிறது; பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.